Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:00:08 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 204
#KOTWEM204
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 5, 2016
என் நெஞ்சோரத்து தேவதைகள்!

இந்த பக்கம் 4084 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

செப்டம்பர் 5 இன்று ஆசிரியர் தினம்...

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்ற முது மொழியை தமிழர்கள் எவ்வாறு உள்வாங்கிக் கொண்டுள்ளனர் என்ற சர்ச்சைக்குள் நாம் போக வேண்டாம். ஆனால், "அவனே எழுதுகோலைக் கொண்டு (எழுத) கற்றுக்கொடுத்தான்" (96:4) என்கிறது இறை வசனம்... இப்போது சொல்லுங்கள்..! எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது உண்மைதானே...!

அவன்தான் தனது பிரதிநிதிகளாய்... கற்பித்தல் பணி செய்பவர்களாய்... இறைத்தூதர்களை அனுப்பினான். அதனால்தான் ஆசிரியப்பணியை அறப்பணி (noble profession) என்கிறோம்.

கற்றலின் முழுமையான நோக்கமே கற்பித்தலில்தான் என அழுத்தமாக கூறுகிறது இஸ்லாம்.

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு என்று கூறுவார்கள். ஆனால் கற்பிப்பவர்களுக்கோ சென்ற இடமெல்லாம் பிள்ளைகள்... என்பதை சொன்னால் புரியாது... உணர்ந்தால் மட்டுமே அந்த உன்னதத் தருணங்களைக் கொண்டாட முடியும். எங்கு சென்றாலும் எங்கிருந்தேனும் ஓரிரண்டு பேர் ' உஸ்தாதா' என்று ஓடி வந்து உரையாடும் போது, " எனது மாணவர்கள்தான் நான் சேர்த்து வைத்த சொத்து" எனப் பெருமிதம் கொள்ளும் நேரம் ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தருணங்கள். வாழும் காலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிள்ளைகளை தன் பிள்ளைகளென சொந்தம் கொண்டாட உரிமைப் பெற்ற ஆசிரியர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான்.

ஏறத்தாழ பதினேழு வருடங்கள் ஆசிரியப்பணியில்.... கண்டிப்பும், கறாருமான ஓர் ஆசிரியையாக இருந்ததை விட ஒரு சகோதரியாகவும், ஒரு தாயாகவும் இருப்பதையே மிகவும் விரும்பியதுண்டு... பிள்ளைகள் மனதில் எப்படியாவது புகுந்து விட வேண்டும் அப்போதுதான் நமது பாடங்களை அவர்கள் விரும்பிப் பயிலுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்... ஹேண்ட் பேக் முழுவதும் குட்டிக் குட்டி பரிசுப் பொருட்களுடனேயே வகுப்பறைக்குள் நுழைவதுண்டு.

ஒரு சிறந்த ஆசிரியையாக (ideal teacher) இருக்க வேண்டும் என்ற உந்துதலில் விளைந்த எதிர்பார்ப்புகள் பல சமயங்களில் ஏமாற்றங்களாகி விடும்போது ஏற்படும் மன உளைச்சல்களை ஓர் ஆசிரியையாக பல சமயங்களில் அனுபவித்ததும் உண்டு... ஆனால் நான் மாணவியாக இருந்த காலங்களில் எனது ஆசிரியைகளுக்கும் அதே மனோநிலைதானே இருந்திருக்கும் என்பதை உணர்த்திய அனுபங்கள் அவை.

பெற்றோருக்கடுத்து குழந்தைகளின் ரோல் மாடல் ஆசிரியர்கள்தான்... அப்படி ஆசிரியப்பணி மீது எனக்கு அளவு கடந்த ஆசையையும், அர்ப்பணிப்பையும் ஊட்டிய எனது ஆசிரியைகளைப் பற்றிய என் இதயத்துப் பதிவுகளை இந்த இணையத்தில் ஏற்றி அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு உரித்தாக்கும் நன்றியாகவே இந்த ஆக்கம்.

அப்போது அது சுபைதா நடுநிலைப் பள்ளி... இரண்டரை வயதில் நர்ஸரியில் காலடி வைத்தது முதல் பத்தாம் வகுப்பு முடியும் வரையிலான பன்னிரண்டு வருட காலங்களும் சிறகு முளைத்த சிறு பறவைகளாய் கவலையற்றுத் திரிந்த காலங்கள்.... துள்ளி ஓடும் புள்ளி மான்களாய் சுறுசுறுப்பாய்ச் சுற்றிச் சுழன்ற நாட்கள்... நினைத்து நினைத்துப் பார்த்தாலும் சோகத்தின் நிழல் கூட காண முடியாத பட்டாம்பூச்சி பருவங்கள்... அப்போது வேதனையாய்த் தெரிந்த சில நிகழ்வுகளும் கூட இப்போது வேடிக்கையாய்த்தான் தெரிகிறது. எல்லோருடைய ஆரம்பப்பள்ளி நாட்களிலும் ஒரு மல்லிகா டீச்சர் கண்டிப்பாக இருப்பார்கள் போலும்... எனக்கும் இருந்தார்கள்... சிரிக்கும் கண்களும்... கணீர் குரலுமாய் எனக்கு எழுத்தறிவித்த மல்லிகா டீச்சரின் பாசம் இன்றும் தொடர்கிறது.

பெய்ட் பைப்பர் ஆஃப் ஹேம்லின் (peid piper of Hamelin) ரைம்ஸுக்காக ஆளுக்கொரு பீப்பியை கையில் வைத்துக் கொண்டு மரியம் பீவி டீச்சர் பின்னால் ஸ்கூல் கிரவுண்டை சுற்றிச் சுற்றி வந்த குட்டீஸ்களாய் இருந்ததும்...

வெள்ளை முடியும், கோடாரிக் கொண்டையும், வட்ட முகமும், அதில் திருநீறு மட்டுமாய் என கண்ணாடி அம்மா ஒன்றாம் வகுப்பு எடுத்ததும்...

அ...ஆ... என்று பள்ளிக்கு வெளியேவும் கம்பீரமாய் ஒலிக்கும் நங்கையார் டீச்சரின் குரலும்..

அமைதியாக ஆங்கிலப் பாடம் எடுக்கும் விக்டோரியா டீச்சரின் முகமும்...

பள்ளி நேரம் முடிந்தப் பிறகும் தினமும் ஒரு மணி நேரம் எல்லோரையும் எக்ஸ்ட்ராவாக இருக்க வைத்து வாய்ப்பாடு மனப்பாடம் பண்ண வைத்த நாலாம் வகுப்பின் ரோஸரி டீச்சரும்...

என்னை தன் பிள்ளை போலவே நினைத்து பாசம் காட்டிய ஐந்தாம் வகுப்பின் மஹ்மூதா டீச்சர்...

என்று அனைவருடனும் இப்போதும் நான் கைகோர்த்து நடப்பது போன்றதொரு பிரம்மையாய்... என் மனதில் ஆழப்பதிந்த ஆளுமைகள்.... இது பிரைமரி ஸ்கூல்...

ஹைஸ்கூலில் நடந்ததோ நேற்று நடந்தது போலவே இன்றும் பசுமையாய் நெஞ்சில் நிறைந்திருக்கிறது...

"தலைவி...! அலுவலகத்தில் இருந்து அழிப்பான் எடுத்து வா...!" என்று அரச தோரணையில் ஒலிக்கும் பீவி டீச்சரின் குரலுக்கும் தோற்றத்திற்கும் சம்பந்தமே இருக்காது. அட்சர சுத்தமான அவர்களின் தமிழுக்குச் சமமாக ஆங்கிலமும் பொளந்துக் கட்டி பேசக் கூடியவர்கள்... தமிழ் ஆசிரியையான பீவி டீச்சர் மிகவும் கண்டிப்பானவர்கள்... கோபம் வந்தால் அடி பின்னியெடுப்பார்கள் என்றாலும்... "கயல் போன்ற கண்கள்" என்ற வர்ணனைகளில் அவர்கள் காட்டும் அழகும், அபிநயமும் தமிழ் வகுப்புகளில் எங்களைக் கட்டிப்போட்டது உண்மை. இருந்தாலும் மதிப்பெண்கள் வழங்குவதில் டீச்சர் ரொம்பவே கஞ்சம்...

" நீங்கள் ஒருவருக்கொருவர் பட்டப் பெயர் கூறி அழைக்க வேண்டாம்." என்ற வசனத்தை அறிந்த போது நினைவில் வந்தது அந்த அறியாத வயதில் பீவி டீச்சருக்கு நாங்கள் வைத்த பட்டப் பெயர்தான்... அதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்க இன்றளவும் கடமைப்பட்டவர்கள் நாங்கள்... ஏனென்றால் மன்னிப்பளிக்க வேண்டிய பீவி டீச்சர் இன்று எங்களுடன் இல்லை... இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எவ்வளவுதான் சேட்டைகள் செய்தாலும், மூக்கைத் தேய்த்துக் கொண்டே, "நாத்தக் கழுதைகளா...!" என்று செல்லமாகத் திட்டுவதைத் தாண்டி வேறெதுவும் செய்யத் தெரியாத ஆறாம் வகுப்பின் ரஹ்மா பீவி டீச்சர்... இப்போது பார்த்தாலும் வாஞ்சையோடு கையைப் பிடித்து நலம் விசாரிப்பார்கள்.

"ஒன்றுமில்லை" என்ற சொல்லை யார் வாயிலிருந்து கேட்க நேர்ந்தாலும்... மனதில் வந்து போகிறது... ஏழாம் வகுப்பில் காருண்யா டீச்சர் நடத்திய ஆங்கிலக் கதையொன்றும், அதில் வரும் "Nothing... Will come of Nothing " என்ற வாசகமும்.

எங்க உம்மாக்களுக்கும் டீச்சராக இருந்த எலிசபத் டீச்சரும், கே.நூர்ஜஹான் டீச்சரும்... ஒரு நாள் கூட எங்களை எங்களுடைய பெயர்கள் சொல்லி கூப்பிட்டதில்லை... எப்போதுமே எங்கள் உம்மாக்களின் பெயர்தான் எங்களுக்கும்...

எட்டாப்பம்மாவின் அல்ஜீப்ராவும், ஜவ்வு மிட்டாயும், லாங் செயினும், பன் கொண்டையும், நிரந்தரமாய் மனதில் ஒட்டிக் கொண்டவைகள்...

மெஹர்பானு டீச்சர் என்றாலே மறக்காமல் நினைவுக்கு வருவது அவங்க சொன்ன ஒரு விஷயம்... "ஏண்டி...! காலங்கார்த்தால எழுந்து அவசர... அவசரமாய் சமையல் பண்ணி, பிள்ளைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி, வீட்டுக்காரரை வேலைக்கு அனுப்பிட்டு, வெந்தத தின்னுப்புட்டு வேக வேகமா ஸ்கூலுக்கு நா ஓடியாறேன்... உங்க ஊர் பொம்பளைங்க அப்பத்தான் சாவகாசமா வீட்டுப் படிகள்ல உக்காந்துட்டு... பேசி... பேசி... கீர ஆஞ்சிகிட்டும், வெங்காயம் உரிச்சிகிட்டும் இருக்காங்க... சோம்பேறிங்கடி நீங்க..." என்று சொன்னது கீரையையும், வெங்காயத்தையும் பார்க்கும் போதெல்லாம் மனதில் ஓடுகிறது.

"எப்பூ... இந்தக் கணக்க கொஞ்சம் போர்டுல எழுதிப் போட்டுடா...! ராசாத்தி...! என்று கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிப் பேசும் பத்மா டீச்சருக்கு வெள்ளக் கலர்னா அவ்வளவு இஷ்டம்... அவங்களுக்கு என்னோட சீனியர்ஸ் வச்சிருந்த செல்லப் பெயர் Black Beauty...

வாயத் தொறந்தாலே தஸ்...புஸ்ன்னு ஆங்கிலம்தான் T.V.கண்ணாடி நூர்ஜஹான் டீச்சரின் டிரேட் மார்க்... (பெரிய பிரேம் கண்ணாடி போட்டிருப்பாங்க... இரண்டு நூர்ஜஹான் டீச்சர் இருந்ததாலே... இவங்களுக்கு இந்த அடையாளம்) எனது ஆறாம் வகுப்பிலிருந்தே டீச்சர் கிட்டே டியூஷன் படிச்ச எனக்கு... அப்போதே ஆங்கில இலக்கணத்தை அக்கு வேறு ஆணி வேறாய் மண்டைக்குள் ஏற்றியவர்கள்... ஆங்கிலத்தின் மீது பெரிதான ஈர்ப்பும், கான்ஃபிடன்ஸும் ஏற்பட டீச்சர்தான் முக்கியக் காரணம்... இன்றளவும் ஆங்கிலப் புத்தகங்களை சிரமமின்றி வாசிக்கவும்... இந்த நகர வாழ்க்கையில் திருவிழாவில் தொலைந்த குழந்தை போல் பக்.. பக்...குன்னு முழிக்காம ஓரளவு சமாளித்து நன்றாகப் பேசத் தெரிந்தது போல நடிக்கவும் முடியுதுன்னா அதுக்குக் காரணம் நூர்ஜஹான் டீச்சர்தான்...

அவங்க மட்டுமில்ல... என்னோட மோஸ்ட் ஃபவரிட் ஜெஸிமா டீச்சரும்தான்... பப்ளிக் எக்ஸாம்ல ஆங்கிலத்துல நான் ஸ்டேட் லெவல் மார்க் வாங்க வேண்டுமென்று என் தகுதிக்கு மீறி என் மீது நம்பிக்கை வைத்தவர்கள்.... ஸாரி மேம்...! உங்க ஆசையை நிறைவேற்ற நான் இன்னும் அதிகமா உழைச்சிருக்கனும்...

நீண்ட பின்னல்... ஒற்றை ரோஜா... கண்ணாடி... வாய் நிறைய சிரிப்பு... ஸ்டைல்... என்று டிபிகல் டீச்சர் தோற்றத்தில் இருப்பார்கள். தூத்துக்குடியில் இருந்து தினமும் காலைல எட்டரை மணிக்கே ஸ்பெஷல் கிளாஸுக்காக டாண்...ணு தினமும் வந்துடுவாங்க... ஸ்கூல் பெல் அடிச்சா வீட்டில் கேட்கும் தூரத்தில் நாங்க இருந்தாலும்... ஆடி அசைஞ்சு லேட்டா போய் நின்னு திட்டு வாங்குவோம்...

திட்டெல்லாம் கிளாஸ் ரூமுக்குள்ளேதான்.... வெளியிலே வந்துட்டா ஃபிரண்ட் போலத்தான் பழகுவாங்க... அவர்களின் முதுகுக்குப் பின்னால் நாங்கள் செய்யும் சேட்டைகள் அனைத்தையும் கண்டும் காணாதது போல ஓர் ஒற்றைப் புன்னகையுடன் கடந்து சென்று விடுவார்கள். என்னுடைய ஆக்கங்கள் வெளி வந்த உடனே தொலைபேசியில் அழைத்து பேசிவிடுவது என்று என்னில் அக்கறைக் கொண்டவர்கள்...

அடுத்து...எங்க தமிழ் அம்மா... சரஸ்வதி டீச்சர்... எப்பவுமே எங்களுக்கு ஸ்பெஷல்... சிரிப்பும், சினேகமுமாய் தமிழ் வகுப்பு என்றாலே எங்களுக்கு கொண்டாட்டம்தான்... அவர்கள் அடித்தாலும் சிரிப்போம்... தமிழ் இலக்கணத்துல மார்க் குறையும் போதெல்லாம் கண்டிக்கும் அவர்களிடம், "இலக்கணம் படிக்கவில்ல... தலக்கனமும் எனக்கு இல்ல..." என்று கலாய்க்கும் அளவுக்கு அவங்களோட அவ்வளவு நெருக்கம்... சிரித்துக் கொண்டே மண்டையிலே நங்...ண்டு குட்டு விழும்.

2007-2008ஆம் வருடங்களில் ஜெஸிமா டீச்சர், பத்மா டீச்சர், சரஸ்வதி டீச்சர், நூர்ஜஹான் டீச்சர்... இவங்களோடல்லாம் நானும் ஓர் ஆசிரியையாக எனது பள்ளியிலேயே பணியாற்றியது என் வாழ்நாளின் பொக்கிஷத் தருணங்கள்.

எனக்கு பாடம் எடுக்கவில்லையென்றாலும் எப்போதுமே அன்புடன் பழகும் பீர் ஃபாத்திமா டீச்சர் (தற்போது அவங்கதான் எச்.எம்) டிபிகல் நம்ம ஊர் தமிழே பேசுவாங்க.... கம்பீரத்தை உடல் மொழியில் கையாளத் தெரியாத எளிய மனுஷி... பக்கத்து வீட்டு சாச்சி, பெரிமா போல ஒரு தோற்றமும், பேச்சும் அவங்க ஸ்பெஷல்.

லேட்டா ஸ்கூலுக்கு வரும் பிள்ளைகளை பட்டும் படாமலும் அடித்து உள்ளே அனுப்பும் கேம்ஸ் டீச்சர்... விளையாடி முடித்தவுடன் தண்ணீர் குடிக்கவே விட மாட்டாங்க... "மூச்சு வாங்கி இளைக்கும் போது தண்ணீ குடிக்கக் கூடாது புள்ள...." என்பார்கள்.

எங்க எச்.எம். மெஹ்பூபுன்னிஸா மேம் பத்தி சொல்லலன்னா இந்த ஆக்கம் நிறைவு பெறாது... சென்ற வருட ஹஜ்ஜுப் பெருநாளின் போது சென்னையில் ஒரு திடலில் தொழ சென்றிருந்த போது, தொழுகை முடிந்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்து நலம் விசாரித்த அவர்களது பாசம்... என்னை தன் உறவினர்களிடம் ' என்னோட ஸ்டூடண்ட்" என்று அறிமுகப்படுத்தியது நெகிழ வைத்தது.

ஸ்டிரிக்ட் டீச்சர் என்று பேர் பெற்ற எச்.எம்.தான்... நாங்கள் ஸ்கூல் கிரவுண்டில் வெயில்ல உட்கார்ந்திருந்தா... "ஏய்...! வெயில்ல உக்காராதே...! நீர் கடுப்பு வரும் என்று அக்கறையாய் சத்தம் போடுவாங்க....

ஸ்டிரிக்ட் ஆன எச்.எம்.க்குள்ளே இப்படி ஒரு தாயன்பா என்பது இப்போதுதான் புரிகிறது.

வரலாறுகள் புரட்டிச் சொல்லித் தந்த ஒளரங்கசீப்பின் வாழ்க்கையை உண்மையாக இனம் காட்டியது எச்.எம்.தான்!

பர்சனலாக எனக்கும் அவர்களுக்குமான அனுபவம் ஒன்று உண்டு... என் மீது கோபமாக இருக்கும் நேரங்களில் " லீடர்...! என்றழைத்து வேலை ஏவுவார்கள்... கோபமற்ற நேரங்களில் பெயர் சொல்லி அழைப்பார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் நபியின் மீது சற்று வருத்தமாக இருக்கும் நேரங்களில்

"இப்ராகீமின் இறைவன் மீது ஆணையாக...!" என்றும் சந்தோஷமான நேரங்களில்... "முஹம்மதின் இறைவன் மீது ஆணையாக...!" என்றும் கூறுவார்கள் என்ற ஹதீஸை படிக்கும் போதெல்லாம் எனக்கு இந்தச் சம்பவம் மறக்காமல் நினைவுக்கு வந்து விடும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போனால் பசுமை நிறைந்த அந்த நினைவுகளைக் கொண்டு சுவாரஸ்யமாய் ஒரு புத்தகமும் எழுதி முடித்து விடலாம்.

ஸ்கூல் டீச்சர்ஸ் மட்டும்தான் என்றில்லை... குர்ஆன் ஓதக் கற்றுத் தந்த உம்மு ஹபீபா லெப்பை, செய்து லெப்பை... மத்ரஸாவின் ஆசிரியப் பெருமக்கள்... மற்றும் ஆசிரியைகள்.. என மறுமையின் கல்வியை வழங்கிய அவர்களும் காலம் முழுதும் நன்றிக்குரித்தானவர்கள்.

உறவுகளைச் சொல்லித் தந்தவள் என் அன்னை எனில், உலகத்தை உணர்த்திய கண்ணாடி என் ஆசிரிய அன்னையர்கள்... அவர்களது கண்களின் வழியேதான் நாங்கள் உலகை உணர்ந்தோம்... அவர்கள் எண்ணங்களின் உயர்வில்தான் நாங்கள் உருவாக்கப்பட்டோம்...

எங்கள் அன்னையருடன் நாங்கள் இருந்ததோ உண்ணும் நேரமும், உறங்கும் நேரமும் மட்டுமே...

நாங்கள் விழித்திருக்கும் நேரமெல்லாம் எங்களை விழிப்புணர்வுடன் வைத்தவர்கள் எம் ஆசிரியர்கள்... ஒட்டு மொத்தமாய் நாங்கள் படுத்திய பாடுகளை சகித்துக் கொண்டவர்கள்...

ஏணியாய் நின்று எங்களை உயரத்தில் ஏற்றி அழகு பார்த்த அவர்கள் எங்கள் எதிர்காலத்தின் வருமானத்தை என்றுமே எதிர்பார்த்ததில்லை...

தோணியாய் இருந்து எம்மை கரை சேர்த்திட கடுமையாய் உழைத்த அவர்கள் தங்கள் உழைப்பின் பலனை ஒருபோதும் கணக்குப் பார்த்ததில்லை.. அவர்களின் அன்புக் கரங்களால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் நாங்கள்...

எங்கள் பிரார்த்தனைகளில் எம் பெற்றோர்களுக்கிணையாய் அவர்கள் அனைவருக்கும் ஓரிடம் நிரந்தரமாய் உண்டு... இன்ஷா அல்லாஹ்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) on 05 September 2016
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44588

"அஸ்ஸலாமு அலைக்கும்."

மாஷா அல்லாஹ்!!!!

கட்டுரை மிகவும் அருமையாகவும், மனதிற்கு இதமாகவும் இருந்தது.

உண்மையில், படிக்கும் போது என் கண்கள் கலங்கி விட்டன.

வாழ்த்துக்கள் சகோதரி தொடரட்டும்.

அன்புடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Mirshadhunnisa (Adiyakkamangalam ) on 05 September 2016
IP: 103.*.*.* | Comment Reference Number: 44589

மாஷாஅல்லாஹ், அருமையான கட்டுரை, கட்டுரையின் ஆரம்பப்பகுதியிலேயே நான் ஒன்றிப்போய் விட்டேன். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான், விளக்கம் -அருமை.

கட்டுரையின் ஆசிரியரின்,தம் ஆசிரியைகள் பற்றிய நினைவலைகள் பிரமிக்க வைக்கிறது.கூடவே சிந்திக்கவும் வைக்கிறது.

இன்றைய காலத்தில், ஆசிரியர் -மாணவர் உறவு பற்றிய கவலையே அது.ஆசிரியை மீதான மதிப்பீட்டு குறைவு இறுதியில் மாணவரின் மதிப்பெண்ணிலும் குறைவை ஏற்படுத்தும் என்பதால் பெற்றோர்கள், இது விஷயத்தில், பிள்ளைகளுக்கு சரியான ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்பதை இக்கட்டுரை எனக்கு உணர்த்துவதாக எண்ணுகிறேன்.

மேலும், கல்வியை கவலையுடன் பார்க்காமல்,மனமகிழ்வுடன் அணுகும் போக்கு மாணவர்களிடம் வர,தம்முடைய பங்களிப்பை அனைவரும் ஆற்றவர வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: S.M.D.SHAJAHAN (DAMMAM) on 05 September 2016
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44590

முதன்முதலில் தமிழின் தொடக்கமான ‘அ’ போடச் சொல்லித் தந்த அப்பா, அம்மாதான் நம்முடைய முதல் ஆசிரியர்கள். பழக்கமே இல்லாத முதல் நாள் பள்ளிக்கூடத்தில், அழும் குழந்தையை அரவணைப்போடு, இனிப்புக் கொடுத்து கல்வி போதிக்க அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர்.

கனிவும், கண்டிப்பும், அரவணைப்பும், புதிது புதிதாகக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் உற்சாகமும்தான், இன்று அப்துல்கலாம், ரகுராம் ராஜன், மயில்சாமி அண்ணாத்துரை என்று எத்தனையோ அறிஞர்களை நம்மிடையே உருவாக்கித் தந்திருக்கிறது.

கைப்பிடித்து எப்படி நடக்க வேண்டும் என்பது தொடங்கி, கையெழுத்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுவரை நம்மை செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்.பத்தில் எட்டு பேருக்காவது அடிக்கடி ஆசிரியர் வீட்டுச் சாப்பாடு கிடைத்திருக்கும். இன்றும் முகத்தில் கண்டிப்பையும், உள்ளத்தில் அன்பையும் வைத்துக் கொண்டு, கையில் பிரம்புடன் மாணவர்களை விரட்டி, விரட்டிப் படிக்க வைக்கும் நல்லாசிரியர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.

22 வருடங்களாக ஆசிரியர் பணி செய்து, தனக்கென்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் வறுமையில் வாடும் ஆசிரியருக்கு, தன்னுடைய மாணவன் இன்று கம்பீரமான, கெளரவமான பதவியில் இருக்கின்றான் என்கிற ஒரு தகவல் போதும்....அத்தனை பசியிலும் அவர் முகத்தில் பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்த!

நம்முடைய உள்ளார்ந்த அறிவாற்றலைக் கண்டறிந்து ’இதுதான் உனக்கு சரியான பாதை’ என்று வழிகாட்டிய ஆசிரியர்கள்தான் இன்று நம்மில் எத்தனையோ பேர் அவரவருக்கு விருப்பமான துறைகளில், தகுதியான வேலையில் அமரக் காரணம்.

தமிழையும், கணிதத்தையும், அறிவியலையும் ஆணிவேரில் இருந்து ஆசிரியர்கள் கற்றுத் தந்திருக்காவிட்டால், இங்கு விஞ்ஞானிகளும், கணிதவியலாளர்களும், மென்பொருள் வல்லுனர்களும், பத்திரிக்கையாளர்களும், எழுத்தாளர்களும் இல்லாமலேயே போயிருப்பார்கள்.

எத்தனை மாணவர்கள் இருந்தாலும், அத்தனைப் பேரையும் தான் பெற்ற பிள்ளைகளாய் நினைத்து அறிவூட்டி வளர்த்த எல்லா ஆசிரியர்களுமே கொண்டாடப்பட வேண்டிய ‘நல்லாசிரியர்கள்’தான்.

உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக ஏதோ ஒரு ஆசிரியர் உந்துதலாய், உத்வேகமாய் இருந்திருப்பார்கள். இந்த ஆசிரியர் தினத்தில் அவர்களை எப்பாடு பட்டாவது தேடிக் கண்டறிந்து, ஒரு வாழ்த்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்நாள் பரிசாய் இருக்கும். ஏற்றிவிட்ட ஏணிப் படிகளுக்கு காணிக்கை செலுத்தும் நாள் இன்று!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: mohamedyounus (Dubai) on 05 September 2016
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44591

நான் சென்ட்ரல் மேல் நிலைப்பள்ளியில் ஆயுள் கைதி (அதாவது குட்டியாப்பு முதல் +2 வரை அங்குதான்- இடையில் எங்கும் செல்லவில்லை)

அன்று பள்ளி என்றாலே நன்றாக படிக்கும் மாணவர் உட்பட அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் கசப்புதான். மூன்றாம் வகுப்பு வரை இரண்டு மூன்று புத்தகத்தை துணி பையில் எடுத்து கொண்டு செல்லும்போது ஏதோ உம்மாவை விட்டு நிரந்தரமாக பிரிந்து போகிறோமோ என்ற உணர்வுடன் ஒரு விதமான அழுகை முட்டி கொண்டு வரும். பள்ளி சென்றவுடன் நின்று விடும். இப்போதுதான் எனக்கு வயிறு வலிக்கிறது.. பள்ளி செல்ல மாட்டேன் என்று ஆடம் பிடித்த நாட்கள் நிறைய உண்டு. ஆண்டு விடுமுறை வரட்டும் உன்னை ஆந்திராவிற்கு கூட்டி செல்கிறேன் என்ற பசப்பு வார்த்தைகள் எல்லாம் காதில் விழாத காலம் அது.

டியூஷனில் மின்சாரம் போகாத என்றும், அடை மழை பெய்து பள்ளி கூடம் விடுமுறை விட மாட்டார்களா என்று ஏங்கிய நாட்கள் அவை. சிறுதுளி தான் மழை பெய்து இருக்கும்.. ஆனால் இரண்டு மூன்று நாட்களுக்கு கடுமையான மழை இருக்கிறதாமே என்று கூறி நாங்களாகவே" ரமணன்" ஆகிய நாட்களும் உண்டு. ஆண்டு விடுமுறை வந்துவிட்டால் ஒவ்வொருவரும் விடுமுறை செல்லும் இடத்தை கூறி அங்கலாய்ப்பதும், ரயிலில் டிக்கட் எடுப்பதற்காக கன்செஸ்ஸன் பாமிற்கு பள்ளி அலுவலகம் செல்வதும்... மிக சுவாரஸ்யமானவை...

ஆனால் இவ்வளவு அழுகையுடன் பள்ளிக்கு சென்ற அந்த நாட்கள் இன்று மிக இனிதாக நினைவு கூற தக்கவை.. ஆனால் இதற்கு மாறாக இன்று அழுகைகள் எல்லாம் இல்லை..சுற்றி வர சலுகைகள்..

வண்ண வண்ண உடையில் யூனிபார்ம், வியாபாரிகள் வைத்து இருக்கும் சூட்கேஸ் போன்று பைகள், அழகான சூக்கள், இரண்டு மணியோடு முடிந்து விடும் பள்ளி, வீட்டு வாயிலில் கூட்டி போக பேருந்துகள், ஏசி அறைகள், தின்பண்டங்கள், விளையாட்டும் ஒரு பாடமான போன்ற இன்றைய கல்வி முறைகள்...

இவ்வளவு இருந்தும் இன்றைய மாணவர்கள் இந்த நாட்களை நம்மை போன்று இனிதாக நினைவு கூறுவார்களா என்றால் இல்லை..

ஏன்?

அவ்வளவு கல்வி சுமை, பாட சுமை, போட்டி தேர்வுகள், பெற்றோர்களால் திணிக்க்கப்படும் வகுப்புகள், 20 வருடங்கள் கழித்து எழுதப்போகும் போட்டி தேர்வுக்கு இன்றைய அவர்களை தயார்படுத்திடும் நெருக்கடிகள்.. வீட்டிற்கு சென்றும் படிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்களுக்கு பள்ளிகளால் வைக்கப்படும் தேர்வுகள், ஒரே வீட்டிலேயே காணப்படும் குழந்தைகளுக்கு இடையேயான ஒப்பீடல்...

எப்படி அவர்களை இந்த நாட்களை பின்னாட்களில் அசை போட வைக்கும் ?

ஒரு நாள் லீவு என்றாலே சிறகடித்து பரந்த அந்த நாட்கள்...

இன்று விடுமுறையில் தாய் தந்தை கூப்பிட்டாலும் எனக்கு ப்ரொஜெக்ட், ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கிறது என்று தட்டிக்கழிக்கும் இன்றைய நிலை.

ஒன்று தெரியுமா? இதனால் பிள்ளைகளுக்கு மட்டும் மனசோர்வு, பதட்டம் ஏற்படுவதும் இல்லை... பெற்றோர்களுக்கும்தான்.

இத்தகைய சிக்கல்களால் "குழந்தைகள் மன நல மருத்துவர்கள்" பெருகி விட்டார்கள். " குழந்தை மன நல மருத்துவம்" என்ற ஒரு பிரிவும் சென்னை மருத்துவ பல்கலை கழகத்தில் துடைங்கப்பட்டு இருக்கிறதாம்.

ஒன்றை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்... ஒரு சிறிய கண்டிப்புடன் அவர்களுக்கு இறைவன் வழங்கிய தனி திறமையை புரிந்து கொண்டு அதை மெருகேற்றி அவர்களை சிறைப்பட செய்வதற்காக வளர்க்கப்படும் குழந்தைகளே பின்னாளில் சிறந்து வளர்க்கிறார்கள்..

இது இன்று வரை நிலைத்து நிற்கும் உண்மை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. HAPPY TEACHERS DAY
posted by: Shameema (சீனா) on 05 September 2016
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 44592

ஆசிரியர், மாணவர்களின் உறவு சிதைந்திருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் அவர்களின் உறவு எவ்வளவு உயிப்ர்புடன் இருந்தது என்பதை கண்முன் கொண்டு வந்து நிறுத்திகிறது உங்கள் கட்டுரை.

உங்களது அனுபவங்கள் என்னுடைய பள்ளி காலத்தை நினைவுபடுத்திகிறது. அதே உறவு இந்த தலைமுறையிலும் தொடர்ந்தால் கல்வி இன்னும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து மிகச்சிறப்பாக அமையும்.

மாணவர்களுடைய பண்பு நலன்களும், ஒழுக்கங்களும் கூட மிகச்சிறப்பாக அமையும் என்பதை உணர முடிகிறது. மாஷா அல்லாஹ்! அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6.
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 05 September 2016
IP: 37.*.*.* | Comment Reference Number: 44593

அஸ்ஸலாமு லைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக

குழந்தைப்பருவத்திலிருந்து வாலிபப்பருவமெய்தியபின்னும் மழையோ,வெயிலோ,பனியோ வீடுவிட்டால் அறிவைத்தேடி ஒதுங்குமிடம் பள்ளிகல்லூரிகளாகும் அவைபன்முக அறிவுதரும் ஒருசரணாலயம் ஒலியின்வழியில் பிறப்பதுமொழி அந்த மொழியின்வழியை பெரும்பாலும் ஒலியாலும் விழியாலும் அறியமுடிகிறது அப்படி அறிய மக்களுக்கு பொக்கிஷமாய் அமைவதுதான் கல்விக்கேந்திரமெனும்சோலை

அந்தச்சோலையில் ஆலமரங்களாக,விழுதுகளாக ஆசிரிய,ஆசிரியைகள் கல்விக்கொடையாக அவர்கள்வழங்கும்நிழல் பறக்கக்கற்று பறைவைகளாகமரத்தின்மீது அமர்வதும், குசும்புச்செயல்களுடன் விழுதுகளைப்பிடித்துத்தொங்குவதும் மாணவமாணவியர்களின் அணுகுமுறையிலிருக்கிறது கொஞ்சம்கொஞ்சமாக குயில்களாக கூவக்கற்றுத்தேர்ந்து சிறகடித்துப்பறக்கிறோம் அப்படிக்குயிலாக்கப்பறந்த நாம் நமக்கு காகங்களாக இருந்து தாகம்தீர்த்த குருக்களை நினைவுகூர்கிறோமா அந்த அறிவுத்தடாகங்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்திருக்கிறோம் தொப்பூழ்க்கொடி அறுந்தபின்னும் தாய்மைஉறவுமாறாமல் நிலைக்கிறது ஆனால் ஆயிரக்கணக்கில் உறவுகள்கண்டஆசிரியமாணவவுறவுகளில் ஏனோ முற்றிலுமாக அறுந்துவிடுகிறது ஓரளவிற்காவது நிலைத்திருக்கவேண்டுமல்லவா இன்னும் நம்மில் இரண்டுதலைமுறைகள் கடந்தபின்னும் அந்தமரத்தின் விழுதுக்கும் நிழலுக்கும் இன்னும்நாம் மறக்கமுடியாத எண்ணத்தால் ஏங்கத்தான் செய்கிறோம்

அதற்கு இந்தக்கட்டுரை ஒருமறுஆய்வு வெறும்கல்லாயிருந்த நம்மைநாமே உரசிக்கொள்ள நல்உரைகல்லாக மாற்றிய தம்மைக்கரைத்து நம்மைத்தேற்றியவர்கள் ஆசிரிய,ஆசிரியைகள் எண்பதுமிகையாகாது

தொடரும்,

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7.
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 05 September 2016
IP: 37.*.*.* | Comment Reference Number: 44594

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

நான் பாளையம்கோட்டையிலுள்ள கிருஸ்துராஜா நடுநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தான் ஆங்கில இலக்கணங்கள் எளிமையயாகப்புரியவந்தது காரணம் அப்பொழுதுநான் ஆறாம்வகுப்புப்படித்துக்கொண்டிருந்தேன் எங்கள் வகுப்பாசிரியர் அவர்களின் பெயர் கிருஸ்துதாஸ் அவர் நாகர்கோயிலைச்சேர்ந்தவர் மிகக்கண்டிப்பானவர் பாடம் நடத்துமுறையோ அமுது. ஆங்கிலத்தில் இலக்கணரீதியா பின்தொடர்ச்சொற்களை((he she it has had can could will would shaal should )) எங்கெங்கு எப்படிப்பயன்படுத்தவேண்டுமென்பதற்கு எனக்கு அழகியமுறையில் அவரே அடித்தளமிட்டார் அதை நான் இன்றும் நினைவுகூர்கிறேன் நான் தங்கிப்படித்தது ஹைகிரவுண்டிலருக்கும் முஸ்லீம் அனாதைவிடுதியில்தான் ஒவ்வொரு நாளும் அங்கிருந்து 3கிலோமீட்டர் பள்ளிக்கு நடந்து செல்வோம் அப்படியிருக்கையில் ஒருநாள் எனக்கு காய்ச்சலும் வந்தது அப்பொழுது வகுப்பில் என்னால் இருக்கமுடியவில்லை எங்களுடைய சார் திரு கிருஸ்துதாஸ் அவர்கள் அவருடை தங்குமிடம் அழைத்துச்சென்று ஹார்லிக்ஸ் கரைத்துத்தந்து ஜுரத்திற்கான மருந்தும் தந்து ஓய்வெடுக்கச்செய்து பின்பு அனுப்பிவைத்தார் மறக்கமுடியாத ஒரு மனிதநேயசேவை நிகழ்வு அந்த ஆசான் எங்கிருந்தாலும் குடும்பசகிதம் நிறைந்துவாழட்டும் என்று பிரார்த்திக்கிறேன்

நமது உஸ்தாதுமார்களும் தீன்,குர்ஆன் வகுப்புகளில் ض ق சரியான உச்சரிப்புவரை கற்றுத்தந்தார்கள் இருலோகத்திற்கும் அடிப்படையாளங்காற்றுத்தந்த அனைத்து தீன்குலக்குருக்களுக்கும் நாம் துஆச்செய்யவும் நன்றிக்கடனோடிருக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம் தீன்கல்விகற்றுத்தருபவர்கிளின் நிலையோ சொல்வதென்றால் கண்ணீர்வற்றிப்போகும் இது நமது சமுதாயத்தின் பார்கவைக்கோளாறு சுத்திசெய்யவேண்டும் உலகக்கல்வியைத்தீர்க்கமாகவும் மார்க்கக்கல்வியை ஒருமார்க்கமாகவும் பார்க்கப்படுகிறது ஏன் இவற்றிலென்ன அச்சுப்பிழை எண்ணப்பிழைதானே ஒரு ஹாஃபிழ் 10 நபருக்கு சுவர்க்கம் தரமுடியும், ஒரு ஆலிம் 30 பேருக்கு சுவர்க்கம் தரமுடியும் ஏன் நமக்கு தீன்விசுவாசமில்லையா எதற்கு இந்தமுரண்?

மாணவப்பருவத்திலிருந்து ஆசிரியநிலைவரைகிடைப்பதென்பது மிகமிக சிலருக்கே அமையும் அந்தவகையில் இந்தக்கட்டுரையின் ஆசிரியை அவர்களுக்கு ஒருகொடுப்பினை குழந்தையாக இருந்து தாயாவதுபோல் ஒருதகுதி

இன்று ஆசிரியர்களின் நிலையென்ன எத்தனைபேர் நாம்கடந்துவந்த பாதையைத்திரும்பிப்பார்த்திருக்கிறோம் அவர்கள் என்னசெய்கிறார்கள்?எப்படியிருக்கிறார்கள்? அவர்களில் பொருளாதாரரீதியாக பெரும்பாலானோர் பிந்தன்தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள் நாம் எத்தனையோ சங்கங்கள் இயக்கங்கள் அமைக்கிறோம் முன்னாள் இந்நாள் மாணவ,மாணவிகள் இணைந்து ஆசிரியர்கள் நலம்சேர்க்கும் ஒரு இயக்கம் துவங்கக்கூடாது அதன்மூலம் முடிந்த அளவு உதவமுடியுமே என்பதை ஒருவேண்டுகோளாக வைக்கிறேன்

வள்ளுவனின் குறளிற்கேற்ப

"கற்க கசடற கற்ப்பிவை கற்றபின்
நிற்க அதற்கு தக"

அதேவள்ளுவன் இப்படியும் சொன்னார்

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று"

என்னால் இந்த இரண்டு குறள்களுக்கும் ஒரே பொருள்தான் காணமுடிகிறது வெவ்வேறு பொருள்கள்தரலாம், அதுவேறு விஷயம் முன்குறள் என்ன பொருள்தருகிறது என்ன படித்தோமோ அதன்படி நடக்கவேண்டும் கற்றுத்தந்த ஆசான்களுக்கும் கல்விக்கும் நாம் ஆற்றும் நன்றிக்கடனேஅது அதை மறந்துவிட்டால் இரண்டாவது குறள்அழும் அப்படியானால் பொருள் ஒன்றுதான்

மாரியாய்ப்பொழியும் மலரும் நினைவுகள் தந்த இக்கட்டுரையாசிரியையாவர்களுக்கு ஜ ஃ ஜாக்கல்லாஹ் கைர் இன்ஷா அல்லாஹ் உங்கள் படிப்புகள் தந்த படைப்புகள் தொடரட்டும்,வாழ்த்துக்களும் துஆக்களும் ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: Nafeesa (Kayalpatnam) on 06 September 2016
IP: 103.*.*.* | Comment Reference Number: 44596

ஆசிரியர் அவர்களின் கட்டுரைமிகவும் அருமை.

எனக்கு கற்றுதந்த ஆசிரியர்கள் அனைவரையும் மனக்கண்முன் நிறுத்தி விட்டார்கள்.சமீபத்தில் கேம்ஸ் டீச்சர் அவர்கள் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்கள்.இன்னும் அலி பாத்திமா டீச்சர்,அல்மாஸ் டீச்சர்,கே.நூர்ஜஹான் டீச்சர்,காரணி டீச்சர் (அசல் பெயர் என்னவோ) எல்லோரையும் நினைவு படுத்திவிட்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நெஞ்சோரம் ஈரம்...!
posted by: M.S. அப்துல் ஹமீத் (Dubai) on 07 September 2016
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 44600

“என் நெஞ்சோரத்து தேவதைகள்” என் நெஞ்சோரம் ஈரத்தை வரவழைத்து விட்டது.

கட்டுரையைப் படிக்கப் படிக்க என் பள்ளி நினைவுகள் அலையாடத் தொடங்கி விட்டன. கட்டுரையாசிரியர் ஒவ்வொரு டீச்சராக தனது அனுபவங்களைப் பகிரப் பகிர நான் படித்த எல்கே துவக்கப்பள்ளி, மேனிலைப்பள்ளியில் அதேபோன்ற என் அனுபவங்கள் என் நெஞ்சில் நிழலாடத் துவங்கிவிட்டன. அந்த ஆசிரியர்களில் பலர் இன்று நம்முடன் இல்லை.

கடைசி வரை கட்டிப் போட்டது கட்டுரையாசிரியரின் எழுத்து வன்மை. நாவன்மையும், எழுத்து வன்மையும் ஒருங்கே பெற்ற அரிய நங்கையருள் ஒருவர் அவர்.

சமுதாயத்தில் ஆற்றல் மிக்கவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் அந்த ஆற்றல்களை வெளிப்படுத்துபவர்கள்தான் உண்மையான ஆற்றல் மிக்கவர்கள்.

அந்த வகையில் கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் அளித்துள்எள எழுத்தாற்றலையும், பேச்சாற்றலையும் சமுதாய நலனுக்காக அவர் பயன்படுத்தி வருகிறார்.

அல்லாஹ் அவருக்கு மென்மேலும் ஆற்றல்களை அளித்து இன்னும் அதிகமதிகம் படைப்புகளைத் தந்து சமுதாயத்திற்கு நலம் பயக்க வைப்பானாக!

துள்ளி விளையாடிய பள்ளி நாட்களை எண்ணும்பொழுது ஒரு பக்கம் மகிழ்ச்சியும், ஏக்கமும் வந்தாலும் மறுபக்கம் அந்த நாட்களையெல்லாம் தாண்டி வந்து விட்டோமே... மரணம் நம்மை நெருங்கி வருகிறதே என்று தூக்கமும் கலைகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re: அருமை!
posted by: அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டினம்) on 08 September 2016
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44601

அஸ்ஸலாமு அலைக்கும்

இவ்வருட ஆசிரியர் தினத்தையொட்டி, காயலர்களின் பல சிறப்பான பதிவுகளை (இப்பதிவுக்கு பின்னூட்டங்களாகவும் மற்றும் முகநூலிலும்) படிக்க நேர்ந்தது. தங்களது பதிவு ஆசிரியர்-மாணவர் உறவினை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது.

கற்றல் என்பது பாட புத்தகங்களுக்குள் இருக்கும் விஷயங்கள் மாத்திரமே என்ற பொது சிந்தனையை உடைத்தெறியும் விதமாகவே தங்களது அனைத்து கல்வி-சார்ந்த பதிவுகளும் அமைகிறது.

தங்களது பணிகள் சிறக்கவும், ஓர் ஐடியல் டீச்சராக தொடர்ந்து சேவையாற்றிடவும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. மறக்க மனம் கூடுதில்லையே...
posted by: M.N.L.Mohamed Rafeeq (Singapore) on 15 September 2016
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 44626

மங்காத மாறாத பசுமையான பள்ளிக்கால நினைவுகளை அசைபோட வைக்கும் அருமையான பதிவு!

ஆசிரியர்களின் உயர்ந்த உன்னத சேவைகளை குறைவாக மதிப்பிட்டு விட இயலாது. அவர்கள்தாம் ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். கலை கல்வி கலாச்சாரம் மண் மரம் செடி கொடி என உலகத்தையே நமக்கு காட்டித்தரும் அற்புத கண்ணாடி அவர்கள். பாவம் மாணவர்களோடு மல்லுக்கட்டி மாரடித்து ரசம் போன அந்த கண்னாடிகள் பலரும் தம் சொந்த வாழ்க்கையின் சோகத்தை ஒருபோதும் பிரதிபலிப்பதில்லை! வாழ்க ஆசிரிய பெருமக்கள்...!

நமது இதயத்தில் பசுமை மாறாமல் பச்சை பசேலென படர்ந்திருக்கும் நினைவுகளில் பள்ளிப்பருவம், திருமணநாள், முதல் பிரசவம், இப்படி நிலைகொள்ளும் நினைவுகளில் பள்ளிப்பருவத்திற்கே முதலிடம் எனலாம். கட்டுரை முடிந்துவிட்டதே எனும் ஆதங்கம் சற்று நெஞ்சைப்பிழிந்த போதும் தரமான ஒரு பதிவை படித்து முடித்ததில் ஓர் திருப்தி. வாழ்த்துக்கள்...!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by: சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) on 16 September 2016
IP: 180.*.*.* | Comment Reference Number: 44628

என் நெஞ்சோரத்து தேவதைகள் .... தலைப்பை பார்த்ததும் சகோதரி அவர்கள், தன் குழந்தைகளை பற்றிதான் எழுதி இருப்பார் என்று கட்டுரை படித்து பார்த்ததும் ஆனந்தம் உண்டானது.

தன் ஆசிரியைகளை "தேவதைகள்" என்று குறிப்பிட்டது ஒரு ஆச்சரியமான ஒப்பீடு. ( எங்கள் ஆசிரியர்களை எப்படி கூறுவதோ..?)

இந்த ஆக்கம் என்னுல் சிறு தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது, காரணம் இதில் குறிப்பிட்டுள்ள அதிகமான, ஏன் அனைத்து ஆசிரியைகளும் இல்லை... இல்லை... தேவதைகளும் எனக்கு தெரிந்தவர்கள்தான். பலர் என் வீட்டிற்கு அருகில் குடி இருந்தவர்கள், சிலருடைய திருமணங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன், பலர் என் தாயாருக்கும், சகோதரிகளுக்கும் நெருங்கிய ஆசிரியைகள்.

பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்த சகோதரிக்கு நன்றிகள். ஒவ்வொரு ஆசிரியைகளையும் மிகச்சரியாக மதிப்பீடு செய்துள்ளார். அருமையான நடை. சபாஷ்.

அதிலும் குறிப்பாக மெஹர்பானு டீச்சர் அவர்கள் கூறிய " ......கீர ஆஞ்சிகிட்டும், வெங்காயம் உரிச்சிகிட்டும் இருக்காங்க... சோம்பேறிங்கடி நீங்க..." என்பதை படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது. உண்மைதானே...

இந்த கட்டுரையில் ஓர் உண்மையும் பொதிந்துள்ளது... நம் சமுதாயம் கல்வியில் பின்தங்கிய சென்ற தலைமுறையில், ஊரில் உள்ள ஓட்டுமொத்த ஆசிரிய சமுதாயமும் வெளி ஊர்காரர்கள்தான்.. அதிலும் நாசரேத் ஊரில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். கட்டுரையில் இருக்கும் அனைத்து ஆசிரியைகளும் அப்படியே...!!

நம் மக்கள் இன்னும் படிப்பில் முன்னேறி, அதிக ஆசிரிய இடங்களில் தங்களை அலங்கரிக்க பிராத்திக்கிறேன்.

கட்டுரையாளருக்கு மீண்டும் ஒரு பாராட்டுக்கள்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved