Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:48:19 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 205
#KOTWEM205
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 24, 2016
முதல் ஓவியர்!

இந்த பக்கம் 2027 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அந்தர வெளியில் தொங்கும் வாழ்க்கை எனும் ஆதி அந்தமில்லாத நூல் ஏணியின் இறுதிப்படிகளுக்கு அப்பால் கால் வைத்து முடிவிலிக்குள் கடந்து சென்றிருக்கின்றார். எல்லா இறப்புகளும் துயரமானதே. அதிலும் ஏ.எல்.எஸ். மாமா போன்ற அறிந்த மனிதர்களின் இறப்பின் வழியாக நமது நினைவின் மெல்லிய அடுக்குகளுக்குள் ஒரு பாறாங்கல்லின் கனம் வந்து உட்கார்ந்து கொள்கின்றது.

+2 முடித்த பிறகு பிழைப்பு தேடி முதன் முதலாக சென்னை பயணித்தேன். ஒரு சில இடங்களில் முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை. சரியாக அமையவில்லை.

சவுகார்பேட்டையில் உள்ள நூல்கடை ஒன்றில் ஒருவரின் பரிந்துரை மூலமாக நான் வேலைக்கு சேர்ந்தேன்.

பரிந்துரைத்த அந்த முகம் எனக்குள் முழுமையாக மனதிற்குள் இறங்குகின்றது. அதுதான் ஏ.எல்.எஸ். மாமா. அன்னார்தான் எனக்கு வேலை வாங்கி தந்தார். அதில் சில காலந்தான் நீடித்தேன். அது தனி கதை. அப்போது அவர்கள் சென்னையில் இருந்த காலகட்டம். அதிலிருந்து கிட்டதட்ட கொஞ்ச வருடங்கள் அவர்களைப் பார்த்தால் மனதிற்குள் ஒரு வகையான விலகல் உணர்வு ஏற்படும். அப்போதைய வயதின் எல்லையில் இருந்து எழுந்த உணர்வு அது.

வாழ்க்கையின் பல உருள்புரள்கள் நடந்த பிறகு அந்த விலகல் உணர்வுகள் கரைந்து ஏ.எல்.எஸ். மாமா அவர்களை பார்க்கும்போதெல்லாம் நமதூரைச் சார்ந்த ஒரு மூத்த மனிதர் என்பதற்கு மேல் எதுவும் தோன்றாது.

அன்னாருடனான எனது முதல் காட்சிக்குப்பிறகு கிட்டதட்ட 28 வருடங்கள் கடந்துவிட்டது. நமது இணையதளத்தில் நானும் அவரும் சக பங்களிப்பாளர்கள் என்ற வகையில்தான் கடந்த 4 ஆண்டுகளாக அன்னாரோடு நெருக்கமாக பழகவும் அவதானிக்கவும் வாய்ப்பு கிட்டியது.

தேய்க்க தேய்க்க துலங்கும் மாணிக்கக் கற்கள் போல அன்னாருடைய ஆளுமையின் ஒவ்வொரு பரிமாணமாக விளங்கத் தொடங்கியது.

ஏ.எல்.எஸ். .மாமா அவர்கள் சென்னை, ஈ.வே.ரா.பெரியார் சாலையில் பெரியமேடு பகுதியில் அமைந்துள்ள அரசு கவின்கலைக்கல்லூரியின் 1971 வருடத்திய அணியைச் சார்ந்த ஓவிய மாணவராவார். நான் அறிந்தவரை இக்கல்லூரியின் நமதூரைச்சார்ந்த முதல் , ஒரே ஓவிய மாணவராக ஏ.எல்.எஸ். மாமாதான் இருப்பார்கள் என நினைக்கின்றேன்.

கடந்த வருடம் அன்னார் நடத்திய கோடை கால ஓவிய வகுப்பில் எனது இளைய மகனை சேர்த்து விட்டேன். அப்போது அன்னாரின் பயிற்சியின் மூலமாக அவனுடைய வரை திறனில் படிந்திருந்த மேல் மண் விலகியது. அவன் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு இங்கேயும் வீட்டுப்பாடங்கள் செய்ய வேண்டி இருக்கின்றது என விலகிவிட்டான். அந்த பயிற்சி வகுப்பை அவன் நிறைவுபடுத்தாததில் எனக்கு மனக்குறைதான். என்ன செய்ய ? குழந்தைகளுக்குள் எதையும் திணிக்க முடியாதே..

தனது ஓவியங்களில் “காயல் இப்னு அப்பாஸ்“ என்ற பெயரைக் குறிப்பிடுவதன் வழியாக தன் தந்தையின் கைவிரல்களை பிடித்து நடக்கும் முதிய குழந்தையாகவே தன்னை வாழ்நாள் முழுவதும் அன்னார் உணர்ந்திருக்கின்றார். மானுடம் என்பதே முன்னோர் பின்னோர் என்ற கண்ணிகளால் இணைக்கப்பட்ட ஒரு மகா சங்கிலிதானே .

தனது பெயரின் முன்னொட்டை எப்போதும் துலங்கச் செய்வதின் வழியாக தனக்கு முந்திய கண்ணியுடனான தனது பிணைப்பை எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டே இருந்திருக்கின்றார் ஏ.எல்.எஸ்.மாமா.

-------------------------------------------------------------------------

“ஒரு இடைவேளையில் நண்பர் அமீர் அப்பாஸ் என்னை பேரா. தொ.பரமசிவம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சொந்த ஊர் காயல்பட்டினம் என்று சொன்னவுடன்

1920 களில் நமது ஊரில் வெளியான கமருஸ்ஸமான் என்ற அரபு மாதாந்திர தமிழ் பத்திரிக்கையின் படிகள் கிடைக்குமா ? எனக் கேட்டார். எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை . வெட்கமாக இருந்தது .விசாரித்து சொல்கின்றேன் என சமாளித்து விட்டேன்.

பின்னர் ALS மாமா அவர்களிடம் விசாரித்ததில் தன்னிடம் உள்ள கமருஸ்ஸமான் பத்திரிக்கையின் 1926 ஆண்டைய இதழின் ஒளிப்படியை என்னிடம் தந்தார். அதை இனிமேல்தான் பேராசிரியரிடம் சேர்க்க வேண்டும்.

பேரா. பரமசிவம் அவர்களையும் ALS மாமா அவர்களையும் நினைக்கும்போது பெருமையாக இருந்தது...“ {எழுத்து மேடைக் கட்டுரையான மலைப்பாடகன்.... காண்க http://kayalpatnam.com/columns.asp?id=95

மேற்கண்ட நிகழ்விற்குப்பிறகு ஏற்பட்ட உள்ளுணர்வின் ஒரு வலுவான தூண்டுதலில் இரண்டரை வருடங்களுக்கு முன் நானும் நண்பர்கள் ஹிஜாஸ் மைந்தன் ரஃபீக்கும் , நூஹ் காக்காவும் ஏ.எல்.எஸ்.மாமாவின் வீட்டிற்கு சென்று அன்னாரின் களஞ்சியத்தை பார்த்து விடுவது என தீர்மானித்தோம்.

அது ஒரு மழைக்காலம். காலை 10:00 மணிக்கு வருகின்றோம் என மாமாவிடம் சொல்லியிருந்தோம். அன்று ஏற்பட்ட ஏதோ ஒரு அலுவலினால் அன்னாரின் வீட்டிற்கு செல்ல சுணக்கமாகி கிட்டதட்ட லுஹர் வேளையில்தான் சென்றோம்.





எங்களின் மூன்று மணி நேர தாமதத்தை அவருக்கே சொந்தமான பூ முக சிரிப்புடன்தான் எதிர் கொண்டார். அவர் வீட்டினுள் நுழைந்தவுடன் உறக்க மின் விளக்குகள் , மண்ணெண்ணை மாட விளக்கு , பிரிட்டனில் ஆயத்தமான மின் குமிழ்கள் , வெளித் தெரியும் பட்டை அடி மின் கம்பிகள் என முப்பத்தைந்து வருடங்களுக்குள்ளே ஒரே ஒரு நொடியில் மீள நடந்த மயக்க மன நிலை உண்டானது .1980 களில் இருந்த காயல்பட்டின வீடமைப்பு.

அவர் வீட்டின் உணவு மேசையில் விதம் விதமான சிற்றுண்டி வகைகள் செய்து பரத்தியிருந்தார்கள் அன்னாரின் துணைவியார். . ஆறிய நிலையிலும் ரம்ப இலை கலந்த பிரியாணிக் கஞ்சியானது நாவின் வழியாக மூளைக் மடல்களுக்குள் சென்று ஒட்டிக் கொண்டது. இவற்றை அடித்து வயிற்றுக்குள் வீசிய பிறகு மதிய உணவிற்கு விடுமுறை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அன்னாரின் வீட்டு மாடிக்குள் காயலின் 100 வருட வரலாற்றுக் கிடங்கு ஒன்று இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

நமதூரிலிருந்து வெளியான முதல் அச்சுப்படிகள் , வரலாற்று நூல்கள் , நமதூர் வாழ்வியல் பண்பாட்டசைவுகளின் அரிய ஒளிப்படங்கள், அந்த ஒளிப்படங்களில் காலத்தின் சட்டங்களில் உறைந்திருக்கும் முகங்கள், மகிழுந்து, சட்டை கை, துருக்கி தொப்பி என விதம் விதமான பதிவுகள்.



ஏ.எல்.எஸ். மாமா வீட்டு மாடியின் மின்சாரப்பலகத்தின் மேல் பக்கம் பறவையின் உதிர்ந்த இறகுகள் இரண்டை அழகாக ஒட்டி வைத்திருந்தார். வரலாறு என்பதே நேற்றுகளின் உதிர்ந்த இறகுகள்தானே.



சேகரிப்பில் இருந்த நிறைய ஆவணங்களை குறிப்புக்காக தேவைக்காக என வாங்கிச் சென்றவர்கள் திருப்பித்தருவதே இல்லை என வருந்தினார்.

வரலாற்றை பாதுகாக்க முனையாத மனதிலிருந்துதான் வரலாற்றை அழிக்கும் உந்துதலும் அனிச்சையாகவே உதிக்கும் போலும்.

தாயிம்பள்ளி ஜமாஅத்தார்கள் , கருத்தம்பி மரைக்காயர் தெரு வாசிகள் , ஊர்வாசிகள் ஏ.எல்.எஸ்.. மாமாவின் களஞ்சியங்களை சற்றும் தாமதிக்காமல் உரிய இழப்பீட்டு தொகை கொடுத்து பொதுச் சொத்தாக கையகப்படுத்த வேண்டும். அப்படி கையகப்படுத்தப்பட்டவற்றை மின்னணு முறையில் பாதுகாக்க வேண்டும்.

இதையே அன்னார் ஒரு இறுதி விருப்பம் போல எழுத்து மேடையில் எழுதிய ஒரு கட்டுரையில் போன வருடம் ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்கள்.

{வாழ்ந்து மறைந்த நம்மவர்கள் தேடிய நூல்களைப் பாதுகாத்து வைப்பது யார் கடமை? சிந்திப்போம் வாரீர்!! இதைச் செய்யவில்லையெனில் வரலாற்றையும் நினைவுகளையும் வெறும் குப்பை மலையாக பார்த்த குற்றத்தை நமது பிள்ளைகள் நமக்கு மேல் சூட்டுவார்கள்.

காயல்பட்டினம் இணைய தளத்தில் அன்னார் எழுதிய பல கட்டுரைகளில் ஒரு பத்தி என் மனதை மிகவும் பாதித்தது:

அதாவது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் காலஞ்சென்ற தலைவர். அ.க.அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள் இளைஞராக இருந்த போது நமதூருக்கு கட்சி பரப்புரைக்காக வந்திருந்த சமயத்தில் நடந்த நெகிழ்வான நிகழ்வொன்றை பதிந்திருந்த விதம்தான்.

-----------------------------------------------------------------------

அன்னாரின் மீது எனக்குள்ள விமர்சனம் என்னவென்றால் அவர்க்ளின் எழுத்து பல பத்தாண்டுகளுக்கு முந்திய நடை. அதை அன்னார் காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக நுண்கலையான ஓவியக்கலையில் அன்னார் மென்மேலும் வளர்ந்திருக்க வேண்டியவர். அதிலும் கூட தன்னை ஒரு சதுர மூலைக்குள் சுருக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஓடிச்செழித்திருக்க வேண்டிய பெரு நதியொன்று தன்னை குளத்திற்குள் ஒளித்துக்கொண்டது.

மணவாளக்குறிச்சி மணல் ஆலையினால் ஏற்படும் புற்று நோய் பற்றிய ஆவணப்படமொன்றை நகரில் திரையிட்டோம். மிகவும் உருக்கமான படம். நிகழ்ச்சியின் நிறைவில் என் கைகளைப் பற்றிக் கொண்டு இது போன்ற நிகழ்வுகளுக்கு எனது உடல் உழைப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்விற்குப்பிறகு அவரை ஒருமுறையோ என்னவோதான் சந்திக்க கிடைத்தது.

ஏ.எல்.எஸ். மாமா ஒரு மகத்தான கலைஞன். மர்ஹும்களான பாடகர் காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது , பரம்பரைக்கவி காயல் பிறைக்கொடியான் எஸ்.எம்.பி.மஹ்முது ஹுஸைன் வரிசையில் நம்முடைய சமகாலத்தில் இன்னொரு கலைஞனை இழந்திருக்கின்றோம்.

முன்னவர் இரண்டு பேரையும் நாம் உரிய அளவில் அங்கீகரிக்கத் தவறி விட்டோம். இவர்கள் என்ன அங்கீகாரமளிப்பது ? என ரோஷம் கொப்பளிக்க காலமே அவருக்குரியதை தன்னிச்சையாகவே ஏ.எல்.எஸ். மாமாவின் கைகளில் கொடுத்தது என்றுதான் சொல்வேன். மனிதர் வாழ்ந்து நிறைந்திருக்கின்றார்.

அன்னாருக்கு குழந்தைப்பேறில்லை என்ற பெரிய இழப்பின் வழியாக ஊரின் குழந்தைகள் அனைவரும் அவரை தங்களின் தாய் மாமன் போல உணர்ந்த அந்த அளப்பரிய கொடையை அன்னாருக்கு இறைவன் வழங்கியிருந்தான். குழந்தைகளை நேசிக்கும் எல்லாருக்கும் குழந்தை மனது வழங்கப்படுவதில்லை. எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் நடையிலும் உடையிலும் குழந்தையின் பீறிடலும் துள்ளலும் கலந்த மனிதர்.

தனது வாழ்வில் கிட்டாமல் போன விஷயங்களைப்பற்றி அன்னார் எப்போதும் குறைப்பட்டுக்கொண்டதே இல்லை. இளைஞர்களின் கிண்டலுக்கு சளைக்காமல் ஈடு கொடுத்த உற்சாக மனிதர்.

எழுத்து மேடை கட்டுரைக்காக குறிப்பு நூல் வாங்க அவர் வீட்டிற்கு போகலாம் என நினைத்திருந்த போது அவரே என் வீட்டைத் தேடி வந்து விட்டார். அன்று ஸுன்னத்தான நோன்பும் வைத்திருந்தார். ஜமாஅத் தொழுகைகளில் மிகவும் பேணுதலானவர்

உடனே அதை பதிவாக்குவதற்காக ஒரு ஒளிப்படம் எடுக்கப்பட்டது . அப்போது என் கணினியின் விசைப்பலகையில் அவர் கை வைத்திருந்தார். அந்த விசைப்பலகையின் மீதுதான் அவரின் நினைவுகளை தட்டிக் கொண்டிருக்கின்றேன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...சேவையின் மறுபக்கம் சந்தோஷமா சங்கடமா?
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 24 September 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44701

''நான் இறந்த பிறகு எனக்கு ஒரு தாஜ்மஹால் கட்ட வேண்டாம் நான் வாழும் காலத்தில் நிம்மதியாக வாழ ஒரு குடிசை கட்டி தாருங்கள்'' என்று ஒரு புது கவிதை சொல்கிறது.

ஒரு ஓட்டை ஒடிசலான அவர் வாழ்ந்த வீட்டை - இல்லை அவர் வீழ்ந்து கிடந்த வீட்டை நேற்றுதான் பார்த்தேன். இந்த வீட்டிலிருந்து ஒளி வீசிய வீட்டில் பூச்சி தன் சிறகுகளை அடித்து வெளியில் பறந்து திரிந்து பல இடங்களுக்கு பல இளைஞர்களுக்கு ஒளி கொடுத்திருக்கிறது வழி காட்டி இருக்கிறது என்பதை எண்ணியபோது வியப்பாக இருந்தது.

மாடி வீட்டு தோட்டத்தில் மல்லிகை மலரும் இந்த காலத்தில் தூசி படிந்த சுவர்களில் அவரது எழுத்து மல்லிகை மணம் பரப்பிக் கொண்டிருந்திருக்கிறது.

அவர்கள் எழுதிய ஆக்கங்களில் எனக்கு மிகவும் பிடித்தது

''சேவையின் மறுபக்கம் சந்தோஷமா சங்கடமா?''.

அவர்கள் ஜனாசாவை நல்லடக்ககம் செய்யுமுன் பளிச்சென்று ஒரு யோசனை வந்தது. மருமகன் ஸாலிஹ் இடம் கேட்டேன், மாமாவுக்கு ஒரு நினைவஞ்சலியாக இந்த கட்டுரையை மக்களுக்கு வழங்கலாம் என்றேன்.

நல்ல யோசனைதான் ஆனால் காலம் கடந்து விட்டதே என்று அவர் சொல்லாமல் இப்போதே அதை செய்வோம். ஒரு இளைஞனை என்னிடம் ஒப்படையுங்கள் என்றார்.

அருகில் எனது மகன்தான் நின்றான். அவரும் சம்மதிக்க உடனே 200 காப்பிகள் தயாராகின தாயிம் பள்ளியில் மாமாவின் நல்லடக்கம் நடை பெற்றுக் கொண்டிருந்தபோது மாமாவின் ''சேவையின் மறுபக்கம் சந்தோஷமா சங்கடமா?'' அங்கு கூடி இருந்தவர்களின் கரங்களில் தவழ்ந்தது.

ஆற அமர்ந்து படிக்க வேண்டிய கட்டுரை அது. அவரது சங்கதியும் அதில் உண்டு எல்லோரது வேலை தேடி சென்றவர்கள் சங்கதியும் அதில் உண்டு.

இந்த பணியை செய்த மருமகன் சாலிஹ் அவர்களுக்கும் எனது மகனுக்கும் மாமாவின் ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தவறிப் போனது. என்றாலும் ஒரு ஆக்கப்பூர்வமான வேலையை அவர்கள் செய்து மாமா அவர்களின் நினைவலைகள் எல்லோர் உள்ளத்திலும் பரவி விட அவர்கள் வழி வகுத்தார்கள்.

அந்த கட்டுரை கிடைக்காதவர்கள் MURSHID XEROX நிறுவனத்தில் அதற்கான கட்டணம் ஜஸ்ட் 5 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

ஷாளை பஷீர் அவர்கள் இங்கு குறிப்புட்டுள்ளது போல் ஒரு நதி தன்னை குளமாக சுருக்கி கொண்டது என்றாலும் அந்த நதியை ஓடவிடாமல் ஆங்காங்கே தடைகளை ஏற்படுத்திய களைகளை வளரவிட்டது நம் தானே ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சீறிப் பாய்ந்து செல்ல வேண்டிய தாமிரபரணி நீரை நாம் சரியாக பயன்படுத்தவும் இல்லை, தேக்கவும் இல்லை, தூர் வாரவும் இல்லை, அது வீணாக கடலில் கலந்தது என்று நாம் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம் அது தான் நிதர்சன உண்மை.

மூன்றெழுதில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்,
உள்ளம் என்றொரு ஊரிருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்

அந்த பெயர்தான்
A .L .S .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...காயல் மாநகரின் அடையாளங்களுள் ஒருவர்...
posted by: Sithy Lareefa (Chennai) on 25 September 2016
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44703

ஊர் நலன் மற்றும் சமூக நலன்களைப் பற்றி எப்போதும் சிந்தித்தும், செயலாற்றியும் வந்த வெள்ளந்தியான மனிதர் என்பதை அவர்களின் எழுத்துக்களின் வழி உணர முடிந்தது.

அல்லாஹ் அவர்களது நல்ல அமல்களை அங்கீகரித்து ஜன்னத்துல் ஃபிர்தெளவ்ஸ் என்னும் உயர்வான சுவனபதியிலே அவர்களை நிலை பெறச் செய்வானாக...! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அடைக்கலான் குருவி
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 25 September 2016
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44710

அஸ்ஸலாமு அலகைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

அறிவுத்தேடலின் இறக்கைபொருத்திய ஒரு அடைக்கலான்குருவி இப்படித்தான் வாழவேண்டுமென்று தேடவும்கற்றுத்தந்து கலம்பிடித்துவலம்வந்து வரலாற்றில் தன்னிறக்கைகளை தோரணமாகத்தொங்கவிட்டுவிட்டு வாழ்ந்துவிட்டு தன் இறக்கைகளைமடக்கிக்கொண்டு இறைவனிடம் அடைக்கலமாகிவிட்டது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஆசிரியர் கட்டுரையின்நாயகரைப்பற்றித்தந்துள்ள கருத்துப்பதிவில் ஒரு சிறிய மாற்றம்செய்யவிரும்புகிறேன்.

""அன்னாரின் மீது எனக்குள்ள விமர்சனம் என்னவென்றால் அவர்க்ளின் எழுத்து பல பத்தாண்டுகளுக்கு முந்திய நடை. அதை அன்னார் காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக நுண்கலையான ஓவியக்கலையில் அன்னார் மென்மேலும் வளர்ந்திருக்க வேண்டியவர். அதிலும் கூட தன்னை ஒரு சதுர மூலைக்குள் சுருக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஓடிச்செழித்திருக்க வேண்டிய பெரு நதியொன்று தன்னை குளத்திற்குள் ஒளித்துக்கொண்டது.""

குளங்களும்,ஏரிகளும்,ஆறுகளும் இன்னும் நதிகளும் ஏதாவது ஒருவறட்சிகாலத்தில் வெற்றிடமாகிவிடும் ஆனால் ஏ எல் எஸ் மாமா அவர்கள் தமது களஞ்சியங்களை அரும்பொக்கிஷமாகத்தந்துவிட்டு விடைபெற்றிருக்கிறார்கள் அந்தக்கூற்றின்படி

ஏ எல் எஸ் மாமா அவர்கள் ஒருகடல் அணுகிய வற்றாது ஊறிக்கொண்டிருக்கும் சுனை அவர்களின் களஞ்சியங்கள் .

வல்ல இறைவன் அன்னாரின் நல்லமல்களையுமேற்று மேலான சுவனபதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:... முதல் ஓவியர்.
posted by: சாளை:M.A.K முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி. (கோழிக்கோடு.) on 06 October 2016
IP: 106.*.*.* India | Comment Reference Number: 44772

முதல் ஓவியர் & எல்.எஸ்.மாமா மரணத்தினூடே என்னுள் எழுந்த சிந்தனைகள்.

ஏ.எல்.எஸ். மாமா என்றதும் நம் சமுதாயத்தின் குறைகளை அகற்றவும், நம் சமுதாய முன்னேற்ற திற்காகவும் நம் இணைய தளத்தில் எழுதிய ஆக்கங்களைத்தான் என் மனதின் ஒளி ஒவியத்தில் நான்காண்கின்றேன்.

தன் முதுமையான வயதில் மாமா எழுதிய அறிவுரை புகட்டும் எழுத்துக்களில் 18 வயது நிறம்பிய ஆரோக்யமான வாலிபன் உறக்க கூவினால் எப்படி கம்பீரமான ஒலியோசை வெளிப்படுமோ அதற்க்கு ஈடானா தரம் அவர்களின் ஆக்கங்களிள் காண முடிந்தது. உருவ ஒவியங்கள் அவர்கள் வரைவதில்லை என்று நான் கேள்விப்படும் போது அவர்களின் நிறைவான ஈமானை நமக்கு உணர்த்துகின்றது. வேலை வாய்ப்பு , இன்ன பிற சமுதாய நலன் சார்ந்த தகவல்களை சேகரித்து பள்ளிகளில் அறிவிப்பு பலகைகளில் பிறர் அறிய தொங்க விடுவது என்பது ஏ.எல் எஸ்.மாமா அவர்கள் சமூகத்தின் மேல் பொதுநலம் கொண்டவர்கள் என்பதை உணர்த்துகின்றது.

ஏ.எல்.எஸ்.மாமா, எஸ்.எம்.பி. மஹ்மூத் ஹுஸைன் மாமா, எஸ்.கே.மாமா போன்ற சான்றோர்களின் இழப்பென்பது நமதூரில் நடமாடிய நன்னறிவுப் புதையல்களின் பேரிழப்பு. நாம் இழந்த இவ்விழப்பின் வெற்றிடத்தை நாம் நிறப்ப வேண்டுமானால் அவர்களின் அறிவுக்கும், சுயநலமற்ற முற்றிலும் பொது நலம் மட்டுமே அவர்களுள் குடிகொள்ள முதல்மூல காரணமாக இருந்தவை அவர்கள் வாசித்த நூல்களே என்பதில் எல்லின் முனையளவும் சந்தேகம் இல்லா உண்மை. வருங்கால காயலில் இது போன்ற மாமாக்கள் உலா வரவேண்டும் என நினைப்பவர்கள் இவர்கள் படித்து பாதுகாத்த நூல்களையும், இவர்கள் படைத்த ஆக்கங்களையும் பொதுவுடமை ஆக்குவதன் மூலமே வருங்காலங்களில் இவர்கள் போன்ற பல மாமாக்களை உலா வரச் செய்து நம் காயலுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் பல பயன்கள் கிடைக்க ஏதுவாக அமையும்.

இம் மூன்று மாமாக்களில் மூன்றாமவதாக நான் குறிப்பிட்டிருக்கும் எஸ்.கே.மாமாவின் இரண்டாம் மகளை நான் மணமுடித்திருக்கும் காரணத்தால் எஸ்.கே.மாமாவோடு நெருங்கி உறவாடிய பாக்கியம் நிறைந்த அனுபவங்கள் எனக்குண்டு. என் அனுபவமின்மையால் சிறிது எதிரும் புதிருமாக தொடங்கிய எங்கள் உறவு நாளடைவில் அன்பாக மாறி இறுதியில் பால்ய நண்பர்களின் நட்பு போல் முற்றுப் பெற்றதென்பதும், ஒரு விசயத்திற்காக ஒருஉறவினரிடத்தில் என்னைப் பற்றிக் குறிப்பிடும் போது அவன் என் மகன் என்றுச் சொன்னதும் என் வாழ்வில் மறக்க முடியுதா பசுமையான நினைவுகள்.

என்னுள் புதைந்து, மறைந்திருந்த திறமைகளை அவர்களின் சாதாரணமான பேச்சுக்கள், எழுத்துக்கள், அவர்கள் வாசித்த புத்தங்கள், கலந்துரையாடல், பல சமயம் மாமாவோடு ஒன்றாய் அமர்ந்து தொலைக்காட்சி மூலமாக பார்த்தும், கேட்டும், கூடுதலாக தொலைநோக்கு பார்வையுடன் எனக்கு அவர்கள் தந்த விவரங்கள் போன்றவற்றின் மூலமே தோண்டி எடுத்து என் கண் முன்னே நிறுத்தினார்கள் என்றால் அது மிகையில்லா உண்மையே.

ஆக இம்மூன்று மாமாக்களின் பாவாபிழைகளை கருணையாளன் அல்லாஹ் மன்னித்து , இம்மேன்மக்கள் சமுதாயத்திற்க்காக செய்த சேவைகளையும், இன்ன பிற நல் அமல்களையும் ரப்பில் ஆலமீன் ஏற்றுக் கொள்வானாக! மண்றை மருமை வாழ்க்கையில் துயரங்கள் இல்லாமல் ஆக்கி ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் எனும் சுவன சோலைகளில் பிரவேசிக்கச் செய்வானாக! ஆமீன்.

கேரளமாநிலம்
கோழிக்கோட்டிலிருந்து
சாளை:M.A.K.முஹம்மத் இப்றாஹீம் ஸுஃபி.
10:06:2016.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved