Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:49:01 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9624
#KOTW9624
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 14, 2012
நகர சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்திட பசுமையைப் பெருக்க KEPA செயல்திட்டம்! லட்சக்கணக்கான மரங்களை நட்ட பசுமை ஆர்வலரைக் கொண்டு கருத்தரங்கம்! அமைப்பினர் பங்கேற்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3388 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகர சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்திடுவதற்கு, அதிகளவில் மரங்களை வளர்த்து பசுமையைப் பெருக்கிட KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் புதிய செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

“புற்றுநோய் காரணி கண்டறியும் குழு - CANCER FACT FINDING COMMITTEE - CFFC” சார்பில், 03.03.2012 அன்று, காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்கத்தில் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டங்களை முறைப்படுத்தி செயல்படுத்திடும் பொருட்டு புதிதாகத் துவக்கப்பட்ட அமைப்பு KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA.

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளைக் கண்டறிந்து - பல்வேறு செயல்திட்டங்களுடன் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை அவ்வப்போது அளித்ல், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றை KEPA செய்து வருகிறது. நகர சுற்றுச்சூழல் பல காரணிகளால் மாசுபடுத்தப்பட்டு வரும் நிலையில், அதிகளவில் மரங்களை நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவதை பெருமளவில் தடுக்கவியலும் என்ற எண்ணத்தில், 08.11.2012 வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் நெய்னார் தெருவிலுள்ள நஜீபா பேலஸ் இல்லத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.



அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்கினார். மற்றொரு துணைத்தலைவர் ஹாஜி ஜெஸ்மின் கலீல் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.



தனது தேர்தல் அறிக்கையின்படி காயல்பட்டினம் நகராட்சியின் மூலம் ‘பசுமை காயல்’ திட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைக் கொண்டு துவக்கி வைக்கப்பட்டதாகவும், பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைத்தால் இத்திட்டத்தை முழு அளவில் செயல்படுத்திட இயலும், அதற்கு இக்கருத்தரங்கம் பயன் தர வேண்டும் என்றும் அவர் ஆவல் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம் முழுக்க லட்சக்கணக்கான மரங்களை நட்டு பசுமைப் புரட்சி செய்து வரும் - தூத்துக்குடி மாநகராட்சியின் 51ஆவது வார்டு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை நெறிப்படுத்திய KEPA அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகவுரையாற்றினார்.

காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான ஒரு பணிக்காக நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்திற்குச் சென்றபோது, சிறப்பு விருந்தினர் சாமுவேல் ஞானதுரை விபத்து போல ஒரு சந்திப்பு நகர்மன்றத் தலைவருக்குக் கிட்டியதாகவும், லட்சக்கணக்கான மரங்களை நட்டு பசுமைப் புரட்சி ஏற்படுத்தி வருபவர் அவர் என்பது அப்போதுதான் தெரிய வந்ததாகவும் அறிந்துகொண்ட நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினத்திற்கு வருகை தந்து, நகரின் பசுமை ஆர்வலர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததன் அடிப்படையிலேயே தற்போது சிறப்பு விருந்தினரைக் கொண்டு கருத்தரங்கம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர், சிறப்பு விருந்தினர் சாமுவேல் ஞானதுரை உரையாற்றினார். துவக்கமாக தன்னை அறிமுகப்படுத்திப் பேசிய அவர், காயல்பட்டினத்தில் கால்பந்து விளையாட பல ஆண்டுகளுக்கு முன் தான் சார்ந்த அணியை அழைத்து வந்துள்ளதாகத் தெரிவித்தார். அக்காலத்தில் காயல்பட்டினம் - தூத்துக்குடி கால்பந்து அணிகள் ஒருவருக்கொருவர் அசைக்க முடியாத சவாலாக இருந்தனர் என்றும், இக்காலத்தில் அனைவரும் ரசாயணம் கலந்த உணவை உண்பதால் அந்த வலு முழுமையாக இல்லாமலாகிவிட்டதாகவும், அதனால் தற்போது கால்பந்து விளையாடும் வீரர்கள் எளிதில் எலும்பு முறிவுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்தார்.



நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தற்போது 2100 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுவதாகவும், 2015ஆம் ஆண்டில் மாவட்டத்தின் மின் உற்பத்தி 45,000 மெகாவாட் என்றிருக்கும் என்றும், அதற்குத் தேவையான நிலக்கரி மூலப்பொருட்களை - நிமிடத்திற்கு 60 ட்ரக் வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டி வரும் என்றும் தெரிவித்த அவர், அவ்வளவு சரக்குகளைக் கையாள இன்னொரு துறைமுகம (ஹார்பர்) தேவைப்படும் என்றும் ஆனால் அது நடைமுறை சாத்தியமற்றது என்றும் தெரிவித்தார். இந்த நிலக்கரி ஏற்படுத்தும் மாசு காரணமாக தற்போது ஒரு நாளைக்கு ஒரு சட்டை மாற்றியே அணிந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள நாம், விரைவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு சட்டையை மாற்றிக்கொள்ள வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற மாசு ஏற்படுத்தும் பொருட்கள் - கேரளாவில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள சாலைகள் வழியே வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டால் அங்குள்ள மக்கள் உடனடியாகத் தடுத்து விடுவர் என்றும், இங்குள்ள மக்கள் அதற்கான விழிப்புணர்வைப் பெறவில்லை என்றும் தெரிவித்த அவர், அதிகளவில் மரங்களை வளர்த்தேனும் ஓரளவுக்கு மாசுவைக் கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

ஆட்சியாளர்களை விட அரசியல்வாதிகளும், பொதுமக்களும்தான் இது விஷயத்தில் முனைப்புடன் செயல்பட இயலும். எனவே, நகரைப் பசுமையாக்குவது அவர்களின் கடமை. ஒரு நபர் தன் பங்கிற்கு 5 மரங்களை வளர்ப்பதாக உறுதியெடுத்துக்கொண்டாலே நகரை முழுமையாக பசுமைப் போர்வை போர்த்தி அலங்கித்து விடலாம்.

நான் பல ஊர்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறேன்... பொது இடங்களில் நட்டி பராமரிப்பதற்கு மட்டுமே அரசு மரங்களை இலவசமாகத் தருகிறது. ஆனால் அதில் பல சிரமங்கள் உள்ளன. ஒரு மரத்தை நட்டுவிட்டு, அதைப் பாதுகாக்க செலவழித்து ஒரு வேலி வைக்க வேண்டும். பின்னர் மரத்தையும் - வேலியையும் ஒன்றாகப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. இதற்கு மாய்ச்சல் பட்டே பலர் இவ்விஷயத்தில் அலட்சியம் காண்பிக்கின்றனர். எதைச் செய்தாலும், அதில் எனக்கு என்ன பலன் உள்ளது? என்பதே மக்களின் பொதுவான மனநிலையாக இருக்கும்.

இந்த உண்மையை உணர்ந்துகொண்ட நான் என் முயற்சியில் தனியாருக்கு மரங்களைக் கொடுத்தேன். அவர்கள் அவற்றை முறைப்படி வளர்த்து பராமரித்து, தம் வீட்டைச் சுற்றிய நிலங்களை பசுமைப்படுத்தினர். இந்தப் புரட்சியின் எல்லை விரிவடையவே, அரசிடமிருந்து நான் பெறும் மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இன்று, எந்த வகையான எத்தனை மரங்களை நான் கேட்டாலும், அது தனியாருக்கு என்றாலும், பொது இடங்களுக்கு என்றாலும் - தருவதற்கு அரசு ஆயத்தமாக உள்ளது.

எனவே, நீங்கள் சாலைகளில் மரம் வளர்த்துப் பராமரிப்பதை இரண்டாவது முயற்சியாக வைத்துக்கொண்டு, உங்களுக்குப் பலன் தரும் புங்கை, மா, பலா, பெரிய நெல்லி, தேக்கு, சவுக்கு உள்ளிட்ட எந்த வகையான மரங்களையாவது வாங்கி வளர்த்துப் பராமரிக்க முடிவு செய்தால் உங்கள் முயற்சிக்கு உறுதுணைாயாக - எந்தக் கட்டணமுமின்றி மரங்களைப் பெற்றுத் தர நான் ஆயத்தமாக உள்ளேன்... அம்மரங்களை எடுத்துச் செல்வதை மட்டும் உங்கள் பொறுப்பில் நீங்கள் செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

நீங்கள் பெறும் மரங்களை எங்கு நட்டுகிறீர்களோ அதை ஒரு படம் எடுத்து எனக்குத் தர வேண்டும். 6 மாதங்கள் கழித்த பின், நீங்கள் பெற்ற மொத்த மரங்களில் 50 சதவிகத மரங்களையாவது நீங்கள் வளரச் செய்திருந்தால், உங்களுக்கு அடுத்தடுத்த முறைகளிலும் மரங்கள் வழங்கப்படும்.

உங்கள் நகர்மன்றத் தலைவர் சேர்மன் மேடம் அவர்களுக்கு மக்கள் நலனிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் தனியாத ஆர்வம் உள்ளதை அவர்களுடன் முதன்முறையாக சந்தித்து உரையாடியபோதே நான் உணர்ந்துகொண்டேன். எனவே, உங்கள் ஊரைப் பசுமையாக, அவர்களின் ‘பசுமைக் காயல்’ திட்டத்திற்கு உதவுவதற்கு என்னை எப்போது அழைத்தாலும் வந்து என்னாலான உதவிகளைச் செய்திட ஆவலாக உள்ளேன். ஆனால், அவையனைத்தும் வெற்றியடைய நீங்கள் ஒத்துழைப்பதுதான் ஒரே வழி.

அதை அவசியம் செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் விடுத்து, எனது வருகைக்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, பசுமை ஆர்வலர்களை ஒன்றுகூட்டிய ஏற்பாட்டாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி.


இவ்வாறு, பசுமை ஆர்வலர் - சிறப்பு விருந்தினர் சாமுவேல் ஞானதுரை உரையாற்றினார்.



நன்றியுரைக்குப் பின், துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இக்கருத்தரங்கில், நகரின் பசுமை ஆர்வலர்களான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத், முஹம்மத் முஹ்யித்தீன், எம்.ஏ.புகாரீ (48), எஸ்.அப்துல் வாஹித், நோனா அபூ ஹுரைரா, ஹாஃபிழ் எம்.என்.புகாரீ, சாளை பஷீர் ஆரிஃப், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஹாங்காங் எஸ்.ஏ.நூஹ், கே.எம்.டி.சுலைமான், ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் உள்ளிட்டோரும், ஆறுமுகநேரி பேரூராட்சி உறுப்பினர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, KEPA அமைப்பின் சார்பில் - எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், எம்.என்.முஹம்மத் யூனுஸ், எம்.டபிள்யு.அதாவுல்லாஹ் ஆகியோர் செய்திருந்தனர்.

படங்களில் உதவி:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்


[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 21:38 / 14.11.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Cnash (Makkah) [14 November 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23846

பசுமை காயல் திட்டம் வெற்றி காண வாழ்த்துக்கள்!! இந்த கலந்துரையாடலை ஒரு பொது இடத்தில் நடத்தி இருந்தால் இன்னும் நிறைய பேருக்கு இதன் பயன் சென்றடைதிருக்குமே!! .

அப்புறம் ..சகோதரர் பேசும் போது, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தற்போது 2100 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுவதாகவும், 2015ஆம் ஆண்டில் அதன் வளர்ச்சி 45,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும் சொல்லி இருக்கிறாரே அது சரியான தகவல்தானா.. ஏனென்றால் தமிழகத்தில் தற்போதைய மின்பற்றாக்குறையே 4500 மெகாவாட்தானே, அப்போ 45,000 மெகாவாட் கொண்டு.. 2015 இல் தமிழகம் மற்றும் அன்றை மாநிலங்கள் எல்லாமே ஜோலிக்கலாமே!!!

Moderator: செய்தி திருத்தப்பட்டது. நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தெருவுக்கு இரண்டு நபர் இருந்தால் போதும் நகர் மன்ற தலைவியின் பசுமை காயல் திட்டத்தின் மூலம் நமதூர் பசுமையவது உறுதி..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [14 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23847

நகர சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்திட பசுமை ஆர்வலர்களுடன் கைகோர்த்து நகரை தூய்மை படுத்த மன தூய்மையோடு முயற்சிக்கும் KEPA வின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்..

கவிமகனின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது...

வெறும் மரங்கள் அல்ல! ஆக்சிஜன் சுமக்கும் அற்புதப் பெட்டிகள்!

வேர்வழி நீர்வாங்கி வான்வெளி துடைக்கின்ற ஒட்டடைக்குச்சிகள்!

ஓசோன் படலத்தின் உயிரணுக்கள்! கார்முகில் ஒழுகிட காரணிகள்!

வாழ்ந்தபின் புதைந்துபோகும் மனிதர்களே! வீண்ஜம்பம் எதற்காக? மரங்களைப் பாருங்கள்! புதைத்தபின்னும் வாழ்கிறது! வையகத்தின் விழிநீரை வாஞ்சையுடன் துடைத்திடவே வெயில் மழையில் நனைகிறது நமக்காக வாழ்கிறது! (கவிதை - கவிமகன் காதர்)

சாலையோரங்களில் அதிகளவில் மரங்கள் நட்டப்பட்டு இன்று காயல்பட்டினம் கிழக்குப்பகுதி சோலைவனமாக மாறி வருகிறது இதற்க்கு முழு காரணம் மரைக்கார்பள்ளித் தெருவைச் சார்ந்த எம்.எம்.உவைஸ் அவர்கள்.

சுற்றுப்புறச் சூழல், இயற்கை வளம் மீது தீராத ஆர்வம் கொண்டு இவர் கடந்த 2009ஆம் ஆண்டில் காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவிலுள்ள மரைக்கார் பள்ளி வளாகத்தைச் சுற்றிய சாலையோரங்களில் தனது சொந்தச் செலவில் முறையான வேலி பாதுகாப்புடன் மரங்களை நட்டு, உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சுவதற்காக சம்பள அடிப்படையில் பணியாளரையும் ஏற்பாடு செய்ததன் விளைவாக இன்று அப்பகுதியில் கடும் வெயில் நேரங்களிலும் நிழல் மேலிட்டு மக்களுக்கு இதமான சூழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வளர்ந்துள்ள மரங்களால் அப்பகுதியே பசுமையாகக் காட்சியளிக்கிறது. சகோதரர் உவைஸ் அவர்களை போல் தெருவுக்கு இரண்டு நபர் இருந்தால் போதும் நகர் மன்ற தலைவியின் பசுமை காயல் திட்டத்தின் மூலம் நமதூர் பசுமையவது உறுதி..

பொது இடத்தில் மர கன்றுகளை வைத்து அதை பராமிப்பது மிக சிரமம்தான் ஆகையால் தனியார் தோட்டத்தில் அந்த உரிமையாளர் அவர்களே அதை பராமிப்பது மிக சுலபம்... எந்த பயனும் இல்லாமல் தனது நிலத்தை சும்மா காய போடுவது வேதனைக்குரியது...

ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து அதிலிருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ அதன் பயனை பெற்றால் (அனுபவித்தால்) அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.. ஆமீன் - வாழ்த்துக்கள்..

என்றும் நட்புடன் - முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [14 November 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23849

கனா காணும் காலங்கள்...- இந்த கனவுகள் எல்லாம் மெய்ப்பட வாழ்த்துக்கள்.

ஊருக்கு உழைக்கும் KEPA , நகராட்சி தலைவி மற்றும் நல்ல மனதுக்கு சொந்தக்காரர்கள் அனைவர்களுக்கும் நன்றிகள் பல.

அப்புறம், ஊரில் எவ்வளவு மரங்கள் இருக்கின்றன என்பதை தோராயமாக அறிவதற்கு தான் இந்த ஒன்று கூடலை மொட்டை மாடியில் வைத்தீர்களோ..!! சரிதான்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [14 November 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 23851

அஸ்ஸலாமு அலைக்கும்

>> KEPA << அமைப்பின் இந்த'' சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்திட பசுமையைப் நம் ஊருக்கு கொண்டு வருகின்ற ....இத்திட்டம் மூலம் நம் ஊரை பசுமை நிறைந்த >>> காயலாக்கி <<< காட்டுவோம்....என்கிற நம் நகர் மன்ற தலைவி அவர்களின் கனவு இந்த >> KEPA << அமைப்புடைய ஒத்துழைப்பு மூலமாக நிச்சயம் நிறைவேறும்.என்பது நம் கண்முன் தெரிகிறது. இந்த அமைப்போடு சேர்ந்து நம் பொது மக்களும் முழு ஒத்துழைப்பு நல்கினாள் தான் ...நம் ஊரை ....பசுமை நிறைந்த ..காயலாக்குகின்ற ...நம் தலைவி அவர்களின் கனவும் & நம் யாவர்களின் கனவும் நிறைவேறும் .

இந்த திட்டதின் ( சுற்றுச்சூழல் மாசடைவதைதிலிருந்து ) மூலம் நம் ஊர் மக்களுக்கு ஏற்பட கூடிய ஒரு சில நோய்களில் இருந்து கண்டிப்பான முறையில் நிவாரணம் உண்டு ....வல்ல இறைவன் நம் ஊர் மக்கள் யாவர்களையும் நோய் நொடிகளில் இருந்து சிறப்பாக்கி வைபானகவும் ஆமீன்...........

தாங்கள் இக்கூட்டத்தை நம் ஊரின் முக்கியமான ஒரு நல்ல இடத்தில் நடதினால் இன்னும் மிகவும் சிறப்பாக இருந்து இருக்கும் அல்லவா..........

எது ஒன்றும் மக்களின் நேரடி பார்வை படும் விதமாக நடத்தினால் தான் ...அந்த செயல் திட்டங்கள் மக்களின் மனதில் பதிந்து படு வேகமாக செயல் படும் + நிர்வாக அமைப்புகளுக்கும் திட்டங்களை செயல் வடிவம் பெரும் ............

மாஷா அல்லாஹ் நம் ஊரின் இந்த >>> KEPA <<< என்கிற புதிய அமைப்பின் ஒவ்வொரு செயல் திட்டங்களும் மிகவும் சிறப்பாகவே நடந்து வருகிறது ..... தங்களின் வளர்ச்சியோடு '' .... தாங்கள் நம் ஊருக்காக செயல் வடிவம் கொடுக்க கூடிய அனைத்து திட்டங்களும் "" வளர்ச்சி '' அடையவும் .....இந்த >> KEPA << அமைப்பை ...மனதார பாராட்டி ...துவா செய்கிறோம் ...........

சிறப்பு அழைப்பளாரின் கருத்துகள் அருமையானது ...நம் நகர் மன்ற தலைவி அவர்களுக்கு ..இவரும் முழு உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை ..... பவர் விஷயதில் அவர் சொன்ன கருத்து படி நடந்தால் ....தமிழ் நாடு ....சிறப்படையும் ...............

>>>>> நம் தலைவி அவர்களின் இந்த பசுமை நிறைந்த ....காயல் மாநகரம் மாறுவதில் ...நம் தலைவியோடு .....நமக்கும் பெருமையும் ...மகிழ்சியும் தான் ...... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [14 November 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23853

இன்ஷா அல்லாஹ் , இன்னும் சில வருடங்களில் " பச்சை பசேல் " என்ற காயலை காணலாம் . வீட்டு தோட்டம் , தெருக்களில் மரம் வைத்தால் மட்டும் போதாது . அதற்கு தண்ணீர் ஊற்ற " மனம் " மீண்டும் . ஏனெனில் , நமதூரின் இன்றைய நிலை , " வேலைக்கார அக்கா " வரலைன்னா , மரம் பட்டினிதான் . வீட்டுக்கார அம்மா மரத்திற்கு தண்ணீர் ஊற்ற மாட்டாங்க . ஏனெனில் , அவுங்களுக்கு , " குனிஞ்சா குறுக்கு வலி , நிமிர்ந்தா நெஞ்சு வலி " வந்துடும் .

சிறப்பு அழைப்பாளர் சொன்னது போல் , இன்றைய எல்லா உணவு வகையிலும் விசத்தன்மை உள்ளது . என்ன சார் பண்ணுறது . விஞ்ஜானம் வளர வளர கூடவே விசமும் வளருது . இன்று மக்கள் தொகையும் , தேவையும் அதிகரித்துள்ளது . வேறு வழியில்லை . விவசாயத்தில் ரசாயனத்தை கலந்தால்தான் தேவையை சமாளிக்க முடியும் . பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் அனைத்திலுமே Preservative என்ற ஆட்கொல்லி ரசாயனம் உள்ளது . பாக்கெட்டு உணவுதான் கதி என்று அதிக பிசியாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு , குடல் நோய் , பித்தப்பை பாதிப்பு போன்றவைகள் வருவது உறுதி .

ஆகவே , வீட்டில் காய்கறி தோட்டம் அமைப்போம் , தெருவில் மரம் வளர்ப்போம் . இயற்கை உரங்களை போட்டு நம்மை நாமே பாதுகாப்போம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பாருங்க....மனசுக்குள்ளே ஒரு உற்சாகமும், தன்னம்பிக்கையும், தைரியமும் தானாக வரும்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [15 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23857

அன்று ஆங்கிலேயன் சுதந்திரப் போராளிகள் தஞ்சம் புகுந்திருப்பதாக எண்ணி காடுகளை அழித்தான். இன்று நம்மவன் கட்டிடப்பணிகளுக்காக மரங்களைக் கொன்று குவிக்கின்றான். படுகொலை செய்யப்பட்ட மரங்கள் போக தற்போது எஞ்சியிருப்பது சொற்பமே!

ஒரு சில தெருக்களில் மட்டும் தான் மரங்கள் மரணத்தை தழுவாமல் அஞ்சி ஒடுங்கி நிற்கின்றன. அதற்கும் நாள் குறிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

மரங்கள்தாம் இயற்கையின் சுவாசக்காற்று! மழை பெய்வதும் பொய்ப்பதும் மரங்களின் ஆயுளைப் பொருத்துதான்! அவற்றை வாழ விடுங்கள் நாம் வாழ்வதற்காக...!

பசுமைக்காயலின் கனவுகள் ஒரு தனிப்பட்ட நபரின் நலனுக்கோ? அல்லது ஓர் தனிப்பட்ட குடும்பத்தின் உயர்வுக்கோ அல்ல! ஊர் நலனுக்காகவே என்பதை நாம் உணர வேண்டும்.

அய்யா அவர்கள் சொன்னது போல நமக்கு ஆதாயம் தரும் மரங்களைக்கூட நாம் நமது மண்ணில் நட்டு பலனை அடையலாமே? மரம் வளர்த்துப் பாருங்க....மனசுக்குள்ளே ஒரு உற்சாகமும், தன்னம்பிக்கையும், தைரியமும் தானாக வரும்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பாசத்துடன் பசுமை செய்வோம்!
posted by kavimagan (qatar) [15 November 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 23860

கால சுழற்சியில் எல்லாம் கனிந்து வருவதை கண்கூடாகக் காண்கிறோம். மிகுந்த சிரத்தையுடன் சாளை சலீம் காக்கா, பாஜுள் கரீம் இன்னும் ஏராளமான தோழர்கள் இணைந்து CFFC என்னும் மகத்தான அமைப்பை நிறுவிய போது, இவர்கள் சாதிக்கப் போவது என்ன என்று ஏளனம் பேசியவர்களே வியக்கும் அளவிற்கு, இந்த இயக்கம் அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்து வருகிறது.

பசுமைக் காயல் அமைக்கப்பட வேண்டும் என்ற தீராத தாகத்துடன், நகர்நலப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவி அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாய் விளங்கி வரும் சமூக ஊழியர்களுக்கும், காயலுக்கு வருகை தந்து நல்ல பல கருத்துக்களை வழங்கிய பசுமை ஆர்வலர் அவர்களுக்கும், நன்றியோடு வாழ்த்துரைப்போம்.

சகோதரர் முத்து இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளதைப் போல இந்த மகத்தான பணியில் உவைஸ் காக்கா அவர்களும் இணைக்கப்பட வேண்டும்.

KEPA வின் ஒவ்வொரு முயற்சியும் அடுத்த தலைமுறைக்கான விடியலை நோக்கி பயணம் செய்வது மகிழ்ச்சியைத் தருகிறது.

புதியதோர் காயல் படைக்க
பாசத்துடன் பசுமை செய்வோம்!

மரம் வளர்ப்போம்! அறம் வளர்ப்போம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...பசுமைக் கயல்
posted by muhyiadeen abdul kader P.A.K. (Chennai) [15 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23866

புசுமைக் காயல் கனவான்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும.

பசுமைக் காயலை உருவாக்க உழைக்கக் காத்திருக்கும் கனவான்களுக்கு எனது மனமார்ந்த,மகத்தான வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
இன்ஷா அல்லாஹ் பசுமைக் காயலைப் பார்க்கக் காத்திருக்கும்
முஹிய்யதீன் அப்துல் காதர் p A K (பாலப்பா)
இருப்பு(camp )-மண்ணடி
சென்னை
தொடர்புக்கு-9751501712 044-25266705


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தலைக்கு மேலே தாய்நாடு! (?!)  (12/11/2012) [Views - 4211; Comments - 14]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved