Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:51:34 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 207
#KOTWEM207
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 5, 2016
ஊருக்குள்ளே ஒரு காடு!

இந்த பக்கம் 6093 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அந்தி சாயும் சமயம்!

மலையெனக் குவிந்த பணிகளை மளமளவென பூர்த்தி செய்ததால் உண்டான களைப்பு. அசுர களைப்பையும் பொருட்படுத்தாது, ’அதிவேகமாக வீடு திரும்புதல்’ எனும் - நடுவர்களே இல்லாத அன்றாட போட்டியில், ஆர்வமாய் பங்கேற்கும் அவசர வாழ்க்கை மாந்தர்.

இயந்திரங்களாகவே மாறிப் போன இம்மானுடர்களின் இருதயங்களிலும், ஈரம் இன்னும் மிச்சம் இருப்பது ஆறுதலான ஒன்றே!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘ஃபாளன் ஃபுரூட் (Fallen Fruit)’ எனும் தன்னார்வ அமைப்பு, பொது இடங்களில் பழ மரங்களை நட்டு வருகிறது. தேவையோடு இருக்கும் எவரும், அம்மரங்களில் இருந்து பழங்களைப் பறித்துண்டு பசியைப் போக்கலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமல்லாது, சியாட்டில், பாஸ்டன் மற்றும் இண்டியானாபொலிஸ் போன்ற பிற அமெரிக்க நகரங்களிலும், பொது மக்களுக்காக பழ மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

ஜப்பானிய இரயில் நிலையங்களிலோ, காலியாக இருக்கும் மேற்கூரைகளில் அன்றாட தேவையான காய்கறிகளை தரும் செடி-கொடிகளை வளர்க்கின்றனர். அலுவல் முடிந்து வீடு திரும்புவோர், இரவு வேளை உணவிற்கான காய்கறிகளை இலவசமாக எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு மக்கள் நலனுக்காக பொது இடங்களில் மரம்/செடிகளை வளர்க்கும் முறையை ”சமுதாயத் தோட்டம்” என்று அழைப்பர். லண்டன், பெர்லின் மற்றும் லியோன் போன்ற ஐரோப்பிய நகரங்களிலும் இவை பிரபலம் அடைந்துள்ளது!

பெருநகரங்களின் வானுயர கட்டிடங்களை ஒட்டியபடி, தங்களுக்கும் குடியுரிமை கிடைத்த மகிழ்வில் திளைக்கும் மரங்களும் செடிகளும், வலியோர்-எளியோர் என யாதொரு பாகுபாடும் இன்றி, அனைவருக்கும் பழங்களையும் காய்கறிகளையும் அள்ளிக் கொடுக்கின்றன. விளம்பரமே-இல்லாத இந்த கொடைப் பண்பு, மரங்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்பான இயல்பல்லவா?!!

நிழல், சுத்தமான காற்று, காய்-கனிகள், பல்லுயிர்களுக்கு புகலிடம், மழை பெய்தல் மற்றும் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற பல்வேறு பலன்களை மரங்கள் வழங்கினாலும், அவற்றை நடுவதிலும், பாதுகாப்பதிலும் நாம் காட்டும் ஆர்வமும், அக்கறையும் மிகவும் சொற்பமானதாகவே இருக்கிறது!

மரங்களின் மகத்துவத்தை மார்க்க ரீதியாக உணர்ந்தால், மாற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்ற சிறு நம்பிக்கையை மூலாதரமாகக் கொண்டு; இஸ்லாமிய வழிகாட்டுதல்களின்படி சூழலியலை பாதுகாத்தலின் மூலம், சமூகவுடைமை கோட்பாட்டின் நேரடி வெளிப்பாடான மனிதத் தன்மையை உணரவும் மற்றும் ’மார்க்கம்-மரம்-மனிதம்’ ஆகிய மூன்றிற்கும் உள்ள தொடர்பை அறியவும் விழையும் ஓர் உள் (தன்) தேடலாகவே இந்த ”ஊருக்குள்ளே ஒரு காடு” அமைகிறது!

மார்க்கம் கூறும் மரங்களின் மகத்துவம்!

“நல்ல வார்த்தை (கலிமா தய்யிபாவு)க்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப்பதிந்திருக்கின்றது; அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன.” (سورة ابراهيم 14:24)

“شجر” (ஷஜர்; மரம்) மற்றும் “نبات” (நபாத்; செடி) என்று தலா 26 முறைகள் (அவைகளிலிருந்தும் வந்த இதர கிளைச் சொற்களையும் சேர்த்து) மரம்/செடிகளைப் பற்றி அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு சொற்களை தவிர, “نجم” (னஜ்மு) என்னும் சொல்லும் செடி/கொடிகளை குறிக்கும் வகையில் அருள்மறையில் கூறப்பட்டுள்ளது – அதன் இன்னொரு (முதன்மையான) பொருள், ‘நட்சத்திரம்’ ஆகும்.

நம் ஆதி பிதா ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறங்குவதற்கு முன்பு முதல், நாம் அனைவரும் மறுமை நாளில் சுவனபுரி செல்லும் வரையிலும் (இறைவன் நல்லருள் புரிவானாக, ஆமீன்!) – சென்ற பின்பும், மனிதர்களின் ஈருலக வாழ்க்கைகளோடு பின்னிப்பிணைந்து இருப்பது ’மரங்கள்’.



மேற்கோள்கள்: (1) سورة الأعراف 7:19-25; (2) الصافات سورة 37:142-146; (3) البخاري صحيح 3365; V4, B55, H584; (4) القصص سورة 28:30; (5) مريم سورة 19:25-26 இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில், மரங்களைப் பற்றிய குறிப்புகள் எண்ணில் அடங்காதவை! அதில் ஒரு சிலவற்றை உதாரணமாக இங்கே காணலாம்.

மஸ்ஜிதுன் நபவியின் தூணாக இருந்த ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி, நபியவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்துவார்கள். பின்பு, புதிதாக அமைக்கப்பட்ட மின்பருக்கு அவர்கள் மாறிய பொழுது, அம்மரம் குழந்தையைப் போல அழுததும், அதனை நபி (ஸல்) அவர்கள் வருடிக்கொடுத்ததும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது (البخاري صحيح 3584; V4, B56, H784).

மிஃராஜ் (المعراج) என்னும் புனிதமான விண்ணுலகப் பயணத்தின் போது, நபிகளார் கண்ட (வானெல்லையிலுள்ள) ‘ஸித்ரத் அல்-முன்தஹா (المنتهى سدرة)’ எனும் கடைக்கோடியிலுள்ள இலந்தை மரத்தைப் பற்றி திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளது (النجم سورة 53:10-18).

”ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு, அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன்கள் அவருக்கு கிடைக்காமல் இருப்பதில்லை” என்னும் நபிமொழியானது, மரம் நடுதல் ஒரு ’ஸதகதுன் ஜாரியா’வாக (جارية صدقة; நிலையான தர்மம்) அமையும் என்பதை சுட்டிக்காட்டுகிறது (البخاري صحيح 2320; V3, B39, H513).

மரங்களின் சேவை மறுமையிலும் தேவை! சுவர்க்கத்திலுள்ள ‘தூபா (طوبى)’ எனும் ஒரு மிக பெரிய மரத்தை குறிப்பிடும் போது, பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “அதன் நிழலில் (மிக வேகமாக) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்த படி) சென்றாலும், அவரால் அதை கடக்க முடியாது” (البخاري صحيح 3251; V4, B54, H474).

மரங்கள் சுவர்க்கத்தில் மட்டுமல்ல, நரகத்திலும் இருக்கிறது! நரகத்தின் அடித் தளத்திலிருந்து வெளி வரும் (ஷைத்தானின் தலையை போன்று தோற்றமுடைய பாளைகளை/கிளைகளை கொண்ட) ‘ஜக்கூம் (زقوم‎‎)’ மரத்திலிருந்தே, நரகவாசிகள் தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள் என திருக்குர்ஆன் எச்சரிக்கிறது (الصافات سورة 37:62-68). இறைவன் நம் அனைவரையும் இதிலிருந்து பாதுகாப்பானாக, ஆமீன்!

கீழ் வரும் இறைவசனங்களை நன்கறிந்த பின்பும், மரம் என்னும் இன்னொரு ”இறைவிசுவாசிக்கு” தீங்கு விளைவிக்க, நாம் ஒருபோதும் அஞ்சுவதில்லை!

”வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்துமே அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன.” (الحديد سورة 57:1; الحشر سورة 59:1; الصف سورة 61:1)

”செடிகள், (கொடிகள்,) மரங்கள் (ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுச்) சிரம் பணிகின்றன.” (الرحمن سورة 55:6)


மரங்களுக்கு ஏன் இந்த தண்டனை?

காயல்பட்டினத்தின் பல தெருக்களில் மரங்களே கிடையாது! இருக்கும் ஒரு சில தெருக்களிலோ, சிறியது பெரியது என எல்லா மரங்களிலும் விளம்பரப் பலகைகள் ஆணி அடித்து மாட்டப்பட்டுள்ளன. இதில் பள்ளிவாசல் சுற்றுச் சுவற்றிற்குள் இருக்கும் மரங்களும் விதிவிலக்கல்ல!


படங்கள்: ச.ஷா.முஹம்மது நூஹூ மற்றும் அ.ர.ஹபீப் இப்றாஹீம்

”மரத்தின் வெளி பட்டையை தாண்டி உட்புகும் வகையில் ஆணி அடித்தல் கூடாது,” என அமெரிக்காவின் ’டெக்சாஸ் வன சேவை’ அதிகாரி மிக்கி மெர்ரிட் (Mickey Merritt) அறிவுறுத்துகிறார்.

தண்டிலும், கிளைகளிலும் அடிக்கப்படும் ஆணியானது, செல்கள் பிரிவதற்கும் மரத்தின் சுற்றளவு பெருகுவதற்கும் முக்கிய பங்காற்றும் வளர்படையை (cambium) பாழ்படுத்துவதோடு, பயிருணவு ஊட்டச் சத்துக்களை எடுத்து செல்லும் பட்டையம் (phloem) மற்றும் மரவியம் (xylem) போன்ற முக்கிய செல்களையும் பாதிக்கிறது.

அது மட்டுமன்றி, மரத்தினை எளிதாக புஞ்சை (fungus) மற்றும் பூச்சிகள் தாக்குவதற்கும் வழி வகை செய்கிறது. மரங்களின் வகை, நலம் மற்றும் அளவை பொருத்து, ஆணி அடித்தல் ஒரு மரத்தின் உயிரைக் கொல்லும் தன்மைக் கொண்டதாக உள்ளது.

மரங்களுக்கு எதிரான இந்த வன்மத்தை தடுத்திட, நாம் ஆவண செய்திடல் வேண்டாவோ?

திணைக்கு உகந்த பனை!

ஆணிகளை அகற்றுவதோடு நமது பணிகள் நிறைவுற்று விடுமா என்ன?

மரங்கள் குறைவாக இருக்கும் (அல்லது முற்றிலும் இல்லாத) தெருக்களிலும் மற்றும் காலியாக உள்ள ஏனைய பொது இடங்களிலும் மரங்களை நட வேண்டும். நிழல் தந்து உதவும் வேப்ப மரங்களுடன், நெய்தல் திணையான நமதூரின் நிலப்பரப்பிற்கு ஏற்றாற்போல் பலவகை திணை-சார்ந்த நாட்டு / பாரம்பரிய மரங்களை நட்டு, ஊருக்குள் காடு செய்திடல் வேண்டும்.

திணை-சார்ந்த நாட்டு மரங்களில், பனை மரங்கள் நம் மண்ணிற்கு மிகவும் உகந்தது. ஐம்பது ஆண்டுகளுக்குள் 30 கோடியிலிருந்து 5 கோடியாக குறைந்துள்ளது நம் ‘மாநில மரம்’. நமதூரை சுற்றியுள்ள பகுதிகளில் இம்மரங்கள் வெகுவாக குறைந்து வருவதை கண்கூடாக காணலாம்.

பனைகள் அழிக்கபடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதன் விளைவு ஒன்றாக தான் இருக்கும் – மனித உடல் நலக் கேடு. எந்த ஊரிலும் இல்லாத வகையில், பதநீரிலே பலவகை பதார்த்தங்களை தயாரிக்கும் நமக்கு, பனைப் பொருட்களின் பயன்களா தெரியாது?

ஊரைச் சுற்றிலும் சரியான இடங்களை தேர்வு செய்து, பனைகளை அதிகம் வளர செய்து பாதுகாக்க வேண்டும். அறுபது ஆண்டுகளுக்கு மேல் வாழும் பனை மரம், இருபது ஆண்டுகளுக்கு பின்தான் பூ பூக்கும் என கேள்வியுற்றேன். அடுத்த வினாடி கூட நமக்கு சொந்தமில்லா இவ்வாழ்க்கையில், அடுத்த தலைமுறைகளுக்கு தேவையானவற்றை நாம் ஏன் தடைசெய்ய வேண்டும்?

”இப்பூவுலகு நம் முன்னோர்களால் மரபுரிமையாக நமக்கு கொடுக்கப்பட்டது அல்ல; மாறாக, நமது சந்ததியரிடம் இருந்து கடனாக பெறப்பட்டது,” என்னும் அமெரிக்க பழங்குடிகளின் இந்த பழமொழியில்தான் எவ்வளவு ஆழமான கருத்துகள்?!!

இத்தகைய ’தொலைநோக்கு சிந்தனை’ நமக்கும் இருத்தல் அவசியம். இயற்கையை நோக்கி திரும்பும் அறிவியல்-சார்ந்த இச்சமூகம், (இறைவன் நாடினால்) பிற்காலத்தில் பல பனையேறிகளை உருவாக்கலாம் அல்லது பனைக்காண விஷேச இயந்திரங்களை பயன்படுத்தலாம்!

மனிதம் வளர்ப்போம்!

இஸ்லாமிய வரலாற்றில், விவசாயத்தைப் பற்றிய குறிப்புகளை நிறையவே காணலாம். புஹாரி கிரந்தத்தில் (صحيح البخاري) உழவாண்மைக்கெனெ ஒரு தனி பாகம் (كتاب المزارعة) இருப்பதே இதற்கு சிறந்த சான்றாகும்.

உமறு இப்னு அல்-கத்தாப் (ரலி) அவர்கள் பஸ்ரா நகரில் விவசாய பாசனத்திற்காக கால்வாய்களை உருவாக்கியதையும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற செயல் திட்டங்களை வகுத்ததையும் இன்றளவும் வரலாற்று வல்லுநர்கள் வியந்து புகழ்வர்!

முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் பெருநகரங்களின் சுற்றம்-பேணாத மக்களிடமே சமுதாயத் தோட்டங்கள் சாத்தியப்படும்போது, ’மஹல்லா’ என்னும் சிறு வட்டார பிரிவுகளை கொண்டு, ’ஜமாஅத்’ என்னும் ஒருங்கிணைந்த அமைப்புகளை சார்ந்து, கொடைப் பண்பில் சிறந்து விளங்கி சகோதரத்துவத்தை போற்றும் மக்களைக் கொண்ட சிறிய ஊரான காயலில், இவை அமைவது நிச்சயம் இலகுவான காரியமே!

நமதூரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வீதிகளின் ஓரங்களிலும் பொது இடங்களிலும் இத்தகைய தோட்டங்களை உருவாக்கும் பொழுது, நமக்கென சில பிரச்சனைகள் எழத்தான் செய்யும்; உடன் தீர்வுகளும் பின் தொடர்ந்து வந்து, நம் எண்ணங்களை செம்மைப்படுத்தி, செயல்களை சீராக்கி, மனிதத் தன்மையை உணர்ந்தறிய உதவும்.

ஜப்பானை சார்ந்த இயற்கை வழி உழவாண்மையின் முன்னோடியான மசானோபு ஃபுகோகா (Masanobu Fukuoka), யாதொரு அறம் சார்ந்த புரிதலும் இல்லாமலா இவ்வாறு கூறினார்?

”வேளாண்மையின் இறுதி இலட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல, மனித இனத்தை வளர்த்து முழுமை அடையச் செய்வதுதான்!!!”

பப்பாளி, சப்போட்டா, வாழை, மாதுளை, சீதாப்பழம், நாவல், நெல்லிக்கனி, எலுமிச்சை மற்றும் கொய்யா போன்ற பழ மரங்களும்; தக்காளி, வெண்டைக்காய், அவரை, மிளகு, கீரை வகைகள் மற்றும் ரம்பை போன்ற காய்கறி செடிகளும் நமதூர் எல்லைக்குள் இருக்கும் ஒரு சில வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதால், அவை அனைத்தும் நம் சூழலுக்கு உகந்ததது என்றே கருதலாம். பழ மரங்கள், காய்கறி செடிகளுடன் மருந்தாக பயன்படும் (திணைக்கு ஒத்த) மூலிகை செடிகளையும் வளர்ப்பது சாலச் சிறந்தது.


Grow Food Not Lawns முகநூல் பக்கத்தில் இருந்து…

முன்னுரை!

ஆம், இது முடிவல்ல! நிச்சயம் ஒரு வெற்றிப் பயணத்தின் தொடக்கமே!!

மரங்களை வளர்த்தல் வறண்ட நிலப்பகுதியை பசுமையாக்கி, மண் வளத்தை பெருக்கி, பாலைவனமாக்கலை தடுத்து, உணவு பாதுகாப்பை உறுதி செய்து, நீர் நெருக்கடியை பெருமளவு குறைக்கிறது.

சமுதாயத் தோட்டங்களோ எளியோரின் பசியை போக்கி, (விஷமில்லா காய்கறிகளை உட்கொள்வதின் மூலம்) நோயற்ற சிறப்பான வாழ்கையை தந்து, பொதுவுடைமைக் கொள்கையை பரவச் செய்து, நுகர்வு பண்பாட்டில் இருந்து மக்களை மீட்டு, உலகமயமாக்கலுக்கு எதிரான உள்ளூர்மயமாக்கலை முன்னிறுத்தி, தற்சார்புடன்-கூடிய நிலைத்த பொருளாதாரத்தை அடைவதற்கான பாதையை நோக்கி நம்மை பயணிக்கச் செய்யும்.

மரங்களுக்கும் இஸ்லாமிய வரலாற்றிற்கும், வாழ்க்கை முறைக்கும் மற்றும் இறைநம்பிக்கைக்கும் உள்ள தொடர்பை தொகுத்து, மரங்களை பேணுவதில் இருக்கும் நமது அலட்சியத்தை ஆதங்கமாக பதிவிட்டு, மனிதத்தை போற்றக்கூடிய ஒரு சமுதாய மாற்றம் உருவாக வேண்டும் என்ற அபிலாசையுடன் எழுதப்பட்டுள்ள இவ்வாக்கத்தில், நான் கூறிய கருத்துக்களும் காட்டிய மேற்கோள்களும் எனது பேராசை / பெரும் விருப்பத்தின் வெளிப்பாடே அன்றி, நிச்சயம் அவை ஆலோசனைகளோ, அறிவுரைகளோ அல்ல!

நற்காரியங்களின் மீது ஆசை கொள்வதும் ஆர்வம் காட்டுவதும் நம் மீது தார்மீக கடமை. ’பரக்கத்’ என்னும் அபிவிருத்தி இருந்தால், அதனை நமக்கு சாதகமாக வல்ல அல்லாஹ் நிறைவேற்றிவைப்பான், ஆமீன்!

“எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.” (سورة الرعد 13:11)

முக்கிய மேற்கோள்கள்



குறிப்பு:

மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ள அனைத்து இணையதள முகவரிகளும், இக்கட்டுரை பதிவிடப்பட்ட தேதியில் பயன்பாட்டில் இருந்தது.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஊருக்குள்ளே ஒரு காடு உள்ளத்தில் போடும் ஒரு கோடு
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 05 October 2016
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 44769

நான் கோடுபோட்டால் இவர்கள் ரோடு போடுவார்கள் நான் புள்ளி வைத்தால் இவர்கள் கோலம் போடுவார்கள் என்று இளைஞர்களை பார்த்து நான் சொல்வது வழக்கம்.

மரம் வளர்ப்பது பற்றி மிக தெளிவாக இதைவிட ஒரு கட்டுரை நாம் படிக்க முடியாது.

நண்பர் ஹபீப் இப்ராஹிம் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. திருமறை வெளிச்சத்தில் திருநபியின் திருவாய் மலர்ந்தருளிய பொன்மொழிகளில் மரம் வளர்ப்பதன் நன்மைகளை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்.

நமக்காக இல்லாவிட்டாலும் அல்லாஹ்வின் அவனது திருத்தூதரின் கட்டளைகளை பின் பற்றுகின்றேன், அவர்கள் சுன்னத்தை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத் வைத்து மரம் நட்டினால் கூட அதற்கென தனி நன்மைகள் இருக்கவே செய்யும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ''மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்'' என்ற அரசின் அறிவிப்பு பலகை கூட அந்த மரத்தில் ஆணி அடித்துதான் விளம்பர படுத்தப் படுகிறது நமது நாட்டில்.

தெரு ஓரங்களில் நமது வீடுகளுக்கு முன்னால் இதை ஒரு தன்னார்வ தொண்டாக சில காலங்களுக்கு முன் SDPI என்ற இயக்கத்தினர் செய்து வந்தார்கள். ஆடுகளுக்கு அதில் ஆட்சேபனை மாடுகளுக்கு அதில் ஒவ்வாமை ஆனால் மனிதர்களுக்கும் கூட அதில் உடன்பாடில்லாமை அடுத்த நாளே அவை பிடுங்கி எறியப்பட்ட பரிதாப நிலை இருக்கிறது நமது நாட்டில்

நமது ஊரில்.நமது வீடுகளை ஒட்டி எப்படியும் ஒரு கொல்லை இருந்தது முன்காலங்களில். இயற்கை உபாதைகளை கழிக்கமட்டுமல்ல மரங்கள் வளர்க்கவும் அவை பயன்பட்டன. ஆனால் விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக நமது நாட்டில் மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன இப்போதுதான் அரசு விழித்துக் கொண்டு அப்படி செய்யக்கூடாது, அதற்கு பத்திர பதிவு கிடையாது என்று அறிவித்துள்ளார்கள். என்றாலும் நீங்கள் போட்டுள்ள கோடு நமது உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும் இன்ஷா அல்லாஹ்.

இணையதளங்களை பார்ப்பவர்களுக்கு மட்டுமே பயன்படும் இந்த ஆக்கத்தை ஒரு சிறிய கை ஏடாக மக்களுக்கு விநியோகிக்கலாம், நீங்கள் உத்தரவு தந்தால் அல்லது நீங்களே அதற்கு முயற்சி செய்தால் என்போன்றவர்கள் அதற்கு நிதியுதவியில் ஒரு சிறிய பங்களிப்பை செய்ய தயாராக இருக்கிறேன். அணில் மண் சுமந்தது போல..அந்த கதை உங்களுக்கும் தெரியும்....

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கடலில் பாலம் அமைக்கும்போது அந்த சீரிய பணிக்காக ''அணிலும் மண் சுமந்தது ராம பிரான் மனம் மகிழ்ந்தார்'' என்று ராமாயணம் சொல்கிறது.

மரம் வளர்ப்போம்
நிழல் கொடுப்போம்
கனிகள் பெறுவோம்
அல்லாஹ்வின் அருள் பெறுவோம்

வாழ்த்துக்கள்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) on 05 October 2016
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44771

"அஸ்ஸலாமு அலைக்கும்."

மாஷா அல்லாஹ்!!!

மிகவும் அருமையான கட்டுரை. இன்ஷா அல்லாஹ், முடிந்தவரை முயற்சி செய்வோம்.

அன்புடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: Mauroof (Dubai) on 07 October 2016
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44773

அருமையான கட்டுரை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...கனவு காயல் நனவாகுமா...!
posted by: Sithy Lareefa (Chennai) on 08 October 2016
IP: 36.*.*.* | Comment Reference Number: 44776

தென்னயும், வாழையும், கொய்யாவும், சீத்தாவும், எலுமிச்சையும், கோழிகளும், ஆடுகளும், துள்ளி ஓடும் அணில்களுமாய்... ஒவ்வொரு வீடுகளின் பின்னாலும் இருந்த கொல்லைகள் இன்று வீடுகளாய் உருமாறிக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் ஒரு வீடு எனும் காயலின் அசுரப் பசிக்குப் பலியான தோட்டங்களை... வருங்காலத் தலை முறையினருக்கு படங்களாக மட்டுமே நம்மால் காட்ட முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: சாளை:M.A.K முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி. (கார்வார்-கர்னாடக.) on 09 October 2016
IP: 106.*.*.* India | Comment Reference Number: 44779

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

DCW என்ற நச்சு ஆலை நமதூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மரங்களால் நமக்கு கிடைக்கும் உயிர் மூச்சான சுத்தமான சுவாசக்காற்றை மனித இன அழிவிற்கான நச்சுக்காற்றாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் அதன் நச்சுத்தன்மையை வீரியம் இழக்கச் செய்ய நமதூருக்குள்ளேயும் ஒரு காடு மிகஅவசியத்தேவை.

நமதூரில் கம்மா காலத்தில் பெருவாரியான வீடுகளை ஒட்டி சிறு தோட்டம் இருந்தது. அதெல்லாம் இப்ப நம்ம உம்மாக்கள் கம்மா ஆவதற்க்காக அதாங்க தம் பெண் பிள்ளைகளின் கல்யாணத்திற்க்காக அச்சிறு தோட்டங்களையும் அழித்து வீடு கட்டிக்கொடுக்கும் நிர்பந்தச் சூழல் ஒருபக்கம். பள்ளிவாசல், பள்ளிக்கூடங்கள், இன்ன பிற இடங்களை விஸ்தீகரணம் என்றும் காலத்திற்கேற்ப்ப நவீன கோலமாக்குகின்றோம் என்றும் மரங்களை வெட்டும் அவல நிலைமை மருபக்கம்.மெத்த படித்தவர்களும் இந்த இழிச்செயலில் ஈடுபடுவதென்பது தான் மிகவும் கவலையான நிகழ்வு.

மனித உயிருக்கு அச்சுருத்தல் இல்லா நிலையில் ஒரு மரத்தை வெட்டு தென்பது மாபாதகமான பல கொலைகளுக்கு ஒப்பானது. அன்றாட மனித வாழ்க்கை அமைதிகலந்த மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போது திடிரென சுனாமி, யூகம்பம், இன்னபிர பூகோலசீற்றங்களால் மனிதன் சிக்கும்போது தன் வசிப்பிட இழப்பு குழந்தைகள் இழப்பு என்று தாங்க முடியாதுயரங்களுக்கு ஆளாகின்றோம் என்பதை அனுபவ பூர்வமாக அறிந்த மானுட இனமே....!

ஒரு பெரிய மரத்தில் இருந்து காலைவையில் உணவு தேடி பறந்துச் செல்கின்ற தாய்பறவைகள் தன் சேய்பறவைகளுக்காக தன் அலகில் உணவை பற்றிக் கொண்டு வந்தபோதும்!., தன் துணைப் பறவை முட்டையிட்டு அடைகாத்து தன் வம்சத்தை வெளிக் கொண்டு வருவதற்கக்காக தன்வசந்த மாளிகையான கூட்டின் கட்டுமான பணிகளின் இறுதி நிலைக்காக குச்சிக்களை தன்அலகால் அழகாக கொத்திக் கொண்டு வந்த போதும்!., தன்னுடைய எல்லாமே ஆன மரம் பல துண்டுகளாக சிதறியும் அதன் கீழே பறவைக்ககுஞ்சுக்கள் பல நசுங்கி இறந்தும் சில நைந்து மரண ஒலத்தில் கீச் கீச்சென்று கத்தும் பரிதாப நிலையை என்றாவது சிந்தித்ததுண்டா?

மரங்களில் வாழும் பறவைகள் எச்சம் போட்டு நம்மை தொந்தரவுச் செய்கின்றது என்று நாம் அதன் ஆணிவேரை புடுங்வோமானால் நாம் நம் சந்ததிகளின் அழிவுக்காண ஆபத்தான நஞ்சை நம் கையால் நடுகின்றோம் என்று நாம் எப்போது புறிவோம். நமது ஊருக்குள்ளேயும் ஒரு காடு அமைவதற்கு முன்னால் குறைந்த பட்சம் எவ்விதத்திலும் மனித உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கும் மரங்களை வாழவிட்டு நாமும் நலமாக வாழ்வோம்.

தேனீகள் பல மலர்களிலிருந்து மகரந்தத்தை உட்கொண்டு அதன் மூலம் தன் வயிற்றிலிருந்து வெளியேற்றி தேனடையில் சேகரித்து வைத்த தேன் போல் மரம் சம்பந்தமான பல தகவல்கள் சேகரித்து நம் நலமான வாழ்விற்காக ஆக்கமாய் தந்த சகோதரர் அ.ர.ஹபீப்இப்றாஹீம் அவர்களுக்கும் மற்றும் இதனை வெளியிட்டுள்ள இவ்விணையதளத்தின் காயல்பட்டணம்.காம் அங்கத்தினருக்கும் ஜஸாகல்லாஹு க்ஹைரா.

கர்னாடக மாநிலம் கார்வாரிலிருந்து
சாளை:M.A.K. முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நட்டவில்லையென்றாலும் நஷ்டமில்லை வெட்டாமலிருங்கள்.
posted by: Sheikh Abdul Qader (Riyadh) on 09 October 2016
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 44781

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

நம் ஆதிபிதாவையும்,மாதாவையும் அல்லாஹ் நாம் இழைத்துவிட்ட பாவத்திற்காக சுவனத்திலிருந்து பூமிக்கு அனுப்பிவிட்டான் சுவர்க்கத்தில் கட்டுப்பாடில்லாமலிருந்தபோது இல்லாதவெட்கம் பூமிக்குவந்ததும் வெளிப்பட்டது அப்போது நம்மானத்தை மறைக்க உதவியது தாவரங்களின் இலை,தழைகளே ஆரம்பத்திலிருந்தே வந்தஉதவிதான் தாவரங்கள் அது இறைவன்தந்த சாகாவரங்கள் இன்றுநவீனமென்றபோர்வையில் தாவரங்கள் மனிதனுக்கு பாரமாகிவிட்டன.

அல்லாஹ் தனது நிறைவு வேதத்தை மலைகளின்மீது பொறுப்பளிக்க அவைகளைக்கேட்டான் அவைதமக்குமுடியாதென மறுத்துவிட்டன ஆனால் மனிதன் அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான்,அதை ஓதுகிறான்,புரிந்துகொள்கிறான் ஆனால் அந்தவேதவாக்கியப்படி நடக்கமறந்துவிடுகிறான் அஸ்தஃஃபிருல்லாஹுல் அழீம்.

மலைகள் எதன்பிடியில் நிலைத்து நிற்கின்றன? அதன்மீது நீண்டு,நெடுகி படர்ந்திருக்கும் விருட்சதாவரங்களின் வேர்ப்பிடிப்பில்தான் மலைகளாக உயர்ந்து நிற்கின்றன இதில்நமக்கு வேர்களாக பல்வேறுபடிப்புகளுள்ளன புரிந்துகொள்வோம்.

தாவரங்கள்
புவியின் தாகம்தீர்க்கும் வரங்கள்
மரங்கள்
மண்ணின் மகத்தானகரங்கள்

இம்மண்ணிற்கு
உரமாக மரங்களே
பசுமை
மற்றகோள்களுக்கில்லா
புவியடைந்த பாக்கியம்
பசுமை
புவியின் புண்ணியச்சின்னம்
நம்கண்களை நாமேகுத்திக்கொள்ளலாமா?

பசுமை ஒருசுமையல்ல
நம் புவியின் இமை

இறைவா
தா
வரம் தா
தாவரம்தா
என இறைஞ்சுவோம்

நட்டவில்லையென்றாலும் நஷ்டமில்லை
வெட்டாமலிருங்கள்.

மாஷா அல்லாஹ் ஆசிரியர் இறைமறை, நபியுரைகளோடு கட்டுரையை வரையறுத்திருக்கிறார் வாழ்த்துக்கள் விழுதுகளாக பழுதில்லாத படைப்புகள்தருகிறீர்கள் ஜஃஜாக்கல்லாஹ் கைர் இன்ஷா அல்லாஹ் இன்னும் நல்ல,நல்ல எதிர்பார்ப்புகளுடன் ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...உபயோகமான கட்டுரை
posted by: Hyder (Riyadh) on 11 October 2016
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44787

அன்பின் சகோதரரே,

அஸ்ஸலாமு அலைக்கும் ;

மிக பயனுள்ள கட்டுரை

சிறப்பாக தொடரட்டும் தங்கள் பணி

அன்புடன்
ஹைதர்
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. தனி மரம் தோப்பாகாது...
posted by: M.N.L.Mohamed Rafeeq (Singapore) on 14 October 2016
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 44805

மரம்,செடி,கொடிகள் மட்டுமா இங்கு மனிதர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

அன்று கதைகள் சொல்லியும் கரம் பிடித்தும் வழிநடத்திய அப்பாக்களும், கம்மாக்களும் இன்று வெறும் கடைசிப்பொருளாகவே கருதப்படுகின்றனர். உறவின் மகத்துவத்தை பிள்ளைகளுக்கு சொல்லித்தர மறந்த பெற்றோர்கள் இவர்கள்தாம் இன்று பிள்ளை வளர்ப்பில் கெட்டிக்காரர்கள். சதா எந்நேரமும் ஐ பேடிலும் அண்ட்ராய்டிலும் மூழ்கிக்கிடக்கும் சிறார்களுக்கு அந்த ஆத்மாக்களுடன் நேரம் செலவிட நேரமில்லை என்பதுதான் உண்மை!

இவர்கள் வாட்ஸாப்பிலும் பேஸ்புக்கிலும் செலவழிக்கும் நேரத்தின் மூன்றில் ஒரு பங்கை தாத்தா பாட்டிகளோடு செலவிட்டாலே போதும் அந்த பட்டமரங்கள் புத்துணர்ச்சி பெற்றுவிடும். சுய நலத்திற்காக கூட்டுகுடும்பத்தை கூட்டுக்குள் குடும்பமாக மாற்றிய பெருமை படித்து வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் அநேக இளைஞர்களையே சாரும். தனி மரம் தோப்பாகாது என்பது வெறும் ஏட்டு சுரைக்காய்தானோ...?

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved