Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:34:05 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 236
#KOTWEM236
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 18, 2018
வடகிழக்கிந்தியப் பயணம் – 7

இந்த பக்கம் 2370 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சம்பாயிலிருந்து இந்திய மியான்மர் எல்லை நகரமான ஜோகவ்தாருக்கு சென்றோம். நாற்சக்கர ஊர்திகள் நகரின் அங்காடி வரைக்கும்தான் செல்கிறது. அங்கிருந்து மியான்மருக்குள் நுழைந்து சுற்றிப்பார்க்க இரு சக்கர ஊர்திகளைத்தான் வாடகைக்கு அமர்த்த வேண்டும். படமெடுத்த பாம்பைப்போல மெலிந்து நீண்ட உடலுடன் மிஸோ இளைஞர்கள் தலைக்கவசம் அணிந்து வண்டிகளின் மேல் அமர்ந்திருந்தனர்.

ஆளுக்கொரு வண்டியில் ஏறிக் கொண்டோம். குடிவரவு & குடியகல்விற்கான இந்திய எல்லைச் சாவடிக்கு சென்று எங்களது ஆதார் அட்டைகளை நீட்டினோம். கொழுத்து இறுகிய பன் முகங்களைக்கொண்ட சிப்பாய்கள். கறுப்புக்கும் சிவப்பிற்கும் இடைப்பட்ட நிறம். அரை இமை திறந்த ஆமை போல முழித்தனர். நாட்டை விட்டு வெளியேறுவதற்கான இசைவு வேண்டும் எனக் கேட்டோம். அப்படி ஒன்றும் தேவையில்லை என்ற பாணியில் மந்தமாக சிரித்தனர்.

நடுவணரசுதான் இப்படியென்றால் மாநில அரசும் மெத்தனமாகத்தான் உள்ளது. வெளி மாநிலத்தவர் மிஸோரத்திற்குள் நுழைய கடும் கெடுபிடிகள் காட்டும் மிஸோரம் அரசானது பன்னாட்டு எல்லைப்பகுதியின் கண்காணிப்பு பற்றி கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளவில்லை. மியான்மர் தங்களின் ஆதி நிலம் என்ற மன நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம். அத்துடன் மியான்மர் வழியாக தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கு மேம்பட்ட வாழ்க்கைக்காகவும் பொருளாதார நலன்களுக்காகவும் மிஸோக்கள் எளிதாக பயணிக்க முடிகின்றது என்பதும் ஒரு காரணம்.

இந்திய மியான்மர் எல்லைப்பாலத்தினைக்கடந்த பின்னர் மியான்மரின் சின் பிராந்தியத்தின் ரீ கவ் தர் மியோ கிராமம் வருகின்றது. மியான்மரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சின் பிராந்தியத்தினுடனான இன்னொரு இந்திய எல்லையானது மணிப்பூருடனும் வருகின்றது.



மியான்மரின் ராணுவ ஆட்சியின் கீழ் ஒடுக்கப்பட்டு, தற்போதைய அரசாலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வரும் பகுதிதான் சின். கொடும் வறுமையும் பஞ்சமும் போதிய உணவின்மையும் நிறைந்த பகுதி இது. மருத்துவ, சாலை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் போன்றவை மோசமான நிலையிலேயே உள்ளன.

இவை அனைத்திற்கும் காரணம் மியான்மர் ஒரு பௌத்த பெரும்பான்மை நாடு. ஆனால் சின் மக்களோ கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்கள். கிறிஸ்தவர்களை வலுக்கட்டாயமாக பௌத்தர்களாக மதமாற்றும் முயற்சிகளையும் கிறிஸ்தவ அடையாளங்களை அழிக்கும் வேலைகளையும் சிறுபான்மையினரின் வழிபாட்டுரிமைகளை மௌனமாக மறுதலிக்கும் போக்கையும் மியான்மரின் அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றது.

மியான்மர் சோதனைச்சாவடியில் எங்களின் ஆதார் அட்டையை வாங்கி வைத்துக் கொண்டார்கள். மாலைக்குள் திரும்ப வேண்டும் அங்கிருந்த தலைமை அலுவலர் தலைக்கு 10 ரூபாய்களையும் வாங்கிக் கொண்டார். மியான்மர் நேரமானது இந்திய நேரத்தை விட ஒரு மணி நேரம் கூடுதல். இரண்டு நேரங்களையும் காட்டும் கடிகாரங்களை வைத்திருக்கிறார்கள்.







கிராமத்திற்குள் நுழைந்தோம். மரப்பலகைகளிலான பெட்டிக்கடையும் அதனுடன் சேர்ந்த வீடொன்றும் நின்றன. கூடைகளில் நாட்டுகோழி முட்டைகள் சிவந்து கிடந்தன. கடைக்காரரிடம் இந்திய பத்து ரூபாய் தாளை நீட்டி மியான்மர் செலாவணியைக் கேட்டோம். நூற்றைம்பது கியாட்டுகள் தந்தார்.

நாங்கள் தேநீர் கிடைக்குமா ? எனக் கேட்டதற்கு. இல்லை என முதலில் சொன்னவர்களிடம் வேறெங்கு கிடைக்கும்? எனக் கேட்டோம். எங்களை அமரச்சொன்னார்கள். ஐந்து நிமிடங்களில் பெரிய குவளைகளில் பால் கலந்த காஃபியை அவர் மனைவி கொண்டு வந்தார். அத்துடன் மென் பஞ்சு போலிருந்த முட்டை கலந்த உள்ளூர் தின்பண்ட சிப்பம் ஒன்றை தந்தார்கள். காசை நீட்டினோம். வாங்க மறுத்து விட்டார்கள். இது எங்கள் அன்பளிப்பு என்றனர். அந்த பலகை வீட்டிற்குள் சென்றோம். ஏசு நாதரின் படத்துடன் தங்கள் மகனின் படத்தையும் மாட்டி வைத்திருந்தனர். மொழி சிக்கலினால் முக பாவனைகளும் புன்னகையுமே மொழியாக எங்களுக்குள் மாறியது.





ரீ எனப்படும் ஏரிக்கு சென்றோம். மிஸோக்கள் அனைவருக்கும் புனிதமான ஏரி. தங்கள் முன்னோர்கள் அங்கு குடியிருப்பதாக கருதுகிறார்கள். மிஸோரத்துக்குள்ளும் இதே போல மியான்மரிகளுக்கு புனிதமான ஏரியொன்று இருப்பதாக சொன்னார்கள். நாங்கள் போன சமயம் வேக்காட்டை உண்டாக்கும் இளம் வெயிலடித்துக் கொண்டிருந்தது. வெயிலை உருக்கி ஓட விட்டாற் போல ஏரித்தண்ணீர் கிடந்தது. ஓய்ந்து கிடக்கும் முதிய மனதில் ததும்பும் நினைவுகளைப்போல மெல்லிய காற்றினசைவில் கரையை முட்டிக் கொண்டிருந்தது நீர். சிறு சிறு குப்பிகளில் பாசியையும் ஏரி நீரையும் நிரப்பிக் கொண்டிருந்தனர் இரு படகோட்டிகள். விற்பனைக்கான புனித பொருள் .





கொஞ்ச நேரத்தில் மிஸோ மாணவ மாணவியர் வந்து குவிந்தனர். அவர்களின் களிப்போசையில் ஏரியின் மீது விழுந்து கிடந்த மௌனம் கரைந்தது.

ஊருக்குள் மேடொன்றில் சிறு பௌத்த விகாரையொன்று இருந்தது. இளம் இணையர் ஏதோ வேண்டுதலுக்காக அங்கு அமர்ந்திருந்தனர். ஊட்டுப்புரையில் சிறுவனொருவன் உணவருந்திக் கொண்டிருந்தான். இறையியல் மாணவன் போலும். சட்டையணியாத கட்டு மஸ்தான தண்டவாளம் போன்ற உடலைக் கொண்ட பணியாளர் அங்கு நின்றிருந்தார். முகச்சவரம் செய்யப்பட்ட தெளிவான முகம். கேடயம் போலிருந்தது.

கொல்லாமை, அடுத்தவர் பொருளை விரும்பாமை, தவறான இன்பத்தைக் கொள்ளாமை, பொய் பேசாமை, மது அருந்தாமை என்ற பௌத்தத்தின் ஐவகை நெறிகளும் சுவரில் வரையப்பட்டிருந்தன. வெண்கல தாம்பாளத்தில் எங்களுக்காக மரச்சுத்தியலைக் கொண்டு தட்டினார் பௌத்த துறவி. ரீங்காரம் அதிர்ந்து பரவியது.





மியான்மரிகள் தேரவாத பௌத்தத்தை பின்பற்றுபவர்கள். தேரவாத பௌத்தம் என்றால் முன்னோர்களின் வழி என்று பொருள். பௌத்தத்தின் இந்த கிளையானது சிறீலங்கா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, தென்கிழக்காசியாவின் ஒரு பகுதியிலும் பின்பற்றப்படுகின்றது.

கி.பி.1044 இல் பகான் அரசாட்சி காலத்திலேயே மியான்மரின் அரசாட்சிக்குள் பௌத்தம் நுழைந்து விட்டது. 1961 இல் அன்றைய மியான்மரின் தலைமையமைச்சர் யூ நூ பௌத்தத்தை ஆட்சி மதமாக அறிவித்தார். சராசரி மியான்மரிய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பௌத்த சங்கமானது சன்னஞ்சன்னமாக மியான்மரிய தேசீய வாதத்துடன் கலந்தது. ஆன்ம அமைதியின் அகல் விளக்கான பௌத்தமானது பேரினவாத எரிகொழுந்தாக ஊதி விசிறப்பட்டுள்ளது . இன்று அது மொத்த மியான்மரையும் வளைத்து பிடித்துள்ளது.

தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் சிறீலங்காவும் மியான்மரும் இந்திய எல்லையை ஒட்டியே அமைந்திருப்பதாலும் சனாதன தெய்வங்களையும் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் பிரிவினைகளையும் இந்த தேரவாத பௌத்தம் பெருமளவில் உள்வாங்கியிருக்கின்றது அதனால்தான் சக மனிதன் மீதான வெறுப்பை பௌத்த ஆன்மீகத்தின் பெயரால் நிகழ்த்த முடிகின்றது. இத்தனைக்கும் சனாதனத்தின் முக்கிய குறியீடுகளை தொன்மங்களை நிராகரிப்பதுதான் தேரவாத பௌத்தத்தின் அடிப்படை. மதங்கள் ஆதிக்க வெறிக்கான ஊர்தியாக மாற்றப்படும்போது மதத்தின் ஆன்மா இறந்துதான் போகின்றது. ஆதிக்க வாதிகளின் கையில் அது உயிரற்ற கூடாகத்தான் மிஞ்சுகின்றது.

நெகிழ்வு தன்மை மிக்க மஹாயான பௌத்தத்தை பின்பற்றும் சீனம், திபெத், கொரியா, மங்கோலியா, வியத்நாம், ஜப்பான் போன்ற நாடுகள் இத்தகைய மத இன அழித்தொழிப்பை செய்ததில்லை. மஹாயான பௌத்தத்திலிருந்துதான் தன்னை அழித்து தன்னை உணரும் ஜென் பௌத்தம் பிறந்தது.

ரீ கவ் தர் மியோ கிராமத்தின் சந்தைப்பகுதியில் வண்டிக்காக காத்திருந்த பெண்களின் முகத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது. மியான்மரில், சின் பிராந்தியத்து பெண்கள்தான் மிகவும் அழகானவர்களாம். அரசாட்சி காலத்தில் நகர் உலா வரும் அரசர்கள் இங்குள்ள அழகிய இளம் பெண்களை தங்களின் அந்தப்புரங்களுக்கு தூக்கி சென்று விடுவார்கள்.. அவ்வாறு தூக்கி செல்லப்படுபவர்கள் ஒரு போதும் தங்களின் குடும்பத்தினரிடம் திரும்புவதில்லை. இதை தடுக்கும் விதமாக இளம் பெண்களின் முகங்களில் அவர்களது பெற்றோர்களே பச்சை குத்தி விடுவார்கள்.பெரும் பலியிடுதலை அதை விட குறைந்த ஒரு பலியிடுதலின் மூலமாகத்தான் தடுத்திட இயலும் போலும். ஒரு தற்காப்பு முயற்சியானது சமூகத்தின் வழமையாக உருக் கொண்டுள்ளது.

மதிய உணவிற்காக ஒரு உணவகத்திற்குள் சென்றோம். தங்கும் விடுதியும் இணைந்துள்ளது. மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பன்னாட்டு தரத்தில் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. முஸ்லிம் குடும்பத்திற்கு சொந்தமானது. ரீ கவ் தர் மியோ கிராமத்தில் வசிக்கும் ஒற்றை முஸ்லிம் குடும்பம். ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைப்போல மியான்மரின் மற்ற பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் மீது வன்முறை ஏவப்படுவதில்லை. ஆனால் கிறிஸ்தவத்தின் மீது காட்டப்படும் கெடுபிடிகள் அப்படியே இவர்கள் மீதும் அரசினால் நிகழ்த்தப்படுகின்றது. மதிய உணவருந்தி விட்டு இந்திய ரூபாய்களை செலுத்தினோம்.

நாங்கள் திரும்பும்போது இந்திய சுங்கச்சாவடியில் மூட்டையாக மூட்டையாக வணிகப்பொதிகள் குவிந்து கிடந்தன. சோதனையெல்லாம் கண் துடைப்புதான். பெருமளவில் போதைப் பொருட்கள் இங்கு கடத்தப்படுகின்றன.இது ஒரு பன்னாட்டு போதை வணிகத்தடம். மிஸோக்களை தூங்க வைக்க இவை தேவை என நடுவணரசு நினைத்திருக்கலாம்.

சம்பாயிலிருந்து அய்ஸோல் திரும்பும்போது எங்கள் வண்டியில் அஸ்ஸாமின் பொறியாளர் ஒருவரும் பயணித்தார். சம்பாய் மறை மாவட்டம் முன்னெடுக்கும் பள்ளிக்கூட கட்டுமானத்தின் மேற்பார்வை பொறியாளராக அவர் பணியாற்றுகின்றார். இத்தகைய நலப்பணிகளுக்கான மிகக் கூடுதலான நிதி பங்களிப்பானது தமிழகத்தின் திருச்சி, சேலம் மறை மாவட்டங்களிலிருந்துதான் பெறப்படுகின்றன என சொன்னார். அதே போல வடகிழக்கின் வசதியற்ற குழந்தைகளுக்கான கல்வி நல்கையில் கேரள கிறிஸ்தவ நிறுவனங்களின் பங்களிப்பும் மகத்தானது. நல்லறங்களின் ஆடி வழியே தென்னகமானது வடகிழக்கில் நன்றியுடன் நோக்கப்படுகின்றது.

சம்பாயிலிருந்து வெளியேறும்போது சோதனைச் சாவடியில் பதிவதற்காக வண்டி நின்றது. அப்போது எங்களைக் கவனித்த காவலரொருவர் வெளி மாநிலத்தவர்கள் என்பதை புரிந்து கொண்டவராக வண்டியிலிருந்து இறங்கச் சொன்னார். உள்ளக நுழைவு சீட்டை வாங்கி பார்த்தார். இதில் ஏற்பாதாரவாளர் (ஸ்பான்சர்) கலம் நிரப்பப்படவில்லையே? என இறுக்கமாக புன்னகைத்தார். மனிதர் அளவான போதையில் நிறைந்திருந்தார். ஷில்லாங்கிலுள்ள உங்கள் மாநில அரசின் அலுவலர் சரி பார்த்து கையொப்பமிட்டு முத்திரையிட்டதுதானே? அதன் பிறகும் ஏன் கேட்கின்றீர்கள்? சுற்றுலா பயணிகளுக்கு எப்படி உள்ளூர் அறிமுகம் இருக்கும்? என்றெல்லாம் கேட்டோம். இத்தனைக்கும் ஏற்பாதாரவாளர் என்பது கட்டாயமுமில்லை என அந்த படிவத்திலேயே அச்சிடப்பட்டிருக்கின்றது.

ஆனால் அவரிடம் இருந்ததோ மறுக்கும் ஒற்றை மறுமொழிதான். உங்களை சம்பாய் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். பால் குடத்தில் கைப்பிடி கரியை அள்ளி போட்டது போல மொத்த பயணச் சுவையும் கலங்கியது. புன்னகை மாறாமல் கசப்பை புதைத்துக் கொண்டு காவலர்களிடம் வாதாடினோம். எங்கள் வண்டியிலிருந்த வந்த மிஸோ இளைஞரொருவர் காவலர்கள் சொல்வதுதான் சரியென்றார். சாவடி அலுவலகத்திற்குள் கூப்பிட்டார்கள். வடகிழக்கின் பயண அட்டவணைக்குள் காவல் நிலைய வாசம் கூடுதல் சேர்மானமாகப்போகின்றது போல என நினைத்துக் கொண்டிருக்கும்போதே, இளஞ்சிவப்பேறிய கண்களுடன் “ இனி இந்த தவறை செய்யாதீர்கள். நாமெல்லாம் இந்தியர்கள் இல்லையா?” என இளித்தார் காவலர். போதைக்குள்ளும் ஓர்மைகள் மங்குவதில்லை. எங்களிடம் இரவு பானத்திற்கான காசை எதிர்பார்த்திருப்பார்கள் போலிருக்கின்றது. மனது சமநிலையை அடைய கொஞ்சம் நேரமாயிற்று. ஒரு துளி கசப்பில் நாம் சிக்கி விடக்கூடாது என மனம் தெளிந்தது.

தூக்கமற்ற முழு இரவுப்பயணம். பின்னிருக்கையில் இருந்த மழைப்பூச்சி போன்றிருந்த பெண்ணொருத்தி அந்த இருளுக்குள்ளும் கறுப்பு கண்ணாடி அணிந்திருந்தாள். ஓட்டுனர் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு மணி நேரம் தூங்கிய பிறகே வண்டியை எடுத்தார். எங்களது உள்ளக நுழைவுச் சீட்டானது ஒரு வாரத்திற்கானது மட்டுமே. அய்ஸோலில் நாங்கள் மீண்டும் வந்த சேர்ந்த அன்றுதான் கெடு நாள். எனவே அன்று மதியமே அய்ஸோலை விட்டு புறப்பட்டு அஸ்ஸாமின் சில்ச்சர் நகர் சென்றோம்.

போகும் வழியில் கடும் மழை பிடித்தது. துளியாக தொடங்கி வரி வரியாக மாறிய மழை அதன் உச்ச கட்டத்தை எட்டிய போது வெண் துகிலிலான சாளரத்திரையை விருட்டென இழுத்தது போல இருந்தது.

நேப்பாளி ஒருவரின் சாலையோர தேநீர் கடையில் இஞ்சி ஏலக்காயுடன் சூடான தேநீரும் பிஸ்கட்டுகளும் கிடைத்தது. சுவைக்காக இரண்டு முறை அருந்தினோம்.

எங்களுடன் நடுத்தர வயது அஸ்ஸாமியர் ஒருவர் பயணித்தார். அவர் ஒரு தனியார் விற்பனை நிறுவனத்தின் பணியாளர் போலும். மெதுவாக பேச்சை தொடங்கினோம். மோதி அரசின் செல்லாக்காசு, ஜி.எஸ்.டி, போன்றவற்றை மிகத்தீவிரமாக ஆதரித்தார். எப்படி வாதிட்டாலும் அவரின் கண்மூடித்தனத்தில் அழுந்தி நின்றார். எனவே இனி அவரை வைத்து சலிப்பை போக்கிக் கொள்வது என முடிவெடுத்து மோதியை சீண்டினோம். எதிர்பார்த்தது நடந்தது. சூடானார். அகல வாயுள்ள கைப்பை போல அவரின் வாயும் கண்களும் சுருங்கி சுருங்கி பிளந்தது.

கொந்தளிப்பு அடங்கியவுடன் , “அதெல்லாம் இருக்கட்டும் உங்களின் தொழில் எப்படியுள்ளது ? எனக் கேட்டதற்கு பாதிப்பு இருக்கத்தான் செய்கின்றது,” என முனகினார்.

நடுத்தர வயதின் பொருளாதார போதாமைகளும் ஏக்கங்களும் முறைப்பாடுகளும் ஒரு வகையான கையறு நிலையையும் தாழ்வு எண்ணத்தையும், சமூகத்தை பழி வாங்கும் உணர்வையும் தலைக்குள் கொண்டு வந்து நிறைக்கும் போல இருக்கிறது. இவர்கள் ஃபாஸிஸத்தின் சமூக பண்பாட்டு அரசியல் அராஜகங்களில் வன்முறைகளில் தங்கள் மனதின் அரிப்பை கொண்டு போய் தேய்த்து தீர்த்துக் கொண்டு ஒரு வகை விடுதலையை அடைவார்கள். ஃபாஸிஸத்திற்கு பொது மனத்தின் ஏற்பு அங்கீகாரமென்பது இது போன்ற அடித்தட்டு மனங்களிடமிருந்துதான் கிடைக்கின்றது.

வண்டியின் வேகத்திற்கேற்ப மழையும் தீவிரமடைந்து கொண்டிருந்தது. நன்கு இருட்டி விட்டது. சாலையில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் கை காட்டினார்கள். ஓட்டுனர் ஏற்றிக் கொண்டார். மிஸோ பழங்குடி பெண்கள். மழையானது வானத்தையும் நிலத்தையும் ஒன்று போல ஆக்கி விட்டிருந்தது. எதிரே தெரியும் சாலை என்பது கண்களிலிருந்து கிட்டதட்ட மறைந்து மனதிற்குள் நெளியும் ஊகமாகவே மாறி விட்டிருந்தது. நீர் நிறைந்த சாலையின் நடு குழிக்குள் வண்டி தடாரென விழுந்து எழும்பியது. பின்னிருக்கையில் முனகலொலி. வண்டியின் கூரைக்குள்ளிருந்த இரும்புத்தகட்டில் மிஸோ பெண்ணின் தலை மோதி உடைந்து குருதி பெருக்கு.

அந்த பெண்கள் தங்களின் வீட்டை நோக்கி வண்டியை திருப்பச் சொன்னார்கள். வண்டி வந்த வழியே திரும்பியது. வண்டியை நாம் போகும் திசைக்கு திருப்பிய பிறகே அவர்களை இறக்கி விடுமாறு ஓட்டுனரிடம் மோதி ஆதரவு மனிதரும் நாங்களும் சேர்ந்து சொன்னோம். அவர்களின் வீட்டார் மீதான அச்சத்தில்தான் அவ்வாறு சொன்னோம். ஆனால் அந்த பெண்களோ வண்டியிலிருந்து இறங்கும்போது எங்களுக்கு நன்றி சொன்னார்கள். அந்த கணத்தில் எங்களின் உயரத்தில் பாதி உடைந்து விழுந்தது.

சில்ச்சரில் தீபாவளிக்கு முந்திய இரவு காளி பூஜைக்காக சாமி சிலைகளின் அலங்காரம் ஆங்காங்கே பந்தல் கட்டி நடந்து கொண்டிருந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்கும் பெருங்குழந்தைகள் போல சிற்பிகளின் கைகளில் கிடந்தன சிலைகள்.

இங்கு தங்கும் விடுதிகள் சொல்லுந்தரத்தில் இல்லை. மது நெடியுடன் காற்றின் புழுக்க வாசமும் விடுதி முழுக்கவே தேய்த்து ஒட்டியது போலிருந்தது. மறு நாள் காலையே மணிப்பூர் தலை நகர் இம்பாலுக்கான வண்டிக்கான முன்பதிவை பண்ணி விட்டே தூக்கத்தை போட்டோம்.

வண்டியில் ஏறுவதற்கு முன்னர் பயண ஏற்பாட்டாளர்கள், பயணிகளின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்து தாளில் பதிந்து மீண்டும் பரிசோதித்த பிறகே வண்டியை எடுத்தார்கள். 35 கிலோ மீற்றர் தொலைவில் மணிப்பூர் மாநில எல்லையான ஜிர்பிம் வருகின்றது. மாநில காவல்துறையினரின் சாவடி. ஒவ்வொருவரின் ஆதார் அட்டையை வாங்கி அதில் உள்ள குறியீட்டு பகுதியை செல்பேசியின் வருடி மூலம் சோதித்தார்கள். எனது அட்டைக்கு நேராக செல்பேசியை பிடித்தார் காவலர். விவரங்கள் திரையில் தோன்றவில்லை. இது ஒரிஜினலா? நகலா? என்ற கேள்விக்கு மேல் பெரிதாக நோண்டவில்லை. நாங்கள் சுற்றிப்பார்க்க வந்திருக்கின்றோம் என்றவுடன் வாழ்த்தியனுப்பினார்கள்.



சாலைகள் பாதி வழிக்கு நன்றாகவும் மீதி வழிக்கு மோசமாகவும் இருந்தன. இரண்டிலிருந்து பத்து கிலோமீற்றர் தொலைவிற்கு ஒரு காவல் சோதனைச் சாவடி இருந்தது. மாநில காவல்துறை, நடுவண் ஆயுத காவல்படை, அஸ்ஸாம் துப்பாக்கி போன்ற படைப்பிரிவினர் மாறி மாறி சாவடிகளை அமைத்திருந்தனர். ஒரு சாவடியில் காவலுக்கிருந்த கர்நாடக சிப்பாயுடன் உரையாடினோம். அப்போது அவர் அருகிலிருந்த பாதையோரக்கடைக்கார பெண்மணியைக் கைகாட்டி கூறினார், “இவங்க இங்க காய்கறி விக்குறாங்கல்ல. இவங்க வீட்டுல யாராவது ஒரு ஆளு நிச்சயமா தீவிரவாதியா இருப்பாங்க. நம்ப நடமாட்டத்த பத்தி அவங்களுக்கு தகவல இவங்கதான் பாஸ் பண்ணுவாங்க,” என்றார்.

163 கிலோ மீற்றரும் பன்னிரண்டு மணி நேரமும் கொண்ட சில்ச்சர் – இம்பால் பயணத்தில் கிட்டதட்ட பத்திலிருந்து பதினைந்து சோதனைச் சாவடிகள். ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கிய எங்களின் வண்டி ஓட்டுநர் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு பத்திலிருந்து இருபது ரூபாய்கள் வரை கையூட்டாக கொடுத்தார். இரண்டு இடங்களில் பயணிகளை வண்டிகளை விட்டு இறங்க வைத்து சாவடிகளினூடே நடக்க வைத்தனர்.

மணிப்பூர் முழுக்க நடுவண் அரசானது தன் கண்களை விதைத்துள்ளது. சொந்த மக்களைக் கண்காணிப்பதும் ஐயப்படுவதும் அவர்களை எதிரியாக கருதுவதுமான எதிர்மறை சூழல் ஒரு சில தினங்கள் வந்து போகின்ற எங்களைப் போன்ற வெளியாருக்கே மனதிற்குள் எரிச்சலையும் ஒரு வகை அன்னியத்தன்மையையும் ஏற்படுத்தும்போது உள்ளுரில் அது எத்தகைய விலகல் மன நிலையை ஏற்படுத்தும்?

இடைவழியில் மதிய உணவிற்காக சந்தை ஒன்றில் நிறுத்தினர். வழமை போல பெண்களால் நிறைந்த அங்காடிகள். பழங்கள், உணவு வகைகள், மணமூட்டி வகைகளுடன் சிவப்பு மிளகாயும் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்தது. கிளியின் மூக்கை பிய்த்து போட்டது போல இருந்தது. சக நேப்பாள பயணி மிளகாய் சிப்பமொன்றை வாங்கினார். இம்பாலில் இந்த வகை மிளகாயின் விலை கூடுதலாம். அது சரி இவ்வளவு மிளகாயை வைத்து என்ன செய்யப்போகின்றீர்கள் ? எனக் கேட்டதற்கு மிளகாய் ஊறுகாய் செய்வோம் என்றார். இவை காரமிக்கவை. அளவில் சிறியதாக இருக்கிறதே என்ற நினைப்பில் பிய்த்து வாயில் போட்டால் நாக்கின் சதையை அரித்து ஓட்டை போட்டு விடுமாம். அடர் அமிலக் குப்பிகள்.

வழியில் மலைகளைக் குடைந்து கொண்டிருந்தனர். இம்பாலை நாட்டின் ஏனைய பகுதியுடன் இணைக்கும் தொடர்வண்டிப் பாதை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.



மெய்த்தீ ஹிந்து ஓட்டல் மணிப்பூரி முஸ்லிம் ஓட்டல் என தகர பலகைகளில் பெயர் எழுதியிருந்த குடில்கள். வா வா என கூவினர்.

கைகழுவ பின்பக்கம் போய் பார்த்தால் குடிலின் பின்பக்கமானது அந்தரத்தில் மிதந்தது. நீண்ட கழிகள்தான் கடைக்கால். கழிப்பிடத்தைக் கேட்டால் கீழே கைகாட்டினர். ஏணி ஒன்று பாதாளத்திற்குள் இறங்கியது. மேகத்திலிருந்து தரையை எட்டிப் பார்ப்பது போலிருந்தது. சமையல் வேலைகளில் இருந்த மணிப்பூரி முஸ்லிம் பெண்களை படமெடுக்க முயன்றேன். கச்சா பிச்சாவென்று கத்தி மறுத்து விட்டனர். உள்ளூரின் அழகிய பண்பாட்டுடையில் பூவிதழ்களில் பொதியப்பட்ட பழங்களைப்போலிருந்தனர்.

சோற்றுக்கு இறைச்சியுடன் கருவாட்டையும் பரிமாறினர். என்ன கணக்கோ என்ன பொருத்தமோ தெரியவில்லை. மொத்த உணவுமே சிறக்கவில்லை. பசியுமில்லை. அடுத்து என்ன கிடைக்கும் என்ற உத்திரவாதமில்லாத சூழலில் வேறு வழியின்றி உண்ண வேண்டியிருந்தது. மணிப்பூரின் பெரும்பாலான கிராமங்களில் மின்வசதியில்லை. வெளிச்சத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கப்பாக இருக்கின்றன மணிப்பூரின் இரவுகள்.

மாலை ஆறு மணியளவில் இம்பாலுக்குள் நுழைந்தோம். தீபாவளி இரவு. சாலையின் இருமருங்கிலும் அகல் விளக்குகளின் வரிசை. மெய்த்தீகளின் நெற்றியிலுள்ள சந்தனக் கீற்று திலகம் போல இருளோடு சமரசம் செய்து நின்ற ஒளிப்பொட்டுகள் வெளிச்சத்துணுக்குகள். கொண்டாட்டம் அமைதியை அணிந்திருந்தது.

கணக்கற்ற மக்கள், ஊர்தி ஒலிப்பான்கள், சாலைகளில் சுதந்திரமான மாடுகள், ஆங்காங்கே குப்பைகள் என இம்பால் இன்னொரு இந்திய சம நிலம் போல இருந்தது. ஆட்டோக்காரர்களிடமும் ஏமாற்று இருக்கின்றது. நாங்கள் போக வேண்டிய விடுதிக்கு நேராக போகாமல் தலையைச் சுற்றி கொண்டுவந்து விட்டார். நாங்கள் தங்கிய விடுதியானது மார்வாடி பனியா பகுதியில் இருந்தது. கடூரமான பட்டாசு ஒலி. சாலையில் நடப்பதே பெரும் அறைகூவலாக இருந்தது. பட்டாசோடு சேர்த்து நம் தலையை கட்டி விட்டாற் போலிருந்தது. மார்வாடிகளுக்கு அவர்களின் வீட்டையும் கடையையும் தவிர மற்ற அனைத்தும் குப்பை கிடங்குகள்தான். தீபாவளி அன்று அந்த பட்டியலில் வானத்தையும் காற்றையும் கூடுதலாக இணைத்துக் கொள்வார்கள்.



ஷரஃபுத்தீனின் நண்பரின் ஏற்பாட்டில் நீதமான வாடகையில் தரமான விடுதி கிடைத்தது. இம்பாலில் உள்ள நடுவண் தொழில் நுட்ப பயிலகத்தில் பணி புரியும் நாகராஜ் மதுரையைச் சேர்ந்தவர். இளம் வயது பேராசிரியர் அய்ஸோல் சதீஷ் வழியாக அறிமுகம். மாணவர் அஸார், திருச்சிராப்பள்ளியை சேர்ந்தவர். இவர் நாகராஜ் மூலம் அறிமுகம். . இவர்களிருவரும் அறைக்கு வந்து சந்தித்தனர்.



அடுத்த நாளைய இம்பால் உலாவிற்கு துணையாக வருவதாக அஸார் சொன்னார். அன்றைய தினம் வெள்ளிக்கிழமையாக இருந்ததால் இமா சந்தையின் அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு சென்றோம். வெள்ளி மேடையின் உரை மெய்த்தீ மொழியில் இருந்தது. பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமைகளில் தமிழ், உர்தூ, மலையாளம் தவிர்த்து இந்தியாவிற்குள் நான் கேட்ட பிற மொழி உரை இதுதான் . பழங்குடிகளின் மொழியில் ஒரு நல்லுரை. பொதுவாகவே தமிழகம், கேரளத்தை தவிரவுள்ள ஏனைய மாநிலங்களில் உள்ள பள்ளிவாசல்களில் உர்தூ மொழிதான் ஒலிக்கும்.

மணிப்பூரிய இஸ்லாத்தின் வயது நானூறு ஆண்டுகள். மெய்த்தீகளில் ஒரு பிரிவினர் மணிப்பூரின் தனித்த பண்பாட்டுக்கூறுகளை தக்க வைத்துக் கொண்டே இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். முஸ்லிம் மெய்த்தீகள், மெய்த்தீ பங்கால் என அழைக்கப்படுகின்றனர். அரசியல் ரீதியான இன முறுகல்களுக்கப்பால் சனமாஹி, ஹிந்து மெய்த்தீகளுடன் மெய்த்தீ பங்கால்கள் கலந்துறவாடி வாழ்ந்து வருகின்றனர்.

மணிப்பூர் மாநிலமானது மன்னராட்சி, பிரிட்டிஷ் , ஜப்பானிய ஆட்சிகளின் கீழ் மாறி வந்து தற்சமயம் இந்தியாவிற்குள் இருக்கின்றது. 1972 ஆம் வருடம் மணிப்பூருக்கு மாநில அந்தஸ்து கிடைத்தது. மணிப்பூரானது நாகலாந்து, மிஸோரம், அஸ்ஸாம், மியான்மரால் சூழப்பட்டுள்ளது. மணிப்பூரின் சமவெளிகளில் மெய்த்தீ, மெய்த்தீ பங்கால் இனங்களும் மலைப்பகுதிகளில் குக்கி, நாகா இனங்களும் வசித்து வருகின்றன. மணிப்பூரின் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்த்தீ மக்கள் மத்திய சீனத்திலிருந்து வந்தவர்கள் என்றும், தேய் இன மக்கள் எனவும் கூற்றுக்கள் உள்ளன. குக்கி இனத்தவர்களின் வேரானது திபெத்தோ பர்மன் இனவழியாகும். குக்கீகளும் நாகாக்களும் பழங்குடி வழிபாட்டு நம்பிக்கைகளையும், கிறிஸ்தவத்தையும் பின்பற்றுகின்றனர்.

மெய்த்தீகள் அனைவரும் தொடக்கத்தில் சனமாஹிஸம் என்ற பழங்குடி வழிபாட்டு முறையையே கொண்டிருந்தனர். கரீப் நிவாஸ் என்ற மன்னரால் பதினேழாம் நூற்றாண்டில் சைதன்ய வைஷ்ணவம் மணிப்பூருக்குள் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் வந்த மன்னர்கள் வைஷ்ணவத்தை வன்செயல் மூலம் பரப்பினர். சனமாஹி நெறியின் வழிபாட்டுருவங்கள் உடைக்கப்பட்டு புனித நூற்கள் தீயிலிடப்பட்டு அழிக்கப்பட்டன. வைஷ்ணவத்தை ஏற்க மறுத்த மெய்த்தீ மக்கள் கடுமையான தண்டனைகளுக்கும் கொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.



இதன் காரணமாக வெளிவாழ்க்கையில் வைஷ்ணவத்தையும் தரையின் அந்தரங்க வைப்பறைகளுக்குள் தேக்கப்படும் நீர் போல மெய்த்தீகள், தங்களின் மரபார்ந்த சனமாஹி வழிபாட்டு முறைகளையும் வீட்டிற்குள்ளும் வாழ்வின் தனித்த தருணங்களிலும் கடைபிடிக்கத்தொடங்கினர். நாளடைவில் இந்த இரண்டு வழிபாட்டு முறைகளையும் கலந்து பின்பற்றத் தொடங்கினர். இன்று வைஷ்ணவத்திலிருந்து சனமாஹி வேர்களின் பக்கம் திரும்பும் தன்னுணர்வு மெய்த்திகளிடயே பரவத் தொடங்கியுள்ளது. வேர்களை நோக்கிய நீரின் திரும்புதல்.

வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவு செய்து விட்டு இமா சந்தைக்கு சென்றோம், மணிப்பூரி மொழியில் ‘இமா’ என்றால் அன்னை எனப்பொருள். வடகிழக்கின் வழமை போலவே இங்கும் முழுக்க முழுக்க பெண்களிடம்தான் சந்தையின் ஆட்சி.



மதிய உணவை பஞ்சாபி உணவகத்தில் முடித்து காங்லா கோட்டைக்கு சென்றோம். பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரின் வருகை வரை மணிப்பூரின் அரசியல் பண்பாட்டு நடவடிக்கைகளின் மைய இருக்கையாக தலை நகரமாக இந்த கோட்டைப் பிராந்தியம் விளங்கியுள்ளது. சனமாஹி வழிபாட்டு மரபின் தலையாய தெய்வமான பகாங்க்பாவின் உறைவிடம் இங்குள்ளது. மணிப்பூரின் தொன்ம டிராகன் காவல் தெய்வத்தின் வெண் சிலைகளை நிறுவியிருக்கின்றனர். தங்களின் பிளந்த வாய்களின் வழியே வானத்தை இழுத்து உறிஞ்சி குடிக்கும் தீரா தாகத்துடன் நின்றிருந்தன அந்த பெரும்பூனைகள்.







காங்க்லா கோட்டை 2004 ஆம் ஆண்டுகள் வரை அஸ்ஸாம் துப்பாக்கி படையினரின் பாசறையாக திகழ்ந்தது. அதே ஆண்டு, தங்ஜம் மனோரமா என்ற மணிப்பூரி மெய்த்தி பெண்ணை சிறைப்பிடித்து வன்புணர்ந்து அருகிலுள்ள தோட்டமொன்றில் கொன்று எறிந்துள்ளனர் அஸ்ஸாம் துப்பாக்கி படையினர். படையினரின் பெண்ணுடல் வெறிக்கு அதே மொழியில் விடை கூறினர் மணிப்பூரின் 12 பெண்கள். தங்களின் ஆடைகளை முழுவதுமாக துறந்து, “இந்திய ராணுவமே எங்களை வன்புணர்ச்சி செய்!” என்ற பதாகையை ஏந்தி கங்க்லா கோட்டை முன் நின்றனர். அன்றிலிருந்து அந்த பெண்கள் “இமாக்கள்” (அன்னையர்) என அழைக்கப்படுகின்றனர். இந்த போராட்டத்தின் விளைவாக காங்க்லா கோட்டையிலிருந்து அஸ்ஸாம் துப்பாக்கி படையினர் வெளியேறினர்.



மணிப்பூரின் திரையரங்குகளில் ஹிந்தி படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய இணைய காலத்தில் தடைகளெல்லாம் அசாத்தியமானதே. கலைப்படைப்புகள் மீதான தடையை வரவேற்க முடியாதுதான். இத்தனையையும் தாண்டி ஹிந்தி திரைப்படங்களின் மீதான தடையின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

காங்க்லா கோட்டையினுள் மணிப்பூரின் அரசர்கள், மக்களின் வாழ்வியல் , சனமாஹி பண்பாடு போண்றவற்றிற்கான அருங்காட்சியகம் இருந்தது. மணிப்பூரின் சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காட்சியொன்று படமாக தொங்கியது. மூங்கில் பலகங்களில் கைதிகள் பெருக்கல் குறி போல பிணைக்கப்பட்டு தலை சரிந்து கிடந்தனர். அதிகாரமும் வேதனையும் அருகருகே உறைந்து கிடந்தன.



துரித நடையில் பார்க்க வேண்டியிருந்ததால் சரியாக உள் வாங்க முடியவில்லை. பயண நெருக்கடிகளிநால் பலவற்றை இழக்க வேண்டியிருக்கின்றது. அருங்காட்சியகமென்பது அந்தந்த மண்ணின் நிலப்பரப்பின் காலப்பெட்டகம், நினைவுப்பேழை. அதைக் காணுவதில் பொறுமை இல்லையென்றால் அந்த பயணத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை இழந்திருக்கின்றோம் என்றுதான் பொருள்.

இம்பாலிலிருந்து 55 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மொய்ரங்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசீய ராணுவம் தொடர்பான அருங்காட்சியகமுள்ளது. நாங்கள் போன சமயம் நல்ல மழைப்பொழிவு. பங்கு ஊர்திகளில் ஆட்களை அடைத்து ஏற்றினார்கள். வண்டிக்குள் போதையிலிருந்த மணிப்பூரின் மூத்த குடிமகன் எங்களுடன் மிக உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தார். தான் இங்கிலாந்திலிருந்து வந்திருப்பதாக சொன்னார். போதையில் அறிவுக்கும் மனதிற்குமான கண்ணி மட்டும் அறுபடுவதில்லை.

நாடுகளுக்கிடையேயான எல்லைகளும் தொலைவும் இல்லாமலாகி விடும் போலிருக்கின்றது.ஆமாம் நீங்கள் இங்கிலாந்துதான் எனக்கூறி அவரின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்தி விட்டு வண்டியை விட்டு இறங்கினோம்.

அருங்காட்சியகத்திற்குள் படமெடுக்க தடை. நேதாஜியும். ஹிட்லரும் சந்தித்தது உள்ளிட்ட அரிய ஒளிப்படங்கள், வரலாற்று பொருட்களின் சேகரம்.

நேதாஜியின் பாதை தீவிரமிக்கது என்றாலும் அவரின் நேர்மையும் நெருப்பு போன்ற விடுதலையுணர்வும் தன் மொத்த வாழ்க்கையையுமே நாட்டின் விடுதலை என்ற தவத்தில் காணிக்கையாக்கி அளித்த உணர்வையும் எதைக் கொண்டு அளவிடமுடியும்?

நவீன ஊர்திகளின் மூலமாகக் கூட பயணிப்பது சிரமமாகவிருக்கும் இக்காலகட்டத்தில் பிரிட்டிஷாரின் கண்காணிப்பிலிருந்து தப்பி பாக்கிஸ்தான், அஃப்கானிஸ்தான், ரஷியா போன்ற பெரும் பயணப்பாதைகளினூடே ஜர்மனி சென்றடைந்திருக்கின்றார். அவர் கால்நடை, கார், ரயில் வழியாக மேற்கொண்ட பயணப்பாதை வரைபடத்தையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். வெளுத்த அந்த வட்ட முகமானது இரும்புக்குவியலுக்குள் எறியப்பட்ட காந்த உருண்டை போல எண்ணற்ற முகங்கள் மொழிகள் உணர்வுகள் இனங்கள் என அனைத்தையும் ஈர்த்து ஒற்றை விசையாக்கி எந்த சமரசமுமின்றி பெரும் இலக்கு ஒன்றினை நோக்கி செலுத்தியிருக்கின்றது. முடிவற்ற கனவுகளுடனும் திட்டங்களுடனும் அம்பு போல பாய்ந்து கொண்டிருந்த அந்த மகா மனிதன் வாழ்வின் மர்ம வளைவொன்றினுள் மறைந்ததின் துயரமானது நினைவுகளை சூழ்ந்து நெருக்கியது.

அருங்காட்சியகத்திலிருந்து திரும்பி வரும்போது மாபெரும் நன்னீர் ஏரியைக் கண்டோம். மழை இறங்கிக் கொண்டிருந்தது. வானமும் மேகமும் நீரும் ஒரே நிறத்தில் ஒரே அலைவரிசையில் பேசிக்கொண்டிருந்தன. ஏரியை சரிவரக் காண இயலவில்லை.

(அடுத்த பாகத்துடன் நிறைவு பெறும் இன்ஷா அல்லாஹ்….)

முன்னுரை || பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved