Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:32:33 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7368
#KOTW7368
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 12, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: ஐக்கியப் பேரவையின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்! பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 10249 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (74) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 23)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைமைக்குப் போட்டியிடும் வேட்பாளரான எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை ஆதரித்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:-

கூட்ட நிகழ்வுகள்:
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சார்பில், நகர்மன்றத் தலைமைக்கு ‘பேருந்து‘ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் 10.10.2011 திங்கட்கிழமை இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்பட்டது.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.



காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். ஐக்கியப் பேரவை பொருளாளர் ஹாஜி சேகு முஹம்மத் அலீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



பின்னர், நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு கோரி நகரின் அரசியல் கட்சியினர், பகுதி பிரமுகர்கள், மார்க்க அறிஞர் என பலர் உரையாற்றினர்.

கருத்துரை:
துவக்கமாக. ஜெயலலிதா பேரவையின் நகரச் செயலாளர் ஹாஜி எல்.எஸ்.அன்வர் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பாகும். இதில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் நமது ஊர் கட்டுப்படும்.

இதையறியாமல் இன்று சில புதுப்புது இயக்கங்களை பல பெயர்களில் துவங்கி, ஊரில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்களின் இந்த முயற்சி எடுபடாது.

ஐக்கியப் பேரவையின் முடிவை மதித்து, எங்கள் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான எங்கள் அம்மாவே எங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த நினைக்காதபோது, இவர்கள் ஊர் ஒற்றுமைக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.


இவ்வாறு ஹாஜி எல்.எஸ்.அன்வர் தனதுரையில் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

தலைமைக்குக் கட்டுப்பட வேண்டியது மிகவும் அவசியம். இல்லையெனில் சமுதாயம் சீர்கெட்டு விடும். உஹதுப் போரில் நபிகளார் அவர்களின் கட்டளையைக் கவனத்தில் கொள்ளாமல் நபித்தோழர்கள் நடந்த காரணத்தால்தான் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இங்கே நமது ஐக்கியப் பேரவை பொது வேட்பாளராக எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை நிறுத்தியுள்ளது. எதிரணியில் முக்கியமாகப் பேசப்படும் வேட்பாளர், தான் தலைமைப் பொறுப்பிற்குப் போட்டியிடவுள்ள செய்தியை அறிவித்ததுமே, ஐக்கியப் பேரவைக்கு அவர் விருப்ப மனு அளிக்க நான்தான் அவருக்கு அறிவுரையே வழங்கினேன்.


இவ்வாறு அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில், வேட்பாளருக்கு ஆதரவு கோரி பேசுமாறு நிகழ்ச்சி நெறியாளர் கேட்டுக்கொண்டார்.

இன்று தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் 1,32,467 பதவிகளுக்கு, 4,11,177 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது ஜனநாயக உரிமை.

19,646 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுதான் ஊர் கட்டுப்பாடு. அந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டு வரத்தான் ஐக்கியப் பேரவை முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

நடப்பு உள்ளாட்சித் தேர்தலில், செல்வந்தர்கள் சிலரும், பொதுநலப் பணிகளில் ஈடுபடும் சிலரும் போட்டியிடுகின்றனர். உண்மையில் சந்தோஷப்படுகிறேன். ஆனால், ‘படிக்காத மேதை‘ காமராஜர் போல, எழுதப்படிக்கத் தெரியாத சிலரும் போட்டியிடுவதுதான் வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்களும், காமராஜர் படிக்காதவராக இருந்தாலும் எப்படி தன்னலமற்று அரசியல் நடத்தினாரோ, அதுபோல மக்கள் நலப்பணிகளை செய்தால் அதுவும் சந்தோஷமே...


இவ்வாறு மன்னர் பாதுல் அஸ்ஹப் உரையாற்றினார்.

தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

ஐக்கியப் பேரவை பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆதரவளித்து எங்கள் கட்சியின் சார்பில் கையெழுத்திட்டதற்கு, எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் எங்கள் மாவட்டச் செயலாளர் மூலம் விளக்கம் கேட்டிருந்தார்கள். ஊர் கட்டுப்பாடு இங்கு உள்ளது. அதனை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளேன். அவர்களும் புரிந்துகொண்டார்கள்.

நமது ஐக்கியப் பேரவையின் இந்த அணியில் ஒற்றுமை உள்ளது, ஒருமைப்பாடு உள்ளது. எதிரணியை ஒரு சில கொள்கை குதர்க்கவாதிகள்தான் வழிநடத்தி வருகின்றனர். அவர்கள் மாற்று வேட்பாளருக்கு தவறான வழிகாட்டிக் கொண்டிருக்கின்றனர். நமதூர் வெப்சைட்டில் பல பொய்யான, அசிங்கமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை நான் அடையாளம் காட்டுவேன். அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி என்னால் பல விஷயங்களை தெரிவிக்க முடியும்...


இவ்வாறு அவர் உரையாற்றிக்கொண்டிருக்கையில், வேட்பாளரை ஆதரித்து மட்டும் உரையாற்றுமாறு நிகழ்ச்சி நெறியாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவருக்கு ஆதரவு கேட்டு தனதுரையை முடித்துக்கொண்டார் மு.த.ஜெய்னுத்தீன்.

அடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு கோரியதோடு அவர் தனதுரையை முடித்துக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷாஜஹான் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

ஐக்கியப் பேரவையின் அரசியல் தந்திரம் தனித்துவம் வாய்ந்தது. அது நிறுத்தியிருக்கும் பொது வேட்பாளர் ஒரு நல்லவர், பொது நல ஆர்வலர். அவரை எதிர்த்து களம் கண்டிருப்போருக்கு அவர்கள் குடும்பத்திலேயே ஆதரவு கிடையாது.

ஓட்டுப் போடும் விஷயத்தில் மத்திய காயல் பகுதியினரை விஞ்சிட யாராலும் முடியாது. 10 நிமிடங்கள் போதும்... அவர்கள் பெட்டியையே நிறைத்து விடுவார்கள்...

இங்கே நாங்கள் உரையாற்ற முன்வந்தது வேட்பாளருக்கு ஆதரவு கேட்க அல்ல. அது அவர்களுக்கு தானாகவே கிடைக்கும். ஊரில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியதற்கு நன்றி தெரிவித்து பேசவே நாங்கள் வந்துள்ளோம்.

எதிரணியில் களம் காணும் வேட்பாளர்களே... இன்னும் கூட காலம் கடந்து விடவில்லை. யாருடைய தூண்டுதல்களாலோ நாங்கள் தவறான முடிவுகளை எடுத்துவிட்டோம் என்று வருத்தம் தெரிவித்து, போட்டியிலிருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவியுங்கள். உங்களை பேரவை மதிக்கும், இந்த ஊர் மதிக்கும்.

எதிரணியினரை தூண்டுபவர்கள் யார் யார் என்ற பட்டியல் எங்களிடம் உண்டு...


இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், நிகழ்ச்சி நெறியாளர் அவரிடம், வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு உரையாற்றச் சொன்னார். அவரும் ஆதரவு கோரி தனதுரையை முடித்துக்கொண்டார்.

அடுத்து, காயல்பட்டினம் கொம்புத்துறை என்ற கடையக்குடி பகுதி மக்கள் சார்பாக சாச்சா ஜோஸப் ராஜ் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அவர், காயல்பட்டினத்தில் மதுக்கடை, சினிமா தியேட்டர், காவல் நிலையம் இல்லை என்பது பல்லாண்டுகளாக உள்ள தனிச்சிறப்பு...

நான் கொம்புத்துறை ஊரைச் சார்ந்தவன். நாங்கள் குமரி மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். சில நேரங்களில், எங்கள் ஊரிலிருந்து பேருந்தில் இங்கு வந்து நள்ளிரவில் இறங்குவோம். எங்கள் இல்லத்திற்குச் செல்ல ஆட்டோ எதுவும் இல்லாத நிலையில், இங்குள்ள முஸ்லிம்கள் எங்களை தங்களது வாகனங்களில் இல்லம் வரை அழைத்துச் சென்று விடுவதை இந்நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

இங்கே, அனைத்து ஜமாஅத் சார்பாக மிஸ்ரிய்யா என்ற பெண்மணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அனைத்து ஜமாஅத் சார்பாக அவர் தேர்வாகியிருப்பதே அவர் ஒரு நல்ல பெண்மணி என்பதற்கு போதுமான அடையாளமாக உள்ளது.

எங்கள் ஊர் சப்போர்ட் இந்த வேட்பாளருக்குத்தான்.


இவ்வாறு கடையக்குடியைச் சார்ந்த ஜோஸப் ராஜ் உரையாற்றினார்.

அடுத்து, சிங்கித்துறை என்ற கற்புடையார் பள்ளி வட்டம் சார்பில் தஸ்னேவிஸ் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.

எங்கள் சிங்கித்துறை பகுதியில் வாக்கு கேட்க இந்த வேட்பாளர் சார்பில் வந்தார்கள். அவர்கள் எங்கள் ஊருக்குள் வருவதற்கு முன்னர் எங்கள் தேவாலயத்தில் பங்குத்தந்தையைச் சந்தித்துதான் முதலில் வாக்கு கேட்டுள்ளார்கள். அதன் பின்னர்தான் எங்களிடத்தில் வந்துள்ளார்கள்.

அனைத்து ஜமாஅத்துகள் இணைந்து தேர்ந்தெடுத்துள்ள இந்த வேட்பாளர் நிச்சயம் நல்லவராகத்தான் இருப்பார். எனவே, அவரை ஆதரிப்போம்.


இவ்வாறு தஸ்னேவிஸ் உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து, அதிமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

இம்முறை காயல்பட்டினம் நகராட்சித் தலைவர் பதவிக்கு எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆயத்தமாக இருந்தோம். எங்கள் மாவட்டச் செயலாளரும், மாநில அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

இந்நிலையில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததை அறிந்தோம். பெரும்பாலான அரசியல் கட்சிகள் இம்முடிவுக்கு ஆதரவு தெரிவித்து, தங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளதையும் அறிந்துகொண்டோம்.

பேரவை நிர்வாகிகளால் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்ததன் அடிப்படையில் எங்கள் மாவட்டச் செயலாளர் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அம்மாவிடம் தயக்கத்தோடு இதைத் தெரிவித்தார். அம்மாவும், ஊரே ஒன்றுபட்டு முடிவெடுத்துள்ள ஒரு விஷயத்தில் நாம் தலையிடத் தேவையில்லை... எனவே நம் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

எங்களுக்கு ஒரு கண் எங்கள் கட்சி என்றால் மற்றொரு கண் இந்த ஊர். எனவே, பேரவையின் இந்த பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஒரு மாபெரும் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில முதல்வருமான எங்கள் அம்மாவே எதிர்த்து ஆள் நிறுத்தாத நிலையில், சில பேர் இந்த பேரவையின் பொது வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுவதைப் பார்க்கும்போது, எங்கள் அம்மாவின் பெருந்தன்மை எங்களை பெரிதும் மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளது.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் இந்த ஊருக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய ஆவலாகவே உள்ளோம். என்றாலும், இரண்டாவது பைப்லைன் திட்டம், துணை மின் நிலையம், ஒருவழிப்பாதை, கடற்கரை அழகுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.

எனவே, நகர்மன்றத் தலைவருக்கு அடுத்த பதவியையாவது இந்த பேரவை எங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும்... அவ்வாறு வழங்கினால், அவரை முன்னிறுத்தி, செய்ய வேண்டிய வேலைகளை இன்னும் விரைவாக செய்திட இயலும்.


இவ்வாறு அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உரையாற்றினார்.

அடுத்து பேசிய நிகழ்ச்சி நெறியாளர், அவரது பெருந்தன்மையான கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.

பின்னர், ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ தொலைபேசி வழியே உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

அவருடைய உரை ஒலிவாங்கியில் சரியாக கேட்கவில்லை என்று கூறி, இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

அடுத்து சமூக நல ஆர்வலர் காயல் மவ்லானா உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம் வேட்பாளர் அறிமுகம்தான். இங்கு பேரவையால் நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே ஜனநாயக அடிப்படையிலேயே நடைபெற்றுள்ளது.

அனைத்து ஜமாஅத்துகளிட்மும் கருத்து கேட்கப்பட்டு, முறையாக ஓட்டெடுப்பு நடத்திய பின்புதான் சகோதரி மிஸ்ரிய்யா நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, இந்த ஊர் மக்களின் ஒட்டுமொத்த தேர்வுதான் இந்த வேட்பாளர் தேர்வு என்பதை புறநகர் மக்களும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

ஐக்கியப் பேரவையின் இந்த பொது வேட்பாளரை எதிர்த்து தமிழக முதல்வரே தன் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆனால் இங்கே சிலர் தூண்டுதல் காரணமாக சில வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். அவர்களை விட இவர்கள் அறிவாளிகள் என்று தங்களைத் தாங்களே நினைத்துக்கொண்டுள்ளனர்.

ஊரில் ஒரு பிரச்சினை என்றால் அவ்விடத்தில் ஐக்கியப் பேரவைதான் முன்னிற்கும். அதன் பேச்சு மட்டும்தான் எடுபடும். இதுதான் உண்மை.

இந்த வேட்பாளர் வென்றால் அது ஐக்கியப் பேரவைக்கு வெற்றி, இந்த ஊர் மக்களுக்கு வெற்றி. அல்லாஹ் காப்பாற்றட்டும்! முடிவு மாற்றமாக அமைந்துவிட்டால், அது பேரவைக்குத் தோல்வி... இந்த ஊருக்கும் தோல்வியாக அமைந்துவிடும்.

சரி, ஒருவேளை எதிர்த்துப் போட்டியிட்டவர் நகர்மன்றத் தலைவரானால், நாளை முதல்வரை எவ்வாறு அணுகுவார்? நீ யார் என்று அவர் கேட்டால், நான் ஊரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவள் என்று சொன்னால், அம்மா அவரது கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள மாட்டார்களா?

எனவே, எதிரணியில் உள்ள சகோதரிகள் தயவுசெய்து நாங்க இப்ப வாபஸ் வாங்கிக்கிறோம் என்று சொல்லி போட்டியிலிருந்து விலகினால், உங்களை இந்தப் பேரவை மதிக்கும்... ஊரும் மதிக்கும்.

பாவம், இந்த வேட்பாளர்கள் அப்பாவிகள். சாதாரணமாக அரசியல் கூட்டங்களில் புதிதாக உரையாற்றும் ஒருவருக்கு 10 பேர் கை தட்டுவார்கள். பின்னர் 20, 30, 50, 100, 500 என்று கை தட்டு வந்துவிட்டால் அவருக்கு அரசியல் போதையாகிவிடும். அதுபோன்றுதான் இந்த அப்பாவி வேட்பாளர்களும் உள்ளனர்.

இனிப்பு என்று எழுதி நக்கிப் பார்த்தால் இனிக்காது. உண்மையான இனிப்பு ஐக்கியப் பேரவையிடம் உள்ளது.

நான் இந்த வேட்பாளர் மிஸ்ரிய்யாவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்... நீங்கள் வெற்றி பெற்றால், பொறுப்புணர்ந்து. ஐக்கியக் பேரவைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

இந்த வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு உண்டு என்பதை வெளிக்காட்டுவதுதான் இந்தக் கூட்டம். இவர்களெல்லாம் விவரமற்றவர்களா...?


இவ்வாறு காயல் மவ்லானா உரையாற்றினார்.

அடுத்து, தே.மு.தி.க. கட்சியின் சார்பில் அதன் நகரச் செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

எனக்கு முன் பேசியவர்கள் அனைத்தையும் பேசிட்டாங்க... நான் என் கட்சியின் நிலை பற்றி மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த ஐக்கியப் பேரவை பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக எங்களை அழைத்தது. நாங்கள் எந்த நிபந்தனையுமின்றி அவர்களது முடிவுக்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டுவிட்டு வந்தோம்.

எங்கள் கட்சியின் சார்பில் எங்கள் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழகம் முழுக்க சுமார் ஒரு லட்சம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையிலும், இந்த ஊர் ஒற்றுமைக்கு மதிப்பளித்து இங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை.

பக்கத்திலுள்ள திருச்செந்தூர், ஆறுமுகநேரியில் கூட எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இங்கு மட்டும்தான் நிறுத்தப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


இவ்வாறு எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் உரையாற்றினார்.

அடுத்து, வேட்பாளர் மிஸ்ரிய்யாவின் சகோதரர் வழக்குறைஞர் எல்.எஸ்.எம்.ஃபைஸல் உரையாற்றினார்.

எங்கள் சகோதரி 25 ஆண்டுகளுக்கு முன்பு பி.காம். படித்து முடித்துவிட்டு, சமூகப்பணியாற்றத் துவங்கியவர். கிரண்பேடி உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, பொதுநலப் பணிகளாற்றியவர்.

அவரது கணவரும் பல்லாண்டுகளாக சமூக நலப்பணிகளில் உள்ளவர்.

அவரது மூத்த சகோதரர் வழக்குறைஞர் காதர் சாகிப், திருச்சியில் வழக்குறைஞராகவும், நோட்டரி பப்ளிக்காகவும் செயல்பட்டு வருகிறார்.

நான் 13 ஆண்டுகளாக வழக்குறைஞராக உயர்நீதி மன்றத்தில் பணியாற்றி வருகிறேன். மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்துடன் நல்ல தொடர்பு எனக்குண்டு. அவரது மனைவி நளினி சிதம்பரத்திடம் ஜூனியராக பணியாற்றியுள்ளேன்.

எங்களுக்கு முன்னாள் - இந்நாள் அமைச்சர்களோடெல்லாம் நல்ல அறிமுகம் உள்ளது. இந்த தொடர்புகளைப் பயன்படுத்தி நமதூருக்குத் தேவையான அனைத்து நல்லவற்றையும் எங்களால் செய்ய இயலும்.


இவ்வாறு வழக்குறைஞர் எல்.எஸ்.எம்.ஃபைஸல் உரையாற்றினார்.

அடுத்து, சென்னையிலுள்ள காயல்பட்டினம் ஐக்கிய சங்கத்தின் செயலாளர் ஏ.கே.பீர் முஹம்மத் உரையாற்றினார்.

நான் இந்த ஐக்கியப் பேரவையின் வேட்பாளருக்காக சென்னையிலுள்ள காயலர்களிடம் வாக்கு சேகரித்தேன். அவர்களெல்லாம் நல்ல ஆதரவு தெரிவிக்கின்றனர்.

நமதூருக்கு துணை மின் நிலையம் அமைக்க இந்த ஐக்கியப் பேரவை நிதி வசூல் செய்தது. சென்னையில் நான் வசூலித்தேன். இந்த பேரவை, வேட்பாளர் மிஸ்ரிய்யா மூலம் ஊருக்கு நிறைய செய்யவுள்ளது.


இவ்வாறு அவர் பேசினார். அடுத்து கருத்து தெரிவித்த நிகழ்ச்சி நெறியாளர், இந்த துணை மின் நிலையத்திற்கு இடம் வாங்குவதற்காக இந்த பேரவையிலுள்ளவர்கள் தம் பங்கில் பல லட்சங்களையும் தந்து, சுமார் 25 லட்சம் ரூபாயை திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இப்படியொரு அமைப்பு இருந்தால்தானே இதையெல்லாம் செய்ய இயலும்? என்றார்.

அடுத்து, மார்க்க அறிஞர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் நோக்கம் குறித்து முன்னர் பேசிய அனைவரும் தெரிவித்துள்ளனர். நான் ஒற்றுமை குறித்து உரையாற்ற வந்துள்ளேன்.

ஒற்றுமை நமது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒன்று. ஒற்றுமையைப் பேணுவதால் நமது கண்ணியம் காக்கப்படும்... பெரியவர்களுக்குக் கட்டுப்படுவதும், அவர்களை முந்திக்கொண்டு நாம் பேசாதிருப்பதும் நமது மார்க்கம் நமக்கு வலியுறுத்திய அம்சங்கள்...

ஒற்றுமைக்கு இணக்கமாக செயல்படக் கூடியவர்களுக்கு நன்மைகள் உள்ளதைப் போல, அதற்கெதிராக செயல்படுவோருக்கு கடும் தண்டனையும் உள்ளது. அவர்கள் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் மாறு செய்தவர்களாவார்கள்...


என மவ்லவீ பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளைத் தொகுத்து வழங்கி உரையாற்றினார்.

நிறைவாக, நிகழ்ச்சி நெறியாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.



மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும், பின்பு இனிக்கும்... என்பது முதுமொழி.

இந்த ஐக்கியப் பேரவையின் தினசரி நிகழ்வுகளில் நான் தொடர்புடையவன் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அது செய்யும் நல்லவற்றில் நானும் இணைந்து பணியாற்றுவேன். எனக்கு கருத்து வேறுபாடுள்ள அம்சங்களில் ஒதுங்கிக்கொள்வேன்.

இன்று இந்தப் பேரவையில் செயலாளராகப் பணியாற்றும் ஹாஜி பிரபு சுல்தான் அவர்களையே நான்தான் முன்மொழிந்தேன். அவர் மறுத்தும் கேட்காமல், ஹாஜி எஸ்.அக்பர்ஷா அவர்கள், இப்பொறுப்பை தாங்கள்தான் ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, அன்று முதல் இவர்கள் அப்பொறுப்பில் உள்ளார்கள். சில நேரங்களில் அவர்களே, “நீதான்ப்பா என்னை இப்டி வம்புல மாட்டி விட்டுவிட்டாய்!” என்று சொல்வதுண்டு.

பேரவை நிர்வாகம்:
இந்தப் பேரவை அனைவருக்கும் சொந்தம். இதன் நிர்வாகம் ஓர் அழகிய கட்டமைப்பில் அமைந்ததாகும். நம் நகரின் ஒவ்வொரு ஜமாஅத்துக்கும் இரண்டு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் தேர்வில்தான் இந்த நிர்வாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்துக்கொண்டு, முக்கியமான நேரங்களில் கோட்டையை விட்டுவிடக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தப் பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழுவில் இடம்பெறாத ஒரு பள்ளியின் நிர்வாகிகளுள் முக்கியமான ஒருவரை நான் நேரில் சந்தித்து, பிரச்சினையை பேசித் தீர்ப்போம், வாருங்கள்... நானே மீடியேட்டராக இருந்து சரிசெய்ய முயற்சிக்கிறேன் என்று தெரிவித்தேன்.

அதற்கு அவர், “இந்த தலைமையின் கீழ், இந்த நிர்வாகத்தின் கீழுள்ள பேரவையால் எடுக்கப்படும் எந்த முடிவிலும் எங்களுக்கு உடன்பாடில்லை” என்றார். இது எனக்கு மிகுந்த வியப்பையளித்தது.

கருத்து வேறுபடுவோர்:
கருத்து வேறுபாட்டால் பேரவையை விட்டும் பிரிந்து நிற்கின்றனர் ஒரு சாரார்...

பேரவையில் நிர்வாகச் சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி விலகி நிற்கின்றனர் இன்னொரு சாரார்...

வதந்திகளை மட்டுமே நம்பி பிரிந்து நிற்கின்றனர் மற்றொரு சாரார்... வதந்திகள் என்றுமே ஆதாரங்களாகி விடாது.

சரி, பேரவையின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து சில கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

நமதூரில் வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இப்பேரவை எந்தத் தலையீட்டையும் வைக்க விரும்பவில்லை.

வலைதள ஆக்கங்கள்:
நகர்மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் 25 பேர் மேல் நியமனம் என்பது தீர்மான முன்வடிவு மட்டுமே! ஆனால் அதை விமர்சித்து வெப்சைட்டில் பக்கம் பக்கமாக எழுதினார்கள்.

அந்த 25 பேர்:
கடந்த காலங்களில் எப்படி நமதூர் பெரியவர்கள் செயல்பட்டார்களோ அந்த அடிப்படையில்தான் இந்த 25 நகரப் பிரமுகர்களும் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. ஓட்டே இல்லை... பின்பு ஏன் உள்ளே வரனும்? என்று பிறகு கேட்டார்கள். நாம் இதற்கு என்ன சொல்வது?

இதோ இப்போது துணை மின் நிலையத்திற்காக வசூலிக்கப்பட்ட 25 லட்சம் ரூபாயில் பெரும்பாலான தொகைகளைத் தந்து உதவிய அந்தப் பெரியவர்களை மேடையில் இதுபோன்று வைத்து அழகு பார்ப்பது கூடவா தப்பு?

முச்சரிக்கை:
அடுத்து முச்சரிக்கையை ஏதோ அடிமை சாசனம் எழுதிக் கேட்டது போல எழுதி முடித்தார்கள். பேரவைக்கு விருப்ப மனுவை அளித்தால், அதைப் பேரவைதான் பரிசீலிக்கும். அதன் முடிவுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். இதில் என்னங்க தப்பு? இதில் விருப்பம் இல்லையேல் மனு கொடுக்கவே கூடாது.

எதிரணியில் நிற்கும் வேட்பாளர் தனது கடிதத்தில், “வேறு ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் எனது எண்ணங்கள் அப்படியாகிவிடும், இப்படியாகிவிடும்” என்று தெரிவித்திருக்கிறார்.

நம்முடைய வேட்பாளர் மிஸ்ரிய்யா அவர்களும் பேரவைக்கு விருப்ப மனு கொடுத்தார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பும் நான் விருப்ப மனு அளித்தேன். அன்று என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. இன்றாவது என்னைத் தேர்ந்தெடுங்கள் என்று உரிமையோடு கேட்டுள்ளார். நாச்சித்தம்பியை கொண்டு வந்துவிடுவாங்க... வஹீதாவை கொண்டுவந்து விடுவாங்க... என்றெல்லாம் பல பேச்சுக்கள்...

“ஓட்டெடுப்பு உண்டா? என எழுத்தில் தந்தால்தான் நாங்கள் விருப்ப மனு தருவோம்” என்று ஒரு வேட்பாளர் தெரிவித்தார். “நீங்கள் விருப்ப மனு தரவும் வேண்டாம்... நாங்கள் அதைப் பரிசீலிக்கவும் தேவையில்லை” என்று நாங்கள் தெரிவித்துவிட்டோம்.

கையெழுத்திட மறுத்த எதிரணி வேட்பாளரிடம் கையெழுத்தைப் பெறுவதற்காக இரண்டு நாட்கள் நானே அலைந்தேன்... அவர் சார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் மூலம் அணுகினோம்... அவரது நெருங்கிய தோழியர் மூலம் அணுகினோம். எதற்குமே அவர் வளைந்து கொடுக்கவில்லை.

நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் தேர்வுக் கூட்டம் மாலை 06.00 மணிக்கு நடக்கிறது என்றால், 05.45 மணிக்கு அவர் ஒரு கடிதம் கொண்டு வந்தார். அதிலும் தான் ஏன் கையெழுத்திடவில்லை என்பதற்கான தன்னிலை விளக்கத்தை மட்டுமே கூறியிருந்தார்.

நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் தேர்வு:
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், “பேரவையின் முச்சரிக்கையில் கையெழுத்திட்டவர்கள் 4 பேர். கையெழுத்திடாதவர்கள் 3 பேர்... அனைவரின் பெயர்களையும் வாக்கெடுப்பில் சேர்க்கலாமா? அல்லது கையெழுத்திட்டவர்களின் பெயர்களை மட்டும் பரிசீலனைக்கு எடுக்கலாமா?” என்று அக்கூட்டத்தை நெறிப்படுத்திய நான் கேட்டேன். அனைத்து ஜமாஅத்தாரும் ஒருமித்து, “கையெழுத்திட்டவர்களை மட்டுமே பரிசீலிக்க வேண்டும்” என்றனர். இருந்தும் நான், “இதில் மாற்றுக்கருத்து உள்ளதா?” என்று கேட்டேன். ஐந்து நிமிடங்கள் வரை மவுனமே நீடித்ததால், “உங்கள் அமைதியை அனுமதியாக எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறி, பின்புதான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அங்கு கூடியவர்களில் ஒரு ஜமாஅத்தின் பிரதிநிதி மட்டும், பரிசீலனைக்கு எடுக்கப்படும் வேட்பாளர்களின் முழு விபரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதையும் செய்தோம்...

இவையனைத்தையும் நேரடியாகக் கண்ட பலர் இங்கே சாட்சிகளாக இருக்கிறீர்கள். வராதவர்களுக்கு வீடியோ பதிவு ஆதாரமாக உள்ளது.

இதே முச்சரிக்கையில் கையெழுத்திட்ட வஹீதா அம்மா அவர்கள் எவ்வளவு கண்ணியமாக ஒதுங்கிவிட்டார்கள்...?

“62 பேர் மட்டும்தான் ஊர் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்களா...?” என்று ஒரு கேள்வி. பின்ன எப்படித்தான் செய்ய வேண்டும்? வந்து சொல்லுங்களேன்...

நான் இந்த ஐக்கியப் பேரவை நிர்வாகிகளை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த தேர்தலில் இதுபோன்று எந்த நடவடிக்கையிலும் இறங்காதீர்கள்... நீங்கள் எதைச் செய்தாலுமே அதை விமர்சித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற வேதனையால்தான் இதைத் தெரிவிக்கிறேன்.

தாய் - மகள் போட்டி:
“தாய் - மகளை எதிர்த்துப் போட்டி” என்று வெப்சைட்டில் கருத்து எழுதியிருக்காங்க... எல்லாத்தையுமே திறந்தா சொல்ல முடியும்? வாக்குச் சாவடியில் அதிக முகவர்களை வைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் சில உள்நடவடிக்கைகள்தான் இவை. “ஏன், அதற்கு இரண்டாவது இடத்தில் வந்தவரை வைத்திருக்கலாமே...?” என்று ஒரு கேள்வி. ஒருவேளை அவர் வாபஸ் பெறாமல் விட்டுவிட்டால் வாக்குகள் பிரிந்துவிடுமே என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்.

இதையெல்லாம் திறந்து சொல்லவே தயக்கமாக உள்ளது. வெப்சைட்டில் திரித்து எழுதி விடுகிறார்கள். இங்கேயும் கூட, அருகிலேயே அமர்ந்திருக்கிறார்கள்...

வேட்பாளருக்கு 2 ஓட்டு என்று வெப்சைட்டில் கேலி, கிண்டல், நக்கல்... “இப்பவே தலை சுத்துது” என்று ஒருவர் கமெண்ட் அடிக்கிறார்... இவர்கள், இந்த செய்திகள் மற்றும் கமெண்ட்ஸ் மூலம் என்னதான் சொல்ல வர்றாங்க...?

ஆனால், கடந்த 30 வருடங்களுக்கு முன்பிருந்த இளைஞர்களை விட இன்றுள்ள இளைஞர்கள் நல்ல விவரமானவர்கள்... அவர்கள் வசிக்கும் பகுதிகளிலெல்லாம் காயல் நல மன்றங்களை நிறுவி, அதன் மூலம் பல நல்ல சேவைகளைச் செய்து வருகிறார்கள்.

அவர்களிலேயே சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக வேறு விதமாகவும் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு நான் அறிவுரை சொல்லும் அளவுக்கு வயதும், தகுதியும் எனக்கு இருப்பதாகக் கருதினால், தயவு செய்து பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுங்கள்... இன்னும் கூட காலம் உள்ளது. உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்துகொள்ளுங்கள்.

ஹாஜி அக்பர்ஷாவின் நிலைப்பாடு:
இந்த ஐக்கியப் பேரவையின் ஆலோசனைக் குழுவிலுள்ள ஹாஜி அக்பர்ஷா அவர்கள், இந்த வேட்பாளர் தேர்வில் உடன்பாடு இல்லாதவர் என்பது போல செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவர்கள், இந்த வேட்பாளருக்கு தான் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக இக்கூட்டத்தில் பதிவு செய்யுமாறு தொலைபேசியில் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.

ஐக்கியப் பேரவையின் இந்த நடவடிக்கைகள் முடிவல்ல, முயற்சி மட்டுமே! உங்களை நான் மன்றாடி, மனம் வருந்திக் கேட்டுக்கொள்கிறேன்... தயவுசெய்து ஊர் மானத்தைக் காப்பாற்றுங்கள்...


இவ்வாறு காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் உரையாற்றினார்.

பின்னர், வரும் 12ஆம் தேதி, வேட்பாளர் மிஸ்ரிய்யா மற்றும் ஆலிமாக்கள் கலந்துகொள்ளும் பெண்கள் கூட்டம் ஜலாலிய்யாவில் நடைபெறும் என அறிவிப்புச் செய்யப்பட்டது.

நிறைவாக, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் துஆவுக்குப் பின் ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.









படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re: Towards United Kayal...
posted by Moosa (Dubai) [12 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10401

As a well wisher and person who wants to see a united kayal, I wish to put-forth my views and requests to all kayalites based on prevailing turmoil amongst us against Ikiya Jamath.

We should extend our hands to Ikiya Jamath in taking appropriate measures to see unified kayal. This will pave the way for good deeds to the welfare of our hometown. It’s needless to say that Ikiya Jamath was formed with two representatives of each Jamath. As such, raising voice against them from outside (being a member of one of their Jamath) will not give fruitful management of our hometown requirements.

Nevertheless, if anyone wants to oppose this democratically formed Movement, shall write to their respective Jamath to take cognizance of their suggestions and thereby request to rectify the pitfalls in the decisions of Ikiya Jamath, if any. Failing which, they should come forward to join as one the representative from their respective Jamath for Ikiya Jamath and fight democratically within Ikiyath Jamath for yielding good measures.

Hope, every one will take my views & requests as in the interest of our united Kayal.

Looking forward to seeing bright & developed united kayal.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by sathick (KSA) [12 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10405

அருமையான விளக்கம். சகோதரி மிஸ்ரியா அவர்கள் பத்து வருடம் முன்பு இந்த பதவிக்கு apply பண்ணி பெரியவர்கள் சொல்படி விட்டு கொடுத்து இருக்கிறார்கள். இப்போது உரிமையோடு பெற்று இருக்கிறார்கள். சகோதரி ஆபிதா அவர்களே, தாங்கள் முச்செரிக்கைய்யில் கையெழுத்து போட்டு இருந்தால், தங்கள் வெற்றி பெற்று இருக்க வாய்ப்பு இருந்து இருக்கும். அல்லது மறு வாய்ப்பு அடுத்த முறை கிடைத்து இருக்கும். இன்னும் காலம் இருக்கு, நீங்கள் போட்டியில் இருந்து விலகி ஊர் ஒட்ட்ருமைக்கு ஆதரவு கொடுங்கள். இன்டர்நெட்டில் வரும் ஆதரவு மட்டும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?


[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Showing the Victory
posted by OMER K.M.S. (Bangalore / Kayalpatnam) [12 October 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 10408

The crowd shows the Victory of Mrs. Misriyya, All the best....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M. Salih (New Delhi) [12 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10410

"இனிப்பு என்று எழுதி நக்கிப் பார்த்தால் இனிக்காது. உண்மையான இனிப்பு ஐக்கியப் பேரவையிடம் உள்ளது". - காயல் மௌலானா. (இப்போ எந்த கட்சி என்று எனக்கு நினைவில் இல்லை)

ஈ மொய்க்கப்போது, முடிவைகச் சொல்லுங்கள்.

ஏங்க, Sugar கூடிவிட்டது, Sodium இறங்கிவிட்டது என்று பல நோய்களைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இனிப்பு, உப்பு எல்லாம் எதற்கு, ஜலாலிய நிகாஹ் மஜ்லிஸில் நடைபெற்ற உள்- தேர்தலில் எடுத்த வீடியோ நகலை வெளியிட்டால், எந்த பொந்தில் எந்த பாம்பு இருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

video எடுத்திருக்கிறோம், வராதவர்களுக்கு வீடியோ பதிவு ஆதாரமாக உள்ளது என்று படம் காட்டுவதை விட, ஏதாவது இனைய தளத்தில் ஏற்றி எடுத்த படத்தை காட்டுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohideen (Jeddah) [12 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10415

இதை விட ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க முடியாது?

ஆனால் இதற்கும் பதில் விளக்கம் கொடுக்க சில பேர் வருவார்கள். என்ன செய்ய தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று சொன்னால் ஒன்னும் செய்ய முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [12 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 10421

மிக சிறப்பான கூட்டம். அல்ஹம்துலில்லாஹ் .ஐக்கிய பேரவையின் தன்னிலை விளக்கம் மிகவும் போதுமானது . இதற்குமேலும் விளக்கம் சொல்லமுடியுமா சந்தேகக்கண் கொண்டவர்களுக்கு ?

இப்போது கடைசி ஆயுதமாக வீடியோ ஆதாரத்தை கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள் எதிலும் திருப்தி இல்லாதவர்கள் .

இவர்களின் நோக்கம் ஐக்கியபேரவையை களங்கப்படுத்துவது மட்டுமில்லை . ஊரை ரெண்டக்குவதும் இவர்களின் நோக்கம்தான் .

இங்கு கருதுப்பகுதில் ஒரு சகோதரர் நம் காயல் மௌலான்னா அவர்களை கிண்டல் செய்யும் முகமாக , sugar பற்றியும் , sodium பற்றியும் ,நோய் பற்றியும் , வயோதிகம் பற்றியும் விமர்சித்துள்ளார் .இது வன்மையாக கண்டிக்கதக்கது.

இம்மாதிரயான நாகரீக மற்ற விமர்சனங்களை நாம் முற்றிலுமாக கைவிட வேண்டும் .

இவ்வாறு விமர்சிதவருக்கும், ஒருநாள் முதுமை என்னும் நோய் மற்றும் , sougar & sodium கூடுவது/குறைவது போன்ற உபாதைகளும் வர வாய்ப்புள்ளது என்பதனை இவர் ஏனோ நினைவிற்கொள்ள மறந்துவிடுகிறார்.

admin அவர்களும் இதை எப்படி அனுமதித்தார் என்று தெரியவில்லை . kayalpatnam.com admin ஒருசார்பு நிலையை கடைபிடிக்கக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by A.M.Syed Ahmed (Riyadh) [12 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10424

இது நாங்களா சேர்த்த கூட்டம் இல்லை, தானா சேர்ந்த கூட்டம்....

மெகா இல்லை வேற யாரும் பயப்பட வேணாம், நல்ல ஓட்டிலேயே ஜெயிப்போம்..

ஓட்டுக்கு பணமா ? எலேக்சன் கமிஷன் இடம் கம்ப்ளைன்டா?

மஞ்சவாடா கூட வங்கி தரமாட்டார்கள் ஐக்கிய பேரவை பெரியவர்கள்?

" எங்க ஊட்டுக்கு வந்தால் என்ன கொண்டுவருவீர்கள்? உங்க வீட்டுக்கு வந்தால் என்ன தருவீர்கள் என்பார்கள்?

எது எப்படியோ சகோதரி மிஸ்ரிய்யா வெற்றிபெற வேண்டும்,



தவ்ஹீத் சொந்தங்களை போட்டாவில் காணவில்லையே?

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. உணர்வுப்பூர்வமான நிகழ்வு
posted by Mauroof (Dubai) [12 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10426

சரியான நேரத்தில் கூட்டப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான நிகழ்வு.

நிகழ்ச்சியில் கருத்துப்பதிவு செய்த பெரும்பான்மையான அரசியல் கட்சி சார்ந்த சகோதரர்கள் அவரவர் சார்ந்துள்ள கட்சியின் தலைமை நடைபெறவிருக்கும் நகர்மன்றத் தேர்தல் சம்பந்தமாக "காயல் ஐக்கியப்பேரவை" மேற்கொண்ட முயற்சிகளுக்கு எவ்வாறெல்லாம் ஒத்துழைப்பு நல்கியுள்ளது என்பதை விளக்கியிருக்கின்றார்கள், சிலர் பீடிகையுடன்.

இறுதியாக சகோதரர் அமானுல்லாஹ்வின் விளக்கம் சிந்தனைக்குரியது. சகோதரர் காயல் மௌலான தனதுரையின் இறுதியில் கேட்ட "இந்த வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு உண்டு என்பதை வெளிக்காட்டுவதுதான் இந்தக் கூட்டம். இவர்களெல்லாம் விவரமற்றவர்களா...?" என்பதும் சரிதானே சகோதரர்களே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AbdulKader (Abu Dhabi) [12 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10428

அஸ்ஸலாமு அழைக்கும்....

இப்படி ஒரு தெளிவான "ஐக்கியப் பேரவையின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்" ஏற்பாடு செய்த முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு என்னுடைய்ய முதற்க்கண் நன்றிகள்.

அடுத்து... அருமை தம்பி SK ஸாலிஹ்... இந்த செய்தியை காலம் கடத்தி தந்தாலும், கடமை தவறாமல் முழமையாக தந்துள்ளார்கள்... அவர்களுக்கும் என்னுடைய்ய நன்றிகள் பல.

எல்லா அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் நம்முடைய முஸ்லிம் ஐக்கியப் பேரவை மேல் நம்பிக்கையும், மரியாதையும் கொண்டுள்ள செய்தி கேட்டு... எனக்குள் எண்ணில்லா கொண்டாட்டம்!! காரணம்... நான் காயல்பட்டிணத்தின் மண்ணில் பிறந்ததினால்!!

காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் காக்காவின் நீண்ட உரை எல்லோருடைய நெஞ்சையும் தொட்டு இருக்கவேண்டும். ஏன், கல் நெஞ்சையும் கரைத்திருக்க வேண்டும்! அவர்கள் நமக்கு அறிவுரித்தியது போல் நமக்குள் ஏற்பட்ட "கருத்து வேறுபாடுகளை நாம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்துக்கொண்டு, முக்கியமான நேரங்களில் கோட்டையை விட்டுவிடக்கூடாது".

சொல்லப்போனால் கேவலம்....நம்மில் சிலர் சுய லாபத்திற்காக, பதவி ஆசையை காட்டி... நம் சமுதாயத்தின் பெரியோர்களை மதிக்காமல், பாவம்... சகோதரி அபிதாவை பழி கொடுக்க நினைத்துவிட்டார்கள். அனால் எல்லா அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் நம்முடைய சமுதாயத்தின் பெரியோர்களின் மீது அளவுகடந்த மரியாதையை வைத்துள்ளார்கள்.

அல்லாஹ் தன் படைப்புகளில் மனிதனை மேலாக படைத்துள்ளான்! நாம் இதை ஏன் சிந்திக்க தவறுகிறோம்? ஒற்றுமை நம் சமுதாயத்தின் பலப்பிடி / முதுகு எழும்பு. அது சேதம் அடைந்தாள் நாம் எப்படி எழுந்து நிற்கமுடியும்?

நம்மிடம் பிறவினை ஏற்படுத்தும் கூட்டத்தை நம்மில் சிலர் ஏன் இன்னமும் இனம் கண்டுகொள்ளவில்லை????

மக்களே சிந்திப்பீர்களாக.... நம்மில் பிரிவினை வேண்டாம். ஒன்றுபட்டால், உண்டு வாழ்வு.

ஒற்றுமையின் பக்கம் அல்லாஹ் அவனுடைய தீர்ப்பை அளித்து நமக்கு அருள்புரிவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
posted by Shuaibu Pirabu (Hongkong) [12 October 2011]
IP: 222.*.*.* Hong Kong | Comment Reference Number: 10431

இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

நமது சின்னம் : Bus
நமது வேட்பாளர் : காயலின் " வீர திருமகள்" மிஸ்ரியா
புரட்சி பெரியோர்களின் ஆதரவு பெற்ற சின்னம் : Bus

Shuaibu Pirabu
Hongkong


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (kangxi) [12 October 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 10435

சகோதரி மிஸ்ரியா வெற்றிபெற வாழ்த்துக்கள் .

சகோதரியை மேடை ஏற்றி விடப்போகிறார்களோ என்று பயந்தேன் . நல்ல வேலையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை .

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [12 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10436

இந்த கூடத்தில் ஒரு "காயல்" கர்ஜித்தது.

இந்த ஊரில் யாருக்கொரு ஆபத்து என்றாலோ எந்த பிரச்னை என்றாலோ ஐய்கியபேரவை உடனே ஓடோடி வந்து உதவி செய்யும்.என்று பொளந்து கட்டினார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் தாவா சென்டரில் ஒரு மாணவியை அவளின் விருப்பத்திற்கு மாறாக சட்டவிரோதமாக காவல் துறை வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது இந்த ஐய்கிய பேரவையின் அட்ரஸ் அமுங்கியதின் அந்தரங்கம் என்ன. குறைந்தபட்சம் கண்டன அறிக்கையையாவது வெளியிடமுடியாத கல்நெஞ்சமா?. .

மொட்ட நோட்டீசில் நம்மூர் பெரியவர்களை இழிவாக எழுதியதை பொறுக்காத அன்றைய அஸ்ஹர் ஜும்மா பள்ளி கதீப் அவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து மேடை ஏறி கண்டன குரல் எழுப்பினார்கள்..நம் ஊர் ஒற்றுமையை காக்க ஒரு கணம் கூட தயங்காத ஜமாஅத் என்று அனைவராலும் அழைக்கபடுவதுதான் இன்றுவரை உள்ள எதார்த்தமே.

சுனாமி வீடு ஆக்கிரமிப்பு கண்டன பொது கூட்டத்தில் இதே"காயல்"கொட்டிய வார்த்தைகள்.

இதே கையாலதான் 80 ரேசன் கார்டை மீனவர்களுக்கு எடுத்து கொடுத்து அவர்களை குடியமர்த்தினேன்.என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த இந்த ஊர் துரோகியை,ஊரை காட்டிகொடுதவரை இன்று மேடையில் ஏற்றி அழகு பார்கிறது ஐய்கிய பேரவை

இவர்கள் தான் ஊர் ஒற்றுமையை காக்க புறப்பட்ட படைவீரர்கள்,இவ்வீரர்களை தலைமையேற்று நடாத்தி செல்லும் தளபதிகள் அடங்கிய அசைக்கமுடியாத கோட்டை தான் ஐய்கியபேரவை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. பொருள் : அரசியல் வாதிகளுக்கு அரியாசனம் ( போட்டியிட அனுமதி) இல்லை என்போர் சரியாசனம் கொடுத்தது எப்படி ??
posted by ஹாஜா அரபி (Hong Kong) [12 October 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 10438

மூத்தவர்கள் நடத்திய கூட்டம் பார்த்தோம்! ஜனநாயக கடமை ஆற்ற அவர்களுக்கும் சட்டத்தில் இடம் வுண்டு. அவர்களின் முயற்சியில் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்!

அரசியல்வாதிகள் இன்று ஓரணியில் நின்றது பார்த்து ஆச்சரியமில்லை!! ஆனால் பேரவையின் மேடையே அரசியல் வாதிகளின் கட்டுப்பாட்டில் வந்ததுதான் ஆச்சரியம் !! தன் வேட்பாளரின் வெற்றிக்கு அணைத்து கட்சி அரசியல் வாதிகளின் ஆதரவு வேண்டி-அரசியல் வோட்டுக்களை பெற பேரவை இந்த நிலையை எடுத்து கொண்டதாகவே என்ன வேண்டியுள்ளது.

இதிலும் பேரவை முரன்படுகிறதோ? ஒரு பக்கம் ஊர் நகரசபைக்கு அரசியல் பின்னணி கொண்டோரை போட்டியிட பேரவை அனுமதிக்காது ! அந்த (கொள்கை /வெங்காயம் ?) பின்னணியில் தான் சகோதரி வஹீதாவிற்கு (அதிமுக ஆதரவு பெரும் நிலையில்) பேரவையின் ஆதரவு மறுக்கப்பட்டு, பெரும்பான்மை வோட்டுக்கள் கிடைக்காவண்ணம் பார்துகொள்ளப்பட்டது! சூப்பர் போலீஸ் ஆண்டி கிரண்பேடியின் உற்ற தோழி, ப. சிதம்பரத்தின் நேருக்க மாணவரின் சகோதரி சகோ. மிஸ்ரியா அவர்கள் கவனமாக தேர்வு செய்யப்பட்டார்கள்! இதையெல்லாம் முன்னரே சொல்லியிருக்கலாமே! உண்மையில் நாச்சி தம்பி மற்றும் அம்மாவின் தோழி வஹீதா அவர்களை விட மிகத்திறமையான வேட்பாளர்தானே பேரவையின் ஆதரவு பெற்றவர்.

அதாவது, அரசியல் வாதிகளுக்கு (நகரசபை) அரியாசனம் கிடையாது! ஆனால் எங்களோடு பேரவை கூட்டம் நடத்த - பெரியவர்களை முன்னின்று - வழிநடத்த (??) ,அரசிய வாதிகளே உமக்கு சரியாசனம் தர, ஊர் பெரியவர்களாகிய நாங்கள் மக்களிடம் (???) அனுமதி பெற்றுள்ளோம். அதற்கான தீர்மானமும் (??) உள்ளது. அந்த தீர்மானம் நிறைவேறிய கூட்ட வீடியோ உள்ளது என வாதிடுவீர்களோ ??

'உங்கள் வேட்பாளர் ஆபிதா வெற்றி பெற்றால் எப்படி எங்கள் அம்மா வை பார்க்க செல்வார் ??' இது இளவல் அன்வரின் முழக்கம்! சகோ. ஆபிதா வெற்றி வாகை சூடினால் அரசியல் வாதியான முதல்வரை சந்திக்கலாம் ! ஆனால் சகோ. மிஸ்ரியா தான் பார்க்க கூடாது !! ஏன் அம்மா அரசியல் வாதி ஆய்ற்றே ?? அவர்கள் தீண்ட தகாதவர்கள்!!

அரசியல் வாதிகளை மிஞ்சிய அரசியல் பண்ணும் நமது பெரியவர்கள், அமானுல்லாஹ் காகா, அன்வர் மற்றும் ஷாஜஹான் போன்றோர் பதவிக்கு பொருத்தமில்லை என்று சொல்வதை அரசியல் வாதிகளே சிந்திக்க வேண்டும்.



'நீங்கள் செய்யாததையா சொல்கிறீர்கள் ? ' (அல் குர்ஆன்) அல்லா தான் அனைவரையும் காக்க மேலானவன். ( குறிப்பு : இதை இங்கு நான் குறிப்பிடுவதற்கு வருந்துகிறேன். ஆனால் வுண்மையை மறைக்க விரும்பாததே இந்த கருத்தின் வெளிப்பாடு. காயலர்களே! என்னை மன்னியுங்கள்)

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Meera Sahib (kayalpatnam) [12 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10439

எந்த அரசியல் கட்சியையும் சாராதவர் நாங்கள் என்று தம்பட்டம் அடித்தவர்கள் மேடையில் அனைத்து அரசியல் கட்சி நண்பர்களையும் அழைத்து அவர்களது கட்சி பெயர்சொல்லி அவர்களது ஆதரவால்தான் எங்களுக்கு வெற்றி கிடைக்க போகிறது என பறைசாற்றுவது போல் இருக்கிறது. அவர்களது அரசியல் சாயம் வெளுத்துவிட்டதா?

அரசியல் சாணக்கியம் என்பது பேரவையில் தான் கற்க வேண்டும் .உங்கள் வேட்பாளர் எந்த கட்சி ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. மாஷா அல்லா
posted by kudack buhari (doha-qatar) [12 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10442

இது வெறும் கூட்டமாக தெரியவில்லை மிகபெரும் மாநாடு போல் உள்ளது , மேடையில் அமர்ந்திருக்கும் கண்ணியவர்களை ,பெரியோர்களை பார்த்தாலே தெரிகிறது,உண்மை வென்றது என்று ,அமானுல்ல காக்கா மிக தெளிவாகவே விளக்கி இருக்கிறார், ஆனால் ,அமானுல்ல காக்கா எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் திருந்தாத ஜன்மங்கள் நிரயவே இருக்கும்,இவர்களுக்கு குறை கண்டுபிடிப்பது மட்டுமே பொழுதுபோக்கு,

எனக்கு தெரிந்த வரை ஒரு 10 பேர் மட்டுமே திரும்ப திரும்ப வலைத்தளத்தில் மிக மட்டமான முறையில் கருத்து எழுதி ஊர் ஒற்றுமையை நாசமாக்கி அதில் இந்த குள்ளநரி கூட்டம் ஆனந்தமடைகிறது ஐக்கியப் பேரவை இவர்களை அடையாளம் காணுங்கள் ,

மாற்று வேட்பாளர் அறிமுக கூட்டம் ஏனோ தானோ என்றாகி விட்டது கூடவே நம் சகோதரிகளை ரோட்டுக்கு கொண்டுவந்து நம் சமுதாய சீர்கேட்டையும் ,அசிங்கமும் செய்து விட்டார்கள்,

வேட்பாளரை ஐக்கியப் பேரவையும் ரோட்டில் வைத்து தான் அறிமுகபடுத்தும் என்று நினைத்து பேரவையின் அறிக்கை வரும் முன்பே பேரவையை திட்டி கருத்து எழுதி வைத்தவர்கள்.ஏமாந்து போனார்கள் அவர்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டி எடுத்திருக்கிறது பேரவை,



ஐக்கிய பேரவை யின் பொது வேட்பாளர் வெற்றிபெற வாழ்த்துக்கள்.அல்லா ரஹ்மத் செய்வானாகவும் . ஆமீன்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. குந்தகம்
posted by Mauroof (Dubai) [12 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10443

வாசகர்கள் பதிவு செய்துள்ள முதல் 11 கருத்துக்களில் ஒரே ஒரு கருத்தில் மட்டும் (நான் இக்கருத்தை பதிவு செய்யும் நேரம் வரை) திருவாளர். ADMINISTRATOR "வெட்டு/EDIT" செய்திருக்கிறார். EDIT செய்யப்பட அந்த கருதுப்பதிவில் ஒற்றுமைக்கு ஊரு விளைவிக்கும் இன்னொரு வாக்கியத்தையும் வெட்ட ஏன் தவறி விட்டீர்கள்??? நிச்சயம் புரியும் அது என்ன வாக்கியம் என்று எழுதியவருக்கும் படிப்பவர்களுக்கும். இது போன்ற வார்த்தைகள்தான் சமுதாயத்தை நல்ல பிளவு படுத்திக்கொண்டிருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by sulaiman (abudhabi) [12 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10445

அஸ்ஸலாமு அழைக்கும்.சகோதரி மிஸ்ரிய அவர்களை பெரும்வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து நமது ஊரின் கண்ணியத்தையும்,ஒற்றுமையையும், நமது ஊரின் கட்டுப்பாடுக்கு மதிபளித்த அரசியல் கட்சி தலைவர்கள் ,சகோதர சமுதாயத்தை சார்ந்த பிரமுகர்களின் நம்பிக்கையும் பாதுகாப்போம்.குறைமதியாலர்களின் சூழ்ச்சியை முறியடிப்போம் இன்ஷாஅல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. ச்சும்மா ஒரு கற்பனை
posted by Mohideen (Jeddah) [12 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10447

சகோதரி மிஸ்ரியா: என்னை விட சகோதரி ஆபிதா அவர்கள் திறமை மிக்கவர்களாக விளங்குவதால் நான் பொது வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறேன்.

ஐ.பே: நன்றி! சகோதரி மிஸ்ரியா அவர்கள் போட்டியிலிருந்து விலகுவதால் அவருக்கு அடுத்த படியாக வந்த சகோதரி வஹீதா (மிஸ்ரியா உம்மா இல்லை) அவர்களை பொது வேட்பாளராக அறிவிக்கிறோம்.

கருத்து புலிகள் (தற்போதைய ஐ.பே எதிர்ப்பாளர்கள் - 100%): வாழ்க ஒற்றுமை. ஐக்கிய பேரவையின் முடிவு மிகவும் பாராட்டுக்குரியது. நாம் அவசியம் ஊர் ஒற்றுமைக்காக பாடு பட வேண்டும். நம் ஊர் பெரியவர்கள் எந்த அளவுக்கு ஊரின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்கள் எனபது வெள்ளிடை மலை. எனவே நாம் சகோதரி வஹீதா அவர்களின் வெற்றிக்கு அரும்பாடு பட வேண்டும். போட்டி வேட்பாளர் சகோதரி ஆபிதா அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது? அவர்களுக்கு ஸ்கூல் நடத்துவதை தவிர வேறென்ன தெரியும். ஊர் ஜமாஅத் ஆதரவு உண்டா?

கருத்து சிங்கங்கள் (தற்போதைய ஐ.பே ஆதரவாளர்கள் - 50%): மீண்டும் அதே பழைய பல்லவி - - - ஊர் ஒற்றுமை! பெரியவர்களை மதிக்க வேண்டும்.

கருத்து சிங்கங்கள் (தற்போதைய ஐ.பே ஆதரவாளர்கள் - Balance 50%): நாம் போட்டி வேட்பாளர் சகோதரி ஆபிதாவைத்தான் (காயல்வாசி) ஆதரிக்க வேண்டும். அவர்களுடைய ஆற்றல் என்ன? அறிவு என்ன? சகோதரி வஹீதா அவர்களின் முந்தைய 5 வருட நிர்வாகம் எப்படி இருந்தது என்பது எங்களுக்கு தெரியாதா? ஐ.பேரவையின் இந்த முடிவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

___________________________________________________________

இது என் கற்பனை மட்டுமே. ஒரு வேளை இதுவே எதார்த்தமாகவும் கூட இருக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohamed faiz (CHENNAI) [12 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10450

அஸ்ஸலாமுஅலைக்கும் .

சகோதரி வஹிதா அவர்கள் ஐக்கியபேரவையை நம்பித்தான் முச்சரிக்கையில் கைஎளுத்திட்டர்கள். சகோதரி வஹிதா அவர்களை மாற்று வேட்பாளராக அறிவித்தால், சகோதரி வஹிதா அவர்கள் வாபஸ் வாங்க மாட்டார்கள் என்று சகோதரர் அமானுல்லாஹ் அவர்கள் கூறி இருக்கிறார்கள். ஐக்கியப்பேரவையை நம்பிய சகோதரி வஹிதா அவர்கள் மீது ஐக்கியப்பேரவைக்கு நம்பிக்கை இல்லையா?.

வேட்பாளர் தேர்ந்தெடுப்பதற்கு ஒருநாள் முன்னதாகவே சகோதரி மிஸ்ரியாதான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஒருசிலருக்குமட்டும் தெரிந்த கதையை ஏன் கூறவில்லை?

ஐக்கியபேரவை ஒருசார்பாக இல்லாமல் பொதுவாக இருந்தால்தான் மட்டுமே அனைவர்களும் பின்பற்றுவார்கள். இல்லையென்றால்??????

ஐக்கியப்பேரவையினர் இதனை சிந்திப்பார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. ஊரெத் தெரிஞ்சிக்கிட்டேன்...உலகப் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணி...என் கண்மணி...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.) [12 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10452

ஆஹா! ஊருக்காக உழைத்து ஓடாய்த் தேஞ்சு போன இந்த உத்தம தியாகிகளின் உருப்படியான பேச்சைக் கேட்டோம்.மனசு ரெம்ப குளிர்ந்து போச்சுங்க! இவங்க இல்லைன்னா காயல் எப்பவோ கரைஞ்சு காணாமெ போயிருக்கும்ங்க! பார்த்தீங்களா? தோல்வி பயம் கொஞ்சங்கூட இல்லீங்க! அடடா!அம்மாவின் பெருந்தன்மை...? அப்புறம்,கீரன் பேடியெக்கூட தெரியும்,அதுமட்டுமா? சிதம்பரம்,சீகாழி,நளினி,நளாயினின்னு எல்லோரயும் நல்லாத் தெரியும்!

அதிமுக,திமுக,முஸ்லிம்லீக்,கொம்புத்துறை,சிங்கித்துறை அப்பப்பப்பா....!!! அசத்திப்புட்டீங்க போங்க! புல்லரிக்குதுங்க...பேரவை...ஸாரி, போர்வை வேணுமுங்க! நான் சரியாத்தானே சொல்லுறேன்,யாரையும் கிண்டல் பண்ணலியே?

குசும்பு:
ஐக்கியப் பேரவையின் அப்பாமார்களின் வீட்டுலெ உள்ளவங்க ஓட்டை மாத்திப் போட்டு ஆபிதாவை அரியனையில் ஏற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AbdulKader (Abu Dhabi) [12 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10455

அஸ்ஸலாமு அழைக்கும்....

தம்பி புஹாரி... கலக்கிட்டா போ.....

குழப்பத்தை குவளையில் நிரப்பி கூப்பாடுபோட்டு கும்மியடிக்கும் குழவிற்கு குளிர்காய, தேர்தல் நேரம் ஒரு நல்ல நேரம்!!!!

இந்த ஒற்றுமையை நிரூபிக்கும் சங்கமத்தின் மூலம்..... ஒற்றுமையை கூறுபோட நினைத்தவர்களுக்கு சரியான சவுக்கை அடி!!! பொறுத்து இருந்து பாருங்கள்... பொத்துகிட்டு வருவார்கள்.

ஒற்றுமையை கருத்தில் கொண்டோரே... பொறுமையுடன் இருங்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்பதை, அவனுடைய்ய அருள்மறையில் திரும்ப திரும்ப நமக்கு நினைவுபடுத்தி காண்பிக்கிறான்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [12 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10456

இந்த கூட்டத்தின் மூலம் தெளிவு பெறாதவர்களும் தெளிவு பெற்றிருப்பர்கள். சில கமெண்ட்ஸ் இன்னும் என்ன தான் விளக்கினாலும் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பதாகவே உள்ளது.

தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்புவது முடியாத காரியம்.

அமானுல்லாஹ் காக்காவின் உரையிளுருந்து மாற்று வேட்பாளர் விசயத்தில் ராஜ தந்திரத்தையும் அறிய முடிந்தது. அறிவு என்னதான் இருந்தாலும் அனுபவம் என்பது அவசியம் என்பதனை இக்கூட்டம் மூலம் எதிரணியினரும் உணர்ந்திருப்பார்கள்.

இங்கு மேடையில் அனுபவமிக்க பெரியவர்கள். அங்கோ இரத்த துடிப்புள்ள ஒரு சில வாலிபர்கள்.

இனியும் பிடிவாதம் கொள்ளாமல் ஒற்றுமையை கருத்தில் கொண்டு செயல் பட்டால் இறையருளால் நம் யாவருக்கும் வெற்றி நிச்சயம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by sholukku.aj (kayalpatnam) [12 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10457

ஐக்கிய பேரவையின் தலைமை தேர்வு முறை விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது என்பதை அறிவதட்கு இக்கூட்டம் ஒரு வாய்ப்பாக இருந்தது .நன்றி. அரசியல் வாதிகளிடம் உள்ள பக்குவமும், ஒற்றுமையையும் ,நன்பிக்கையும் பொது மக்களிடம் இல்லையே ஐக்கிய பேரவை விசியத்தில் . குறைகான்பாவர்கள் கண்டுகொண்டே இருக்கட்டும் .நம் வெற்றி பயணம் தொடரட்டும்..நன்றி .vote for BUS..................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Moosa Naina (Madina (K.S.A)) [12 October 2011]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10463

இந்த அளவுக்கு அருமையான எல்லா தரப்பு மக்களின் தூய்மையான வெளிப்பாட்டையும் கேட்ட பிறகும் கூட, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று கொக்கரிக்கும் ஒரு சில நபர்களின் உண்மையான சுயரூபம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்க்கு வாய்ப்பளித்த காயல் வெப் சைட்டுக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்ள வேண்டும்.

எனவே, ஊரின் கண்ணிய மிக்க பெரியவர்கள்,ஜமாத்தின் தலைவர்கள், மற்றும் நல்லுள்ளம் கொண்டவர்கள் இப்படிப்பட்டவர்களின் கருத்துக்களை பற்றி அலட்டிக்கொள்ளாமல், சகோதரி மிஸ்ரிய்யா அவர்களின் வெற்றிக்கு உண்டான ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடும்படி கேட்டுக்கொள்கிறேன். வெப் சைட்டில் 10 பேர் கருத்து சொல்வதினால் சகோதரி ஆபிதா அவர்களுக்கு அமோக வெற்றி வாய்ப்பு இருப்பது போல் பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ், சகோதரி மிஸ்ரிய்யா அவர்கள் அமோக வெற்றி பெற்று ஊரின் கண்ணிய மிக்க பெரியவர்கள், ஐக்கிய பேரவை,மற்றும் அனைத்து தரப்பு மக்கள், கட்சிகளின் பிரமுகர்களின் அறிவுரையின் படி செயல்பட்டு நமதூர்க்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohiadeen (Phoenix) [12 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 10471

This meeting showing the political influence of Peravai.This is needed.

Now the big question is Peravai's transparency.Time has changed a lot,now kayal people are started questioning and many candidates had nominated. It should be taken into consideration by Peravai.

If Peravai does not maintain their transparency in future It wont be a long for people revolution. If not this election surely the next.Remember when one oraganization failed their support of people then political people never turn back.

Greetings to Amanullah Mama. I respect his speech.

“62 பேர் மட்டும்தான் ஊர் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்களா...?” என்று ஒரு கேள்வி. பின்ன எப்படித்தான் செய்ய வேண்டும்? வந்து சொல்லுங்களேன்..."

The Answer is:
பேரவையில் நிர்வாகச் சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி விலகி நிற்கின்றனர் இன்னொரு சாரார்..

Peravai should includes all Jamats including Thouketh Jamat and it should be elected on periodic bases rather than permanent.

Whoever win, they should wish to surve the people regardless of money/castes/religions.

WE WILL HOPE THE BEST IN FUTURE.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. குசும்பு புதுசு (new version ).
posted by kudack buhari (doha-qatar) [12 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10473

இதை விட ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க முடியாது?

இங்கே நண்பர் ஒருவர் ஒரே கருத்தை மூன்று முறை அனுப்பி நம் இந்த வலைத்தளம் admin இடம் குட்டு (Comments not approved )வாங்கி இருக்கிறார்,அவருக்கு தான் எவ்வளவு ஆசை பெரியவர்களை வசைபாட ,

இல்லை எல்லா கருத்தும் அவர் சொல்லுவதை போலவே இருக்கணும் நு ஒரு .........................(இதில் உங்கள் தேவைகேற்ப வார்த்தையை போட்டு படித்து கொள்ளுங்கள் )

குசும்பு புதுசு (new version )
**************************************
ஒழுங்கு (கொசு ) கலுங்கடிக, கலுங்கு ஒழுங்கு அடிக்க அப்பத்துக்கு மேலே கருப்பட்டி.

கொசு போன்றவர்கள், ஆலமரம் (பேரவை)அசைக்கமுடியாது.
*********************************************************************************************

நானும் சரியாத்தானே சொல்லுறேன்,யாரையும் கிண்டல் பண்ணலியே?

ஒரே கல்லுல மூணு மாங்கா.

கஷ்டப்பட்டு அடிச்சிருக்கேன் கத்திரி போட்டுராதீங்கோ admin


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [12 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10474

அஸ்ஸலாமு அழைக்கும்

மாஷா அல்லாஹ். இப்படி ஒரு மாபெரும் கூட்டமா>>>>>>>>>>>>>>> . நான் நம் ஊர்ல் இது போன்ற சிறப்பான மக்கள் கூட்டத்தை நான் பார்க்க வில்லை.நம் ஐக்கிய பேரவைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி >>>> தான். சந்தேகம் இல்லை . நமது வேட்பாளர் மிஸ்ரிய அவர்களுக்கு மாபெரும் வெற்றி நிச்சயம் .A D M K ஒன்றிய செயலாளர் ராமசந்தரன் அவர்கள். பேச்சு அருமையானது. எங்கள் பாராட்டுகள் . அமானுல்லாஹ் காகா அவர் களுக்கும் எங்கள் பாராட்டுகள் என்ன அருமையான பேச்சு . இவர் பேச்சை மற்றவர்கள் புரிந்துகொண்டால் மிக நல்லது

வஸ்ஸலாம்
k .D .N .MOHAMED LEBBAI
jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by S.A.Muhammad Ali (Dubai) [12 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10479

சலவை செய்யப்பட்ட உடை
சலாம் போடும் உள்ளங்கள்
இவர்கள் தான் அரசியல்வாதிகள்.

ஜனங்களின் உணர்வறியா மனிதர்கள்
ஜனநாயகத்தை பற்றி பேசுவதேனோ

ஒற்றுமை பற்றி பேசும் இவர்களிடம்
ஊமை போல் இருந்து விட்டால்
நல்லவன் என்று போற்றுவார்கள்
உண்மையை எடுத்துரைத்தால்
ஊரை வசை பாடுபவன் என்பார்கள்.

நடந்தது என்னவென்று நாடறியும்
இனி நடப்பவை நனி சிறக்க
இறைவனிடம் இறைஞ்சுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by OMER ANAS (SOHA QATAR.) [12 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10480

அஸ்ஸலாமு அழைக்கும்.! அமானுல்லா காக்கா ஊரின் உண்மையை உரைத்து உள்ளீர்கள். வாழ்த்துகிறோம்.!!! எல்லா கட்சி பிரமுகர்கள் உறையும் அருமை. ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பதவி ஆசை தலைக்கனம்,இது யாருக்கு வந்துவிட்டதோ, மாற்ற ஒரே வழி, ஊர் மக்கள் காட்டும் தீர்ப்பு மட்டுமே! அம்மா என்று சொல்லிக்கொடுக்க காசு வாங்கும் பெண்மணி, சும்மா பைப் லைன் எப்படி தருவார்கள்? சிந்திப்பீர்? கொசுக்கடி!!!பஸ்ல போனா பரீட்ச்சை எழுதலாம்.!!! ஆனா புத்தகம் கொண்டு போனா பரீட்ச்சை எழுத விடுவார்களா? பொண்டாட்டி மணாளன்.!!! வழமை போல் எடிட்தானே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by zainab (kayalpatnam) [12 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 10481

அஸ்ஸலாமு அழைக்கும்

அரசியல் பிரமுகர்களின் aatharavukalai பாக்கும் pothu ivarin கமெண்ட் ஒன்று நினைவு வந்தது

கமெண்ட் ref no :10065

சகோதரியின் அறிக்கை , ஒரு அரசியல்வாதியின் வாக்குறுதி போல் உள்ளது. அரசியல்வாதியின் வாக்குறுதி ......... நாம் அறிந்ததே !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Md.Ibrahim-SABTECH,Dammam (Dammam) [12 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10482

அஸ்ஸலாமு அழைக்கும். ஒற்றுமை தான் முக்கியம்.எனவே அனைவரும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வையுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Faizal (Doha-Qatar) [12 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10483

காயல்பட்டணத்தில் கொம்பு துறை, சிங்கிதுரை ஊர் தலைவர்கள் கலந்து கொண்டார்கள் என்ற செய்தி புது விவாத்ததை கிளப்பி விட்டு இருக்கிறது ....... இது என்ன புது கலாட்டா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Noordeen Prabu (Jeddah - Saudi Arabia) [12 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10485

சகோதரர் முஹைதீன் (ஜித்தா) அவர்களே

உங்களின் கற்பனை (கருத்து) வளம் மிகவும் அருமை. அது கற்பனை மட்டுமல்ல - நிதர்சனமான உண்மையும் கூட.

இப்படிதான் சில பேர் யாரை ஆதரிப்பது என்றே தெரியாமல் வேறு வழி இல்லாமல் முழி பிதுங்கி நிற்கிறார்கள். சும்மா ஒப்புக்கு சப்பாக கதையும் கட்டுரையும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

உங்களின் நடுநிலையான கருத்துகளுக்கு பாராட்டுகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. வெளுத்துவிடுமே
posted by shahul hameed sak (malaysia) [12 October 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 10488

ஆமாம் ஆதரவு கோரி மட்டும் பேசுங்கள் அப்புறம் பேசுகிறேன் பேர்வழியென்று உண்மையை உளறி உள்குத்து வெளிகுத்து ஆகி சாயம் வெளுத்துவிட்டால், அப்புறம் அம்மாவின் ஆப்புக்கு பயந்துதான் அடுத்த தலைவர் பதவிக்கு கோரிக்கையோ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ismail (Jeddah K.S.A.) [12 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10489

our kayal`s unity is the first and foremost thing,neglect the useless comments.

My humble request to the admin of this website is to reject the unwanted and mannerless comments which is not at all useful in anyway , they do all for publicity only nothing morethan that .first they should learn themselves how to respect seniors and elders.

we all pray for the unity of our kayal and the success of our unanimous candidate of KAYAL EIKKIYA PERAVAI Mrs.Misriyah.ALLAH WILL LONGLAST OUR UNITY AND OUR KAYAL AAMEEN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. குத்திவிட்டு கூத்துபர்க்கும் கூத்தாடி யார்???
posted by habeeba (kayalpatnam) [12 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10490

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு சிறு சந்தேகம்- இது மக்கள் ஐக்கிய பேரவையா அல்லது கட்சி ஐக்கிய பேரவையா?

காக்கா பாதுல் அசஹாப் அவர்கள் தனது உரையில் கூறினார்கள் தலைவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று.., இங்கு தலைவர் யார் என்பதுதான் பெரும் கேள்வியே ????????? அதாவது தலைவர் யார் என்பதை தேர்ந்தடுக்கும் ஐ.பே தான் தலைவருக்கு தலைவரா?

காக்கா காயல் மௌலானா அவர்களின் உரையில் சகோதரி MISRIYA அவர்களுக்கு ஒரு அறிவுரை கூறினார்கள், "நான் இந்த வேட்பாளர் மிஸ்ரிய்யாவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்... நீங்கள் வெற்றி பெற்றால், பொறுப்புணர்ந்து. ஐக்கியக் பேரவைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்".

ஆக, சிஸ்டர் MISRIYA அவர்கள் தலைவியானால் அவர்களது பொறுப்பு ஐ.பே க்கு கட்டுப்படுவதே தவிர மக்களுக்கு சேவை செய்வது அல்ல..???

இஸ்லாம், கலாச்சாரம் என்று முழக்கமிடும் நாம், பெண் தலைவிதான் வரவேண்டும் என்ற அரசாணைக்கு எதிராக நபி வழியை பின்பெற்றியவர்கழ்லாக தனது செல்வாக்கை பயன்படுத்தியோ அல்லது மக்களை ஐக்கியபடுத்தியோ போர்க்கொடி தூக்கி நம் கலாச்சாரத்தை பேணி இருக்கலாமே..

"ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்பது யாவரும் அறிந்த பழமொழி.. ஆனால் குத்திவிட்டு கூத்து பார்க்கும் உண்மையான கூத்தாடி யார்(?அரசு) என்பதைத்தான் நாம் உணர மறந்துவிட்டோமா அல்லது மறுக்கிறோமா அல்லது மறைக்கிறோமா என்பதுதான் புரியாத புதிர்...

INNALLAHA MA'NA..
அல்லாஹ் மிக்க அறிந்தவன், மிக்க போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. நம்ம தமிழ் தான்க சரியில்லை... அவங்க சரியாத்தான் இருக்காங்க...
posted by M Sajith (DUBAI) [12 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10491

அரசியலில் நிறந்தர எதிரியுமில்லை, நிறந்தர நன்பனுமில்லை என்பதை இந்தக்கூட்டம் மீண்டும் ஒருமுறை உரக்க சொல்லியிருக்கிறது.

மெகாவுக்கு வந்த கூட்டம், கலைஞருக்கும், வடிவேலுவுக்கும் என்றால், இது அவர்களுடன் சேர்ந்து விஜயகந்த், பேரசிரியர் மற்றும் அன்னை சோனியாவுக்கும் சேர்ந்து வந்த கூட்டம் என்றால் மிகையாகாது.

ஐக்கியப் பேரவையை அரசியல் கட்சிகள் ஆகிரமித்துள்ள உண்மையை சந்தேகமற மிக தெளிவாக படம் போட்டு காட்டியதுக்கு முதலில் நன்றிகளை சொல்லியே ஆக வேண்டும் - முதன் முதலில் பேரவை வெளிப்படையாக நடந்த விஷயம் இதுதான்.

பேரவையின் வேட்பாளர் தனது அறிக்கையில் (பார்க்க NEWS ID # 7350) வாக்குறிதியளித்தது போல குடும்பத்தலையீடு அறவே இல்லாமல் அவரது சகோதரரால் அறிமுகம் செய்யப்பட்ட அனுபவம் புதுமையாகத்தான் இருந்தது. இது போலவே, மக்களும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், குடும்பத்தலையீடு இல்லாமல் சகோதரர், கணவர், மாமா, மச்சான் போன்ற நம்பிக்கையானவர்களை மன்றத்துக்கு அனுப்பி அன்றாட அலுவல்களை திறம்பட செய்து "கொல்வார்கள்" (இது எழுத்துப்பிழை இல்லை) என்ற நம்பிக்கை வந்துள்ளது - மிக்க நன்றி (நாளை நடக்கப்பொவதுக்கான PREVIEW - இரண்டாவது வெளிப்படை).

அரசியல் கட்சியினர் வழமையாக பாடும் தலைமைதுதியை பேரவைக்காக மாற்றிப்பாடியதும், பட்டியலிடுவேன், நெற்றியில் சுடுவேன் வீர வசனங்களும் மிகவும் அறுமையாகவும் நிரம்ப நாள் ஊரில் இல்லாத நம்மவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது.

குறிப்பாக கின்னஸ் புத்தகத்தில் கிழிந்த பக்கமாக தேடிப்பார்த்து போடவேன்டிய இனிப்பு தத்துவமும், அம்மாவை அனுகும் முறையும் ராமாவரத்திலும், போயஸிலும் 'அடி'மட்டத்திலிருந்து வந்த அனுபவசாலிகளின் வாயால் கேட்டது பொருத்தமாக இருந்தது.

சிறந்த நாவன்மையையும், நிதானத்தையும் ஒரு சேரப்பெற்ற எங்கள் அமானுல்லா மாமா மிகவும் சிரமமெடுத்து பேரவைக்கும், பேரவையை தாங்கி பிடிக்க கைகொடுக்கும் ஜமாத்துக்கும் அறிக்கை உபயத்தில் எழுந்த கேள்விகளுக்கு அதைவிடவும் சிரமமெடுத்து பதில் சொல்லியதில் ஒரு தெளிவு.. வளைதலத்தில் எழுதினால் கேக்காது, நேரில்தான் 'அனுக' வேண்டும் என் பிடிவாதமாக இருந்த சகோதரர்களுக்கு வரிக்குவரி எழுதுகிறார்கள், எழுதுகிறார்கள் என பேசி வாயடைக்க வைத்துவிட்டார்கள்.

அதோடு, TV ல வருகிற "நம்பினால் நம்புங்கள்" ஸ்டைல சில அறிய பல தகவல்களையும் தந்துள்ளார்கள், குறிப்பாக தாயாரின் மனுத்தாக்கள் - இதன் சிதம்பர ரகசியத்தை நேற்றே வாழைமட்டைகளுக்கு தெரியத்தந்தது மீரான் காக்காவின் சொந்த யோசனை என நினைத்து அவ்ர்களை சாடிவிட்டேன்.(பார்க்க NEWS ID # 7360 Comment # 28 & 38 ) - இது தெரியாமல் சகோ. ஜாபர் சாதிக், நாம் இவர்களுக்கு சொன்ன தூங்கும் தத்துவத்தை நமக்கே சொல்லியிருக்கிறார் - சரி தூக்கத்தில் சொல்லியிருப்பார் என் விடுவோம்.

ஆகா.. சுவாரஸ்யம் போச்சேன்னு வருத்தப்படாம இருக்க வஹிதா ராத்தாவை ஏன் நிறுத்தலன்னு சொன்ன காரணம் இருக்கே அதான்க ஹைலைட் (மூன்றாவது வெளிப்படை) நீதி, நேர்மை, நம்பிக்கை இதுக்கெல்லாம் அகராதில தப்பா எழுதி வச்சிருக்கிற பொருளை எல்லாம் ரப்பரால அழிச்சிட்டு மாத்தி எழுதவேண்டிய முக்கியமான அம்சம்

கையோட ஒத்துமை, சந்தர்ப்பவாதம் இது இரன்டுக்குமே ஒரே பொருள்தான்னும் மறக்காம எழுதனும் இல்லேனா கஷ்டப்பட்டு ஒரே மேடைல கொன்டுவந்த எல்லா அரசியல் கட்சியினரின் ஒத்துமையும் வரும் நாடளுமன்ற தேர்தல்ல நாசமாப்போயிடும். ஒத்துமை மிக முக்கியம் இல்லயா..?

இது போல ஆலோசனயை தீர்மாணம் என்றும், ஒருசாரார் என்பதை ஒருமித்த என்றும், கேள்வி சந்தேகம் போன்றதை ஆர்வக்கோளாறு என்றும் பல புழக்கத்தில் உள்ள வார்த்தைகளின் அர்த்தங்களை மாற்றி புதிய அகராதி ஒன்றை பேரவை சார்பில் வெளியிட்டால், கடல் கடந்து ஊர் நடப்புக்களில் ஆர்வம் காட்டும் காயலர்கள் தாங்கள் செய்திருக்கும் இந்த ஆறிய சாதனையை புரிந்து கொள்வோம்.

அந்த அகராதியின் வெளியீட்டு விழாவையும் இது போலவே விமரிசையாக செய்யுங்கள்.. சேர்மன் இலேனா அவங்க சொந்காரங்க யாரவது வருவாங்க.

மேடைல கூட்டம் ரெம்ப பலமா இருந்தது, பேரவை கட்டுப்பட்டில் தான் தலைவி இருக்கனுமுன்னு அட்வைஸ் பன்னிட்டாங்களே..பெரியவங்க சொன்ன கேட்டுவேற ஆகனுமே..

பேரவையும் 23 ஜமாத்தும் 15 பொதுனல அமைப்பும் இல்லாம ஏதும் செய்யாதே!! அப்ப நகர்மன்றத்துக்கு தலைவிகூட எல்லோருமா போகபோறீங்க..?

பேசாம நகர் மன்றத்த ஜலாலியக்கு மாத்திருங்க இட நெருக்கடி இல்லாம இருக்கும்.. _______________________________________________ கேக்கிறவன் கேட்டுகிட்டு இருந்தால், கேப்பையில நெய்யும் வடியும், அந்த நெய்யில நெத்திலி மீனும் ஓடும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. நியாயத்தை உணர்ந்துகொள்வோம்!
posted by Seyed Ibrahim (Kayalpatnam) [13 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10497

இங்கே இச்செய்தியைப் பற்றி கருத்துப்பதிவு செய்யும் ஒருவர் கூட முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி கேள்வி கேட்காதது மிகவும் ஆச்சரியமளிக்கிறது. அக்கேள்விகள் ஏற்கனவே பழைய செய்திகளில் கருத்துப்பகுதியில் கேட்கப்பட்டவைதான்! மனிதன் மறதியுள்ளவன்தானே? அதை அவ்வப்போது நிரூபித்துக்கொண்டேதான் இருப்பான். சரி விஷயத்திற்கு வருகிறென்.

(1) ஐக்கியப் பேரவை நடத்திய நகர்மன்றத் தலைமைக்கான பொது வேட்பாளர் தேர்தல் வெளிப்படையானதா? அங்கே ஜமாஅத், பொதுநல அமைப்புகள் பெயரில் குழுமியிருந்த பிரதிநிதிகள் (???) அந்தந்த ஜமாஅத் அல்லது பொதுநல அமைப்புகளின் பொதுக்குழுவில் கலந்தாலோசித்து அனுப்பப்பட்டவர்களா?

(2) சரி, ஜலாலிய்யா கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்ட கடிதத்தில், ஜமாஅத்துகளும், பொதுநல அமைப்புகளும் தத்தம் உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து வரும் வகையில், விருப்ப மனு அளித்து கையெழுத்திட்ட / கையெழுத்திடாத மக்களின் பெயர் பட்டியலாவது தரப்பட்டதா?

(3) சரி அது போகட்டும்! அழைப்புக் கடிதத்தில்தான் விபரம் இல்லை. குறைந்த பட்சம் கூட்டத்திலாவது கலந்தாலோசனைக்கு நேரம் ஒதுக்கப்பட்டதா? எடுத்த எடுப்பிலேயே வாக்குப் பெட்டியை முன்வைத்ததன் ரகசியமென்ன?

(4) ஆகக் குறைந்தபட்சம், “இப்போது பெயர்களை அறிவிக்கிறோம்... உங்கள் ஜமாஅத் / அமைப்பின் மக்களிடம் கலந்தாய்வு செய்தபின் நாளை உங்கள் முடிவோடு இங்கே வாருங்கள் என்று எந்த வெளிப்படையான அறிவிப்பாவது உண்டா?

அன்பானவர்களே... இந்த ஐக்கியப் பேரவையை அதன் இன்றைய நிர்வாகிகளே இல்லாமலாக்க நினைத்தாலும் நாம் எதிர்த்துப் போராடி, பேரவையைக் காப்பாற்றுவோம். அது வேறு விஷயம்.

ஆனால், இந்தப் பேரவையை இயக்குவது யார்? அவ்வப்போது விரோதியாகும் செல்வந்தர் எப்படி இதுபோன்ற முக்கியமான கலந்தாலோசனைகளின்போது மட்டும் வழிகாட்டியாகி விடுகிறார்?

அழகாகவும், அமைதியாகவும், அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாகவும், எம்.கே.டி.அப்பா, எல்.கே.அப்பா, பாவலர் அப்பா, விளக்கு அப்பா காலங்களில் எல்லாம் நடைபெற்று வந்த நம் ஊர் தேர்தலில் பணத்தைக் கொடுத்து, மக்களைக் கெடுத்து, குட்டிச் சுவராக்கி, பணத்திற்காகவே வேட்பு மனு செய்யும் கேடுகெட்ட - நரவலைத் தின்பதற்கு ஒப்பான கலாச்சாரத்தை இந்த ஊரில் அறிமுகப்படுத்திய சீதேவி யார்?

அவர்களின் ஒட்டுமொத்த குழுக்கழும் இணைந்துதானே இன்று இந்த ஐக்கியப் பேரவையை நடத்திக்கொண்டிருக்கிறது? காயல் அமானுல்லா காக்காவின் கருத்துப்படி அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகளால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம்தான் இன்றைய ஐக்கியப் பேரவை நிர்வாகம் என்றால், அவர்களல்லவா வழிகாட்ட வேண்டும்?

ஒருபுறம் இந்த கருத்துப்பகுதியில் உண்மையான விமர்சனங்கள் வந்தால் கூட தாங்கிக்கொள்ள முடியவில்லையே? இங்கே நமதூரில் இந்தப் பெரியவர்கள் அடங்கிய பேரவையின் பெயரில் எத்தனை எத்தனை விமர்சனங்கள், வதந்திகள் நாக்கூசாமல் சொல்லப்பட்டு வருகிறது என்பதை ஊரிலிருப்பவர்கள்தான் அறிவார்கள்.

சரி, இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் ஷாஜகான் காக்கா, “மத்திய காயல் மக்கள் பத்து நிமிடத்தில் பெட்டியை நிறைத்து விடுவார்கள்” என்று பட்டவர்த்தனமாக கூட்டத்தில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். அதைக் கேட்ட பின்பும், கொஞ்சம் கூட சூடு சொரணையின்றி இருக்கும் “ஊர் ஒற்றுமை”வாதிகளைப் பார்த்தால் ஆச்சரியமாக இல்லையா?

அரசியல் கட்சிகள் போட்டியிடக்கூடாது என்பது ஐக்கியப் பேரவையின் கொள்கையாம். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கையெழுத்தெல்லாம் வாங்கினாங்களாம். ஆனால், பொது வேட்பாளர் வென்றால்தான் அம்மாவை சந்திக்க முடியும் என்று அதே பேரவையின் இந்த மேடையில், காயல் மவ்லானா கூறுகிறார்! துணைத்தலைவர் பதவியையாவது அதிமுகவுக்கு தாருங்கள் என்று மற்றொரு ஆளுங்கட்சிக்காரர் கேட்கிறார். கொள்கையில் தெளிவாக இருந்தால், ஏன் நிகழ்ச்சி தொகுப்பாளர் “அது பரிசீலிக்கப்பட வேண்டிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்” என்று சொல்ல வேண்டும்? எடுத்த எடுப்பிலேயே, “இது பேரவையின் கொள்கைக்கு நேர் எதிரானது. எனவே இதுபற்றி பேசவே பேசாதீங்க” என்று அல்லவா சொல்லியிருக்கனும்?

அப்படியி்ல்லைன்னா, “தலைவர் மட்டும்தான் அரசியல் கட்சி சார்பில் போட்டியிடக்கூடாது! துணைத்தலைவர், உறுப்பினர் எல்லாம் பிரச்சினையில்லை” என்றாவது அந்த மேடையில் தெளிவுபடுத்தியிருக்கலாமே?

அன்பானவர்களே! அல்லாவைப் பயந்துகொள்ளுவொம். எடுப்பார் கைப்பிள்ளையாக நம் பேரவை செயல்பட்டு வருவதையும், நீதியின் குரல்கள் நசுக்கப்படுவதையும் எல்லோரும் எல்லா நேரத்திலும் பார்த்துக்கொண்டிருந்தாலும், பார்க்க வேண்டியவன், பார்க்க வேண்டிய நேரத்தில் பார்த்துக்கொள்வான்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (kangxi) [13 October 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 10501

( அம்மா என்று சொல்லிக்கொடுக்க காசு வாங்கும் பெண்மணி, சும்மா பைப் லைன் எப்படி தருவார்கள்? சிந்திப்பீர்? கொசுக்கடி!!!பஸ்ல போனா பரீட்ச்சை எழுதலாம்.!!! ஆனா புத்தகம் கொண்டு போனா பரீட்ச்சை எழுத விடுவார்களா? ) comment Ref : 10480 by Mr .Omar Anas .

நல்ல ஒரு கருத்து . sajith சார் , அவுத்து உடுங்க உங்க " புதுக்குரல் " . கேட்கிறவங்க கேட்டுகிட்டே இருப்பாங்க .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by A.R.Refaye (Abudahbi) [13 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10504

மன வேதனையின் வெளிப்பாடு !!!!!!!!!

அன்புக்குரிய கூட்டாளி ரபீக் அவர்களே கருத்து பதிவதிலும் ஒரு வரம்பு இருக்கும் பட்சத்தில் நீ எல்லோர் விடவும் கூடுதலாகவே கிண்டல்,நெய்யாண்டி உடன் கேலிசித்திரம் வரைந்து வருகிறாய்.உன்னை நீ கருத்தில் அறிமுக படுத்தும் போது M.N.L.முஹம்மது ரஃபீக் என்றும் ராபியா மணாளன் என்றும் ஹிஜாஜ் மைந்தன்(தற்போது இதை நீ இடுவதில்லை )இப்படி எல்லாம் எழுதுவது அவசியமா அல்லது ரபீக் என்றும் மட்டும் போட்டாள் போதும்தானே கருத்து யாரும் பதிவு செய்யட்டும் தருபவர்களின் முகவரி அட்மின் மட்டும் அறிந்தால் ஆரோக்கியமானது,வேட்பாளர்களின் திறமைகளையும் அவர்கள் சாதித்த அனுபவங்களையும் மக்கள் மன்றத்தில் வைக்கும் போது உன்னால் அதை ஏற்க முடியாதது வரவேற்க தக்கதல்ல மாற்று முக வேட்பாளரின் நன்னடத்தையை இம்மன்றத்தில் பட்டில் இட்ட போது உனது கருத்துக்கள் ஏன் முடமாகிபோனது,நான் முன்பே கருத்து தருபவர்கள் எப்படி தரவேண்டும் என்பதை இதற்கு முன் பதிவு செய்துள்ளேன் அதை comments ref # 6563 படி

என்னால் நீயும்,உன்னால் நானும் சிறந்த நண்பர்களாக நமக்குள்ளே வடிவமைத்து கொண்டோமே அந்த உயரிய உயிரோட்டம் உள்ள உன் உணர்வுகள் எல்லாம் காலத்தால் மக்கி போய்விட்டனவா, சிக்கி போய்விட்டனவா,

அன்பு நண்பனே குசும்புக்கும் ,கேலிக்கும் உள்ள நேரமும்அல்ல தளமும் அல்ல மிக முக்கியமான இக்கட்டான சூழ்நிலையில் சூழ்ச்சியில் ஊழல் சுனாமி நம் நகரை ஆண்டுவிடுமோ என்று சமுதாய நலம் கண்டோர் பலநேரம்களில் நம் நகருக்குக்கு தேவையானதை முறைபடித்திய திட்டங்கள் அவர்கள் ஊரின் நன்மையை தவிர வேற்று பாதையில் செல்ல மாட்டார்கள் என்பதை நான் உனக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா,அடேய் நண்பன்ட ---------------

கழக படுத்திய,கலகங்படுதிய அரசியல் விர்ப்பனர்கள் எல்லாம் ஊரின் மகத்துவம்,கண்ணியம்,நமகே உள்ள தனித்தன்மை எல்லாம் காப்பாற்ற படவேண்டும் என்ற உயரிய சிந்தனையில் நம் பேரவையின் செயல் பாட்டுக்கு தோல் கொடுத்திருப்பதும் உன் கண்ணை மறைத்து விட்டதா.உன்னை தட்டி கொடுபதற்கும் தட்டி கேட்பதற்கும் உரிமை எடுப்பதின் காரணம் உன்னை யாரும் குறைத்து மதிப்பிடும் பட்சத்தில் என் மனமும் ஏனோ கனக்கிறது,இது ஒரு வேதனையின் வெளிப்பாடு.நன்றி

கருத்து தவறாக இருப்பின் பொறுத்தருளுக

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. சகோதரி மிசிரியா அவர்கள் அப்படி என்ன பொதுநலப் பணி ஆற்றி இருக்கிறார்கள்.. ? ஓரே ஒரு பொது நல பணியை சொல்லுங்கள்...?
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [13 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10505

கிரண்பேடி உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, பொதுநலப் பணிகளாற்றியவர். என்று சொல்லப்படும் சகோதரி மிசிரியா அவர்கள் அப்படி என்ன பொதுநலப் பணி ஆற்றி இருக்கிறார்கள்.. ? ஓன்று அல்லது இரண்டு அவர்கள் ஆற்றிய பொது பணியை மக்களுக்கு குறிப்பிட்டால் போதுமானது... மக்களுக்கு விளக்கமா..! அவர்கள் ஆற்றிய ஓரே ஒரு பொது நல பணியை சொல்லுங்கள்...?

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohideen (Jeddah) [13 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10507

சகோதரி ஆபிதா அவர்களே,

இவ்வளவு கூட்டத்துக்கு ( கட்சி,ஜமாத்து) மத்தியிலும் தாங்கள் வெற்றி பெருவௌம் என்று நம்புகின்றிர்களா?

வெற்றி பெற வாழ்த்துக்கள். ஒரு வேலை தோல்விஇட்டால் இப்போ support செய்யும் யாரும் பின்னால் வரமாட்டார்கள்.( ஒரு சில பேரை தவிர ) நமது ஊரில் மட்டும் அல்ல எல்லா ஊரிலுமே எங்கே meeting நடந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும் வேடிக்கை பார்க்க.

அது போல் தான் இதுவும் ( your's & peravai meeting )

அதனால் சிந்திச்சு செயல் படவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by SoljarHassan (Jeddah) [13 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10508

Comt Ref : 10447

சகோதரர் முஹைதீன் அவர்களின் கற்பனை மிகவும் அருமை.

எப்படி ரூம் போட்டு யோசிப்பிங்களோ ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Siddiq (Chennai) [13 October 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 10509

அஸ்ஸலாமு அழைக்கும்,

இது ஒரு போலிதமான ஒற்றுமை. ஐக்கியப் பேரவை தலைவர்களே ,

160 தொகுப்பு வீடு தொடர்பாக போராட்டம் நடத்தும் பொது நாங்கள் ஆளும் கட்சி அதனால் நான் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொன்னவரும் இதில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார். அப்போது எங்கே சென்றது ஒற்றுமை

"நான் கொம்புத்துறை ஊரைச் சார்ந்தவன்." காயல்பட்டினம் வேறு கொம்புத்துறை வேறு என்பதை நீங்கள் (சாச்சா ஜோஸப் ராஜ் பேசியபோது) அதை கண்டிக்காத இவர்கள் சூப்பர். அல்லது இவர்களுக்கு புரியவிழியோ?

DCW ,கொம்புத்துறை, சிங்கித்துறை ஆகியவை தனி பேரூராட்சி தேவை என்னும் கோப்பில் கையழுத்து போட்ட பாதர் நீங்கள் இல்லியோ?

"ஓட்டுப் போடும் விஷயத்தில் மத்திய காயல் பகுதியினரை விஞ்சிட யாராலும் முடியாது. 10 நிமிடங்கள் போதும்... அவர்கள் பெட்டியையே நிறைத்து விடுவார்கள்..." இதற்க்கு என்ன அர்த்தம். இதுதான் ஒற்றுமையோ?

"சரி, ஒருவேளை எதிர்த்துப் போட்டியிட்டவர் நகர்மன்றத் தலைவரானால், நாளை முதல்வரை எவ்வாறு அணுகுவார்? நீ யார் என்று அவர் கேட்டால், நான் ஊரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவள் என்று சொன்னால், அம்மா அவரது கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள மாட்டார்களா? " உங்கள் வேட்பாளர் முதல்வரிடம் சென்றஉடன் தாம்பலம் வைத்து வரவேற்பார் முதல்வர். நல்ல சொப்பனம்.

"ஒற்றுமை நமது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒன்று. ஒற்றுமையைப் பேணுவதால் நமது கண்ணியம் காக்கப்படும்... பெரியவர்களுக்குக் கட்டுப்படுவதும், அவர்களை முந்திக்கொண்டு நாம் பேசாதிருப்பதும் நமது மார்க்கம் நமக்கு வலியுறுத்திய அம்சங்கள்... " ஒற்றுமை உலக விசியத்தில் தேவையா? அல்லது மார்க்க விசியத்தில் தேவையா?.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. சந்தேகம்
posted by சதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia) [13 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10510

இன்று காயலில் நடக்கும் தேர்தல் பிரச்சனையை பார்த்தால், ஷைத்தான் தன் ஆயுத(சந்தேகம்)த்ததை மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறான் என்றே தெரிகிறது.

சகோதரி ஆபிதா, முச்செரிக்கையில் ஏன் கையெழுத்திடவில்லை என்றால், ஐக்கிய பேரவையின் செயல்பாடுகளில் சந்தேகப்பட்டேன் என்கிறார்.

ஐக்கிய பேரவையை நம்பி முச்சரிக்கையில் கையெழுத்திட்டு இரண்டாம் இடத்திற்கு வந்த சகோதரி வஹிதாவை ஏன் மாற்று வேட்பாளராக பரிந்துரைக்கவில்லை என்றால், ஐக்கிய பேரவையோ 'ஒருவேளை அவர் வாபஸ் பெறாமல் விட்டுவிட்டால் வாக்குகள் பிரிந்துவிடுமே என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்.' என்று சந்தேகப்பட்டுள்ளது.

சகோதரி ஆபிதா சந்தேகப்பட்டால், சந்தேகப்படுபவர் தலைமை பதவிக்கு லாயக்கற்றவர் என்று விமர்சிக்கிறோம்.

அதையே ஐக்கிய பேரவை சந்தேகப்பட்டால், ராஜதந்திரம் என்று பாரட்டுகிறோம்.

எனக்கு ஒரு 'சந்தேகம்'. சதோதரி ஆபிதாவை மட்டும்தான் சிலர் வழிகெடுக்கிறார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [13 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10512

உள்ளாட்சி தேர்தலில் ஐக்கிய பேரவையின் பின்னடைவுகள் என்ற எனது கருதுக்கோவையை இணையத்தளத்தில் பதிவுசெய்துவிட்டு அன்று இரவு நடைபெற்ற ஐக்கிய பேரவை கூட்டத்துக்கு போனேன்.

மேடையில் அமர்ந்திருப்பவர்களைபார்தேன்.தமிழ்நாட்டை ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆள துடிக்கும் கட்சி, மத்தியில் ஆளும் கட்சி எல்லோரும் ஒன்றிணைந்து இருப்பதை கண்டேன். கீரியும் பாம்பும் ஒரே இடத்தில், வேங்கையும் மானும் ஒரே மேடையில் குலாவிக்கொண்டிருக்கும்போது, கோழியும் அதன் குஞ்சுகளும் மரண ஓலம் போட்டுக்கொண்டிருக்கிரார்களே என்று மன வேதனைப்பட்டேன்.

நிறைவுரை ஆற்றிய அமானுல்லா அவர்கள் ஆற்றிய உரையில், ஐக்கிய பேரவை இருந்தாக வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை ஆனல் நிர்வாகத்தில் கருத்துவேறுபாடு இல்லை என்று சொல்லவில்லை. அதை பேசி தீர்க்கலாம் வாருங்கள் என்று சொன்னபோது மனம் சற்று இளகியது.

அடுத்த நாள் காயல் அலையன்ஸ் கமிட்டி ரியாத் முன்னாள் தலைவர் லண்டன் அபூபகர் ஹாஜி அவர்களுக்கும் சில மனக்குறைகள் இருந்ததால், அமனுல்லா அவர்களின் பகிரங்க அழைப்பை பயன்படுத்தி, முன் appointment எடுத்துக்கொண்டு காலை 11 மணிக்கு ஐக்கிய பேரவை சென்றோம். தகுந்த மரியாதையுடன் எங்களை வரவேற்றார்கள். எங்கள் மனக்குறைகளை பகிரங்கமாக ஒளிவு மறைவின்றி பேசினோம்.

அரசியலில் பண்பட்ட அமானுல்லா மிக அருமையாக விளக்கங்கள் தந்தார். ஒவ்வொருவர இடத்திலும் ஒரு ஷைத்தான் இருக்கிறான், என்று நபிகள் நாயகம் சொன்னது 100 % உண்மை. " I MAY GO, YOU MAY GO, BUT EGO MUST GO" என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல் இங்கே இரு சாரர்களுக்கிடையில் EGO வந்து, அதுவே விசுவரூபம் எடுத்து நிற்பதை உணர முடிந்தது.

தவறுகள் நடந்திருக்கிறது என்பதை அவர்கள் மறுக்கவில்லை. இனி வரும் காலங்களில் அவை சரிசெய்துகொள்ளப்படும் இப்போது நமக்குள் பேதைமை பாராட்டி அதே EGO அடிப்படையில் தேர்தலை சந்தித்தால் யார் தோற்றாலும் நமது சகோதரிகளில் ஒருவர் தோற்றார் எனபதுதான் உண்மை.

பெண்கள் தலைவர் தேர்தலுக்கு போட்டிபோடுவது செல்லாது என்ற தீர்ப்பு வந்துவிடாதா அதுவே இந்த மன மாச்சரியங்களுக்கு வடிகாலாக, மாற்று மருந்தாக அமைந்து விடாதா என்று அல்லும் பகலும் து ஆ செய்து கொண்டிருக்கும் நல்லுள்ளம் படைத்தவர்களின் து ஆ வை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக.

பேசி முடித்து விட்டு வெளியே வரும்போது, ஆள் மனதிலிருந்து ஒரு திருமறை வசனம் வெளிவந்தது. " ALLATHEENA YUNFIQOONA FISSARRAAYI VALLARRAAYI VAL KAALIMEENAL GHAILA VAL AAFEENA ANINNAAS...... அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், வாழ்விலும் தாழ்விலும் அல்லாஹுடைய பாதையில் செலவு செய்வார்கள், கோபத்தை சவைத்து விழுங்கி விடுவார்கள், மனிதர்கள் செய்த பாவத்தை மன்னித்து விடுவார்கள்.......

என்ன அருமையான வசனம். சிந்திப்போமா,நம் இரு சாராருக்கும் அறை கூவல் விடுக்கும் வசனம் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.

மக்கி நூஹுதம்பி 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ISMAIL (KTM) (Hong Kong) [13 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10518

டில்லியிலும் சென்னையிலும் இருந்து கொண்டு அடித்தட்டு வரை ஆளும் அதிகாரத்தைப் பகிர்ந்து பரவலாக்கவே உள்ளாட்சி முறை நடைமுறைக்கு வந்தது. அதனால் தான் சுமார் 30 லட்சம் பேர் வரை மக்கள் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு ஊர் மற்றும் கிராமங்களுக்குத் தேவையான பல நல்ல காரியங்களை அதிகாரத்திலிருந்து கொண்டு செயல்படுத்த முடிகிறது.

ஒரு நாளில் ஒரு வேலை உணவுக்கு வாங்கும் வெண்டைக்காயையும் தக்காளியையும் கூட பார்த்துப் பார்த்து வாங்கும் பொழுது ஐந்தாண்டுகள் நம்மை ஆள்பவர் எப்படி இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் வாக்களிப்பதென்பது சிங்கத்தின் கூண்டிற்குள் நம் தலையை நீட்டுவதற்கு சமம்.

இன்று நடை முறையில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் அரப்பணியாற்றும் திறமை உடையவர்களா என்பதைக் கூடப் பார்க்காமல் கட்சிக்கு விசுவாசமானவர், நீண்ட காலமாக பணியாற்றி வரும் தொண்டர் என்ற அடிப்படையில் மட்டுமே அரசியல்வாதிகளால் களமிறக்கப்படுகின்றனர்.

தேர்தல் முடிந்து விட்டாலோ எதிரும் புதிருமாக நின்று வெட்டுக் குத்து என மோதிக்கொண்டவர்கள் கூட ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்ற மாறுபாடின்றி ஓர் அந்தரங்கக் கூட்டணியை அமைத்துக்கொண்டு தொகுதிக்குள் நிறைவேற்றப்படுகின்ற திட்டப்பணிகள் அனைத்திலும் ஒதுக்கப்படுகிற அரசு நிதியிலிருந்து ஒப்பந்தக்காரர்கள் ஒழுங்காகப் பதினைந்து சதவீதம், இருபது சதவீதம் என்று சத்தமில்லாமல் உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு கொடுத்து விடவேண்டும்.

ஈரத்துணியை போர்த்தி ஓசைப்படாமல் கோழி அருக்கப்படுவதைப் போல ஜனநாயகம் அமைதியான முறையில் படுகொலை செய்யப்படுகிறது. ஊருக்குப் பொதுவானது என நம்மிடையே இருக்கும் ஐக்கியப்பெரவையும் கூட வேட்பாளர் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முழுக்க முழுக்க இந்த அரசியல் வாதிகளைக் கொண்டு கூட்டம் நடத்துவது தான் வேதனையும் வேடிக்கையும்.

கூட்டத்தில் மேடையை அலங்கரித்து ஆனால் பேசாத பெரியவர்கள் உண்மையில் நல்லவர்கள். ஊர் பற்றிய செய்திகளை முழுமையாக அறியாமலும் எதிர்வாதம் எதனால் எழுகிறது என்றும் சற்று ஆய்வு செய்து பார்த்திருந்தால் கூட்டத்தில் கலந்து கொள்வதையே யோசித்துப் பார்த்திருப்பார்கள்.

இத்தனைப் பேர் கோட்டத்தில் எத்தனை தேடியும் சென்ற முறை ஆட்சியில் இருந்த நமதூர் செர்மஎனைக் காண முடியவில்லை. எத்தனையோ தனவந்தர்கள் இருந்தும் பற்பல உதவிகளை நமதூருக்குப் புரிந்தும் வரும் நிலையில் ஒரு குறிப்பிட்டவரை மட்டும் பெயர் சொல்லி இவர் ஐ.பே. வேட்பாளரைத்தான் ஆதரிக்கிறார் என்று கூறுவதற்கு என்ன காரணம் என்பதை ஊர்வாசிகள் விளங்கிக் கொள்வார்கள்.

"ச்சீ ச்சீ வெட்கக் கேடு, த்தூ த்தூ மானக் கேடு" என ஒருசிலரை சில வருடங்களுக்கு முன் இதே ஊர்வாசிகள் தான் இகழ்ந்தார்கள். கூட்டத்தில் இடம்பெற்ற ஒரு சில அரசியல் வாதிகள் ஏதோ பட்டியல் காட்டியல் என மிரட்டுவது எதற்கெனப் புரியவில்லை. அதையும் வெளிப்படையாக சொல்லி இருக்கலாம்.

குடும்ப அரசியலுக்கு இடமில்லை எனக் கூறிக்கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களை வைத்தே அறிமுகம் செய்வதும் என்ன சேவையை எப்போது எங்கு செய்தார்கள் என்ற புள்ளிவிவரங்கள் ஏதுமின்றி அவரைத் தெரியும் இவரைத்தெரியும் எனக் கூறுவதும் தான் ஆட்சி செய்வதின் அடிப்படை தகுதிகளா என ஊர்மக்கள் சிந்திக்கவேண்டும்.

"அம்மாவே எங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த நினைக்காதபோது" என்றெல்லாம் அங்கலாய்ப்பது ஒரு அதிகாரக் கூச்சலாகவே தெரிகிறது. ஒரு சிலரது சிந்தனைகளை அப்படியே மூலையில் பதிவிறக்கம் செய்து கொண்டு ஊர் மன நிலையை விருப்பு வெறுப்பின்றி ஆராயாமல் முடிவுகள் மேற்கொள்வதற்கு உஹதையும் பத்ரையும் ஏன் உவமையாக்க வேண்டும்.

"இங்கு பேரவையால் நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே ஜனநாயக அடிப்படையிலேயே நடைபெற்றுள்ளது" எனக் கூறுவது முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. அது ஒழுங்காக நடந்திருந்தால் இத்துணைப் போட்டிகளுக்கு வேலையே இருந்திருக்காதே.

"நாளை முதல்வரை எவ்வாறு அணுகுவார்? நீ யார் என்று அவர் கேட்டால், நான் ஊரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவள் என்று சொன்னால், அம்மா அவரது கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள மாட்டார்களா?" _ ஏதோ குழந்தைகளுக்கு முன்பாக நின்று பேசுவதுபோல இவ்வாதம் அமைந்திருக்கிறது. காயல் பெண்களுக்கு கலைஞர் தான் முதல் ...................... எனக்கூரியவரின் வாயிலிருந்து விழுந்த முத்துக்குவியல் தான் இவை.

"சாதாரணமாக அரசியல் கூட்டங்களில் புதிதாக உரையாற்றும் ஒருவருக்கு 10 பேர் கை தட்டுவார்கள். பின்னர் 20, 30, 50, 100, 500 என்று கை தட்டு வந்துவிட்டால் அவருக்கு அரசியல் போதையாகிவிடும்" என இந்த அறிவு ஜீவி (அரசியல்) பேசிவிட்டு சென்றிருக்கிறார்.



பண புழக்கம் இருந்தால் தான் அரசியல் நடத்த முடியும் என்பதற்கு இந்த தொடர் நினைவூட்டலா.. ஆலிம்கள் சரியான வழியை மக்களுக்கு அடயாளப் படுத்துபவர்கள். ஒற்றுமையைப் பற்றியும் தண்டனையைப் பற்றியும் கூறும் முன் அனைவரின் கருத்துக்களையும் தீர விசாரித்து அறிவுரை பகர்தல் நலம்.

“தாய் - மகளை எதிர்த்துப் போட்டி” என்று வெப்சைட்டில் கருத்து எழுதியிருக்காங்க... எல்லாத்தையுமே திறந்தா சொல்ல முடியும்? வாக்குச் சாவடியில் அதிக முகவர்களை வைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் சில உள்நடவடிக்கைகள்தான் இவை"_ இதென்ன, யாருக்காக இந்த நடவடிக்கைகள். இதனைத்தான் பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களோ.

கிழக்கு, மத்தி,வடக்கு என சேர்மன் பொறுப்பு கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் மேற்கிற்கு கொடுத்திருக்க வேண்டும் என்பது தானே இயல்பு. அதை ஏன் செய்ய வில்லை. பரிமார் தெருவைச் சார்ந்த ஒருவர் அடிவாங்கிய போதும் காயல்பட்டணம் தஃவா சென்டரில் இருந்து ஒரு பெண் எனப் பார்க்காமல் கூட காவல் துறையினர் இழுத்துச் சென்ற போதும் ஊருக்குப் பொது எனக் கூறும் நம் ஐ.பே. எங்கே போனது. ஐக்கியப் பேரவை வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இல்லை. ஐக்கியமாகவும் ஆரோக்கியமாகவும் தேர்ந்தெடுக்கும் முறையில் அமைந்திருந்தால் மட்டுமே அதன் கருத்தடை ஏற்க முடியும்.

எனவே தனது சொந்த அறிவையும் திறமையையும் அடிப்படையாக வைத்து ஊர் நலனை விலைப் பேசுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ளாத சகோதரி ஆபிதா அவர்களுக்கே புத்தக சின்னத்தில் வாக்களிப்பீர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Haji (Riyadh) [13 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10520

இங்கு நமக்குள் கருத்துக்களில் காட்டும் வீரத்தை காயல்பட்டினதையே சீரழிக்கும் ......... வெளியே எங்கு தேவையோ அங்கு காட்டினால் நன்றாக இருக்கும்.

ஒத்துமையாக இருந்து கயல்பட்டினத்தை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [13 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10523

அப்துல் கலாம் ராக்கெட் செய்யலாம்,அணு குண்டு செய்யலாம், ஆனால் மஞ்சவாடா செய்ய ஆய்ஷா லாத்தாட்ட ட்ரைனிங் எடுத்தே ஆகனும்.

இதுதான் உண்மை. எனவே நான் படித்து இருக்கிறேன் பதவியில் இருக்கிறேன் என்று தம்பி வாழும் வள்ளுவர் சொல்லாமல் ... எல்லாத்தையும் விட்டுட்டு பொது வேட்பாளரை ஊர் ஒற்றுமைக்காக ஆதரிக்கலாம்.

தவறு செய்பவன் மனிதன் தவறே செய்பவன் மனிதன் அல்ல

பெரியவர்கள் தவறு செய்திருந்தால் மன்னிபோமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [13 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10524

மதிற்பிற்குரிய லண்டன் ஹாஜி அபூபக்கர் அவர்களும் மக்கி நூஹு தம்பி அவர்களும் நேரடியாக ஐக்கிய பேரவைக்கு சென்று கேட்கவேண்டிய கேள்விகளை எல்லாம் கேட்டு உண்மை நடப்புகளை அறிந்து அழகான இறை மறை வசனத்தையும் தகுந்த நேரத்தில் அறிவித்து இருப்பது மிக்க நன்றி .

இதற்கு முன்னர் ஹாஜி மக்கி நூஹுதம்பி அவர்களின் அறிக்கை பேரவைக்கு செல்லாமலே வெளியில் அறிந்ததை கருத்து பதிந்து இருந்தார்கள் . தற்போது மிக தெளிவாக விளக்கம் பெற்று அழகான அறிக்கை தந்து இருக்கிறார்கள் .இவர்களை போன்று சரியான தகவல் தெரியாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று என தானோ என்று அறிக்கை விடுக்கும் அன்பு சகோதரர்கள் தயவு கூர்ந்து தெளிவான விவரம் அறிந்து தங்கள் கருத்தை பதிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

பக்கம் பக்கமாக கருத்து மட்டும் தெரிவித்தால் மட்டும் போதாது. ஐக்கிய பேரவை நிருவாகிகள் எல்லோரும் நமதூரை சார்ந்தவர்கள் தான் .

எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்குள் ஒற்றுமையை தந்து மென் மேலும் நமது பேரவை மக்கள் பணியாற்றவும் வயதையும், உடல் நலனையும் பாராது பணியாற்றும் வுவைஸ் ஹாஜி, பாசி ஹாஜி,கலாமி ஹாஜி,பிரபு சுல்தான் ஹாஜி ( குடும்ப பெயர் பிரபு), TAS .அபூபக்கர் காகா, S .A .முகமது அலி ஹாஜி , துரை காகா, முத்து ஹாஜி வுள்ளிட்ட ( மற்ற பெயர்கள் விரிவஞ்சி சுருக்கி சொல்லிருக்கிறேன் )பெரியோர் களுக்கு எல்லாம் வல்ல ALLAH நல்ல வுடல் ஆரோகியத்தையும், நீண்ட ஆயுளையும், எங்களை போன்ற இளையோருக்கு தொடர்ந்து நல்ல ஆலோசனை , வழி காட்டல் செய்திட அருள் புரிவானாக .ஆமீன்

என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி மற்றும்
ஊர் நலன் நாடும் அன்பர்கள்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [13 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10525

அன்பு சகோதரர் சாஜித் அவர்களே!

நான் தூக்கத்தோடு எழுதவில்லை விழித்துக்கொண்டே எழுதுகிறேன். தாங்கள் எழுதியிருந்தால் அந்த முன்னோரின் தத்துவம் தங்களுக்கே சொந்தமா? தாங்கள் எழுதும் வள்ளுவனின் குரலை "நான் சொன்னது " என்று சொன்னாலும் சொல்வீர்கள் போல.

மரியாதைக்குரிய சகோதரர் மக்கி நூஹு தம்பி காக்கா கூட பேரவையை அணுகி தெளிவு பெற்றபின் அவர்களது நிலையை தெளிவாக பதிவு செய்துள்ளார்கள் தங்களை போன்ற அறிவில் கூடிய அனுபவத்தில் குறைந்த சில வாலிபர்களே இன்னும் ஒற்றுமைக்கு மாறாக செயல் படுவதை உணர முடிகிறது, இது தேவையா?

நாம் மார்க்க விசயத்தில் தான் ஒன்று பட மறுத்து மூன்று பெருநாள் வரை கொண்டாடும் அளவிற்கு முன்னேறியுள்ளோம். குறைந்த பட்சம் ஊர் ஒற்றுமை விசயத்தில் ஒன்றுபடதான் ஊரில் இருக்கும் அனுபவம் நிறைந்த பெரியவர்கள் செயல் படுகிறார்கள், வெளியிலிருக்கும் நாம் அந்த ஒற்றுமைக்கு மாற்றமாக செயல் படலாமா?

வாலிபர்களாகிய நாம் அறிவில் கூடியவர்களே ஆனால் அனுபவத்தில் அவர்களுக்குமுன் குறைந்தவர்களே என்பதில் சந்தேகமில்லை.

நான் ஏற்கனவே பதிவு செய்திததில் தெரிவித்திருந்தேன். மர்ஹூம் S .K . மாமா வருத்ததோடு "தங்களை போன்ற வாலிபர்கள் ஐக்கிய பேரவையின் செயல் பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்ள வருவதில்லை என" சொன்னதை. தாங்கள் ஊர் செல்லும் நேரத்தில் அங்கு சென்று ஈடு படுங்கள்.

இதற்கு முன் நமதூரில் மிகப்பெரிய மார்க்க பிரச்சனையாக இருந்த பாங்கு (அதான்) பிரச்சனையை இளைஞர் ஐக்கிய முன்னணி (Y .U .F ) மார்க்க அறிஞர்களை கூட்டி தீர்வு காணவில்லையா? ஆக ஒன்று பட்டால் எதையும் சாதிக்கலாம்.

ஆக இனியாவது பிடிவாதத்தை தளர்த்தி ஒற்றுமைக்கு கை கொடுங்கள். செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் -


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. ஜாமத்துக்கு எதிரான வேட்பாளர்
posted by Imran Ahmed (kayalpatnam) [13 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10527

இங்கே சிலர் சகோதரி ஆபிதாவை ஜமாத்துக்கு எதிரான வேட்பாளர் என திட்டமிட்டு ஒரு பிரச்சாரத்தை பரப்புகிறார்கள் இங்கே கருத்து கூறும் ஐக்கிய பேரவை ஆதரவாளர்கள் எதிர்பாளர்கள் நடுநிலையாளர்கள் அனைவர்களுக்கும் ஒரு கேள்வி கேட்க ஆசை படுகிறேன் தயவு செய்து பதில் கூறுங்கள்

எந்த ஜமாஅத் தங்கள் பள்ளியில் ஜமாஅத் கூட்டத்தை கூட்டி சகோதரி மிஸ்ரியாவை தேர்ந்தெடுத்தார்கள் என்று கூற முடியுமா? ஒவ்வொரு ஜமாத்திலும் (ஒன்று இரண்டு ஜாமத்தை தவிர) தலைவர் செயலாளர் இல்லாத யாரோ இருவர் மற்றும் ஐக்கிய பேரவை கூட்டிய கூட்டதிருக்கு சென்று வாக்களித்து இருக்கிறார்கள்

ஒரு ஜமாஅத் முடிவு என்பது தங்கள் ஜாமத்தை சேர்ந்த அனைவர்களையும் கூட்டி நாம் யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவெடுத்து அதனை அந்த இருவர் மூலம் வாக்களிக்க செய்வதே ஜமாஅத் தேர்ந்தெடுத்த வேட்பாளர் என்று சொல்ல முடியும்

மேலும் வாக்களித்த பிறகாவது நாங்கள் இவர்களுக்குத்தான் வாக்களித்து இருக்கிறோம் ஜாமத்தில் உள்ள அனைவர்களும் இவங்களுக்கு வாக்கலிங்கள் என்று கூறியது உண்டா (ஏனென்றால் 19 வாக்குகள் சகோதரி மிஸ்ரியாக்கு எதிராக விழுந்துள்ளதே )

இதுபோல் எந்த பள்ளிலயாது நடந்ததா தயவு செய்து கூறுங்கள் அப்படி நடக்கவில்லை எனில் எப்படி ஜமாஅத் தேர்ந்தெடுத்த வேட்பாளர் என்று கூறுகிறார்கள் விளக்கம் தாருங்கள்

ஐக்கிய பேரவை கூட்டிய கூட்டதிருக்கு சென்ற பிறகுதான் போட்டி இடும் வேட்பாளர் யார் என்றே அங்கே சென்றவர்களுக்கு தெரிகிறது (ஒன்று இரண்டு ஜமாஅதினரை தவிர)

கோமான் ஜமாஅதினருக்கு இருவர் மற்றும் நிற்கிறார்கள் என்ற தகவல் அறிந்து அவர்களில் யார் தகுதியானவர் என்று தெரியாததால் இருவருக்கும் ஆளுக்கு ஒரு வாக்கை பதிவு செயுங்கள் என்று ஜாமத்தில் உள்ள நிருவாகிகள் சொல்லி அனுபிருக்கிரர்கள் இதை எப்படி ஜமாஅத் தேர்ந்தெடுத்த வேட்பாளர் என்று கூறுகிறார்கள் விளக்கம் தாருங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Palayam MAC (Kayalpatnam) [13 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10534

"ஓட்டுப் போடும் விஷயத்தில் மத்திய காயல் பகுதியினரை விஞ்சிட யாராலும் முடியாது. 10 நிமிடங்கள் போதும்... அவர்கள் பெட்டியையே நிறைத்து விடுவார்கள்..."

நண்பர் ஷாஜஹான் என்ன சொல்ல வருகிறார் - கள்ள வோட்டு போட்டுதான் ஜெயிகனுமுன்னு சொல்கிறாரா? அல்லது கள்ள வோட்டு போட்டு ஜெயிசுடுவோம்னு பறை சாற்றுகிறாரா?
_____________________________________________
"இந்த ஐக்கியப் பேரவையின் தினசரி நிகழ்வுகளில் நான் தொடர்புடையவன் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அது செய்யும் நல்லவற்றில் நானும் இணைந்து பணியாற்றுவேன். எனக்கு கருத்து வேறுபாடுள்ள அம்சங்களில் ஒதுங்கிக்கொள்வேன். "

அமானுல்லாஹ் காகா அவர்களே, இந்த தேர்தல் விஷயத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. அதனால் தான் ஒதுங்கி இருந்து எங்கள் கருத்துகளை பதிவு செய்கிறோம்

."நம்முடைய வேட்பாளர் மிஸ்ரிய்யா அவர்களும் பேரவைக்கு விருப்ப மனு கொடுத்தார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பும் நான் விருப்ப மனு அளித்தேன். அன்று என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. இன்றாவது என்னைத் தேர்ந்தெடுங்கள் என்று உரிமையோடு கேட்டுள்ளார்"

இந்த விஷயத்தை இவ்வளவு நாள் ஏன் மூடி மறைத்தீர்கள். இந்த மனுவை ஐக்கிய பேரவை தேர்வு கூடத்தில் வெளிப்படுத்தி இருக்கலாமே?

"கையெழுத்திட மறுத்த எதிரணி வேட்பாளரிடம் கையெழுத்தைப் பெறுவதற்காக இரண்டு நாட்கள் நானே அலைந்தேன்... அவர் சார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் மூலம் அணுகினோம்... அவரது நெருங்கிய தோழியர் மூலம் அணுகினோம். எதற்குமே அவர் வளைந்து கொடுக்கவில்லை"

வேட்பாளரின் பெரியவாப்பா அல்லது அவரது பெரியாவாப்பா மக்கள், காக்காமார்கள் மூலம் அணுகி இருக்கலாமே.
__________________________________________
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், “பேரவையின் முச்சரிக்கையில் கையெழுத்திட்டவர்கள் 4 பேர். கையெழுத்திடாதவர்கள் 3 பேர்... அனைவரின் பெயர்களையும் வாக்கெடுப்பில் சேர்க்கலாமா? அல்லது கையெழுத்திட்டவர்களின் பெயர்களை மட்டும் பரிசீலனைக்கு எடுக்கலாமா?” என்று அக்கூட்டத்தை நெறிப்படுத்திய நான் கேட்டேன். அனைத்து ஜமாஅத்தாரும் ஒருமித்து, “கையெழுத்திட்டவர்களை மட்டுமே பரிசீலிக்க வேண்டும்” என்றனர். இருந்தும் நான், “இதில் மாற்றுக்கருத்து உள்ளதா?” என்று கேட்டேன். ஐந்து நிமிடங்கள் வரை மவுனமே நீடித்ததால், “உங்கள் அமைதியை அனுமதியாக எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறி, பின்புதான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இப்படி நீங்கள் ஜனநாயக முறைப்படி நடந்திருந்தாலும், நான்கு பெயர்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்ட வாக்கு சீட்டுகள் தானே அங்கிருந்தது. ஒரு வேலை அணைத்து வேட்பாளர்களையும் பரீசீலிக்க வேண்டி வந்திருந்தால் வோட்டடுப்பு எப்படி நடத்தி இருப்பீர்கள்.
_______________________________________
“தாய் - மகளை எதிர்த்துப் போட்டி” என்று வெப்சைட்டில் கருத்து எழுதியிருக்காங்க... எல்லாத்தையுமே திறந்தா சொல்ல முடியும்? வாக்குச் சாவடியில் அதிக முகவர்களை வைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் சில உள்நடவடிக்கைகள்தான் இவை. “ஏன், அதற்கு இரண்டாவது இடத்தில் வந்தவரை வைத்திருக்கலாமே...?” என்று ஒரு கேள்வி. ஒருவேளை அவர் வாபஸ் பெறாமல் விட்டுவிட்டால் வாக்குகள் பிரிந்துவிடுமே என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்

தாயார் முச்சரிக்கையில் கையழுத்து. போட்டார்களா? அவர்களுக்கு ஒரு நீதி மற்ற சஹோதரிகளுக்கு ஒரு நீதியா?
_____________________________________________
“ஏன், அதற்கு இரண்டாவது இடத்தில் வந்தவரை வைத்திருக்கலாமே...?” என்று ஒரு கேள்வி. ஒருவேளை அவர் வாபஸ் பெறாமல் விட்டுவிட்டால் வாக்குகள் பிரிந்துவிடுமே என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்

உங்களை நம்பிய வஹீதா லாத்தவை நீங்கள் நம்பாமல் இப்படி பேசி இருப்பது துரதிஷ்டமே

ஐக்கியப் பேரவையின் இந்த நடவடிக்கைகள் முடிவல்ல, முயற்சி மட்டுமே! உங்களை நான் மன்றாடி, மனம் வருந்திக் கேட்டுக்கொள்கிறேன்... தயவுசெய்து ஊர் மானத்தைக் காப்பாற்றுங்கள்...

யாரின் வெற்றி தோல்வியை பொருத்தும் ஊரின் மானம் போகாது.

காயல் பதி என்றுமே அதன் பெருமையை யாருக்காகவும் இழக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AbdulKader (Abu Dhabi) [13 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10540

அஸ்ஸலாமு அழைக்கும்....

"ஒற்றுமையை" கண்டிப்பாக என்ன விலையானாலும் சரி, அதை உயிரை கொடுத்தாவது வாங்கி இந்த காயல்பட்டிணத்திற்கு அற்பனிக்கவேண்டும் என்று போராடுபவர்களின் கருத்து உள்ளங்களை உருக்கிக்கொண்டு இருக்கிறது.

மற்றவர்களோ.... அதே பல்லவியைதான் திரும்ப திரும்ப பாடுகிறார்கள்!! ஏன் அவர்களுக்கு இத்தனை மோகம் என்று அவர்களை படத்த வல்லநாயன் நன்கு அறிவான்.

ஜனநாயகத்தில்.... அதிகம் வாக்கு பெற்றவர்கள் "அதிகாரத்தை" பெறுகிறார்கள். இதுதான் உண்மை. தனக்கு தோல்வி என்று வரும் பொது .. ஏன்தான் நம் உள்ளம் தோல்வியை ஏற்க மறுக்கிறதோ?!

ஊரார் ஒரு பக்கம்... கூச்சலிடுவோர் வேறுபக்கம்!! இவர்களுக்கு புத்தி சொல்லி, நம் பொறுமையை நாம் இழக்க வேண்டாம். வஸ்ஸலாம்

அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்) Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [13 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10544

சகோதரர் ஜாபர் சாதிக் காக்கா..

"அமானுல்லாஹ் காக்காவின் உரையிளுருந்து மாற்று வேட்பாளர் விசயத்தில் ராஜ தந்திரத்தையும் அறிய முடிந்தது. அறிவு என்னதான் இருந்தாலும் அனுபவம் என்பது அவசியம் என்பதனை இக்கூட்டம் மூலம் எதிரணியினரும் உணர்ந்திருப்பார்கள்" - என்ற தங்களின் பதிவுக்கு

இந்த சூப்பரான ராஜ தந்திரத்தை, முந்தயதினம் மழுப்பல் (மடமை இல்லை எனபதை உணர முடிந்த காரணத்தால்) என்பதை, போட்டியில் இருந்து விலகிய பின்னருமா முகவர் கிடைக்கும்? என வினவிய தகவலும், அதுக்கு மீரான்காக்கா பதிலளித்ததும் நீங்கள் கவனிக்காமல் போனதை குறிப்பிடும்போது...

"இது தெரியாமல் சகோ. ஜாபர் சாதிக், நாம் இவர்களுக்கு சொன்ன தூங்கும் தத்துவத்தை நமக்கே சொல்லியிருக்கிறார் - சரி தூக்கத்தில் சொல்லியிருப்பார் என் விடுவோம்." என குறிப்பிட்டேன்

தத்துவம் என்னது என்று சொல்லவில்லை, நாம இவங்களுக்கு ஏற்கனவே சொன்னத சந்தர்ப்பம் பார்த்து சொல்ல வந்தீங்க ஆனா டைமிங் மிஸ் ஆயிடிச்சே - என்று சொல்லவந்தேன் - கோவிச்சிகாதிங்க

குறளுக்கும், பழமொழிக்கும் ஒன்னும் காப்பி ரைட் ஒன்னும் வாங்கல தாராளமா உபயோகப்படுத்துங்க..
---------------------------------------------
VSM அலி சார், சரி உங்களுக்காக ஒரு குறள்,

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள். Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by MOHAMMED ABDUL CADER (chennai) [13 October 2011]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 10547

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

ஐக்கிய சபை என்பது எந்த ஒரு கட்சியையும் சாராமல் காயல்பட்டிணத்தில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டது இது எல்லோருக்கும் தெரியும். இவர்களின் கடந்த கால செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. கடந்த 2006 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாச்சி தேர்தல் முதல் சமீபத்தில் ஒரு காவல்துறை அதிகாரியின் அட்டூழியம்,சுனாமி குடியிருப்பு பிரச்சனை அப்படியே இப்போது தலைவர், துனைத்தலைவர், வார்டு உறுப்பினர் தேர்வு வரை நடைப்பெற்ற அனைத்து சம்பவங்களுமே இவர்களுக்கு எதிராகவும் , இவர்களை விமர்சனத்திற்குள்ளாக்கும் வகையிலுமே நடந்துள்ளது.

முதலில் இது இவர்களுக்கு தேவைதானா? வெளியில் போகும் எதையோ எடுத்து எதிலோ விட்ட கதை போல இவர்களுடய கதையும் ஆகி விட்டது. இவர்கள் எதற்காக இந்த அமைப்பை ஆரம்பிதார்களோ அதன் நோக்கம் எல்லாம் வீணாகிப்போய் தேவை இல்லாத குழப்பம், பிரிவிணை ஏற்பட்டதுதான் மிச்சம். சென்ற தேர்தலிலேயே பல இடங்களில் இவர்களின் செல்வாக்கு செல்லாக்காசானது மக்கள் மறக்க மாட்டார்கள். அப்படி இருக்க ஏன் இந்த முறையும் இவர்கள் தேர்தலில் தங்கள் மூக்கை நுழைத்தார்கள்.

ஊரின் ஒற்றுமையை பற்றி வாய் கிழிய பேசும் இவர்களில் சிலர் கடந்த 2006 ம் ஆண்டில் நடைப்பெற்ற உள்ளாச்சி தேர்தலில், வார்டு உறுப்பினர் முதல் துனைதலைவர், தலைவர் வரை ஐக்கிய சபையிபரால் அடையாள்ம் காட்டப்பட்ட பலருடைய வெற்றிக்கு எதிராக வேலைப்பார்த்து இவர்கள் வேலை பார்த்ததின் பலனாக பல இடங்களில் இவர்களின் சூழ்ச்சி வென்று ஐக்கிய சபை தோல்வி கண்டது ( சிலருக்கு உள் மனது குத்தும் இதனை படிக்கும் போது ) .

எல்லா சூழ்ச்சிகளையும் செய்த பின்பு அவர்கள் எப்படி இந்த முறை ஐக்கிய சபையோடு சேர்ந்து ஒரே மேடையில் ஏறுகிறார்கள். மீண்டும் தேர்தல் முடிந்து ரிசல்ட் வரும் போது இவர்களுக்கு எதிராக வேலைப்பார்ப்பார்களா? இதுதான் அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதற்கு உதாரணமோ?

ஒற்றுமையை பற்றி பேசும் இவர்கள் இந்த முறையும் சில முஸ்லிம் சகோதரர்களின் வெற்றியை பறிப்பதற்காக வேலை செய்கிறார்களே இதுதான் ஒற்றுமையா? அவர்களுக்கு யாரை பிடிக்குமோ, யாரெல்லாம் அவர்களின் பேட்சை கேட்டு நடப்பார்களோ அவர்களுக்கு மட்டும் தான் ஐக்கிய சபையின் ஆதரவா? அல்லது மக்கள் செல்வாக்கு உள்ள நல்லவர்க்கு உங்கள் ஆதரவா?

ஐக்கிய சபை தலைவர் கூட்டம் மேடையில் இருந்தது அதில் ஐக்கியம் என்று சொல்லப்படும் அளவிற்கு நிறைய நபர்கள் காணவில்லையே? ஏன் த.மு.மு.க, டி.என்.டி.ஜே, ஐ.என்.டி.ஜே, எஸ்.டி.பி, ம.ம.க இன்னும் பல இஸ்லாமிய அமைப்புக்களையும் அரவனைத்து சென்று இருக்கலாமே.

வேட்பாளர் அறிமுக கூட்டம் என்று சொல்லி விட்டு வேட்பாளரை அறிமுகம் செய்யாமலேயே விட்டுவிட்டீர்களே. யார் உங்கள் வேட்பாளர், அவருக்கு என்ன தகுதி உள்ளது, அவரை நாங்கள் தேர்ந்தெடுக்க என்னென்ன காரணங்கள், அவர் வெற்றிப்பெற்றால் ஊருக்கு என்னவெல்லாம் செய்வார் இப்படி பல அம்சங்கள் இருந்தால்தானே அது வேட்பாளர் அறிமுக கூட்டம் இது போன்று எதுவுமே இல்லாமல் மைக் பிடித்தவர்கள் அனைவரும் தங்களையும் தங்கள் சார்ந்துள்ள இயக்கத்தைப்பற்றி மட்டுமே அறிமுகம் செய்து கொள்வதா அறிமுக கூட்டம்.

ஏதோ ஒரு அரசியல் பொது கூட்டம் போல இருந்தது, பேசிய அனைவரும் தங்கள் கட்சியின் விளம்பரத்திற்காகவும் , அவர்களின் சுய விளம்பரத்திற்காகவும் இந்த கூட்ட மேடையை பயன் படுத்தியுள்ளார்கள் என்பது அவர்களைன் பேச்சில் இருந்தே தெரிகிறது. வேட்பாளர் தேர்வில் கட்சி சாயம் இருக்க கூடாதென்று கூறிவிட்டு இப்படி அரசியல் கட்சிகளின் பிரதிநிதைகளை மட்டுமே நம்பி எப்படி களத்தில் குதித்தீர்கள்.

இந்த பொதுகூட்டத்தில் பேசிய சிலரின் பேச்சுக்களின் வரிகளை அப்படியே இதில் நான் குறிப்பிட்டுள்ளேன் ஏனெனில் அமானுல்லா காக்கா அவர்கள் பேசும் போது “ வெப்சைட்டில் திரித்து எழுதி விடுகிறார்கள் “. என்று கூறினார் அப்படி வெப்சைட்டில் திரித்து எழுதவும் மாட்டார்கள் அப்படி எழுதினால் நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கலாமே. இவர்கள் ஒன்னும் மொட்டை கடிதம் போடவில்லையே.

“ காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பாகும். இதில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் நமது ஊர் கட்டுப்படும் “.: - : ஜெயலலிதா பேரவையின் நகரச் செயலாளர் ஹாஜி எல்.எஸ்.அன்வர்

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையில் எத்தனை ஜமாத்தார்கள் உள்ளார்கள் அதில் யாரெல்லாம் உறுப்பினர், எத்தனை தகுதியுடயவர்கள் அதில் உறுபினர்களாகவும், முக்கிய பொறுப்பிலும் உள்ளார்கள் அவர் எப்படி , எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற விபரத்தையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

"ஐக்கியப் பேரவையின் முடிவை மதித்து, எங்கள் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான எங்கள் அம்மாவே எங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த நினைக்காதபோது “.: - : ஜெயலலிதா பேரவையின் நகரச் செயலாளர் ஹாஜி எல்.எஸ்.அன்வர்

ஏன் நிறுத்தி இருக்க வேண்டியதுதானே நீங்கள் நிறுத்தினால் தி.மு.க வும் வேட்பாளரை நிறுத்தி இருக்கும் முடிவில் தி.மு.க வே வெர்றி பெற்றும் இருக்கும்.

“தலைமைக்குக் கட்டுப்பட வேண்டியது மிகவும் அவசியம்”.:- : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப்.

உண்மைதான் தலைமைக்கு கட்டுப்படதான் வேண்டும் அதைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள். இப்படி தவறான முடிவை எடுக்கும் தலைமைக்கு எப்படி கட்டுப்பட முடியும் இவர்கள் முடிவு எடுக்கும் முன்பு மக்களை கலந்தாலோசித்தார்களா? இப்படி மக்களை கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு எப்படி ஒரு ஒழுங்கான, திறமையான தலைமையின் முடிவாக இருக்க முடியும்.

'"‘படிக்காத மேதை‘ காமராஜர் போல, எழுதப்படிக்கத் தெரியாத சிலரும் போட்டியிடுவதுதான் வியப்பாக உள்ளது. ”.:- : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப்.

இப்படி யாரையோ தாக்கி பேசுவதுதான் ஒற்றுமையா?

“நமதூர் வெப்சைட்டில் பல பொய்யான, அசிங்கமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை நான் அடையாளம் காட்டுவேன். அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி என்னால் பல விஷயங்களை தெரிவிக்க முடியும்.."". :- : திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன்

வெப்சைட்டில் தவறான , அசிங்கமான தகவல்களா? எங்கே நானும் தேடிப்பார்த்தேன் என் கண்களுக்கு தெரிய வில்லையே. யாரும் அசிங்கமாக எழுதவில்லை என்பதனை புரிந்து, தெரிந்து கொண்டு பேசினால் நன்று. யாரோ சொல்வதை வைத்து இப்படி மேடை யேறி பேசினால் இப்படித்தான் மைக்கை பிடுங்குவார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு கோரியதோடு அவர் தனதுரையை முடித்துக்கொண்டார்.

இவர்தான் சூழ்நிலையை புரிந்து சூழ்நிலையிலேயே பேசி இருக்கிறார் இவரின் ஓட்டு யாருக்கு?

"ஐக்கியப் பேரவையின் அரசியல் தந்திரம் தனித்துவம் வாய்ந்தது. அது நிறுத்தியிருக்கும் பொது வேட்பாளர் ஒரு நல்லவர், பொது நல ஆர்வலர். அவரை எதிர்த்து களம் கண்டிருப்போருக்கு அவர்கள் குடும்பத்திலேயே ஆதரவு கிடையாது."" : - : காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷாஜஹான்

யாருக்கு யார் குடும்பத்தில் ஆதரவு இல்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும்.

"ஓட்டுப் போடும் விஷயத்தில் மத்திய காயல் பகுதியினரை விஞ்சிட யாராலும் முடியாது. 10 நிமிடங்கள் போதும்... அவர்கள் பெட்டியையே நிறைத்து விடுவார்கள் "".. : - : காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷாஜஹான்.

இவருடைய பேச்சு உளவுத்துறையினரை மிகவும் உசுப்பேற்றி இருக்க வேண்டும் அதற்காகத்தான் கள்ள ஓட்டுப்போடுவதை தடுக்க சென்னையில் இருந்து பறக்கும் படையினர் காயல்பட்டணம் வருகிறார்களோ?

"எதிரணியினரை தூண்டுபவர்கள் யார் யார் என்ற பட்டியல் எங்களிடம் உண்டு""... : - : காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷாஜஹான்

யார் அந்த தூண்டுபவர்கள் என்று யாராவது சொல்வார்கள் என்று பார்த்தால் யாருமே சொல்லவும் இல்லை இவர்கள் யாரையுமே சொல்ல விடவும் இல்லையே

"எங்கள் ஊர் சப்போர்ட் இந்த வேட்பாளருக்குத்தான்"".:-: கடையக்குடி பகுதி மக்கள் சார்பாக சாச்சா ஜோஸப் ராஜ்

வார்டு தேர்தலில் உங்கள் சப்போர்ட் யாருக்கு என்று எல்லொருக்கும் தெரியும் வகையில் சொல்லி இருக்கலாமே.

எங்கிருந்தோ வந்து நமதூரில் குடியேறி நமக்கே வேட்டு வைப்பவர்களையெல்லாம் மேடையேற்றி உள்ளீர்களே ஏன்? எங்களுக்கும் சப்போர்ட் உள்ளது என்று நிருபிக்கவா அப்படி என்றால் மங்களாவடி, அருணாச்சலபுரம், ரத்தின புரி, அழகாபுரி, ஆச்சாரிமார் தெரு, தேவர்மார் தெரு, சிவன் கோவில் தெரு, இப்படி ஊருக்கு வெளியில் உள்ள மாற்று மத சகோதரர்களை ஏன் மேடை ஏற்றவில்லை.

மேலும் தவ்ஹீத் சகோதரர்கள் சார்ந்து இருக்கும் அமைப்புகளில் இருந்து ஒருவரைக்கூட காணவில்லையே அவர்கள் ஆதரவு யாருக்கு?

"ஒரு மாபெரும் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில முதல்வருமான எங்கள் அம்மாவே எதிர்த்து ஆள் நிறுத்தாத நிலையில், சில பேர் இந்த பேரவையின் பொது வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுவதைப் பார்க்கும்போது, எங்கள் அம்மாவின் பெருந்தன்மை எங்களை பெரிதும் மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளது. ;-: அதிமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்

உங்களின் அம்மா புராணம் எல்லாம் போதும், தோல்வி பயத்தில் கூட ஒதுங்கியிருக்கலாமே. ஊருக்கு ஒரு பிரச்சனை என்று வந்த போது எங்கே போனீர்கள்.

"நகர்மன்றத் தலைவருக்கு அடுத்த பதவியையாவது இந்த பேரவை எங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும்."" . ;-: அதிமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்

பேரவை என்ன மக்களா? அல்லது மக்கள் பிரதிநிதியா? நீங்கள் கேட்டவுடன் துணைத்தலைவர் பதவியை உங்களுக்கு தருவதற்கு. அது வெற்றி பெற்று வரும் வார்டு உறுப்பினர்கள் கையில் உள்ளது. இந்த பேரவையின் ஆதரவு உள்ள நபர்கள் எத்தனை பேர் வெற்றி பெறப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

""இங்கு பேரவையால் நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே ஜனநாயக அடிப்படையிலேயே நடைபெற்றுள்ளது:"" -: சமூக நல ஆர்வலர் காயல் மவ்லானா

எது ஜனநாயகம் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் தேர்வுக்குழுவினர் ஓட்டுப்போட சென்றார்களே அதுவா ஜனநாயகம், தேர்வுக்குழுவினருக்கு சிந்திக்க கூட நேரம் கொடுக்காமல் வாக்களிக்க சொன்னதுதானா ஜனநாயகம்.

""ஊரில் ஒரு பிரச்சினை என்றால் அவ்விடத்தில் ஐக்கியப் பேரவைதான் முன்னிற்கும். அதன் பேச்சு மட்டும்தான் எடுபடும். இதுதான் உண்மை."" : -: சமூக நல ஆர்வலர் காயல் மவ்லானா

சமீபத்தில் காவல்துறை அதிகாரியின் அத்துமீறல்கள் நடைப்பெற்ற போது எங்கே போனார்கள் இந்த பேரவையினர்.

""சரி, ஒருவேளை எதிர்த்துப் போட்டியிட்டவர் நகர்மன்றத் தலைவரானால், நாளை முதல்வரை எவ்வாறு அணுகுவார்? நீ யார் என்று அவர் கேட்டால், நான் ஊரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவள் என்று சொன்னால், அம்மா அவரது கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள மாட்டார்களா? -: சமூக நல ஆர்வலர் காயல் மவ்லானா

“எதிர்த்து போட்டியிட்டவர் நகர்மன்ற தலைவரானால்”

என்ன இது சேம் சைட் கோல் போல தெரிகிறதே. மேலும் எதிர்த்து போட்டியிட்டவர் வெற்றி பெற்ற பிறகு முதல்வரை காண சென்றால் நிச்சயமாக முதல்வர் கழுத்தை பிடித்து வெளியே தள்ள மாட்டார். வாசல் வரை வந்து வரவேற்பார். ஏனெனில் மக்கள் செல்வாக்கு இல்லாமல், மக்கள் ஓட்டுப்போடாமல் யாரும் வெற்றியடைய முடியாது அது முதல்வருக்கு தெரியாமல் இல்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதும் அவருக்கு புரியாமல் இல்லை.இவர் பேரவையை எதிர்த்துதானே நின்றார் மக்களை எதிர்த்து நிற்கவில்லையே.

""இனிப்பு என்று எழுதி நக்கிப் பார்த்தால் இனிக்காது. உண்மையான இனிப்பு ஐக்கியப் பேரவையிடம் உள்ளது. ?"" -: சமூக நல ஆர்வலர் காயல் மவ்லானா

உண்மைதான் ஒற்றுமை என்று வாயால் சொன்னால் மட்டும் போதாது அதனை செயல் படுத்தி காட்ட வேண்டும்,

""நான் இந்த வேட்பாளர் மிஸ்ரிய்யாவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்... நீங்கள் வெற்றி பெற்றால், பொறுப்புணர்ந்து. ஐக்கியக் பேரவைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ? ""-: சமூக நல ஆர்வலர் காயல் மவ்லானா

இதைதானே மக்களும் சொல்கிறார்கள் பேரவை தங்களின் கட்டுப்பாடு படி , தாங்கள் சொல்லுவதை மட்டுமே கேட்டு நடக்க வேண்டிய ஒருவரை தேர்வு செய்துள்ளது என்று.

""எங்களுக்கு முன்னாள் - இந்நாள் அமைச்சர்களோடெல்லாம் நல்ல அறிமுகம் உள்ளது. இந்த தொடர்புகளைப் பயன்படுத்தி நமதூருக்குத் தேவையான அனைத்து நல்லவற்றையும் எங்களால் செய்ய இயலும். "":-: வேட்பாளர் மிஸ்ரிய்யாவின் சகோதரர் வழக்குறைஞர் எல்.எஸ்.எம்.ஃபைஸல்

எங்களால் செய்ய முடியும் என்றால் இது கூட்டாச்சியா? குடும்ப ஆட்சியா? அப்படி என்றால் எல்லோருடய தலையீடும் இருக்குமா?

""துணை மின் நிலையத்திற்கு இடம் வாங்குவதற்காக இந்த பேரவையிலுள்ளவர்கள் தம் பங்கில் பல லட்சங்களையும் தந்து, சுமார் 25 லட்சம் ரூபாயை திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இப்படியொரு அமைப்பு இருந்தால்தானே இதையெல்லாம் செய்ய இயலும்?"":-: சென்னையிலுள்ள காயல்பட்டினம் ஐக்கிய சங்கத்தின் செயலாளர் ஏ.கே.பீர் முஹம்மத்

பேரவை நல்லது மட்டும் செய்யட்டுமே அது போதும் இது போன்ற விசயத்தில் தலையிட்டு ஊரை பிளவுபடுத்த வேண்டாமே.

"" நமதூரில் வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இப்பேரவை எந்தத் தலையீட்டையும் வைக்க விரும்பவில்லை"-. காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்

அப்படியானால் மக்கள் சேவாகரங்கள் நிறுவனர் ஜாலாலி அவர்களை இந்த மேடையில் உள்ளவர்கள் வாபஸ் வாங்க சொன்னதன் நோக்கம் என்ன? இதனை அவரே செய்தியாக காயல் வெப்சைட்டில் கூறி உள்ளாரே அப்படியானால் அவர் கூறியது பொய்யா? இன்னும் பல வார்டுகளில் சிலரின் வெற்றியை பறிக்க துடிப்பது ஏன்? துனைத்தலைவர் பதவி உங்களின் ஆதரவு பெற்றவருக்கு கிடைப்பதில் சிக்கல் வரும் என்பதினாலா?

""அங்கு கூடியவர்களில் ஒரு ஜமாஅத்தின் பிரதிநிதி மட்டும், பரிசீலனைக்கு எடுக்கப்படும் வேட்பாளர்களின் முழு விபரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதையும் செய்தோம்..."-" காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்

அப்படியானால் அங்கு வந்த பிறகுதான் அதுவும் ஒரு ஜமாத்தார் கேட்டுக்கொண்ட பிறகுதான் நீங்கள் வேட்பாளர்களின் பெயரையே சொல்லி இருக்கிறீர்கள் இல்லையேல் எப்போது சொல்லி இருப்பீர்களோ? மக்களின் சந்தேகத்திற்கு விடை சொன்னத்தற்கு மிகவும் நன்றி.

""இவையனைத்தையும் நேரடியாகக் கண்ட பலர் இங்கே சாட்சிகளாக இருக்கிறீர்கள். வராதவர்களுக்கு வீடியோ பதிவு ஆதாரமாக உள்ளது. ""- காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்

வீடியோ ஆதாரம் உள்ளது என்றால் உடனே வெப்ச்சைட்டில் போடுங்க மக்கள் உண்மை என்ன என்பதனை அறிந்து கொள்வார்கள் அப்படியாவது இந்த பேரவைவை மக்கள் நம்பினால் தேர்தலில் வெற்றி உறுதி.

""இதே முச்சரிக்கையில் கையெழுத்திட்ட வஹீதா அம்மா அவர்கள் எவ்வளவு கண்ணியமாக ஒதுங்கிவிட்டார்கள்...? - காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்

“ஏன், அதற்கு இரண்டாவது இடத்தில் வந்தவரை வைத்திருக்கலாமே...?” என்று ஒரு கேள்வி. ஒருவேளை அவர் வாபஸ் பெறாமல் விட்டுவிட்டால் வாக்குகள் பிரிந்துவிடுமே என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்""- காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் .

கண்ணியமாக நடந்து கொண்ட வஹிதா அவர்களையே சந்தேகப்பட்டு ஒரு வேளை அவர் வாபஸ் வாங்காமல் இருந்தால் என்று வாய் கூசாமல் சொல்கிறீர்களே இதுதான் நீங்கள் கூறும் ஒற்றுமையா?

வெப்ச்சைட்டில் எழுதும் யாரும் ஆர்வக்கோளாருகள் கிடையாது அவர்கள்தான் உண்மையான சமூக ஆர்வலர்கள். வெப்ச்சைட்டில் எழுதிவருபவர்களில் 95% க்கும் மேற்பட்டவர்கள் ஊரை விட்டு பிழைப்புக்காக வெளிஊரிலும் , வெளிநாட்டிலும் இருப்பவர்கள் அவர்களுக்கு இருக்கும் வேலைப்பளுவிற்கு நடுவே இந்த சமுதாயத்திற்காக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

“வாக்குச் சாவடியில் அதிக முகவர்களை வைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் சில உள்நடவடிக்கைகள்தான் இவை” - காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்

இதுதான் சாணக்கியத்தனமோ? ஏன் ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டும்.

“ தவறை திருத்திகொள்ளுங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள்“.

தேர்தலை நடத்த தேர்தல் ஆனையம்
தேர்தலில் போட்டிபோட பல்வேறு கட்சிகள்
வாக்களிக்க குடி மகன்கள்

இப்படி எல்லோரும் இருக்க ஐக்கிய சபைக்கு தேவை இல்லாத வேலை எதற்கு.

தயவு செய்து எந்த அமைப்புகளும் எங்கள் ஆதரவு இவர்க்குத்தான் அவர்க்குத்தான் என்று உங்கள் அமைப்பின் ஆதரவினை தெரிவித்து நீங்களும் தேவை இல்லாத பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்கள் உரிமையையும், கடமையையும் மட்டும் செய்யுங்கள்.

இன்னும் ஊரில் தீர்க்கப்படாத எத்தனையோ பிரச்சனைகள், ஊருக்கு தேவையான நல்ல விசயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கு அதெயெல்லாம் செய்யலாமே.

கடந்த 3 தேர்தலிலும் இவர்களால் கொண்டு வரப்பட்ட தலைவர்களால் ஊருக்கு ஏதேனும் லாபம் இருந்ததா? இல்லவே இல்லை அப்படி இருக்க இன்னும் ஏன் இவர்கள் தங்கள் ஆதிக்கவர்க்கத்தினரின் புத்தியை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஊர் ஒற்றுமையை பாருங்கள்.
ஊர் நலனை பாருங்கள்.
ஊருக்கு தேவையானவற்றை செய்யுங்கள்.
தேவை இல்லாத விசயங்களில் தலையிட்டு
தேவையான விசயங்களில் ஒதுங்கி இருக்காதீர்கள்.

ஈகோ பார்காதீர்கள்.
ஐக்கியம் என்பதன் பொருள் உணர்ந்து
அனைத்து மக்களையும் அரவணைத்து
அவர்களுக்கும் அங்கீகாரம் கொடுங்கள்.

ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் தலைதோங்க செய்வீர்.

பேரவையின் தலைவர், உறுப்பினர்களை
ஜனநாய முறைப்படி தேர்ந்தெடுப்பீர்

ஊருக்கு மட்டும் இல்லைmoha இந்த சமுதாயத்திற்கே முன்னுதாரமாக இருங்கள். இப்படி நீங்கள் இருந்தால் நிச்சயம் உங்கள் பின்னால் நாங்கள் மட்டும் இல்லை இந்த சமுதாயமே வரும் . அந்நாள் எப்போது வரும் என்று காத்திருக்கும்.

சமுதாயத்தின் விழுதுகள்.
முஹம்மது அப்துல் காதர் .
சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
57. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohideen (Durai) (Abu Dhabi) [13 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10550

பொது வேட்பாளர் அவர்களே ஏனுங்கோ கிரண் பேடி கி உங்கள தெரியுமா? அப்புறம் என்னதுங்கோ மத்திய உள்துறை மந்த்ரி அவர் தொகுதிஇக்கு ஒன்றும் பண்ணலே (சிவகங்கை) நமக்கு என்னதுங்கோ பண்ணுவாரு வக்கீல் அவர்களே

நல்லதொரு அறிமுகம்

மொஹிடீன்(துரை)
+971502587101


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
58. ஓர் தன்னிலை விளக்கம் தரும்படி செஞ்சிட்டியே நண்பா...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.) [13 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10557

உரிமையோடு என்னைக் கடிந்து கொண்ட என் இனிய நண்பர் ஏ.ஆர் ரிஃபாய் அவர்களே! ஐக்கியப் பேரவையில் அங்கம் வகிக்கும் உயர்ந்த உள்ளம் கொண்ட சில நல்ல மனிதர்களை நான் ஒரு போதும் குறை கூற மாட்டேன். அதற்குரிய தகுதி எனக்கில்லை! ஆனால்,பேரவையின் போர்வைக்குள் சில குள்ள நரிகள் புகுந்து அறுபதையும், அதற்கு மேலே உள்ளவங்களையும் அடக்கி வைத்து ஆட்டம் போட்டாங்களே? மண்ணின் மைந்தன் எனும் உரிமையில் அகந்தையோடு சொல்கின்றேன் அந்த ஆட்டம் இனி நடக்காது! நடக்க விடவும் மாட்டோம்! ஒரு வீட்லெயே மூணு பேர் மூணு கட்சியிலெ இல்லயா? அது மாதிரிதான் இதுவும்! பேரவையின் சில வரம்பு மீறிய தலையீடுகளில் எனக்கு உடன் பாடு இல்லை! அவ்வளவுதான்!

ஓர் எழுத்தாளனுக்கு புனைப் பெயர் அவசியம்! நான் அபு ரிஃபாத்,அபு ரெஸ்மியா,ஹிஜாஸ் மைந்தன்(என் வாப்பா பெயர் ஹிஜாஸ் நூஹு),ராபியா மணாளன்,என பல அடை மொழியில் என்னை அடையாளம் காட்டி வந்தேன். முழுமையான பெயர் வேண்டும் என அட்மின் இட்ட கட்டளையின் படி முழு பெயரையும் பதித்து நண்பர்களின் ஆலோசனைக்கிணங்கி இறுதியில் “ராபியா மணாளன்”என்றே தொடர்கின்றேன்! இதில் ஏதோ இமாலயத்தவறு இருப்பதாக நான் கருதவில்லை!

குசும்பு,கேலி,கிண்டல்,யாரையும் புண்படுத்தும் நேக்கத்தில் இல்லாமல்,ரெம்ப ஸீரியஸா கமெண்ட்ஸ் போயிட்டிருக்கும் போது ஒரு சின்ன ப்ரேக்! ரசிக்கிறவங்க இருக்காங்கப்பா!அதை கருத்தாகவும் சொல்லிருக்காங்க!

குசும்பு:
எல்லோரும் உன்னை மாதிரி.....வேண்டாம்ப்பா...எதுக்கு வம்பு? நான் எதாவது எழுதி அப்புறமா நீ கமெண்ட் கட்டையெத் தூக்கிட்டு வந்துருவெ!!!-இதுவும் ஒரு வகை குசும்புதான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
59. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohiadeen (Phoenix) [13 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 10560

MOHAMMED ABDUL CADER (chennai) காக சரியா சொன்னிக.

கடந்த கலாத்தில் பேரவையால் தேருந்தயடுத்தவரகளால் லஞ்சத்தை வூளிக்க முடிந்ததா ?

தயவு செயுது ஜனநாயாஹதுக்கு வழி விடுங்க.

Sorry for my Tamil.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
60. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் ) [13 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10561

யாருப்பா இது முஹம்மத் அப்துல் காதர்(சென்னை- கமெண்ட்ஸ் ref No .10547 ) .. செமத்தியா வாங்கு.. வாங்கு... என்று வாங்கி, சுழற்றி விட்டாரே சாட்டையை. பாராட்டுக்கள்.

அப்புறம் பாளையம் MAC ( MA காதர் ) அவர்களுக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள். எப்புடி...இப்புடி.எல்லாம்.

--------------------------------------

இன்னும் ஒரு சங்கடம் பின்னால் வர காத்து இருக்கின்றது.

வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலிலோ அல்லது சட்டமன்ற தேர்தலிலோ, அனைத்து கட்சிகளும் ஐக்கிய பேரவையை முற்றுகை இட்டு, இந்த நகரமன்ற தேர்தலை சுட்டிக்காட்டி, நாங்கள் உங்களின் கோரிக்கையை நிறைவேற்றி வேட்பளரை நிறுத்தவில்லை. ஆகவே எங்களுக்கு தான் தாங்கள் ஆதரவு தரனும் என்று கேட்பார்கள். நியாயம் தானே.

இப்பவே துணை தலைவர் பதவிக்கு ADMK அட்வான்ஷ் போட்டு விட்டது. எப்படி சமாளிக்க போகிறோமோ. கண்ணை கட்டுதா..கட்டும் கட்டும்.

அதான் நம்மிடம் ராஜதந்திரம் இருக்குதுல்ல.. உம்மா மகள்.. ராஜதந்திரம்.

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
61. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [13 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10564

ஐய்கிய பேரவை கூட்டத்தில் ஒரு "காயல்" [edited].

சகோதரி ஆபிதா வெற்றிபெற்றால் முதலமைச்சரை சந்திக்கும்பொழுது, முதலமைச்சர் கேட்கும் முதல் கேள்வி நீ ஊரை எதிர்த்தா வெற்றிபெற்றாய்? சரி உடனே வெளியே போ என்று, கழுத்தை பிடித்து தள்ளிவிடுவாரம் இன்றைய முதலமைச்சர்

என்று வார்த்தைகளால் [edited] எடுத்திருக்கிறார் அந்த மேடையிலேயே.

ஒரு ஜனநாயக நாட்டில் பெருவாரியான வாக்குகளை ஒரு ஊர் மக்களால் பெறப்பட்டு வெற்றிபெற்று, மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்திக்கும் பொழுது,

பெருவாரியான மக்கள் ஓட்டுகளால் வெற்றிபெற்ற ஒரு முதலமைச்சர், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்லும் இன்றைய முதலமைச்சர், மக்களால் தேர்வு செய்த ஒரு நகராட்சி தலைவியை {அதுவும் ஒரு பெண்ணை} கழுத்தை பிடித்து தள்ளுவார் என்றால்,

இன்றைய முதலமைச்சரை இழிவாக எடைபோட்டு பொது மேடைலேயே பேசுவதை கைதட்டி வரவேற்க்கும் ADMK இளவல்களே உங்கள் உடம்பில் ஓடுவது உண்மையான தலைவியின் விசுவாச ரத்தமா? அல்லது வேறு எனனமுமா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
62. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohideen (Jeddah) [13 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10572

Comt Ref: 10564

இன்றைய முதலமைச்சரை இழிவாக எடைபோட்டு பொது மேடைலேயே பேசுவதை கைதட்டி வரவேற்க்கும் ADMK இளவல்களே உங்கள் உடம்பில் ஓடுவது உண்மையான தலைவியின் விசுவாச ரத்தமா? அல்லது வேறு எனனமுமா .........

இந்த மாதிரி எத்தனை பேர் கிளம்பி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. தயவு செய்து சண்டையை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்காதிர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
63. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ashik (saudi arabia) [13 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10574

மாஷா அல்லாஹ்!!!

இத்தனை நாட்கள் இடை இடையே அப்துல் காதரின் கமெண்ட்ஸ் படித்து படித்து உப்பும் காரமும் இல்லாத சாப்பாடு சாப்ட என் நாவிற்கு முஹம்மத் அப்துல் காதரின் (சமுதாயத்தின் விழுதுகள்) கமெண்ட்ஸ் (Comment Ref No: 10547 ) ஊர் கல்யாண பந்தலில் களறி சாப்பாடு சாப்ட சுவை உணர முடிந்தது.

இனி படிபவர்களுக்கு உங்கள் கமெண்டை மட்டும் படித்தால் போதும் கேள்வியுடன் கூடிய பதில் போல.

உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
64. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Cnash (Makkah) [14 October 2011]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10585

எதிர்பார்த்த அறிமுகங்கள் நடந்துவிட்டன, எதிர் பார்த்ததை விட அதிகமான கமெண்ட்ஸ் வந்துகொண்டிற்க்கின்றது!!

முஹீயதீன், சென்னை, பாளையம் ...இருவரும் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டார்கள்!! வேற என்ன எழுத பாக்கி இருக்கிறது....மிச்சம் மீதி உள்ளதை மக்கள் வோட்டு புத்தகத்தில் வரும் 17 ம் தேதி எழுதுவார்கள்!! இன்ஷா அல்லாஹ்!!!

ஜியாஉதீன் காக்கா!!! ரெம்ப நாள் கழிச்சி வாய்ஸ் கொடுத்து இருகிறீர்கள்!!! சிலருக்கு இந்த கூட்டம் மாநாடு போல இருந்ததாம்!! ஒரு வேளை மேடையில் இருந்த கூட்டத்தை பார்த்து அப்படி நினைத்து இருக்கலாம்!! பல கேள்விகளுக்கும் சாமான்ய மக்களுக்கு எழுந்த சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என்று நினைத்து போனவர்களுக்கு மேலும் பல கேள்விகளும் கேலிகளும் மட்டுமே விடையாய் வந்து இருக்கிறது!!

ஒரு செல்வந்தரின் ஆதரவு உண்டு என்று மைக்கில் முழங்கியவர்...25 இலட்சங்களை அள்ளி தந்தவர்கள் மேடையில் வைத்து அழகு பார்ப்பது தவறா என்று கேள்வி கேட்டவர், 50 இலட்சங்களை தனி மனிதராய் தந்த ஒரு முன்னாள் நகர் மன்ற தலைவரை பெயர் சொல்லவே மறந்து விட்டாது வருத்தத்திற்கு உரியதே!!

ஆளும் கட்சியின் சார்பின் பேசிய சஹோ. அன்வர் ஐக்கிய பேரவைக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள் என்று சொன்னனர். அப்டியானால் ஐக்கிய பேரவை அனிதா விற்கும் அழகிரிக்கும் ஆதரவு நிலை எடுக்கும் போது நீங்களோ உங்கள் கட்சியோ ஊரு ஒற்றுமைக்காக கட்டுப்பட்டுதான் நிற்குமா?

காயல் மௌலான அவர்கள் பேசும் போது 50 பேர் கை தட்டினால் அரசியல் போதை உண்டாகும் என்று சொன்னார்!! பல கட்சி கூட்டகளில் கை தட்டு வாங்கி அவர் கூறிய போதைக்கு தானே இன்று வரை அடிமையாக இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் எதிர் அணி வேட்பாளர் அம்மாவிடம் போனால் ஐக்கிய பேரவை எதிர்த்து போட்டியிட்ட நீ வெளியே போ என்று கழுத்தை பிடித்து தள்ளுவாரம்!!! ஐக்கிய பேரவை என்ன அம்மா பேரவையா..... உண்மையில் இந்த ஐக்கிய பேரவை தான் அனிதாவிற்கு சப்போர்ட் பண்ணியது என்று தெரிந்தால் அம்மா கழுத்தையே நெரித்து விடுவார்... ஏதோ நீங்க சொன்ன அந்த கை தட்டல் போதை கிடக்கும் என்று எதையோ பேசாதீர்கள்!! மக்கள் உணர்வுகளை புரிந்து பேசுங்கள்!!

ஷாஜஹான் (காங்) அவருடைய பேச்சை கண்டனம் செய்ய மறந்ததால் இன்று ஊருக்கு கள்ள ஒட்டு பெயர்.. இந்த அரசியல்வாதிகள் தான் ஒவ்வரு முறை ஒரு கூட்டணி அமைக்கும் போது அவர்களுக்கு சாதகம் இல்லாத போது ஊரில் கள்ள ஒட்டு பற்றி மேடையில் பேசி ஊரறிய வைத்தவர்கள்!! அவர்கள் எல்லாம் இன்று ஓர் அணியில்!!

அன்று ஜனவரி 4 உங்கள் பின்னால் ஒற்றுமையுடன் ஊரே திரண்டு வந்தோம் (அது தான் மாநாடு!! இது இல்லை)... உங்களுடன் சேர்ந்து நாங்களும் கோஷம் போட்டோம்..... வேண்டாம் வேண்டாம் சிங்கி துறை பெயர் வேண்டாம்!! வேண்டாம் வேண்டாம் கொம்புதுறை பெயர் வேண்டாம் என்று!! இன்று அனைவரும் அமர்திருக்கும் மேடையில் காயல்பட்டினம் கொம்புத்துறை என்ற கடையக்குடி பகுதி மக்கள் சார்பாக சாச்சா ஜோஸப் ராஜ் உரையாற்றுவார் என்றும் அடுத்து சிங்கித்துறை என்ற கற்புடையார் பள்ளி வட்டம் சார்பில் தஸ்னேவிஸ் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.!! என்ன வினோதமோ!!!

ஏதோ நடந்ததும் நடப்பதும் நமக்கு நன்மையாகட்டும் என்று பிராத்திப்போம்!! இங்கு கமெண்ட் சொல்லுற 90 % ஐக்கிய பேரவையில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது என்பதை மட்டும் தவறாமல் ஒப்பு கொண்டு தான் இருக்கிறார்கள் !! அந்த தவற்றை திருத்தும் நாள் இந்த தீர்ப்பு நாளா (Oct 21 ) அல்லது இறுதி தீர்ப்பு நாள் தானா என்பதை எல்லாம் அறிந்த அவனிடமே விட்டு விடுவோம். !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
65. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohiadeen (Phoenix) [14 October 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 10587

MOHAMMED ABDUL CADER (chennai) காக்க really superb comments.

பேரவைக்கு வாங்க வாங்க கஊட்டதை தேர்தல் சமயத்தில் மட்டும் குபிடதிர்கள், கொள்கைகள் வெளிபடையாருந்தால் கஊட்டம் தனா வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
66. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Muhammad Ibrahim (Guangzhou(China)) [14 October 2011]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 10595

அஸ்ஸலாமு அழைக்கும்,

பலே பாண்டியா(சமுதாயத்தின் விழுதுகள். முஹம்மது அப்துல் காதர் . சென்னை.). இது வரை neutral லா இருந்த என்னோட மனதையும் மாத்திடீங்களே சாரே. உங்களோட கருத்தில் பிடித்ததே நீங்க எல்லா அரசியல் வாதியையும் சரி சம மாக வாங்கி இருப்பதுதான். இந்த கருத்து நம்ம காயல்பட்டிணத்திற்க்கு மட்டும் அல்ல நம்ம நாட்டிற்கே போய் சேரணும்.

சகோதரி ஜெய்னப் குறிப்பிட்ட கமெண்ட் 31 மாதிரி. இந்த சுடு சுரனே...அது எப்படி...நம்மலுக்கு தான் அது இல்லையே.

Suggession : நாம ஏன் சகோ. முஹம்மது அப்துல் காதர் சொன்ன கருத்தை அப்படியே நோட்டீஸ் அடித்து இன்று இரண்டு ஜும்மாலேயும் குடுக்ககூடாது! எது எப்படியோ நான் போன் பண்ணி என்னக்கு தெரிந்த குடும்பத்தார்கள், நண்பர்கள் எல்லோருக்கும் புத்தகத்கு வோட்டு போடா சொல்லபோறேன் பா (weekend sire!). சும்மா இருந்த பாம்பை ஊதி கெடுத்துடானுங்கப்பா!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
67. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by A.R.Refaye (Abudhabi) [14 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10600

நீ தந்த கருத்துப்படி (குசும்பு,கேலி,கிண்டல்,யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லாமல்,ரெம்ப ஸீரியஸா கமெண்ட்ஸ் போயிட்டிருக்கும் போது ஒரு சின்ன ப்ரேக்! ரசிக்கிறவங்க இருக்காங்கப்பா!அதை கருத்தாகவும் சொல்லிருக்காங்க) இதை ஏற்பதோடு இன்று முதல் உன் புனைப்பெயர் குசும்பு ரபீக் ok


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
68. ஒரு அன்பான வேண்டுகோள்,
posted by சொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை) [14 October 2011]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 10604

ஒரு அன்பான வேண்டுகோள்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளாலும், பல சமுதாய அமைப்புகளாலும் நாம் நமது ஒற்றுமையை குழைக்கும் வகையில் பல்வேறு விதத்தில் நடந்து கொண்டோம். ஆனால் இப்போது உள்ளாச்சி தேர்தல் என்ற அரக்கன் நமது ஒற்றுமையில் விசம் தூவ வந்துள்ளான் அதற்கு யாரும் அடிமையாகிவிடாதீர்கள்.

ஐக்கிய பேரவை ஏதோ ஒரு நல்லெண்ணத்தில் இந்த விசயத்தில் தலையிட்டு இருந்தாலும் அதில் உள்ள சில நபர்கள் ஏதோ ஒரு விதத்தில் தவறான முடிவையே எடுத்துள்ளார்கள்.மேலும் பேரவை எது செய்தாலும் தொடர்ந்து பேரவையை பலர் விமர்சித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

இது அரசியல் இதில் அவர்கள் தலையிட்டே இருக்க கூடாது, அவர்கள் சமுதாய நலனிலும், பிரச்சனையிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் இது போன்ற விசயத்தில் எல்லாம் தலையிட்டு அவர்களை அவர்களே தாழ்த்திக்கொள்ள வேண்டாம்.

எத்தனையோ கண்ணியமிக்கவர்கள் எல்லாம் அதில் உள்ளார்கள். யாரோ செய்கின்ற தவறுக்கு இவர்கள் பொறுப்பாகிவிடக்கூடாது. இன்றைய கால கட்டத்தில் தேர்தல் என்பது ஒரு வியாபார சந்தையாகவேதான் உள்ளது. எதை முதலீடு செய்தார்களோ அதற்கும் அதிகமான பலன்களை கிடைக்கச்செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்படுவார்களே தவிர மக்கள் தொண்டே கதி என்றெல்லாம் இருக்க மாட்டர்கள்.

குறைந்தது தேர்தல் செலவுக்கு ஒருவர் 2 முதல் 5 லட்சம் வரை செலவு செய்தாறென்ரால் அதை அவர் முதலீடாகவே கருதுவார், மேலும் அதனை தொடர்ந்து 5 வருடங்கள் அவர் செலவிடும் நேரத்திற்கும் சேர்த்தேதான் அவர் லாபம் சம்பாதிக்க முயல்வார். பின்பு எப்படி லஞ்ச, லாவண்ய மற்றும், ஊழல், குடும்ப தலையீடுகள் இல்லாமல் இவர்களால் வேலை பார்க்க முடியும். அரசியல் என்பது அரசியலாகவேதான் உள்ளதே தவிர ஆர்வப்பணி யாக அது மாறாது.

இது தெரிந்தோ, தெரியாமலோ இப்படியெல்லாம் உறுதி மொழி கொடுத்தவர்களுக்காக இரு தரப்பினரும் தேர்தல் வேலை பார்ப்பதும், அவர்களுக்காக முட்டி மோதி கொள்வதும் நமக்கும் நாம் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்கும் நல்லதல்ல.இப்படி மோதிகொள்வதற்கு அரசியல் கட்சிகளே களம் கண்டு இருக்களாமே?

அரசியலை பார்க்க அரசியல் கட்சிகள் இருக்கின்றன நாம் சமுதாயப்பணியை மட்டும் பார்ப்போம், வேண்டாம் இந்த அரசியல். எந்த ஒரு சூழ்நிலையிலும் அஞ்சா நெஞ்சனுக்கும், அம்மாக்கும் அடிபணிய வேண்டாமே. தயவு செய்து எந்த ஒரு அமைப்பும் யாருக்கும் ஆதரவு கொடுக்காதீர்கள் அது தேவை இல்லாத பின் விளைவுகளை ஏற்படுத்தும்.தேர்தல் என்று வந்து விட்டால், ஜமாத்தும், ஐக்கிய பேரவையும் இன்னும் பல சமுதாய அமைப்புகளும், காயல் நல மன்றங்களும் நடு நிலையையே நாடுங்கள்.

ஐக்கிய சபை நல்லெண்ணத்தில் கடந்த 3 முறை 3 தலைவர்களை கொண்டு வந்தது அதனால் யாருக்கும் லாபம் இருந்ததா? ஊருக்கு என்ன லாபம்? 15 வருடங்களுக்கு முன்பு ஊரின் கட்டமைப்பு, ஊரின் தேவைகள் எப்படி இருந்ததோ அது இன்னும் அப்படியேதான் இருக்கிறது எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

காயல் வெப்சைட் அட்மின் அவர்களே ஊர் நலனை கருத்தில் கொண்டு நீங்களும் செயல்பட வேண்டும். காடல் வெப்ச்சைட் நடு நிலை தவறியது இல்லை ஆனால் இன்று நடுநிலை தவறியது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. காயல் வெப்சைட் மூலமாக பிரிந்து கிடந்த நம் சொந்தங்கள் எல்லாம் ஒரே குடையின் கீழ் வந்தோம் இப்போது குடையில் ஓட்டை விழ நீங்களே காரணமாக இருந்து விடாதீர்கள்.

சமுதாய நலன் கருதி சில செய்திகளை வெளியிட வேண்டாமே, மற்றும் சில செய்திகளுக்கு (சமுதாய நலன் கருதி) கருத்துக்களை வெளியிட அனுமதிக்க வேண்டாமே ( இந்த செய்திக்கு சமுதாய நலன் கருதி கமண்ட்ஸ் பதிவு செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்று ஹைலைட் செய்யுங்கள்). இதனால் தேவை இல்லாத கருத்து பரிமாற்றங்கள் மூலம் நமக்குள் நாமே பிளவுகளை ஏற்படுத்த வேண்டாமே.

ஒற்றுமையுடன் இருப்போம் !
ஒரு புதிய சமுதாயத்தை படைப்போம் !!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
69. விமர்சனங்களின் தொடர்ச்சி
posted by Noordeen Prabu (Jeddah - Saudi Arabia) [14 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10639

சென்னையை சார்ந்த முகம்மத் அப்துல் காதர் (பலே பாண்டியா) அவர்களின் கருத்து ரொம்ப ரொம்ப சூப்பர்.

அவர் மறந்த அல்லது அவரால் எழுதப்பட முடியாமல் (கை வலித்திருக்கும்) போன விமர்சனங்களின் தொடர்ச்சி.

வரவேற்புரை : அங்கே கூட்டத்திற்கு யார் வந்திருந்தார்கள்? வரவேற்புரை வழங்க - மேடையை தவிர கூட்டத்தில் ஒரு ஆள் கூட இல்லை.

நன்றி உரை : இதெல்லாம் ஐக்கிய பேரவைக்கு தேவை தானா? நீங்கள் உங்களை நம்பி வந்த வஹீதா ராத்தா விஷயத்தில் நன்றியுடன் நடந்தது கொண்டீர்களா?

துஆ - சலவாத் : இதெல்லாம் சுத்த பித்-அத் என்பது தெரியாதா? ஐக்கிய பேரவையின் ஒரு சார்பு கொள்கையை பார்த்தீர்களா?

கிரா-அத் : இது விசயத்தில் எனக்கு கருத்து சொல்ல தெரியவில்லை. அது கூடுமா அல்லது கூடாதா என்று நாங்கள் இப்போதுதான் ஆராய்ச்சி (பண்ணி)கொண்டிருக்கிறோம். தலைமைக் கழகத்திலிருந்து எப்படியும் 2016 தேர்தலுக்குள் முடிவு வந்து விடும். அப்போது கருத்து தெரிவிப்போம்.

கிரா-அத் ஓதியவர் : அது எப்படி ஒரே ஆள் MEGA மீட்டிங்கிலும் - பேரவை மீட்டிங்கிலும் ஓதலாம்? ஐக்கிய பேரவையின் குள்ள நரித்தனத்தை பார்த்தீர்களா?

மாஷா அல்லாஹ் - பாருங்க! எனக்கும் பல ஐக்கிய பேரவை வசவாளர்களின் பாராட்டு - புகழ் மழை குவியும்.

யா அல்லாஹ் - எல்லா புகழும் உனக்கே சொந்தம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
70. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [14 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10659

காயல் மவ்லானாவுக்கு என்ன ஆனது?ஆபிதா வெற்றி பெற்று அம்மாவின் முன் போனால் அம்மா அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவாராமா?என்ன உளறல் இது?

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மக்கள் பிரதிநிதியை எந்த முதல்வரும் இப்படி செய்ய மாட்டார்.

கலக்கல் பிரியாணியின் வாசம் கம கம என வீசுகிறது. ஆர்ப்பாட்ட மேடையும் ஐக்கியபேரவை மேடையும் ஒன்றாகி விட்டதே... ஒரு கட்சி ஜால்ரா போட்டாலே அடை சகிக்கமுடியாது. இதில் அனைத்து கட்சி ஜால்ரா வேறு... ஜின்க்..சானக்...ஜின்க் ...சானக்...ஜின்க்.. சானக்...ஜின்க்...சானக்..டும் ....டம் ...டும்...டம் டம் டம் அடிரா மேளம் போடுறா தாளம் ...அதுதான் கல்யாண கோலம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
71. ஒற்றுமைக்குத்தான் எத்தனை எத்தனை தியாகங்கள்..
posted by M Sajith (DUBAI) [14 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10683

பேரவை நகரின் ஓற்றுமைக்காக செய்த தியாக வரலாறு பட்டியல் நீன்டுகிட்டே போகுதே..

சட்ட மன்ற தேர்தல் - சுனாமி குடியிருப்பு..

உள்ளாட்சி தேர்தல் - சிங்கித்துறை, கொம்புத்துறை தனி பஞ்சாயத்து கோரிக்கைக்கு முழு அங்கீகாரம்,

அதுவும் 23 ஜமத்துக்கள் 15 பொது நல அமைப்புக்கள் ஆதரவுடன்..
__________________________________________
திரு. ஜோஸப் ராஜ் "அவர்கள் எங்கள் "ஊரு"க்குள் வருவதற்கு முன்னர் எங்கள் தேவாலயத்தில் பங்குத்தந்தையைச் சந்தித்துதான் முதலில் வாக்கு கேட்டுள்ளார்கள்"

சாச்சா ஜோஸப் ராஜ் "நான் கொம்புத்துறை ஊரைச் சார்ந்தவன்..... எங்கள் ஊர் சப்போர்ட் இந்த வேட்பாளருக்குத்தான்".
_________________________________________
நல்லா ஐக்கியமாத்தான் இருக்கங்க அரசியல் கட்சி காரங்க அடுத்த தேர்தலுக்கு ரெடியா..

இதுக்கு ஆதரவு தெரிவிக்க மேடை நிறைய கூட்டம்.. கண்டிக்கவோ, திருத்தி சொல்லவோ யாருக்கும் மனம் வரவில்லை..

அது சரி, அரசியல் கட்சில இல்லாத யாரவது மேடைல வாயத்திறந்தா தானே? (கிராத் ஓதவும், நசீஹத் செய்யவும், துஆ ஓதவும் ஒரு சம்பிராயத்தை தவிற) பேரவை தலமைக்காவது பேச வாய்ப்பிருந்ததா?

சுத்தமா பேரவையத்தான் அரசியல் ஆக்கிரமிச்சாசே ஒரு கொடியும் சின்னமும்தான் பாக்கி.

அமா.. முன்னால் நகரவை தலைவரை மேடைல காணலயே இதனாலதானோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
72. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by shahul hameed sak (malaysia) [14 October 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 10689

அப்பாடா சாளை ஜியாவுதீன் காக்கா தெளிவான முடிவுக்கு வந்து விட்டார்கள் போல இப்போதுதான் 'புத்தகத்தில்' எழுதுவதிற்கு பேனா பிடித்திருக்கிறார்கள், நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
73. மரண ஓலத்தின் வெளிப்பாடு......
posted by zubair (riyadh) [15 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10707

அஸ்ஸலாமு அலைக்கும்.

என் பாசமிகு காயல் சொந்தம்களே............ ஐக்கிய பேரவையின் முயற்ச்சிக்கும், வெற்றிக்கும் பாடு படுவது நமக்கு நாமே.... போட்டுக்கொள்ளும் போர் கவசம். உம்மாவையே.... (ஐக்கிய பேரவையே)சந்தேகிக்கும் உம்முல் குரா காயல் dடாடிகள்..... சந்தேக கண்ணோடு நம் உம்மாவை (ஐக்கிய பேரவையே)பார்த்ததினால்.......! இதோ நம்முடைய ஊர் தாயின் மவ்னம் கலைந்த மனக்குமுறலை இந்த கூட்டத்தில் இருந்து நான் காண்கிறேன். சந்தேகித்த எந்த ஒரு dடாடிகளும் விஜயம் காணாமல்.... தாடியோடு (தக்வாவை) நிம்மதியை தேடி அலைந்ததைதான் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

உம்முல் குரா என்று அழைக்கப்படும் மக்கா.... வில் வசிக்கும் காயல் வாசி சிலருக்கு சிறிய மக்கா என்றழைக்கப்படும் அவர்களின் உம்முல் குராவை (தாய் பட்டணத்தை) நேசிக்காமல் குறை காண்பது என்பது..... ஆச்சரியமும், அற்ப்புதமுமாக உள்ளது. ஒற்றுமைக்கு ஊர்வாசிகள் அனைவரும் மனம் வருந்தி துவா.... செய்யும் இந்த தருணத்தில் இவர்களுக்கு குசும்பு பேச எப்படி மனம் வருகிறதோ.... இதயம்களை அறிபவன் அல்லாஹ் ஒருவனே........

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் மனதை கட்டுப்படுத்தும் (சைத்தானியத்தில் இருந்து) சக்தியை தந்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம். குறிப்பு :- இங்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரலோசை.... மரண ஓலத்தின் வெளிப்பாடு என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
74. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [15 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10723

"சரி, ஒருவேளை எதிர்த்துப் போட்டியிட்டவர் நகர்மன்றத் தலைவரானால், நாளை முதல்வரை எவ்வாறு அணுகுவார்? நீ யார் என்று அவர் கேட்டால், நான் ஊரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவள் என்று சொன்னால், அம்மா அவரது கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள மாட்டார்களா? "(cut & paste)

காயல் மௌலானா அவர்களின் இந்த பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம் . இவர் வேண்டுமானால் அ. தி. மு. க. விலிருந்து வெளியே தள்ளப்பட்டிருக்கலாம். அவர் பாஷையில் சொல்லுவதானால் "கழுத்தை பிடித்து".

இந்த தேர்தலில் இரண்டு சகோதரிகளில் யார் வெற்றிபெற்றாலும், அவர் நமதூர் மககளால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவராகத்தான் இருப்பார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவரை எந்த முதல்வரும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளமாட்டார் . நமதூர் மககளால் (தேர்ந்தெடுக்கப்பட்டவரை) வெளியே தள்ளும் முதல்வரை (அவர் யாராக இருந்தாலும் சரி) நாம் நமதூரில் நுழையும்போது அவரின் அந்த செயலுக்கு ஊர் ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். இதுதான் ஊர் ஒற்றுமை.,

காயல் மௌலானாவின் இந்த வார்த்தையை கண்டிக்க மேடையிலிருந்த எந்த பெரியவர்களுக்கும் துணிவு வரவில்லை.

"இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், நிகழ்ச்சி நெறியாளர் அவரிடம், வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு உரையாற்றச் சொன்னார்". (cut & paste)

இங்கு நெறியாளர் என்று கூறப்பட்டது சகோ. அமானுல்லாஹ் அவர்களைத்தான். கிட்டத்தட்ட குறைந்தது மூன்று முறை இவர் மற்ற பேச்சாளர்கள் பேசும்போது இடையில் குறுக்கிட்டு நெறிபடுத்தினார். இவர் மௌலானவை நெறிபடுத்த துணிவில்லாமல் போனது ஏனோ?

Abdul Wahid Saifudeen.
Mohamed yahiya
S.T. Shahul Hameed


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved