Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:36:37 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20034
#KOTW20034
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 21, 2017
மழலையர், பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள், களறி விருந்துடன் நடந்தேறியது பெங்களூரு கா.ந.மன்றப் பொதுக்குழு! காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2794 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகள், மழலையர் - பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் & களறி விருந்துடன் நடைபெற்றுள்ளது. காயலர்கள் இதில் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & காயலர் குடும்ப சங்கம 4ஆவது நிகழ்ச்சிகள், பெங்களூரு தேவனஹல்லியிலுள்ள ஆடிட்டர் புகாரீ ஃபார்ம் ஹவுஸ் தோட்டத்தில், 10.12.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றன.

முன்னேற்பாடுகள்:

பல நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு, சுமார் ஒரு மாத கால ஏற்பாட்டுப் பணிகளையடுத்து இப்பொதுக்குழுக் கூட்டமும், குடும்ப சங்கம நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன.

நிகழ்வு நாளுக்கு முந்திய நாளான சனிக்கிழமையன்று, மன்ற நிர்வாகிகளின் வழிகாட்டலில், தன்னார்வ இளைஞர் குழு, பெங்களூரு நகரிலிருந்து சுமார் 1 மணி நேர வாகனப் பயணத் தொலைவிலுள்ள இத்தோட்டத்திலேயே முகாமிட்டு, இரவு நேரக் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏற்பாட்டுப் பணிகளைச் சிரமேற்கொண்டு செய்திருந்தது.

காயலர் ஒன்றுகூடல்:

நிகழ்வு நாளான 10.12.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 08.00 மணி துவங்கி, 10.00 மணி வரை - மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். நாற்சக்கர வாகனம் வைத்திருந்தோர் தம் குடும்பத்தினருடன் நிகழ்விடம் வந்தனர். வாகனம் வைத்திராத உறுப்பினர்களுக்காக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேன் வாகனத்தில் இதர உறுப்பினர்கள் வந்து சேர்ந்தனர்.

குளியல் & காலைச் சிற்றுண்டி:

முற்றிலும் மரங்கள் அடர்ந்து சோலைவனமாகக் காட்சியளிக்கும் இத்தோட்டத்தில், தங்கும் வீட்டின் மாடியிலேயே பலர் குளிக்கும் வகையில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நெடுந்தொலைவிலிருந்து வந்து சேர்ந்ததால் அலுப்பிலிருந்த பலர், வந்த வேகத்தில் குளியல் தொட்டிக்குள் விழுந்து இன்பக் குளியல் நடத்தினர். கட்டிடத்தின் தென்புறத்தில், ஏழிலைக் கிழங்கு பகுடு பதார்த்தத்துடன் சுவையான இஞ்சி தேனீர் வரவேற்புப் பதார்த்தமாகவும், சுவையான சிக்கன் சேமியா காலை உணவாகவும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. மறுபுறத்தில், மதிய உணவு ஆயத்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.



பொதுக்குழுக் கூட்டம்:



11.30 மணியளவில் மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் துவங்கியது. மன்றத் தலைவர் ‘ஹனீவெல்’ இப்றாஹீம் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் முஹம்மத் அபூபக்கர் முன்னிலை வகித்தார்.

ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் ஸாலிஹ் ஸஈத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.



ஹாஃபிழ் என்.ஜெ.எஸ்.ஷெய்க் அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் ஷேக் அப்துல்லாஹ் முஹாஜிர் வரவேற்புரையாற்றினார்.



மன்றத் தலைவர் ‘ஹனீவெல்’ இப்றாஹீம் தலைமையுரையாற்றினார். இதுநாள் வரை மன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள நகர்நலத் திட்டப் பணிகள், நிர்வாகப் பணிகள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அவரது உரையில் இடம்பெற்றன.



மன்றப் பொருளாளர் வாவு – மன்றத்தின் கடந்த ஓராண்டு வரவு – செலவு கணக்கறிக்கையைச் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.



ஏற்கனவே, கல்விக்காகவும் – வேலைவாய்ப்பு தேடியும் பெங்களூரு வரும் காயலர்கள் தங்குவதற்காக விடுதி ஏற்பாட்டை மன்றத்திற்காகச் செய்தளித்த மன்றத் துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் புகாரீ, மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தான் புதிதாகச் செய்துள்ள இட ஏற்பாடு குறித்து இக்கூட்டத்தில் விளக்கிப் பேசினார்.



உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைப்புடன் - ஷிஃபா அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வரும் மக்கள் மருந்தகத்தின் தற்காலச் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் – முன்னிலை வகித்த – சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினரும் – மக்கள் மருந்தக நிர்வாகியுமான சாளை நவாஸ் விளக்கிப் பேசினார்.

இக்கூட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொண்ட – துளிர் அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத், துளிரின் சேவைகள் குறித்தும், எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.



உடல் நல கருத்தரங்கம்:

இந்நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, உடல் நல கருத்தரங்கம் துவங்கியது. மன்றத்தின் உறுப்பினரும், முடநீக்கியல் நிபுணருமான ஹாஃபிழ் எம்.டீ.யாஸர் அரஃபாத் – முடநீக்கியல் (ஃபிஸியோதெரபி) துணையில் தான் அளித்த சிகிச்சை, அதனால் நோயாளிகள் பெற்ற பலன் குறித்து விவரித்ததோடு, எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.



சிறப்பு விருந்தினர்கள் உரை:

இக்கூட்டத்தில், “இயல்வழி மருந்தில்லா மருத்துவக் குழும” நிர்வாகிகளான எஸ்.கே.ஸாலிஹ் (நிறுவனர்: தாருத்திப்யான் நெட்வர்க்), அக்குஹீலர் சக்தி பகதூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அவர்களது உரைச் சுருக்கம் வருமாறு:-

எஸ்.கே.ஸாலிஹ்:

நமது பெங்களூரு காயல் நல மன்றத்தால், இங்கு கல்வி - வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக வருவோர் தம் தேவை நிறைவேறும் வரை தங்கிட மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி இல்லத்தாரின் உதவியில் விடுதியை ஏற்பாடு செய்து தந்து சில ஆண்டுகளாகியும், அதன் பயன்பாடு எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே உள்ளதாக துணைத்தலைவர் இங்கே குறிப்பிட்டிருந்தார். இது, “கரும்பு தின்னக் கூலியா?” என்று கேட்பது போல உள்ளது. ஒருபுறம் இதுபோன்ற சேவைகளை யாராவது செய்து தர மாட்டார்களா என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் நிறைந்திருக்க – மறுபுறம் இங்கோ – தரப்பட்ட சேவையைப் பயன்படுத்த யாருமில்லையா என கூவிக்கூவி அழைக்கும் நிலையுள்ளதை அறிய வேதனையாக உள்ளது. இனி வருங்காலங்களிலேனும் இந்நிலை மாற வேண்டும்.

வெளிநாடுகளில் கிடைக்கும் ஊதியம் வேண்டுமானால் கண்ணுக்குப் பெரிதாகத் தெரியலாம். ஆனால் அங்கு ஏற்படும் செலவினங்களைக் கழித்துப் பார்க்கையில், கையில் எஞ்சும் தொகை, உள்நாட்டில் ஈட்டுவதைப் போலத்தான் உள்ளது என்பதை அறியும்போது, இவ்வளவு அவதிகள் தேவைதானா என்று நினைக்கத் தோன்றுகிறது.

எனவே, வெளிநாடுகளில் பல்லாண்டு காலமாகப் பணியாற்றி பலரும் கூட இன்று தாயகத்தை நாடி வந்துகொண்டிருக்கையில், இன்றளவும் மாணவர்கள் பலர் எட்டாத வாய்ப்புகளை எதிர்பார்த்து வெளிநாடுகளுக்குப் படையெடுப்பதை விட, இதுபோன்ற நகரங்களில் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதே சிறந்தது என்று கருதுகிறேன்.

கடந்தாண்டு, உடல் நலன் குறித்து சில கருத்துக்களை இங்கே பதிவு செய்தேன். அதன் வழி நின்று சில கூடுதல் தகவல்களை மட்டும் உங்கள் முன் பகிர ஆவல் கொள்கிறேன்... மனித உடல் ஒருபோதும் தவறிழைக்காது. உடலில் ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி, தடுமல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அனைத்துமே – உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை உடலுக்குள் இருக்கும் மருத்துவர் தானாகவே வெளியேற்ற முனைவதன் அடையாளங்களே ஆகும். எனவே, இந்த அடையாளங்களை நோய் என்று கருதாமல், கழிவை வெளியேற்றும் காரணிகள் என்று சரியாகப் புரிந்துகொண்டால், மருந்து எனும் பெயரில் எதையும் உடலுக்குள் செலுத்த மாட்டோம்.

அதுபோல, இந்த நவீன உலகில் எடுத்ததற்கெல்லாம் கருவிகளை நாடும் நிலையுள்ளது. இதன் காரணமாக, மனிதன் இத்தனைக் காலமாக உடலை இயக்கிச் செய்து வந்த பல வேலைகள் இன்று உடல் சிறிதளவும் இயங்காத நிலையிலேயே செய்யப்பட்டு வருகிறது. எனவே, பசியைக் கூட உணராமல் அவன் நேரம் பார்த்து உண்ணும் உணவுகள் அனைத்தும் சத்துகளாக மாற்றப்படுவதற்குப் பகரமாக, கழிவுகளாக உடலிலேயே தேக்கமடைகிறது. அவ்வாறு தேங்கும் கழிவுகள் – தேக்கத்தின் கால அளவைப் பொருத்து வெவ்வேறு வகையில் உருமாற்றம் கண்டு, உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கிறது. இதனைத் தவிர்க்க, இயன்றளவுக்கு உடலை இயக்கி மீண்டும் நாம் நம் வேலைகளைச் செய்தாலே போதுமானது.

இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது.

‘அக்குஹீலர்’ சக்தி பகதூர்:

தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் ‘அக்குஹீலர்’ சக்தி பகதூர் உரையாற்றினார்.



இன்று உலகில் நாகரிகம் வளர வளர, மனிதன் செயற்கை முறையிலான வாழ்வியலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வருகிறான்.

இயற்கையான உணவுப் பதார்த்தங்கள் இன்று மங்கிப்போய், உறைகளில் அடைக்கப்பட்ட - வேதிப் பொருட்களால் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவே முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொஞ்சம் சாப்பிட்டாலும், தமது உடலியக்கத்தால் ஓரளவுக்கேனும் வியர்வையைச் சிந்தியவர்கள், இன்று மின் விசிறிகளின் அடியிலும், ஏசியால் குளிரூட்டப்பட்ட அறைகளிலும் தஞ்சமடைவதால், உலகின் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, மரம் (வானம்) உள்ளிட்ட எதுவுமே அவர்களின் மேனியில் படுவதில்லை.

உடலின் பசி, தாகம், உறக்கம், ஓய்வு ஆகியவற்றைக் கவனித்து - உடலின் மொழியறிந்து செயல்பட்டால் எல்லாப் பிணிகளும் இல்லாமல் போகும். உடலில் தேங்கும் கழிவுகளே நோய்கள். எனவே, அக்கழிவுகள் நீக்கப்பட்டால் உடல் நலன் பாதுகாக்கப்படும்.

உடற்கழிவுகள் - மலம், சிறுநீர், வியர்வை, சளி உள்ளிட்டவற்றின் வழியே அடிப்படையாக வெளியேற்றப்படுகிறது. ஆனால், நாம் ஒரு வேளை சாப்பிட்ட பின், அடுத்த வேளை பசிக்காத நிலையிலும் - கடிகாரத்தைப் பார்த்து சாப்பாட்டு நேரத்தைக் கணக்கிட்டு உண்கிறோம். பசிக்காத நிலையில் சாப்பிட்டதால், ஏற்கனவே சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல், உடலில் கழிவாகத் தேங்குகிறது. அக்கழிவுகள் பிற்காலத்தில் பல்வேறு நோய்களை உடலில் வெளிப்படுத்தி, உடல் நலனைக் கெடுக்கிறது.

இதைத் தவிர்க்க,

பசியெடுத்தால் மட்டுமே சாப்பிடுவேன்! பசிக்காமல் சாப்பிட மாட்டேன்!!

தாகித்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பேன்! தாகமின்றி நீரருந்த மாட்டேன்!!

எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்குவேன்! உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டால் வேலையை நிறுத்தி ஓய்வெடுப்பேன்!!

கண்ட நேரத்திலும் உறங்க மாட்டேன்! உறக்கம் வந்தால் உடனேயே உறங்கிவிடுவேன்!!

என்ற நிலைப்பாட்டை மனதில் அழுத்தமாக ஏற்றி, வாழ்வில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால், உடல் நலன், மன நலன் இரண்டும் நன்றாகப் பாதுகாக்கப்படும்.

படுத்தவுடன் உறக்கம் வந்தால் மனம் நலமுடன் இருக்கிறது என்றும், கழிப்பறை சென்றவுடன் சிரமமின்றி மலம் வெளியேறினால் உடல் நலமுடன் இருக்கிறது என்றும் அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது. உரையைத் தொடர்ந்து, பங்கேற்றோர் எழுப்பிய – உடல் நலன் தொடர்பான பல கேள்விகளுக்கும் அவர் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்தார். நிறைவில், தேவைப்பட்டோருக்கு அவர் அக்குபங்சர் சிகிச்சையும் அளித்தார். நினைவுப் பரிசுகள்:

மேடையில் முன்னிலை வகித்தோர், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் - அதன் நிர்வாகிகளால் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.



கடந்த 15.10.2017. அன்று, கத்தர் காயல் நல மன்றம், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு ஆகிய அமைப்புகளுடன் பெங்களூரு காயல் நல மன்றமும் இணைந்து நடத்திய அரபு வனப்பெழுத்து வரைகலை (Arabic Calligraphy) நிகழ்ச்சிக்கான அடிப்படை ஏற்பாடுகளை – மன்றத்தின் சார்பில், துவக்கம் முதல் – தேவைப்பட்ட அனைத்து நேரங்களிலும் இணைந்து செய்த ஹாஃபிழ் ஷேக் அப்துல்லாஹ் முஹாஜிருடைய சேவையைப் பாராட்டி, இக்கூட்டத்தின்போது சிறப்பு நினைவுப் பரிசு அளித்து கண்ணியப்படுத்தப்பட்டது.



மன்றத்தின் முன்னாள் தலைவரும், நடப்பு ஆலோசகருமான பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் நன்றி கூற, துஆவுடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.



மீண்டும் குளியல்:

மதிய உணவு ஆயத்தமாக உள்ளதாகவும், குளியல் - ளுஹ்ர் தொழுகையை நிறைவேற்றிய பின் அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்படவுள்ளதாகவும், இடைப்பட்ட நேரத்தில் மகளிருக்கு விருந்துபசரிப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆண்கள் அனைவரும் குளியல் தொட்டிக்குள் இறங்கி, நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.

ளுஹ்ர் தொழுகை:

குளியலை முடித்துக்கொண்டு, அனைவரும் ளுஹ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றினர்.





மதிய உணவு விருந்துபசரிப்பு:

இப்பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் ஊரிலிருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதற்காக, காயல்பட்டினத்திலிருந்து சமையல் கலைஞர் முத்துவாப்பா தொடர்ந்து இரண்டாமாண்டாக வரவழைக்கப்பட்டிருந்தார்.

அவரது தனித்திறனுடன் கூடிய கைவண்ணத்தில், காலை உணவாக சிக்கன் சேமியா, மதிய உணவாக காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு ஆகியவற்றையும், காயல்பட்டினத்தின் இஞ்சி தேனீரையும் அவர் ஊரின் சுவை மாறாது நிறைவாக அவர் தயாரித்திருந்தது, பங்கேற்ற அனைவருக்கும் - குறிப்பாக மகளிருக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. ஸஹன் முறையிலும், தனித்தட்டுக்களிலும் அனைவரும் மதிய உணவுண்டனர்.





மழலையர், பெரியோருக்கான பல்சுவைப் போட்டிகள்:

தொடர்ந்து மழலையருக்கான பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டது. அவையில் முன்னிலை வகித்த கவிஞர் ஜாஹிர் ஹுஸைன் அழகிய இறைத்துதிப் பாடல்களைப் பாடி இவ்வமர்வைத் துவக்கி வைத்தார்.



துவக்கமாக திருக்குர்ஆனின் சிறு அத்தியாயங்களை அழகுற ஓதும் போட்டி நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர் எஸ்.கே.ஸாலிஹ் இப்போட்டியை நடத்தினார்.



தொடர்ந்து, மழலையருக்கான பலூன் உடைக்கும் போட்டி, எலுமிச்சம்பழத்தைத் தாங்கிய கரண்டியை – பழம் கீழே விழாமல் எடுத்துச் செல்லும் ஓட்டப் போட்டி, நினைவாற்றல் போட்டி என பல போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றை, பெங்களூரு காயல் நல மன்றத்தின் ‘கேம் அங்கிள்’ வாவு ஷாஹுல் ஹமீத் ஒருங்கிணைத்து நடத்தினார்.















இப்போட்டியின்போது ஒன்று சிரிக்க, ஒன்று அழ, ஒன்று சுட்டித்தனம் செய்ய, ஒன்று கோபத்தை வெளிப்படுத்த என வெவ்வேறு குணங்களுடனான அவர்களது நடவடிக்கைகள் அனைவரது கண்களுக்கும் விருந்தளித்தன.



இப்போட்டிகளைப் பார்த்து, ஆர்வமுடன் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்ட சிறப்பு விருந்தினர் ‘அக்குஹீலர்’ சக்தி பகதூர், தன் பங்குக்கு – மழலையருக்கான கவனத்திறன் போட்டி ஒன்றை நடத்தி மகிழ்வித்தார்.







அதனைத் தொடர்ந்து, மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இசைப் பந்து (Musical Ball) போட்டி நடத்தப்பட்டது. கடைசி வரை நின்று வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற முனைப்புடன் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கையில், தன் கையில் பந்து இருக்கும் நேரம் பார்த்து இசையை நிறுத்திய ஒருங்கிணைப்பாளரைச் செல்லமாகக் கடிந்தவாறே அவர்கள் ஒவ்வொருவராகப் போட்டியிலிருந்து வெளியேறியது அனைவரையும் ரசிக்க வைத்தது. வெற்றிபெற்றோர் கூட்டத்தில் பாராட்டப்பட்டனர்.











நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மழலையர், சிறுவர் - சிறுமியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை, மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

அஸ்ர் தொழுகை மற்றும் மாலை சிற்றுண்டி:

அனைவரும் அஸ்ர் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றினர். அனைவருக்கும் இஞ்சி தேனீர், ஏழிலைக் கிழங்கு பகுடு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

மஃரிப் தொழுகை:

18.30 மணியளவில் மஃரிப் தொழுகையை நிறைவேற்றிய பின், அவரவர் குழுப்படம் எடுத்துக்கொண்டவர்களாக, பிரிய மனமின்றி வசிப்பிடம் திரும்பினர்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள உதவி:
உமர் அப்துல் காதிர்

செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..AIRCONDITIONED CITY
posted by mackie noohuthambi (kayalpatnam) [22 December 2017]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 45950

பெங்களூரை நினைத்தாலே நினைவுகள் பசுமையாகின்றன. ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் ஒரு குளிரூட்டப்பட்ட நகரிலே காலடி எடுத்து வைத்துள்ள பசுமையான நினைவுகள் நம்மை வந்து சூழ்ந்து கொள்கிறது.

அது சுகமான பயணம். சில ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்றபோது நமது நினைவில் வாழும் ஆடிட்டர் புகாரி அவர்கள் காயல்பட்டினம் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் கொடுத்துள்ள இல்லத்தை பார்த்தேன் அங்கு தங்கினேன்.

இறை இல்லம் ஒன்று
மக்தப் இன்னொன்று
நமது மக்கள் வேலை தேடி செல்பவர்கள் தங்கும் இடம் ஒன்று.

அந்த தாயுள்ளம் ஆடிட்டர் புகாரி அவர்களின் துணைவி என்னிடம் சொல்லி வருத்தப் பட்ட செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.

இங்கு தங்கி வேலை தேடும் நமதூர் இளைஞர்கள் அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும். அவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை நானும் அதை நேரில் பார்த்தேன், தொழுகைக்கும் அங்கு தங்கியிருக்கும் நேரத்தில் அவர்கள் ஜமாத்தில் கலந்து கொள்வதில்லை என்ற கசப்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

பெங்களூர் காயல் நல மன்ற உறுப்பினர் எனது பாசத்துக்குரிய ஷேய்க் அப்துல்லாஹ் ஹாபிஸ் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். இங்கு தங்கும் மாணவர்களின் ஈமெயில் id உங்கள் கையில் இருக்க வேண்டும். தினமும் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் அசைவுகளை கண்காணிக்க வேண்டும். அவர்களும் அன்றாட எங்கே சென்றேன் என்ன நேர்காணல் நடந்தது என்று உங்களிடம் அறிக்கை தரவேண்டும். அப்போதுதான் பெருந்தகை புகாரி அவர்கள் நமது மக்களுக்காக செய்துள்ள உதவியின் மகத்துவத்தை உணர முடியும்.

ஏதோ வந்தோம் ஜாலியாக கட்டணமின்றி பெங்களூரில் பொழுதை களித்தோம் அனுபவித்தோம் சென்றோம் என்று இருக்க அவர்களை அனுமதிக்காதீர்கள் என்று சொன்னேன்.

THERE IS NO SUBSTITUTE TO HARD WORK என்பதை அவர்கள் உணர வேண்டும். கணினி நகர் என்று பெங்களூருக்கு இன்னொரு பெயர் உண்டு உலகம் முழுவதும் பெங்களூர் நோக்கி பயணிக்கிறது கணினி மென்பொருளுக்காக அங்கே பயின்றவர்கள் தங்கள் நிறுவனங்களில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்.

HONEYWELL இப்ராஹிம் அவர்கள் நமதூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் ஏழ்மையில் பிறந்து வளர்ந்து பின் எட்டிப் பிடித்த சிகரத்தை பற்றி பேசிய நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். அவர் நமதூர் மக்களுக்கு உதவி செய்வதற்கு எல்லா வாசல்களையும் திறந்து கொடுத்தார்கள். நமது மக்கள் அவர்களை பயன்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது கண்கள் பனிக்கின்றன இதயம் இனிக்கிறது. ஆடிட்டர் புகாரி அவர்களின் நல்ல எண்ணத்தை நாம் நிறைவேற்ற வேண்டும் அவர்கள் இல்லத்தை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். அப்படி நாம் பயன்படுத்த தவறினாலும் அல்லாஹ் அவர்கள் எண்ணத்துக்குரிய நற்கூலியை வழங்கி கொண்டே இருக்கிறான். சதக்கதுன் ஜாரியா வாக அந்த இல்லம் விளங்கி கொண்டிருக்கிறது.

ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்.
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்.
பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ புகழை வாங்க வந்தார்
இதயம் என்பதை விலையாய் கொடுத்து
அன்பை வாங்கிட எவருமில்லை என்று ஒரு கவிஞன் பாடுகிறான்.

ஆடிட்டர் புகாரி அவர்களின் இல்லம் நமக்காக திறந்திருக்கிறது காயல் நலமன்றம் நமக்கு வழி காட்ட காத்துக் கொண்டிருக்கிறது. நமது இளைஞர்கள் கணினி உலகத்தில் தடம்பதித்து சாதனை செய்வதற்கு பதிலாக அந்த கணினியில் முக நூலில் முகம் புதைத்துக் கொண்டு வாட்டசுப்பில் தேவை இல்லாத விஷயங்களை எல்லாம் வைரலாக வைரஸாக பரவவிட்டு கொண்டு தங்கள் இளமையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல ஒரு நிகழ்ச்சி இங்கே நடை பெற்றிருக்கிறது. இனிமேலாவது நமது இளைஞர்கள் இந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்ற பாதையில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 2018 இன்னும் சில நாட்களில் பிறக்கப் போகிறது. நாளை விடியும் பொழுது நல்ல பொழுதாக இருக்க வாழ்த்துக்கள்.

மலச்சிக்கல் இல்லாமல் பொழுது விடுகிறதா
மனச்சிக்கல் இல்லாமல் பொழுது முடிகிறதா
பணச்சிக்கல் இல்லாமல் பொழுது நகர்கிறதா..

அல்ஹம்து லில்லாஹ். இவை நமது வாழ்வில் முக்கியமான செய்தி அதையும் இங்கே மருமகன் ஸாலிஹ் அவர்களும் மருத்துவர் அவர்களும் விளக்கி இருக்கிறார்கள் அவர்களுக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நன்றியும் வாழ்த்துகளும்!!!
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) [25 December 2017]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45953

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

பொதுக் குழு நிகழ்வு குறித்து அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

அரபு வனப்பெழுத்து வரைகலை முகாமின்போது, மற்ற இரு அமைப்புகளுடன் கைகோர்த்து, பெங்களூரு காயல் நல மன்றம் பெரும்பங்காற்றியது.

அல்-ஹாஃபிழ் அப்துல்லாஹ் காக்காவின் பங்களிப்பு மிகவும் சிறப்பானதாக இருந்தது. அவர்களின் பணியை தகுந்த நேரத்தில் கண்ணியப்படுத்தியதை கண்டு, இம்மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வமைப்பின் தலைவர் ஹனீவெள் இப்றாஹீம் காக்கா & மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்!

அ.ர.ஹபீப் இப்றாஹீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved