Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:57:17 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 37
#KOTWEM37
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 24, 2012
காணாமல் போன காயலின் விளையாட்டுக்கள்...!!!

இந்த பக்கம் 4301 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அது ஒரு இனிய கனாக் காலம்! எல்லோருக்கும் பொருந்தும் ஓர் வாசகம் இது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தன் பிள்ளைப் பருவத்தின் நிகழ்வுகளும், நினைவுகளும் எப்போதும் பசுமை மாறாத பூஞ்சோலையாகத் தான் இருக்கும். அன்னையின் மடியிலிருந்து இறங்கி மெல்லத் தவழத் துவங்கும் மழலைக்கு முதன் முதலாகக் கொடுப்பது விளையாட்டுப் பொருட்கள் தாம். குழந்தைகள் அழும் போதும், சிரிக்கும் போதும் அன்னை தந்து உதவுவதும் இதைத்தான். வளரும் பருவத்திற்கேற்ப விளையாட்டும், விளையாட்டுப் பொருட்களும் மாறுபடும். இப்படி மனிதனின் மழலைப் பருவம் தொட்டு அவனோடு ஒன்றிப் போன விளையாட்டு, வளர்ந்தபின் அவனது வாழ்க்கையில் விதி எனும் ரூபத்தில் அவனுக்குச் சாதகமாகவும் சில வேளை பாதகமாகவும் விளையாடி விட்டுச் செல்கின்றது.

ஊருக்கு ஊர் மாநிலத்திற்கு மாநிலம் நாட்டுக்கு நாடு என பல்வேறு விளையாட்டுக்களும், இன்னும் உலகளாவிய பொது விளையாட்டுக்களும் உள்ளன. இதில் கிராமப்புற விளையாட்டுக்கள் யாவும் அர்த்தமும், ஆரோக்கியமும் நிறைந்ததாக இருக்கும். மனவலிமைக்காகவும், உடல் வலிமைக்காகவும் மாலை முழுவதும் விளையாடச் சொன்ன பாரதி. ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா என குழந்தைகளுக்கு அழைப்பு விடுவிக்கின்றான். சிறுவர், சிறுமியர்கள், பருவ மங்கையர்கள், ஆண்கள், பெண்கள், தாத்தா, பாட்டிகள் எனப் பலருக்கும் பல விதமான விளையாட்டுக்கள் இருக்கின்றன. மூலை, முடுக்குகள், தெருவீதிகள், மைதானங்கள், சங்கங்கள் என சங்கமித்துள்ள விளையாட்டு மெல்லச் சாகும் நிலை இந்த அவசர உலகத்தில் அடிகோளிவிட்டதை எண்ணும் போது நெஞ்சம் கனக்கின்றது.

அன்று, பள்ளிப் பருவத்தில் தெருக்களில் மெய்மறந்து சிறுவர்கள் விளையாடிய காலம் எங்கே? கூச்சலும், கும்மாளமும், கூடிக் களித்தலும் ஆட்டமும், பாட்டமும், ஆரவாரங்களுமாய் சின்னஞ்சிறார்கள் விளையாடி மகிழ்ந்து பின்னர் மஃரிப் பாங்கு சென்னதும் “ஆட்டம் க்ளோஸ்” எனக் கூறி களைப்போடு வீடு திரும்பும் அந்த இனிய கனாக் காலம் எங்கே? பைக்குள் திணிக்கும் புத்தகச் சுமையை பிள்ளைகளின் மூளைக்குள் திணித்து விட்டு அனுப்பும் இன்றைய பாடசாலைகள் ஒரு புறம், அவன் வீட்டிற்கு வந்ததும் அதே பாடத்தை அசை போட ஐந்து மணிக்கே ட்யூஷனுக்கு அனுப்பி அவனது மாலைப் பொழுதை பாழாக்கும் பெற்றோர்கள் மறுபுறம். இப்போதெல்லாம் நாம் விளையாடுவதை விட பிறர் விளையாடுவதைப் பார்ப்பதில் தான் ஆர்வம் செலுத்தி நம் நேரத்தையும் காலத்தையும் வீணடித்து வருகின்றோம். அதிலும் கூட ஃபிக்ஸிங், சூது, பந்தயம் என பலவித பாதகங்களை புகுத்தி உண்மைக்கும் உழப்பிற்கும் வேட்டு வைக்கும் நிலையே எஞ்சியுள்ளது.

நம் குழந்தைப் பருவம் அல்லது பள்ளிப் பருவத்தில் நாம் அனுபவித்த அற்புதமான பல விளையாட்டுக்கள் இன்று நம் வரிசுகளுக்கு தெரியாமலேயே மங்கி மறைந்து போயிற்று. படித்து பட்டம் பெறும் முன்பே அயல்நாட்டில் வேலைக்காக அப்ளிகேஷன் போட்டு அங்கேயே செட்டிலிலாகி தம் வாரிசுகள் சுதந்திரமாகத் துள்ளித்திரிந்து நண்பர்களுடன் விளையாடும் குழு விளையாட்டைக் குழி தோண்டிப் புதைத்தும் விட்டோம். இன்றைய தலைமுறையினர் தவம் கிடந்து பார்க்கும் “க்ரிக்கெட்”, நம் நாட்டின் அத்துனை விளையாட்டையும் புறந்தள்ளி தன்னாதிக்கம் செலுத்தி வருகின்றது. இனி வளரும் சந்ததிகளுக்காவும், நம் மலரும் நினைவுகளுக்காவும் இக் கட்டுரையின் போக்கினை சற்று திசை திருப்பி பார்ப்போம்.

சிறுமியர் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுக்கள்:

அன்று, நம் முடுக்கு மற்றும் வெட்டைகளில் சிறுமியர்கள், பருவப்பெண்கள் கட்டங்கட்டமாக ரெட்டாங்கோடு போட்டு நொண்டியடித்து தன் காலால் ஓட்டுச்சில்லையை தெறிக்கச் செய்து அதில் தாவிக் குதித்து கால் பதித்து தலையை வான் நோக்கி உயர்த்தி காயா? பழமா? எனக் கேட்டு விளையாடுவார்கள். போகிற போக்கில் நாங்கள் அக் கோடுகளை அழித்து விட்டுச் செல்வோம். தூய்மையாக முடுக்குகளை சுத்தம் செய்து மங்கையர்கள் குழுமி சின்னக் குழி பறித்து புளியங்கொட்டை முத்துக்களைத் தன் பெருவிலால் சுண்டி விடும் அழகே தனி! இதற்காக வீட்டு முற்றத்தில் அல்லது சிமெண்ட் தரையில் எங்காவது ஒரு பகுதியில் குழியும் பதித்திருப்பார்கள். பல்லாங்குழி விளையாட்டுக்காக ஓட்டை துட்டு, ஒரு அணா, கால் அனா மற்றும் செப்புக்காசுகளை சேகரித்து விளையாடியக் காலம் போக, இன்று சில பகுதிகளில் வெறும் சம்பிரதாயத்திற்காக இவ் விளையாட்டைத் திருமணத் தம்பதியினருக்கு மட்டுமே ஒதுக்கியும் வைத்து விட்டோம்.

மாலைப் பொழுதினில் மங்கையர்கள் கூடும்வெட்டைகளில் தோழிமார்கள் சேர்ந்து நடுவில் ஓர் கோடு போட்டுக் கொண்டு இரண்டு குழுக்களாகப் பிரிந்து கைகளைக் கோர்த்துக்கொண்டு, “பூப்பறிக்க வருகின்றோம், வருகின்றோம்”, எனப்பாடி அழைப்பதும் மறு குழுவினர் “யாரைக் கண்டால் ஆகாசம்? ஆகாசம்?” என வினவ, இருப்பதிலேயே நோஞ்சானான ஒருத்தியின் பெயரை குறிப்பிட்டு அவரைக் கண்டால் ஆகாசம், ஆகாசம் என பதிலுரைக்க பின்னர் அவர் கையைப் பிடித்து சுலபமாகத் தம் பக்கம் இழுத்து தமது அணிக்கு பலம் கூட்டி விளையாடி மகிழ்வர். இன்று வெட்டைகள் வீடுகளாகவும், முடுக்குகள் கதவு போடப்பட்டு தம் சொந்த பயன்பாட்டிற்காகவும் மாறி விட்டது. கூட்டாஞ்சோறு, கொழுக்கட்டைப் பெட்டி ஆட்டுதல், பொண்னு மாப்பிள்ளை விளையாட்டு இதில் சம்பந்தம் கேட்டு வருவதும் பின் சம்பந்தம் கலப்பதும், கல்யாணம், மறுவனம், சாப்பாடு, சீர்வரிசை என ரியல் மேரேஜ்ஜைப் போல் நடத்தி மகிழ்வர். பாம்புக்கட்டம், சோவிகள் இல்ல்லாத வீடுகளே இல்லை எனலாம். தத்தம் வீடுகளில் இருந்து தின்பண்டங்களைக் கொண்டுவந்து பண்டம் போட்டு விளையாடுவதும் உண்டு. கிணற்றுக் கயிறுதான் அன்றைய ஸ்கிப்பிங். சும்மா சுழற்றித் தள்ளி விடுவார்கள். கோ கோ விளையாட்டுக்கு நாம் GO,GO என்று குட்பை சொல்லி விட்டோம். குட்டிக் குட்டி மண்பானைகள், அடுப்பு, சட்டிக் கலையங்கள், அஞ்சறைப் பெட்டிகள் அனைத்தும் இன்று நம்மை விட்டு அகன்று போய் விட்டன.

சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள்:

யாராவது வீடுகட்ட தெருக்களில் குருத்தமண்ணைக் குவித்து விட்டால் ஒரேக் கொண்டாட்டம் தான். குழி தோண்டி கால் புதைப்பது, கோபுரம் கட்டி அதன் உச்சியில் மண் உருண்டயை வைத்தல், குகை தோண்டி காகிதங்களை எரித்தல், களிமண் சேகரித்து சக்கரம், வண்டி, அடுப்பு, தட்டு, கட்டில் என மனதில் தோன்றுவதை வடிவமைத்து காய வைத்து விளையாடி மகிழ்வர். வீட்டுக்கு வந்ததும் அப்படியே தோட்டம் அல்லது பாத்ரூமுக்குள் போய் சட்டைப் பை வேஷ்டி கட்டிய இடுப்பு கழுத்து என மண்ணின் மைந்தர்களாய் மாறிய நாம், நம் ஆடைகளைக் களைந்து முகம் கை கால் கழுவிய பின்னர் தான் அன்னையிடும் அன்னதானம். சிறுவர்களை அழத்துக்கொண்டு கயிறுகட்டி இரயில் ஓட்டுதல். கிராச்சி எனும் ஓடிப்பிடித்து விளயாடுவது, வித விதமான கலர்களில் பம்பரம் வாங்கி பள்ளிக்கூட பைக்கெட்டுக்குள் ஒளித்து வைத்து ஸ்கூல் விட்டதும் கொல்லன் பட்டறைக்குப் போய் புதிய ஆணி போட்டு சக்கை குத்தி கோஸ் பிடித்து விளையாடும் பம்பரம்! பம்பரமாகப் பறந்து போய் விட்டது! வீடுகளில் சிப்ஸ் தரை போடுவது அன்றைய நவீன நாகரீகம். அங்கு மிச்சம் மீதியுள்ள கற்களை எடுத்து வந்து அதன் சைடுகளைத் தேய்த்து சீராக்கி வட்ட வடிவில் தயார் செய்து விளையாடும் “கெண்டு” எனப்படும் விளையாட்டு.

ஏழுகல் நங்கூரி அல்லது கிளிப்பந்து, வித விதமான வண்ணங்களில் சிறிய பெரிய சைஸில் போலா (கோலி) க்கள் வாங்கி தெருப் படிகளில் அடித்தும், விரல்களால் சுண்டியும் ஜான் பார்த்து வெற்றி தோல்வியை நிர்ணயிப்போம். இன்னும் குச்சிக்கம்பு எனும் கிட்டிபுல், இரண்டு ரூபாய்க்கு சைக்கிள் டயர் அதுவும் டபுள் டயர் அதை ஓட்ட கையளவு கம்பு வேறு, வீட்டு ஓடையில் ஆணியடித்து டயரை அதில் தொங்க விட்டு ஏதோ மெர்சடீஸ் காரைப் பார்ப்பது போல பார்த்து மகிழ்ந்தோமே? அத்துடன் சைக்கிள் ரிம், அதைச் சுழற்ற வளைந்த கம்பியும் உண்டு. கூட்டளிமார்கள் சேர்ந்து யார்? யார்? வீட்டு ஓலைத் தோட்டங்களின் வேலிகளிலாவது களைக்கம்பு மற்றும் செத்தை ஓலைகளைத் திருடி வந்து பட்டாளம் கட்டி கும்மாளம் போடுதல், ரமலான் நோன்பு இரவுகளில் பால்மாவு டின்னின் அடிப்பகுதியில் ஆணியை வைத்து நிறைய துளைகளிட்டு கைப்பிடிகம்பி கட்டி உள்ளே மெழுகுதி ஏற்றிவைத்து ஒரு சாரார் போட்டுக்கொண்டு போன கோடுகளைப் பார்த்து அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபித்தல், கள்ளன் போலீஸ் விளையாட்டு, தெருவுக்குத் தெரு டீம் அமைத்து கேப்டனைத் தேர்ந்தெடுத்து கடலை மிட்டாய் பாக்கெட்டுக்காக கால்பந்து போட்டி நடத்துதல், (ஒரு போதும் போட்டி முழுமை பெற்றதில்லை! பாதியிலேயே சண்டை போட்டு பிரிதல் என்பது எழுதப்படாத விதி) பூவரசமரங்களின் செட்டிக்காய்களைப் பறித்து வந்து வாரியல் குச்சிகளை வளைத்தும் குறுக்காக சொறுகியும் கையால் சுற்றும் ஒருவகை சத்தமிடும் கை ராட்டினம் செய்தல், தென்னை ஓலைகளைச் சுற்றி குழாய் போல் அமைத்து ஊதி செய்தல், பனைஓலைகளில் காற்றாடி செய்தல், விடியற்காலையிலேயே இறைச்சிக்கடைகளுக்குப் போய் காத்துக்கிடந்து சவ்வுகளை வாங்கி வந்து கொட்டு செய்தல், பள்ளி விடுமுறை நாட்களில் க்ரூப் சேர்ந்து கொண்டு முன்னரே திட்டமிட்ட படி வேப்பமரத்தில் ஏறி காக்கை முட்டை எடுத்தல், இதற்கென்றே தனியாக ஸ்ப்ஷலிஸ்ட்டுகளும் உள்ளனர். தேன் கூடுகளைத் தேடிப் பிடித்து வெங்காயத்தை சவைத்து போர்வையால் உடலை மூடித் தேன் எடுக்கத் தெரியாமல் எடுத்து தேனீக்களின் கொட்டு வாங்கி ஓடி மறைதல். மழைக்காலங்களில் வீடுகளின் குழாய்களில் வழியும் தண்ணீர்ல் குளிப்பது, வண்ணத்துப்பூச்சிகள் பட்டுப்பூச்சிகள் இரயில் பூச்சிகளை பிடித்து வந்து சோறு போட்டு சாகடித்தல். பச்சைத் தட்டான் (வெட்டுக்கிளி) சொடக்குப்பூச்சி, சிட்டுக்குருவி, ஒரு ரூபாய் கலர் கோழிக்குஞ்சு, புறாக்களும் இதில் அடங்கும்.

வாலிபர்கள், பெரியவர்களுக்கான விளையாட்டுக்கள்:

இன்னும் கடற்கரைக்குப் போனால் குச்சியை ஒளித்து வைத்து கிச்சிக்கிச்சி தாம்பாளம், சதுர வடிவில் கட்டம் போட்டு குறுக்கு நெடுக்காக மூன்று கல் வைத்து விளையாடுதல், வாலிபர்கள், பெரியவர்கள் சங்கங்கள், சதுக்கைகள் ஆகியவற்றில் தாயம், சோவி போன்ற விளையாட்டுக்களை காலை, மாலைகளில் விளையாடுதல், இப்படி எத்தனையோ விளையாட்டுக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இன்றைய நவீன காலத்தில் விளையாட்டுக்களே இல்லை என்று சொல்வதோ அல்லது இக்கால விளையாட்டுக்களை கொச்சைப் படுத்துவதோ இக் கட்டுரையின் நோக்கமல்ல! ஆடி ஓடி வியர்த்து விளயாடிய அக்கால ஆரோக்கியமான குழந்தைகளைப் போன்று இக்கால குழந்தைகள் இல்லையே? காரணம், விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மாறிவரும் விளையாட்டுப் பொருட்கள் நம் மழலைகளுக்கு உகந்ததல்ல. மூன்று வயது குழந்தைகூட தன் தாயின் செல்போனை சுயமாக ஆன் செய்து கேம் பகுதியை தெரிவு செய்து அசாத்தியமாக விளையாடும் அதிசயம் தான் நிகழ்ந்து வருகின்றது. பாக்கெட் சைஸ்களில் கையடக்க கருவிகளான செல்போன், கேம்பாய், ப்ளேஸ்டேஷன் வீடியோ கேம் எனப் பல்வேறு விளையாட்டுப் பொருட்களால் உடல் அசைவின்றி உட்கார்ந்த இடத்திலேயே மணிக்கணக்கில் அதனோடு ஒன்றிப்போய் உலகம் மறந்து கண்கள் சிறுக்க சிவக்க காலத்தை வீணாக்கும் நம் வாரிசுகளை பலஹீனமானப் பாதாளப் படுகுழிகளில் தள்ளி விட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என நாம் இருப்பது எவ்விதத்தில் நியாயம்?

மாலை நேரம் மழலைகளின் மதிப்புமிக்க நேரம். அதற்கு தடை போடாமல் தாராளமாக விளையாட அனுமதியுங்கள். அவர்களின் உடல் தேறும், மனம் நிறையும், படிப்பிற்கான வேளை வரும் போது படிக்கவும் செய்வார்கள். குறிப்பாக அயல்நாட்டில் வாழும் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை நீங்கள் சாவிகொடுத்தால் ஆடும் பொம்மைகளாகவே ஆட்டுவிக்கின்றீர்கள். என்னதான் பள்ளிக்கூடங்களில் விளையாட்டு, யோகோ பயிற்சிகள் சொல்லித் தந்தாலும் பிள்ளைகள் வெளியில் சென்று தன் நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதைப் போன்று ஒரு போதும் வராது. வீடுகளில் அவர்களை அரவணைக்க ஆதரிக்க கம்மா, அப்பா(தாத்தா,பாட்டி)க்கள் உள்ளனர் அவர்கள் தம் பேரப்பிள்ளைகளை மடியில் போட்டுக்கொண்டு நீதிக்கதைகள், தாய் தந்தையரின் வரலாறு, குடும்ப உறவுகளின் அறிமுகம் என பல பயனுள்ள விஷயங்களை சொல்லிக் கொடுப்பார்கள் அதுவே மழலைகளின் மனதில் பசுமரத்தாணியைப் போல் பதிந்து நிற்கும். கடல்கடந்து கடிகார வாழ்க்கை வாழும் நீங்கள் உங்கள் மழலைகளின் இந்த உரிமைகளை மறுக்கின்றீர்கள். சொந்த தாய் மொழியைக் கூட சம்பளம் தந்து சொல்லிக் கொடுக்கும் அவலம்! பணமும், செல்வமும், வசதியும், வாய்ப்பும் உங்கள் வாரிசுகளுக்கு தாராளமாகக் கிடைக்கச் செய்ய அயல் நாடுகளில் நீங்கள் படாத பாடுபட்டுவருகின்றீகள். இவையெல்லாம் வாரிசுகளின் வளர்ச்சியின் ஒரு பகுதி மட்டுமே! மாறாக அவர்கள் பெற வேண்டிய, தெரிய வேண்டிய அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. அது உங்களிடமிருந்து ஒரு போதும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை! வளைகுடாவில் வாழ்நாளைக் கழித்து வரும் என் நண்பனின் நான்கு வயது மகன் முதன்முறையாக ஊர் வந்திருந்த போது பசுமாடுகளைக் கண்டு அதிசயத்துடன் பார்த்து வியந்தான். அவனைப் பார்த்து நாங்கள் வியந்தோம். இந் நிலை எதற்காக வர வேண்டும்? கூடுமானவரை சொந்த நாட்டிலேயே தொழில் செய்யுங்கள். பணிபுரியுங்கள். அல்லாஹ் பறக்கத்து செய்வான். உள்ளூரில் வசிக்கும் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை மாலையில் நன்றாக விளையாட அனுமதியுங்கள். கல்விக்காக கண்டிப்பு எப்படி தேவையோ? அதைப்போல் கண்டிப்பாக அவர்கள் மீது உங்களுக்கு கனிவும் தேவை!

காலப்போக்கில் காணாமல் போன காயலின் விளையாட்டுக்கள் இனி திரும்ப வருமா எனத் தெரியவில்லை! அனால், இக் கட்டுரையின் மூலம் கடந்தகால நினைவுகளை சற்றேனும் அசை போட வைத்தோமே? எனும் ஓர் மன நிறைவோடு நிறைவு செய்கின்றேன்.

-அன்புடன், ஹிஜாஸ் மைந்தன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சிறுத்தைகள் போல் சுறு சுறுப்புடன் விளையாட பழக்குங்கள்...!
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( ????? - 97152 25227) on 24 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20774

கட்டுரை ஆசிரியர்... காயல் மண்ணின் மைந்தன் எம்.என்.எல். முஹம்மது ரபீக் அவர்கள் பழங்கால ஊர் பொழுது போக்கு விளையாட்டினை மிக அருமையாக விவரித்துள்ளார்..

என்னை சற்று பின்னோக்கு அடைய செய்ததில் மகிழ்ச்சி நான் சிறுவயதில் ஆடிய விளையாட்டுக்கள் அவ்விளையாட்டின் களைப்பில் சிந்திய வியர்வைகள் இன்று சுறுசுறுப்பை தருன்கின்றன என்பது உண்மை...!

காலப்போக்கில் காணாமல் போன காயலின் விளையாட்டுக்கள் இனி திரும்ப வருமா...? அது வராது என்றே நான் சொல்வேன்.. காரணம் நாகரிகம் என்ற பெயரால் நச்சு தன்மை இளைய சமூகத்தினரை சூழ்ந்து கொண்டது உண்மை..

செல் போனிலும் கணினியிலும் விளையாடி சிறு வயதிலேயே சோடா பாட்டல் சைசுக்கு கண்ணாடி அணிய கண்ணாடி கடையை தேடுவதே வழக்கமாகி விட்டது..

மதிபிற்குரிய பெற்றோர்களே..! தமது பிள்ளைகளை உடல் வியர்க்கும் விளையாட்டை விளையாடவும் அவர்களின் வியர்வை வரும் வரை விளையாடவும் அனுமதியுங்கள்... சிறுத்தைகள் போல் சுறு சுறுப்புடன் விளையாட பழக்குங்கள்...! உடல் ஆரோக்கியம் பெரும் என்பதில் சந்தேகமில்லை...!

நட்புடன் - அண்ணன் தொல் திருமா வழி.. தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காணாமல் போன காயலின் விளைய...
posted by: Vilack SMA (Hong Shen , Siacun) on 24 May 2012
IP: 121.*.*.* China | Comment Reference Number: 20775

விஞ்ஜானம் வெகு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் " யாரைக்கண்டால் ஆகாசம் , கடலை மிட்டாய்க்கு கால்பந்து " . சென்னையில் இருந்து மைசூருக்கு 30 நிமிடத்தில் ரயில் ஓட்டுவதற்கு யோசித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் " கயிறு கட்டி ரயில் " ஓட்டலாமே என்கிறார் . out dated posting .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காணாமல் போன காயலின் விளைய...
posted by: M.FAUZ (AlAin) on 24 May 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20776

அஸ்ஸலாமு அழைக்கும்.

இந்த காயலின் விளையாட்டுகள் என்னை பொர்காலதுக்கே இழுத்து சென்று விட்டது.நானும் சிறிலங்காவில் இருந்து விடுமுறைக்கு வந்தால் என்னை வீட்டிலேயே பார்க்கமுடியாது. ரயில் , கள்ளன் போலிஸ், மண் குவியலில் பிரளுவது, பூசணி மாற இலையில் பி பி ஊதுவது, பம்பரம் விடுவது,(இது பழகியதே காலில் தான்) இவற்றை விட புளியங்கா பறிப்பது,காகா முட்டை எடுப்பது, அப்பப்ப... அந்த கவலைகள் இல்லாத பொற்காலம் இனி கிடைக்குமா?

M . Fauz . U A E


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காணாமல் போன காயலின் விளைய...
posted by: M Sajith (DUBAI) on 24 May 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20778

"We don't stop playing because we grow old; we grow old because we stop playing." என்றார் பெர்ணாட்ஷா

ஒடி ஆடி விளையாடும் சூழல் மிகவும் குறைவான இங்கு, எங்கள் குழந்தைகள் அனுபவிப்பது ஒரு "Glorified Jail".

விளையாட்டுக்கள் விரல் நுனியில் என ப்ளே ஸ்டேசனில், அதுவும் அகோரமான முகங்களுடனும், அழிப்பதே ஹீரோயிசம் என பரைசாற்றும் கேம்களில் சந்ததியினர் வளர்வது வருத்தமளிப்பதுடன், நம் தேவைக்காக தங்கள் குழந்தை பருவத்தில் அனுபவிக்க வேண்டியவைகளை இழந்துவிட நாம் காரணம் என்ற குற்ற உணர்வை இன்னும் அதிகமாக்கி விட்டது இந்த நினைவூட்டல்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பல இக்கால பெற்றோர்களே பொறுப்பு ...
posted by: முஹம்மது ஆதம் சுல்தான் (kayal patnam) on 24 May 2012
IP: 123.*.*.* India | Comment Reference Number: 20779

பெரிசு ஏதோ பொலம்புதுடா என்று சிறுசுகள் இக்கட்டுரையை பார்த்து கிண்டலடிக்கவும் தயங்கமாட்டார்கள்.அந்த அளவிற்கு அப்பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்துகொண்டு வருகிறார்கள்.

பாரம்பரிய பெருமையும்,உண்மையான உடற்பயிற்சியும் கொண்ட பழங்கால விளையாட்டைப்பற்றி இக்கால பெற்றோர்கள் 90% சதவிதத்தினருக்கு மேல் தெரியவே இல்லை.அப்படிப்பட்ட விளையாட்டுகளை ஏளனமாக நினைக்கும் பெற்றோர்கள் தான் ஏராளம்!

என் பிள்ளை பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் டியூசனுக்கு சென்றுவிடுவான் அல்லது கம்ப்யூட்டரில் உட்கார்ந்து என்னம்மா புதுசு புதுசான விசியத்தைஎல்லாம் கண்டுபிடிக்கிறான் தெரியுமா? என்று பெருமையை பறைசாற்றும் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை என்ன செய்கிறார்கள் தெரியுமா? படிப்பு படிப்பு என்று படிப்பென்ற மூட்டைக்குள்ளேயே மூச்சிதினரும் அளவிற்கு திணித்து மூட்டையை கட்டிபோட்டுவிடுகிரார்கள். ஒரு சில வருடங்கள் கழித்து அம்மூட்டையை திறக்கும்பொழுது அதிலிருந்து பண மழையாய் கொட்டும்போழுது பூரித்துபொகிறார்கள் பேராசை பிடித்த பெற்றோர்கள்.

ஒருவேளை பிள்ளைகள் பிரியபட்டு இதுபோன்று விளையாட்டை விளையாட முன்வந்தாலும்,சீ சீ இந்தவிளையட்டெல்லாம் நம் குடும்ப தகுதிக்கு விளையாட கூடாது.அதெல்லாம் அந்த குப்பத்து காரங்க விளையாடுகிறது என்று இளம்பிஞ்சு மனதில் ஏற்றத்தாழ்வு விதையை விளைப்பதே இந்த பெற்றோர்கள்தான்!

இப்படிபட்ட பாரம்பரிய விளையாட்டுகள் மெல்ல மெல்ல மறைந்ததற்கு முக்கிய காரணம் இக்கால பேராசைபிடித்த பெரும்பாலான பெற்றோர்களே என்பதை நான் ஆணித்தரமாக சொல்வேன். இச்செய்கையினால் தன் பிள்ளைகள் வாலிப வயதாகும்பொழுது பல்வேறு உடல்பாதிபுக்குள்ளாகிறது என்ற மருத்துவர்களின் ஆலோசனைகள் எல்லாம் அமெரிக்க டாலருக்கு முன்னாள் ஜுஜிபி!

ஜிம்மாதொளுகைக்கு விடமாட்டேன்கர பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்காதீர்கள் என்று எல்லா ஜிம்மா பேருருரையில் தொண்டை கிழிய திரும்ப திரும்ப சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகதான் அப்பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள் நினைகிறார்களே தவிர கிஞ்சித்தும் அவர்கள் கவனத்திற்கு எடுக்கவே மாட்டேன்கிறார்கள்.

பகட்டான வாழ்க்கைக்கு முன்னால் மார்க்கமாவது இன்னொன்னாவது! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்1

அக்கறையுடன் முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காணாமல் போன காயலின் விளைய...
posted by: Fasi Ismail (Jiangmen, China.) on 24 May 2012
IP: 113.*.*.* China | Comment Reference Number: 20780

அஸ்ஸலாமு அழைக்கும்,

மிக அழகான கட்டுரை, இக்கட்டுறையைய் படிக்கும் போது நம் மனது சற்று பினோக்கி செல்வது உண்மை. விளையாட்டில் உள்ள நண்மை தீமைகளை பிரிதிருக்கும் இக்கட்டுரையைய் நாம் ஒரு விளையாட்டாக எடுத்துகொள்ளகூடாது. வரும் காலத்தில் நம் பிள்ளைய்களை உடல் ரீதியாக எந்த நன்மையையும் தராத கம்பியூட்டரிலும், ஐ பேடிலும் மூல்கிபோகாமல் பார்துகொள்ளவேண்டும், முக்கியமாக தாய்மார்கள் கவனம் செலுத்தவும்.

ஓடி விளையாடும் மனிதருக்கு என்ன நண்மை உள்ளது ? ஒரு மனிதன் துள்ளி குதித்து ஓடும் போது உடம்பினுள்ள இரத்தமும் துள்ளி குதித்து ஓடும், அப்படி ஓடும் போது உடம்பினுள்ள எல்லா பாகங்களுக்கும் இரத்தம் சென்றடையும், அப்படி சென்றடையும் பட்சத்தில் உடம்பினுள்ள எல்லா பாகங்களும் சீராக இயங்கும் மேலும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இப்படியல்லாம் நடுக்கும் போது மரணமும் சற்று பின்நோக்கி செல்லலாம், இது ஓடி விளையாடும் பாபாவுக்கும், உடம்பை வலைத்துக் கொன்டு வேலை செய்யும் பெரியோர்க்கு மட்டுமே சாத்தியம்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காணாமல் போன காயலின் விளைய...
posted by: சாளை பஷீர் (?????????????,?????????????) on 24 May 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20781

இத்தனை விளையாட்டுகளையும் நினைவு வைத்து எழுதுவதென்பது அழகிய விடயம்.

குழந்தைகளுக்கு விளையாட்டிற்க்கான நேரம் மறுக்கப்படும்போது அது வேறு பல வகைகளில் வெடித்துக்கிளம்புகின்றது.

எடுத்துக்காட்டாக சென்னை பாரிமுனையில் பள்ளி ஆசிரியரை அவரது மாணவனே குத்திக்கொன்ற சோக நிகழ்வு நடந்தேறியது.

அதற்கான காரணத்தை அந்த பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களே தொலைக்காட்சி முன் பின் வருமாறு ஒப்புதல் வாக்குமூலம் போல அளித்தனர்.

"குழந்தைகளுக்கான விளையாட்டு நேரத்தை நாங்கள் டியூஷன் வகுப்புகள் மூலம் பறித்து விட்டோம். அதன் பக்க விளைவுகள்தான் இம்மாதிரி வகுப்பறைக்கொலைகள்".

விளையாட்டு என்பது வாழ்க்கையின் ,மன உடல் ஆரோக்கியத்தின், கல்வியின் ஒரு அம்சம் என்பதை மறந்ததினால்தான் இந்த விளைவு.

வல்லரசு நாடுகளை எடுத்துப்பாருங்கள்! அவைகள் தங்களது குடிமக்களை விளையாட்டுத்துறையில் தனிக்ககவனமெடுத்து ஊக்குவிப்பதினால்தான் ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டுப்போட்டிகளில் பதக்கங்கள் வாங்கி குவிக்கின்றன..

பதக்கங்களை விட அவர்கள் அடையும் ஆதாயம் என்னவெனில் தாங்கள்: வல்லரசு நாடுகளாக திகழ்வதற்கு மன நலமும் உடல் நலமும் ஒருங்கே சீராக அமையப்பெற்ற குடிமக்களை அவர்கள் உற்பத்தி செய்வதுதான் மிகப்பெரியது.

எனவே நமது குழந்தைகளை தொலைக்காட்சி,கணினி விளையாட்டுகள்,செல் பேசி போன்ற இயந்திரங்களிடமிருந்து விடுவிப்போம்.

அந்த பிஞ்சு உள்ளங்களிடமிருந்தும் உடல்களிடமிருந்தும் பறிக்கப்பட்ட மாலைப்பொழுதுகளையும் விளையாட்டுத்திடல்களையும் அவர்களுக்கே முற்றிலும் சொந்தமாக்குவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காணாமல் போன காயலின் விளைய...
posted by: M S Mohudoom (UMM AL QUWAIN, UAE) on 24 May 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20782

காக்கா முட்டையை நமக்கு பிடிக்காதவர்கள் மீது வீசி அடிப்பது ....போன்ற "வீர" விளையாட்டுகளும் உண்டு ..

உங்கள் கட்டுரை பல காயல் வாசிகளின் மலரும் நினைவுகள். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காணாமல் போன காயலின் விளைய...
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 24 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20783

காணாமல் போனது விளையாட்டு மட்டுமல்ல, மனித நேயங்கள், இதய பாசங்கள்,குடும்ப உறவுகள், விரிந்து பரந்து நின்ற பந்தங்கள் என்று இப்படியே அடுக்கி கொண்டு போகலாம். இவற்றுக்கு தடை விதித்தது காலம் மட்டுமல்ல நமக்கு வழிகாட்டுகிறோம் என்று புறப்பட்ட மத தலைவர்களும்தான்.இந்த உலகம் வீண் விளையாட்டும் வேடிக்கையும்தான் என்று இறைவன் சொன்னதற்கு அர்த்தம் சொல்ல புறப்பட்டவர்கள் இந்த விளையாட்டுகளை அதற்கு ஆதாரங்களாக சொன்னார்கள்.

. நபிகள் நாயகம் காலத்திலும் விளையாட்டுகள் இருந்தன. அன்னை ஆயிஷாவும் உலக தூதர் நபிகள் நாயகமும் ஓடி விளையாடிய செய்திகள் ஹதீத் கிரந்தங்களில் காணக்கிடக்கின்றன.

உங்கள் சிந்தனை சிறகுகள் பின்னோக்கி செல்வதில் ஒரு பெரு மூச்சு தெரிகிறது. கால சுழற்சியில் இவற்றை ஜீரணித்து கொள்ள பழகிக்கொண்டோம்

.கிட்டப்பாவின் பாட்டை கேட்டோம் தியாகராஜ பாகவதர் குரலை கேட்டோம்.கண்ணதாசன் கவிதை கேட்டோம். அர்த்தங்கள் நிறைந்த அந்த கீதங்கள் சுகமான ராகங்களாக வலம் வந்தன, சோகமான முராரியாகவும் காதில் விழுந்தன. பின்னர் அது முக்காலா முக்காபுலா என்ற அர்த்தம் இல்லாத இசையாக வெளிவந்தபோது இளைஞர் கூட்டம் அவற்றை கை தட்டி வரவேற்றது. இப்போது சும்மா சும்மா.... சும்மா சும்மா....... என்று வெறும் சும்மா என்ற சொல்லைக்கூட மக்கள் முணுமுணுத்துக்கொண்டு செல்வதை காண்கிறோம்.எனவே கால சக்கர சுழற்சியில் இவை சிக்குண்டு காணாமல் போனாலும் மீண்டும் துளிர்த்து எழும்.

அதென்ன நீங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு மற்றவர்களை உள் நாட்டில் தொழில் செய்யும்படி சொல்கிறீர்கள், நீங்கள் செய்யாததை பிறருக்கு சொல்லாதீர்கள். நீங்கள் வழி காட்டுங்கள், இங்கு வாருங்கள், ஒரு தொழிற்சாலையை நிறுவுங்கள் அதில் நமதூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளியுங்கள். அப்போது மக்கள் உங்களை மனதார பாராட்டுவார்கள். சொல்வது யார்க்கும் எளிதாம். அரியவாம் சொல்லியவண்ணம் செயல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. .Re:காணாமல் போன காயலின் விளையாட்டும் விளையாட்டு போக்கில் காணாமல் போன ஈமானும் i....
posted by: T,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 280852) on 24 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20784

Re:காணாமல் போன காயலின் விளையாட்டும் விளையாட்டு போக்கில் காணாமல் போன ஈமானும்

===========================================================

கீழ் வரும் ஈ ஈ ஈ அடிச்சான் கமன்ஸுக்கு நன்றி:-எனினும் சில எடிட்டட்களும் இருக்கிறது. மன்னிக்கவும்.

மிக அழகான கட்டுரை, இக்கட்டுரையைய் படிக்கும் போது நம் மனது சற்று பின்னோக்கி செல்வது உண்மை. விளையாட்டில் உள்ள நண்மை தீமைகளை பிரித்தறிந்திருக்கும் இக்கட்டுரையை நாம் ஒரு விளையாட்டாக எடுத்துகொள்ளகூடாது. வரும் காலத்தில் நம் பிள்ளைய்களை உடல் ரீதியாக எந்த நன்மையையும் தராத கம்பியூட்டரிலும், ஐ பேடிலும் மூழ்கிபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், முக்கியமாக தாய்மார்கள் கவனம் செலுத்தவும்



பாரம்பரிய பெருமையும்,உண்மையான உடற்பயிற்சியும் கொண்ட பழங்கால விளையாட்டைப்பற்றி இக்கால பெற்றோர்கள் 90% சதவிதத்தினருக்கு மேல் தெரியவே இல்லை.அப்படிப்பட்ட விளையாட்டுகளை ஏளனமாக நினைக்கும் பெற்றோர்கள் தான் ஏராளம்!

அந்த பிஞ்சு உள்ளங்களிடமிருந்தும் உடல்களிடமிருந்தும் பறிக்கப்பட்ட மாலைப் பொழுதுகளையும் விளையாட்டுத் திடல்களையும் அவர்களுக்கே முற்றிலும் சொந்தமாக்குவோம் நிற்க, கட்டுரை ஆசிரியர் விளையாட்டுப்போக்கில் எழுதிய இந்த கட்டுரை கருத்தாஅழத்தையும் கொடுள்ளது.

ரெட்டாங்கோடு விளையாட்டு அமெரிக்காவிலும் சிறுவர்கள் அதே முறையில் விளையாடுவர். மேலும்,க.ஆசிரியர் எழுத விடுபட்ட பழங்கால விளையாட்டுக்களும் இருக்கிறது, இதோ.. கபடி எனப்படும் சடு குடு, கண்ணாம்பூச்சி.,குதிரைப்பந்து,எறி பந்து அப்ப்ப்பா எனகூறும் ஒளித்து வந்து கானாமல் பின்பக்கம் ஓங்கி அடிப்பது.பட்டம் விடும் கொடி பந்தயம். 501 --301—ரெமி- அடி இருபத்தொண்ணு, ஜீரோ போன்ற சீட்டு விளையாட்டு, கேரம்போர்டு,இன்னும் பல. மறந்தவை.



பெண்களுக்கென தெனி ஊஞ்சல், அடுக்கு ஊஞ்சல் என கூறும் குறூப் ஊஞல்.அண்டிக்கொட்டை தெறிப்பு இன்னும் பலபல. ஆனால் இக்கால விளையாட்டுக்கு ஆகிஉம் செலவெல்லாம் அப்பொழுதெல்லம் கடும் விலயாகவும் இருக்கும் சீப்பாக இர்ந்தால், பெர்ரோர்கள் காசும் தரமாட்டார்கல். காரணம் அக்கால 90% மக்கள் கஷ்ட்டப்பட்டு ஹலாலாக சம்பதிப்பார்கல். இப்போ 99% ம் ஹறாமில் தான். ஏனெனில் உண்மை ஈமான் 1% ல் ஓடுகிறது. சில வேளை மைனஸ் ஈமாந்தான். என்ன செய்வது சொல்லி வேலை இல்லை.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:தேங்கா மூடி எழுத்தாளர்களுக்கு மத்தியில்,
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 24 May 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20785

ஆஹா! பேஸ் பேஸ் ! என்ன அருமையாக உனது எழுத்துமேடையில், உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு முக்கியம் என்பதை ஆணித்தரமான கருத்தாக சொல்லி விட்டா!பாராட்டுகிறோம்!

சில தேங்கா மூடி கட்டுரை போல் இல்லாமல்,மறக்க முடியாத பழைய நினைவுகளை நினைவு படுத்தி,மக்களின் ஆரோக்கியத்திற்கு, வரும் காலங்களில் விளையாட்டு அதிலும் காயலர்களின் விளையாட்டு பகல் கனா போல் களைந்து போய்விடுமோ என்றும் ஆதங்கம் பட்டுள்ளாய்!

ஆனாலும்,இதற்க்கு தாய்மார்கள் மட்டும் காரணமில்லை சகோதரா. அந்த காலத்தில் பிள்ளை படிக்கவில்லை என்றால்இருக்கவே இருக்கு என்று தோல் மண்டிக்கோ, இல்லை என்றால் கல் வியாபாரம், அரபு நாடு என்று எதாவது ஒரு இடத்திற்கு அனுப்பி விடுவார்கள்.இப்ப அது சாத்தியதை இல்லை.

அரபு நாடுகளில் கொத்தடிமைகளாக வாழும் நம் புருசன்மார் போல் இல்லாமல்,நம் புள்ளிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிக் கூட பாட புத்தகங்களை சுமக்கும் தன் பிள்ளையின் கஷ்டத்தினை மன வேதனையுடன் பார்க்கும் தாய் நாளை நம் பிள்ளை உயர்ந்த நிலையில் வாழ வேண்டும் என்று நினைக்கின்றாள்!இதில் தப்பேதும் இல்லை. இவர்களை பொதி சுமக்க வைக்கும் பாட சாளைகளே இதற்க்கு முதல் காரண கர்த்தா!

அன்று கைத்தொழில் பாடம் இருந்தது.இன்று இல்லை. இருந்தாலும் அது ஃ பெசல் கிளாசாக மாறி விட்டது ! விளையாட்டு நேரம் இருந்தது.இன்றும் இருக்குகிறது. K S C யிலோ U S C யிலோ ஆடு மாடுகளை கொண்டு விடுவதைப் போல் கொஞ்ச நேரம் விட்டு விட்டு கூட்டிப் போகும் காட்ச்சிகளை கண் கூடாக காண்கிறோம். மாறவேண்டும் என்றால், பள்ளி நிர்வாகம் முதன் பள்ளி ஆசிரியர் வரை குழந்தைகள் இடத்தில் பரிவு காட்டி வீர விளையாட்டிற்கும் இடை இடையே ஊக்கம் அளிக்க வேண்டும்.ஆமீன்!

பழைய நினைவுகளுடன்,
உமர் அனஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காணாமல் போன காயலின் விளைய...
posted by: N.T.S.SULAIMAN (YANBU K.S.A) on 24 May 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20786

ஹிஜாஸ் மைந்தனின் கட்டுரை நான் கிச்சி கிச்சி தம்பலம் விளையாட என்னை மீண்டும் வாலிப முருகோடு கடக்கரைக்கு அழைத்து சென்றது.காணமல் போன காயலின் வெளையாட்டு திரும்பி வரும் காலம் எப்போது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. கட்டுரை ஆசிரியருக்கு ஓராயிரம் நன்றிகள்.
posted by: s.s.md meerasahib. (riyadh) on 24 May 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20787

அஸ்ஸலாமு அலைக்கும்.

காணாமல் போன காயலின் விளையாட்டுக்கள்...!!! ஆசிரியர் குறிப்பிட்ட அத்துணை விளையாட்டுகளும் எந்த வகையிலாவது (உள்ளம், கண் பார்வை, கேள்வி திறன், புத்தி கூர்மை, எலும்புகள் வளிமை,) எங்களுக்கு பயனளித்தன. உண்மையில் சொல்லப்போனால் ஒரு கல்லில் பல மாங்காய் எனலாம். கட்டுரையை படித்து வரும் போதே....... கட்டுரையை படிப்பதையே...... மெய்மறந்து ஃபிளாஸ் பேக்கானது எனதுள்ளம். கட்டுரை ஆசிரியருக்கு ஓராயிரம் நன்றிகள்.

ஆசிரியர் அவர்களே........ இன்னும் பல விளையாட்டுகளை விட்டு விட்டீர்களே........ தைக்காவில் லெப்பைக்கு வைத்த பண்டத்தை லப்பை சுஜூதில் கிடக்கும் போது..... சுட்டுட்டு போவது, நோன்பு இரவு நேரத்தில் நல்ல தூங்கிகிட்டு இருக்கும் வீட்டின் மடையில் வெடியை வெடிக்க செய்வது......,

நோன்பில் வண்ணான் மேயவிட்ட கழுதையை காலையில் பிடித்து ஓடையில் கட்டிவைத்து....... இரவில் கழுதை மேல் இரண்டு கால் கழுதை சவாரி செய்தது....., டில்லி அப்பாவை தூங்கும் சமயம் அவர்களின் உரல்-உலக்கை பையை எடுத்து வந்து மணியடிக்க செய்து தூக்கத்தை கலைத்து இரவு 12 மணிமுதல் சஹர் நேரம் வரை கடற்கரையில் அமரவைத்து அனுப்பியது.......,

பிறர் வீட்டின் தென்னை மரத்தில் ஏறி இளநி பறித்து குடித்தது....., இலவச பீடி கேட்ட பெரியவருக்கு பீடிகுல்லில் பொட்டு வெடியை வைத்து கொடுத்தது...... இப்படி ஏராளம்........ ஏராளம். எல்லாம் சின்ன பிள்ளையில் செய்த பாவம்களை எல்லாம் வல்ல கருணையுள்ள அல்லாஹ் போருதருள்வானாக...... ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. கருத்தெழுதிய கரங்களுக்கு நன்றி....நன்றி,,,!!!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (????? ?????.) on 25 May 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20788

அன்புள்ளம் கொண்ட இணயதள வாசகர்களே! எனது கட்டுரைக்குத் தாங்கள் அளித்த கருத்து சம்மானம் விலை மதிக்க முடியாதவைகளே! நம் பள்ளிப்பருவத்தில் பெற்றோர்கள், ஆசிரியர், லெப்பை ஆகியோரைப் பயந்தோம், மதித்தோம், இருந்தாலும் வியர்க்க விறுக்க விளையாடிக்களித்தோம். உடல் ஆரோக்கியமும், தன்னம்பிக்கையும் தானாக வந்தது இக் குழு விளையாட்டின் மூலம் தான்.

அக்காலத்து அனுவவங்களின் சாராம்சம் இன்று நம் வாரிசுகளுக்கு கிட்டாமல் போனது துரதிர்ஷவசமானதே! படிப்பு மட்டும் மனிதனை மேம்படுத்துவதில்லை மாறாக நல்ல விளையாட்டுக்களும் அவனுக்கு ஊக்கமளிக்கின்றது என்பது தான் உண்மை!

ஓர் மலரும் நினைவால் உங்கள் மனதைக் குளிர வைத்ததில் பெருமைப்படுகின்றேன். ஒரு சகோதரரின் கருத்துப் பதிவில் சென்னையிலிருந்து மைசூருக்கு அரை மணிநேரத்தில் இரயில் விடுவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் காலத்தில் நான் கயிறு ரெயில் ஓட்டச் சொல்வதாக குறிப்பிட்டிருந்தார். நான் அவ்வாறு சொல்லவில்லை. அது சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதியில் சிறுவர்கள் அன்றைய காலங்களில் விளையாடி மகிழ்ந்ததைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.

அன்பு மக்கி நூஹ் தம்பி காக்கா உங்கள் கருத்துக்கு நன்றி! தாங்கள் தரும் அற்புதமான கருத்துக்களால் இன்னும் எழுத வேண்டும் எனும் ஆவலை ஓர் ஊட்டச்சத்து மிக்க டானிக்காக என்னுள் புகுத்திக்கொண்டேன்.

காக்கா நான் வெளிநாட்டில் குடும்பத்தோடு வசிக்கவில்லை! என் பிள்ளைகள் ஊரில் தான் உள்ளனர்.இருப்பினும் இக்கரைச் சீமையில் அக்கரையின் நினைவுகளோடு அக்கறையின்றி நான் காலம் கழிக்க விரும்பவில்லை! தங்களின் துஆ பறக்கத்தினால் இன்ஷா அல்லாஹ் விரைவில் இக்கரையை விட்டும் முழுமையாக நீங்கி அக்கரைக்கு வர நாடியுள்ளேன். தாய் மண்ணின் மகத்துவம் தத்தெடுத்த மண்ணில் ஒரு போதும் கிடைப்பதில்லை! என் ஹக்கில் துஆச் செய்யுங்கள்.

அன்புடன்,
ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:காணாமல் போன காயலின் விளைய...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 26 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20790

பழைய நிகழ்வுகள்,பொழுது போக்குகள் குறித்து ஏங்கவைக்கும் நல்லதொரு சொற்சித்திரம். கிரிகெட் எனும் அசுரன் வந்து எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டான். அதுதான் உண்மை. இன்னும் நூறு வருடங்களுக்கு பிறகு இந்திய வரலாற்றை எழுதப்போகும் ஒரு வரலாற்று ஆய்வாளன் "நூறு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் கிரிகெட் மட்டுமே விளையாடபட்டது"என்று எழுதக்கூடும் இந்த லட்சணத்தில் ஐந்தாம் வகுப்பை கூட அரை குறையாக தாண்டிய சில அற்பங்கள் ஏதோ தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் போதே ஸ்டம்ப்உடனும் ,பேட் உடனும் பிறந்த மாதிரி வாய்ஜாலம் காட்டுகின்றன.

பெரியவர்களின் அந்தகால விளையாட்டு ,சிறியவர்களின் விளையாட்டு ,பெண்களின் விளையாட்டு என கட்டுரையாளர் அந்தகால விளையாட்டுகளை பட்டியலிடுகிறார். எல்லாம் படிக்கும் போது பரவசமாகத்தான் இருக்கிறது. நமது காயலில் மட்டுமல்ல ,பொதுவாகவே கிரிகேட்டின் வருகைக்கு பிறகு "கிராமிய "விளையாட்டுக்கள் எல்லாம் தங்களின் அந்தஸ்த்தை இழந்து விட்டன என்பதுதான் உண்மை.

முன்பெல்லாம் பள்ளிகளில் வருடாவருடம் இல்லாவிட்டாலும் எப்போதாவது விளையாட்டு போட்டிகள் என வைப்பார்கள். சாக்குகளை கட்டிக்கொண்டு ஓடுதல், பின்புறம் பலூன்களை கட்டிவைத்து ஒருவருக்கொருவர் அதை உடைக்க முயற்சி செய்தல், சேர்களை போட்டு அதை சுற்றி சுற்றி ஓடுதல் என விளையாட்டுக்கள் களைகட்டும். பார்க்க மிகவும் ஜாலியாக இருக்கும்.

ஆனால் இன்று நடப்பு என்ன...?

"பள்ளி ஆண்டு விழா "என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். காலங்கள் மாறும்போது கலாச்சாரம் பண்பாடுகளில் மாற்றங்கள் வரும்தான். விளையாட்டு மட்டும் அதற்க்கு தப்புமா..என்ன...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:காணாமல் போன காயலின் விளைய...
posted by: Hameed Sulthan (Mumbai) on 27 May 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20791

படிக்கும் போதே கண்ணீரோடுதான் படித்தேன், ஆசிரியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி என் கடந்த கால குழந்தை பருவத்தை என் கண் முன்னாடி கொண்டு வந்ததற்கு.

அலியார் தெருவில் ஓடி விளையாடின முடுக்கு, வெட்டை எல்லாம் இப்போ விடுகளா ஆயிருச்சு.நான் எங்க தெருவில் இப்போ நடக்கும் போதும் அந்த முடுக்குகளை பார்த்து இப்போ அந்த முடுக்கு உள்ளே போக முடியலையே என்று பெரும் முச்சு விட்டு தான் செல்வேன்.அந்த நிம்மதியான வாழ்க்கை கிடைக்குமா ???

கண்ணீரோடு நிறைவு செய்கிறன் அந்த சொர்க்க நினைவுகளை .ஹமீது சுல்தான் (ஒமர் தம்பி வீடு )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:காணாமல் போன காயலின் விளைய...
posted by: Raiz (Sydney) on 28 May 2012
IP: 156.*.*.* Australia | Comment Reference Number: 20792

அருமை! அருமை! ஆஹா என்ன ஒரு புளங்காகிதம் என் மனதில் இதை படித்தவுடன்! கோடானு கோடி நன்றிகள்! This is the real nostalgia!

உண்மை , உண்மை ! 100 % உண்மை , அந்த விளையாட்டுகளில் உடலும் உள்ளமும் சேர்ந்து மகிழ்ந்தனவே! ஒரு நாளும் நாம் விளையாடி விட்டு சோர்ந்து போன சரித்திரம் இல்லை!

Thses games were not only good for our physical health , but also they were good for our mental health, more over, they made us to become team players, leaders. They taught us to develop tolerance among ourselves! We learnt to know each other and help each other ! When we had friendship in those days, that was very thick and real friendship, not just superfacial. Some of the sports like kabadi etc taught us the toughness and the flight, fight , freight nature of life!

சிலர் இந்த கட்டுரை யை விமர்சனம் செய்ததால் சொல்கிறேன், நான் ஒரு Western நாட்டில் மன நல மருத்துவராக வேலை செய்கிறேன் ; நான் ஆசிரியர் கூறிய அணைத்து விளையாட்டுகளையும் விளையாடினேன் , மகிழ்ந்தேன் (except cricket, my friends know) ஆனாலும்....என்னால் sslc and +2 வில் ஊரில் முதல் மதிப்பெண் எடுக்க முடிந்தது , இன்று ஒரு மன நல மருத்துவனாக இருக்க முடிந்தது.....அவ்விளையாட்டுகள் எனக்கு ஒரு போதும் தடையாக இருந்தனவல்லவே ?! (please do not mistake me for telling these things, I had to tell as some one has mentioned that talking about these games was useless!)

தயவு செய்து குழந்தைகளிடம் video games ஐ கொடுக்கவே கொடுக்காதீர்கள் ! Please encourage them to play team games! Please dont bother about playing in hot weather, we have been created for living in hot weather, it won't affect our children! In Australia, UV rays is 20% higher than in India, so we are very lucky! Here, they like thier children to play in sun, but unfortunately they develop skin cancer because of lack melanin in thier skins and increased UV rays! So, think, we are very lucky to have more melanin in our skin and less UV rays in our sky!Alhamthulillah!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved