Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:42:21 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 202
#KOTWEM202
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016
நமக்குள்ள வரலாறு மகத்தானது!

இந்த பக்கம் 2982 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நாம் தாய்நாடாம் இந்தியாவிற்கு வரப்போகும் நள்ளிரவில்தான் (15.08.1947) - ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை கிடைத்தது என்பதை நாமறிவோம்... இந்நேரத்தில்,

“இந்தியாவில் கிலாஃபத் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் யார்?” என்ற கேள்விக்கான விடை தெரியாதவர்களா நீங்கள்...? அப்படியானால், இக்கட்டுரையைத் தொடர்ந்து வாசியுங்கள்!

“கிலாஃபத் இயக்கம் என்பது பற்றி பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு வகுப்பில் எப்போதோ படித்த ஞாபகம்...” என்று நெற்றியைத் தேய்க்கிறீர்களா? உண்மைதான்! நமது ஒன்பதாம் - பத்தாம் வகுப்பு வரலாற்றுப் பாடங்களில் நமக்கு ஒன் மார்க் வினா-விடைகளுக்கு மதிப்பெண்கள் பெற்றுத் தந்த கேள்விதான் இது. தேவையில்லாததை இனி மண்டையிலிருந்து உதறிவிடலாம் என்ற பொது விதியின் கீழ், மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதுமே நாம்தான் இதன் பதிலை மறந்துவிட்டோம்... ஆனால், “தண்டி யாத்திரை சென்றது யார்?”, “உப்புச் சத்தியாகிரகம் செய்தது யார்?” “செக்கிழுத்த செம்மல்......” போன்ற கேள்விகளுக்கான விடைகளெல்லாம் இன்னும் பசுமையாக மனதில் நிற்கிறதே... ஏன்? என்றால் அதற்கான விடைதான் இந்தக் கட்டுரை!

உறக்கம் வராத ஓர் இரவுப் பொழுதில்... உறக்கத்தை வரவழைப்பதற்காக - சென்ற புத்தகக் கண்காட்சியின்போது... “வாங்குறது சரி... படிப்பியான்னு யோசிச்சுக்க...” என்று, என் சோம்பேறித்தனத்தின் மீதெழுந்த அழுத்தமான எதிர்க்குரலையும் மீறி வாங்கிய சில புத்தகங்களிலிருந்து ஒன்றைத் தூசி தட்டி உருவியெடுத்தேன்... பெரும்பாலும் - தலைப்புகளையும், உள்ளடக்கங்களையும்... என் சிற்றறிவுக்குப் புரியுமா... என்பதையும் பார்த்துப் பார்த்துதான் புத்தகங்களை வாங்குவது வழக்கம்... சிலவற்றை ஆர்வத்துடன் அப்போதே படித்து முடித்துவிடுவதும், சிலவற்றை “பின்னால் பார்ப்போம்...” என்று அப்படியே மறந்துவிடுவதும் வாடிக்கை. அப்படி மறந்துவிட்ட ஒரு பொக்கிஷம்தான் அன்று என் கையில் கிடைத்தது... புத்தகத்தைப் படிக்கப் படிக்க... தூக்கமே வரவில்லை... இயலாமையும், கோபமும், விரக்தியும் இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு மனநிலை மனதை ஆட்கொண்டு, சுத்தமாக தூக்கம் தொலைந்தே போனது.

சகோதரர் அதிரை இப்றாஹீம் அன்சாரி எம்.காம்., அவர்கள் எழுதிய ‘மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு’ என்ற புத்தகம்தான் அது...

நம்ம ஊர்ல நிறைய பேருக்கு முகம்மதலி என்ற பெயர் உண்டு... முகம்மது + அலி யின் சேர்த்தெழுதுக தான் மம்மதலி என்பதும் நம்மில் பலருக்குத் தெரியும். சிறு வயதுகளில் மம்மதலி என்ற பெயரை எப்போது கேட்க நேர்ந்தாலும், “மம்மதலி... சவுக்கத்தலி... சோத்த உண்டா வயித்த வலி...” என்ற பாடலைத் தவறாமல் பாடியது இன்றும் நினைவுகளில் மலர்கிறது. ஏன், இப்போது அந்தப் பெயர் காதில் விழுந்தாலும் கூட, இப்பாடல் நெஞ்சின் ஓரக் கதவுகளைத் தட்டிவிட்டுத்தான் செல்கிறது...

நமதூரிலிருந்து புலம்பெயர்ந்து, நகரங்களின் தொலைக்காட்சிகளோடு ஒன்றிப் போய்விட்ட இன்றைய தலைமுறைகளுக்கு இப்பாடலை அறியும் வாய்ப்பு நூறு சதவீதம் சுத்தமாக இல்லை. ஆனால், நமதூரிலேயே பிறந்து... வளர்ந்து... படித்து... வீதிகளில் விளையாடி... மச்சான் மாமன் உறவுகளோடு குதூகலிக்கும் அதிர்ஷ்டசாலிகளுக்கு இப்பாடல் தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.

மம்மதலிக்கும் இக்கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்...? மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறேனோ என்று எண்ணிவிடாதீர்கள்... காரணமாய்த்தான் எழுதுகிறேன்...

கிலாஃபத் இயக்கத்தை 1919ஆம் ஆண்டு உருவாக்கியவர்கள் மவ்லானா முகம்மதலி, சவுக்கதலி என்ற சகோதரர்கள்தான் என்று எனது ஒன்பதாம் வகுப்பில், எங்க எச்.எம். மேடம் நடத்திய ஞாபகம் இப்போதுதான் என் மூளையை மெல்லத் திறக்கிறது.





‘அலீ சகோதரர்கள்’ (Ali Brothers) என்று அன்புடன் அழைக்கப்பட்ட மவ்லானா முகம்மத் அலீ, சவுக்கத் அலீ - இவர்களைப் பற்றி, “எனது தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன...” என்று பூரிப்புடன் கூறியது யார் என்று நினைக்கிறீர்கள்...? ‘தேசப்பிதா’ என்று நமக்கு அடையாளங்காட்டப்பட்ட மகாத்மா காந்தியேதான்! என்றால் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இச்சகோதரர்களின் பங்கு எத்தனை உயர்வானது என்ற - மறைக்கப்பட்ட வரலாற்றை எனக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது இந்தப் புத்தகம். நமது வரலாற்றுப் புத்தகங்களில்... கிலாஃபத் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் ‘அலீ சகோதரர்கள்’ என்ற ஒற்றை வரியைத் தாண்டி... வேறெதையும் நம் மனதில் அழுத்தமாகப் பதிக்கவில்லையே... என்ற கோபமெழுந்த அதே வேளையில்...

மம்மதலி... சவுக்கத்தலி... பாடல் வெறும் நையாண்டிப் பாடலல்ல... நமதூரின் மூத்த தலைமுறையினரின் மீது முஸ்லிம் விடுதலைப் போராட்ட வீரர்களின் தாக்கம் எந்தளவுக்கு இருந்தது என்பதை உணர்த்தும் குறியீடாகத்தான் அதை நான் பார்க்கிறேன். இல்லையெனில், எல்லா மம்மதலிகளின் பின்னாலும் சவுக்கத்தலிகளும் சேர்ந்தே வர என்ன அவசியம் வந்துவிட்டது...? ஆனால், நாம்தான் சிறு வயதில் வரலாறு தெரியாமல் நையாண்டியாகவே பாடிக் கொண்டிருந்திருக்கிறோம்...

காங்கிரஸின் அடையாளமாக கதரை நாம் அறிவோம். அந்தக் கதராடைக்கே காரணமானவர் அலீ சகோதரர்களின் தாயார் ஆலாஜி பானு என்ற பீவிமா அவர்கள்தான் என்ற வரலாற்றுக் குறிப்பும் ஆச்சரியத்திற்குரியது. சிங்கங்களை ஈன்றெடுத்த அப்பெண்மணி, தனது கைகளால் ராட்டையில் நெய்த ஓர் ஆடையை காந்திஜிக்குப் பரிசாக வழங்கி, “காந்திஜீ! இதைக் கதராக ஏற்றுக்கொள்ளுங்கள்...!” என்றாராம். ‘கதர்’ என்றால் உருது மொழியில் ‘கவுரவம்’ என்று பொருளாம். அன்று முதல், நமது கரத்தால் நாமே தயாரித்த ஆடை - நமது கவுரவத்தை எடுத்துரைப்பதால், சுயமரியாதையின் அடையாளமாகத் திகழ்ந்தது என்ற பெயர்க் காரணமும், இவ்வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான நாமே அறியாத ஒன்று.

முகம்மதலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஆலாஜி பானுவும் கூட தீவிர விடுதலைப் பரப்புரையில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே முப்பது லட்சம் ரூபாயை விடுதலைப் போராட்ட நிதியாகத் தந்தவர்களாம்... மட்டுமல்லாமல், சிறையிலிருந்த தனது தனயன்களை நோக்கி, “நீங்கள் மட்டும் ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானால், உங்கள் குரல்வளைகளை நானே நெறித்துக் கொன்றுவிடுவேன்...!” என்று கர்ஜித்தாராம் தாயார் பீவிமா என்பதைப் படித்தபோது... “இந்த நாட்டின் விடுதலைக்காக இரத்தம் சிந்திய முன்னோர்களின் வரலாறு எமக்குள்ளபோது... ஆங்கிலேயர்களின் இராஜாங்கத்தில் மண்டியிட்டு வேலை பார்த்து, மடிப்பிச்சை வாங்கியவர்களுக்கு எங்களை வெளியேறச் சொல்ல என்ன உரிமையுள்ளது...?” எனதுள்ளம் உரிமைக் குரல் எழுப்பியது.

தாயைப் போலவே இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக களமாடிய தனயன்களும் கைது செய்யப்பட்ட சமயத்தில் தன்னைப் பார்த்துக் கண்கலங்கிய இளையவரான சவுக்கத்தலியிடம் மூத்தவர் உறுமலுடன் கூறியது: “ஏன் கண்ணீர் சிந்துகிறாய்...? இந்த நமது நாட்டின் விடுதலைக்காக ஒருமுறையல்ல! பலமுறை சிறை செல்லவும் நான் ஆயத்தமாக உள்ளேன்... நீயும் ஆயத்தமாக இரு!” என்பதைப் படித்தபோது, “சுதந்திரம் எனது பிறப்புரிமை! அதனை அடைந்தே தீருவேன்!!” என்பதெல்லாம் வெறும் உயிரற்ற வெற்று வாசகங்களாகவே என் கண்களுக்குத் தெரிந்தது.

மவ்லானா முகம்மதலி அவர்கள் ஈரோட்டில் நடந்த உலமாக்கள் மாநாட்டுக்கு வருகை தந்தபோது... “இந்த தேசம் காந்தியிடம் இருக்கிறது... ஆனால் காந்தியோ இந்த மவ்லானா முகம்மதலியின் சட்டைப் பைக்குள் இருக்கிறார்...” என - அவரை வரவேற்று ஈ.வெ.ரா. பெரியார் பேசினார் என்பதை அறிந்ததும், மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட நம் வரலாறுகள் மனதை ஏதோ செய்தது.

இலண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில், ஆங்கிலேயர்களே மூக்கில் விரல் வைக்கும் வகையில் மவ்லானா அவர்கள் இரண்டு மணி நேரம் பேசிய உணர்ச்சி பொங்கும் பேச்சின் இதயப் பகுதி இதோ...

“என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன்... அவ்வாறு நான் திரும்ப வேண்டுமானால், என் தேசத்திற்கான விடுதலை உத்தரவை என் கரங்களில் நீங்கள் வழங்க வேண்டும்...! ஏனெனில், அடிமைத்தளையில் சிக்கியிருக்கும் ஒரு நாட்டிற்கு நானும் ஓர் அடிமையாகத் திரும்பிச் செல்வதை விரும்பவில்லை... அதை விட, அந்நிய மண்ணானாலும் இங்கேயே மரணிக்கவே நான் விரும்புகிறேன்... ஏனெனில், இது ஒரு சுதந்திர மண்!!!

நான் மரணிக்க ஒரு சுதந்திர மண்தான் வேண்டும்... ஒன்று எனது நாட்டிற்கு விடுதலை வழங்குங்கள்! இல்லையேல்... உங்கள் மண்ணில் அடக்கமாக எனது மண்ணறைக்கு ஓர் இடம் கொடுங்கள்!” என்ற உணர்வுப்பூர்வமான அவரது பேச்சு, அனைவரது நாடி நரம்புகளையும் உலுக்கியெடுத்தது... இந்த வரலாறு நமக்கு சரியாக ஊட்டப்பட்டிருந்தால், நம்மையும் அது உலுக்கியிருக்கும்.

மவ்லானாவின் நாட்டத்தை நிறைவேற்றிய அல்லாஹ், 04.01.1931இல், இலண்டன் மாநகரிலேயே அவரைத் தன்னோடு அழைத்துக்கொண்டான். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

மவ்லானாவின் உடலை ஆங்கில ஏகாதிபத்திய மண்ணில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை... அவரது உடலைத் தங்கள் மண்ணில்தான் அடக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, ‘கிலாஃபத் இயக்கத்தில்’ ஈடுபட்டிருந்த 22 நாடுகள் வரிசையில் நின்றனவாம்! இறுதியில், நமது முதல் கிப்லாவாகவும், புண்ணியத் தலமாகவும் விளங்கும் பைத்துல் முகத்தஸ் என்ற மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயிலின் அருகே - உலகோர் திரள மவ்லானா அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்களாம்!

தாய்நாட்டிற்காக இரத்தம் சிந்திய வரலாறுகளை நாம் கொண்டிருந்தாலும் கூட, இந்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய முஸ்லிம் வீரர்களை வரலாறுகளிலிருந்து துண்டித்திடும் சதி வெற்றிகரமாக அரங்கேறியிருப்பதன் அடையாளம்தான் ‘அலீ சகோதரர்களை’ப் பற்றியும், இன்னும் எண்ணற்ற முஸ்லிம் விடுதலை வீரர்களைப் பற்றியும் நாம் அறியாமலேயே போனது.

சகோதரர் அதிரை இப்றாஹீம் அவர்கள், “அவுரங்கசீப் முதல் அலீ சகோதரர்கள் வரை என எண்ணற்ற முஸ்லிம் வீரர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தாலும், இந்த அலீ சகோதரர்களைப் பற்றிப் படித்ததும், சிறுவயதில் பாடிய “மம்மதலி சவுக்கத்தலி” பாடல் மின்னலென நினைவுக்கு வந்ததே - அவர்களைப் பற்றிய இந்த எளிய ஆக்கம் உருவாகக் காரணமாயிற்று.

நமதூருடன் கலந்துவிட்ட அவர்களின் உறவு - நமக்குள்ள வரலாறு மகத்தானது என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.

“உனக்குள்ள வரலாறு மகத்தானது...அது
உஹதுக்கும் பத்ருக்கும் தொடர்பானது...”

என வாய்ச் சொற்களில் மட்டும் உசுப்பேற்றாது, முகத்தில் அறையும் இதுபோன்ற நிஜங்களை வரலாறாய், இளைய தலைமுறையின் வாழ்க்கையில் கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்குள்ளது என்ற உணர்வு மனதெங்கும் கனமாகப் பரவியுள்ளது.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...குத்பா பேருரை
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 14 August 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44451

நேற்று முன்தினம் நடந்த குத்பா பேருரை காயல்பட்டினம் மொகுதூம் ஜும்மா மஸ்ஜித் கதீப் கண்ணியத்துக்குரிய காஜா முஹிய்யித்தீன் ஆலிம் காஷிஃபி அவர்கள் இந்தியாவின் 70 வது விடுதலை நாள் பற்றி உரையாற்றினார்கள்.

மகாத்மா காந்தி அவர்களை மட்டுமே முன்னிறுத்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த பிதாமகனாக அடையாளம் காட்டுகிறார்கள். காந்தியை பற்றி பேசத்தான் வேண்டும் அதே நேரம் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் கழகத்தை பற்றியும் அதில் உயிரிழந்த முஸ்லிம்களை பற்றி பேச மறந்து விடுகிறோம். வட்ட மேசை மகா நாட்டுக்கு காந்தி போனதை பேசுகிறோம். ஆனால் எனது தோள்களில் இரண்டு சிங்கங்களை சுமந்து செல்கிறேன் என்று அவரே சொன்னாரே அப்படி பட்ட சிங்கங்கள் மௌலானா முஹம்மது அலி சௌகத் அலி பற்றி பேச மறந்து விட்டோம்.

அப்துல் கலாம் பற்றி பேசுகிறோம்
மௌலானா அபுல் கலாம் பற்றி பேச மறந்து விட்டோம்.

கப்பலோட்டிய தமிழன் வ வு சி பற்றி பேசுகிறோம்
அவர் கப்பல் வாங்குவதற்கு உதவி செய்த பக்கீர் முஹம்மது பற்றி பேச மறந்து விட்டோம்.

இப்படியே சுதந்திர போராட்ட விழுமியங்களில் முஸ்லிம்கள் கைகோர்த்து சென்றுள்ள உண்மைகளை முஸ்லிம்களே மறந்து விட்டோம் அல்லது நமது இளைய சமுதாயம் அவற்றை அறிய விடாமல் சரித்திரங்கள் திரித்து திருத்தி எழுதப் பட்டுள்ள அவல நிலை பற்றி மூச்சு விடாமல் 45 நிமிடங்கள் அந்த பெருமகனார் பேசியபோது, ஜும்மா பிரசங்கம் என்பது அது வெறும் சும்மா பிரசங்கம் அல்ல சடங்குக்கு நிகழ்த்தப்படும் உரை அல்ல, அவ்வப்போது நாட்டு நடப்புக்களை முஸ்லிம்கள் அறிந்து அதில் ஆற்ற வேண்டிய பங்குகள் பற்றியும் முஸ்லிம்கள் அடைந்துள்ள பின்னடைவுகளுக்கான காரணங்கள் பற்றியும் பேச வேண்டும் என்பதுதான் நிதர்சன உண்மை என்பது புரிந்தது.

சகோதரி உம்மை நுமைரா அவர்கள் இதை தொடர் 1, 2 என்று தொடர வேண்டும் அப்போதுதான் அவர்களும் இந்த சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய கடமையை செய்திருக்கிறார் என்று சொல்ல முடியும் எத்தனை பெண்களுக்கு இந்த செய்தி தெரியும். இன்று கல்லூரிகள் பெருகிவிட்டன பெண்கள் கல்லூரிகள் நிறையவே இருக்கின்றன. நமதூர் மாணவிகள் மணவிழா அழைப்புக்களில் மணமகனை விட மணமகள் பெற்றுள்ள பட்டங்கள் பட்டயங்கள் நம்மை அதிர வைக்கின்றன. சில இடங்களில் பெண்ணின் பட்டங்களை போடாதீர்கள் அது மணமகனுக்கு இழுக்கு ஏனெனில் அவர் அதிகம் படிக்க வில்லை என்ற செய்தியை தோலுரித்துக் காட்டி விடும் என்று சொல்கிறார்கள். அதனால் பெண்களுக்கு ஒரு வகையான EGO ஏற்படும் மணமகனுக்கு INFERIORITY COMPLEX ஏற்படும் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

குறைந்த பட்சம் நமது சுதந்திர போராட்டத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பை பட்டியலிட்டு எழுதினால் அதை தங்கள் WHATSUPP களில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு ஓய்வான நேரத்தில் பார்த்து படிப்பதற்கு வசதியாக இருக்கும்.

நீங்கள் செய்வீர்களா?

நீங்கள் படித்த புத்தகங்கள் நீங்கள் சொல்வது போல் ஒரு ஒய்வு நேரத்தில் படித்து உணர்ச்சி பொங்கி எழுந்ததுபோல் காந்தி அவர்களுக்கும் ஏற்பட்டது. அதுதான் பிற்காலத்தில் அவருக்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது,,,வெள்ளையனே வெளியேறு என்று போராடி அவனை விரட்டி அடிக்கவே அடிகோலியது.

RUSKIN 'S ''UNTO THIS LAST'' என்ற புத்தகம்தான் அது. POLAK என்ற காந்தியின் நெருங்கிய நண்பர் அவர். தென்னாப்பிரிக்காவுக்கு காந்தி வழக்கறிஞர் தொழில் செய்ய புறப்படுகிறார். ரயில் பயணத்துக்கு வழியனுப்ப வந்த POLAK இந்த புத்தகத்தை அவர் கையில் கொடுக்கிறார். போகும் வழியில் படித்துப் பாருங்கள் என்றும் சொல்கிறார். காந்தி அதை ஓரமாக வைத்து விட்டார். ரயில் புறப்படுகிறது , காந்திக்கு தூக்கம் வருகிறது, சற்று சோர்வும் வருகிறது, சரி POLAK தந்த புத்தகத்தை படிப்போம் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று படிக்க ஆரம்பித்தார்.அவர் வாழ்க்கை பாதையே மாற்றியமைத்தது புரட்டி போட்டது அந்த புத்தகம்.

'' RUSKIN'S UNTO THIS LAST BROUGHT AN IMMEEDIATE AND AN INSTANTANEOUS TRANSFORMATION IN MAHATMA GANDHI'S LIFE'' என்று சரித்திர ஆசிரியர்கள் அதை வர்ணிக்கிறார்கள்...

உங்கள் கட்டுரை தொடராக வெளி வந்தால் அப்படி பட்ட ஒரு சூழலை இந்த சமுதாயத்தில் மீண்டும் ஏற்படுத்த முடியும்.

தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஏகாதிபத்தியத்திலிருந்து மீண்டு பத்தியத்தில் அடிமையாகிவிட்டோம்.
posted by: Sheikh Abdul Qader (Riyadh) on 14 August 2016
IP: 5.*.*.* | Comment Reference Number: 44453

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

தீய உணர்வான வேலண்டைன்சிற்கு வெள்ளைக்கொடிக்காட்டும் ஊடகங்கள் உதிரம்சிந்திய தூய நெறிஉணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது.

உறங்கிக்கொண்டிருக்கும்போது பெற்ற சுதந்திரம் உறக்கம் வராதபோது விழிக்கச்செய்திருக்கிறது ஆசிரியர் அவர்களை. இப்படி நம்மில் எப்போது விழிப்புணர்வைத்தரும்?

முஹம்மதலியும் சவுக்கத்தலியும் மட்டுமல்ல எத்தனையெத்தனையோ எம்குல ஆண்,பெண் வீரர்கள் வெள்ளைஎத்தர்களை விரட்ட வரிந்துகட்டவில்லையென்றால் நமக்கு நிரந்தர வயிற்றுவலியாக,தலைவலியாக இருந்திருக்கும்.

பிறந்து மண்ணின்மகிமையை உயர்த்தியவர்களை அந்நியர்களென பதாகையேந்தும் பாதகர்கள் அன்று அந்நியனிடம் கையேந்தியவர்கள் இன்றுபிரிவினைவாதம் பேசுகிறார்கள் மதச்சாயம்பூசி மொழுகப்பார்க்கிறார்கள். ஒட்டுண்ணிகள் என்றும் ஒட்டுண்ணிகளே.

“அவுரங்கசீப் எல்லாம் மிகமிக சீப்பாக வர்ணிக்கப்படுகிறார்கள் இந்தியாவில் கல்வியில் விழிப்புணர்வை ஏர்படுத்தியரே அவர்தான் .திப்புசுல்தான் ஆங்கிலேயர்களை விரட்டிவிரட்டியே காட்டிக்கொடுக்கப்பட்டு உயிரைவிட்டார் ஒப்பில் வீரன் திப்பென்று உப்புசப்பிற்கு சொல்லிக்கொள்கிறோம் விடுதலைப்போராட்டத்திற்காக ஏராளமான பொண்ணும்பொருளும் சொத்தையும் தந்தே ஏழையாகிவிட்ட ராமநாதபுரம் அமீரஹம்சா மாஷா அல்லாஹ் இந்தியாவின் முதல்சுதந்திரப்போராட்டவீரர் மருத நாயகம் அடுக்கிகொண்டேபோகலாம்

குற்றம் நமதே நாம் மீன்குஞ்சுகளாகவே வளர்க்கப்பட்டுவிட்டோம் நமதுகடலின் ஆழம் பற்றிநமக்கு அறிவூட்டப்படவில்லை நமக்குசுதந்திரம் கிடைக்க நாம்கொடுத்த இழப்பை நம் உணர்வில் ஊட்டப்படவில்லை பள்ளிப்பாட நூல்களிலும் தடயங்களில்லாத தடவப்படும் தகவல்கள்தரப்பட்டன பெரும்பாலும் மறைக்கப்பட்டுவிட்டன

இதைஅன்றிருந்தவர்களும் கேட்கவில்லை அரசுபாடப்புத்தகங்கள் மறைத்ததை நம்முன்னோர்கள் பள்ளிகல்லூரிகளிலும் தீன்வழிக்கல்விச்சாலைகளிலும் அதைக்கற்றுத்தந்து, உணர்வுகளுக்கு வலுவூட்டியிருக்கவேண்டும் இன்னும் இன்றும் நமக்கு இந்தசமூக ஊடகங்கள் வரவில்லையென்றால் நசுக்கப்பட்டுக்கொன்டே இருப்போம் இதுவரைவந்த எல்லாஅரசியல் ஆட்சியாளர்களுக்கும் ஓட்டுவங்கியில்மட்டுமே ஒட்டுமொத்தபார்வையுமிருந்தது நம் உணர்வுகளின்பால் இருந்ததாகவே இல்லை.

நம்மை ஏன் மீன்குஞ்சு என்று குறிப்பிட்டேனென்றால் அது எந்தநீரிலும் நீந்தும் ஆனால் தான் நீந்திக்கொண்டிருக்கும் நீரின் அருமை அதற்குத்தெரியாது அதாவது நமதுமார்க்கத்தின்வலிமை நமக்கு இன்னும் புரியவில்லை ஆனால் புதிதாக இந்த தீனுல் இஸ்லாத்தில் இணைபவர்களுக்கு அதனுடைய ஆழமும் அடிப்படையும் நன்றாகவிளங்கியே வருகிறார்கள் அதுபோல் சுதந்திரம்பெற்றவலியை உணர்ந்திருந்தால் இன்று துவேஷமாகப்பேசப்படுவதற்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகியிருக்கமாட்டோம்.

ஒவ்வொரு விடுதலை நாளுக்கும் கொடியேற்றி இனிப்புகள்வழங்கி வெறுமனே விடைபெறுகின்றன விடுதலைநாட்கள்.

இனியேனும்செய்வோமா கல்வியில் நமது சுதந்திரதியாகங்களென்னென்ன நம்குழந்தைகளுக்குக்கற்றுக்கொடுப்போம் சுதந்திரமாக,வாகனங்களும்,கணினிகளும் வாங்கித்தரும் நாம் இன்ஷா அல்லாஹ் உண்மையான சுதந்திரம்பெற்றவரலாற்றையும் கற்றுக்கொடுப்போம் அரசுக்கு இது அறிவுறுத்தப்படவேண்டும் திரித்து எழுதப்பட்டவைகள் திருத்தி எழுதப்படவேண்டும்

நம்மக்கள் நிறையப்படிக்கின்றனர் நிறைய நூல்களைப்படித்து பட்டங்கள் வாங்கி நிறைத்து நூல்கட்டி பட்டம்விடவா கல்வி? அந்தப்பட்டம் சீராகப்பறக்கவேண்டுமென்றால் அதன்கீழ் வால் கட்டியிருக்கவேண்டும் இல்லையென்றால் கடிவாளமில்லாத குதிரைதான் படிப்பதை சுதந்திர வேட்கையோடுபாடிப்போம் நமதுகுதிரையின்கடிவாளம் நம்மிடமிருக்கட்டும். இன்ஷா அல்லாஹ் வல்ல இறைவன் நமுக்குள் ஒற்றுமையையும் ஈமானையும் உறுதியாக்கித்தருவானாக ஆமீன்

ஆசிரியரவர்களால் சிறிதாகத்தரப்பட்ட கட்டுரை பெரும்தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் எளியநடை சுதந்திரதாகம்,அதை பெற்றுத்தந்தவர்களின் பெருமைகாணப்பபடவேண்டுமென்ற தாக்கம் உங்கள்தூக்கம் கலைத்திருக்கிறது இன்னும் எழுத்துக்களில் அதிவிவேகவேகம் காணப்படுகிறது தொடரட்டும் தொய்வில்லாது

சிலசமயம் கட்டுரையைக்காட்டிலும் கருத்துரை நீண்டுவிடுகிறது நல்லது. வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் ஏகன் அல்லாஹ் எல்லா நல,வளங்களுடன் ஆற்றல்களை மேம்படுத்துவானாக ஆமீன் . இன்ஷா அல்லாஹ்

இந்தியதேசமக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரநாள் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: NMZ.AHAMED MOHIDEEN (KAYAL PATNAM) on 16 August 2016
IP: 59.*.*.* India | Comment Reference Number: 44456

இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்கு,என பக்கம் பக்கமாக பட்டியல் போட்டாலும் எழுதி எழுதி எழுத்தும் ஓய்ந்து மூச்சும் நிற்குமே தவிர எழுதியோ , பேசியோ முடியாது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இஸ்லாமியர்களின் தியாகத்தை மறைக்கப்பட்டுள்ளது .

இன்ஷா அல்லாஹ் ....இனிவரும் காலங் களிலாவது இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நன் நோக்கில் இது சம்பந்த பட்ட தலைப்புகளில் இஸ்லாமிய நிறுவனங்கள் போட்டிகளாக கூட நடத்தி ஊக்கு விக்கலாம் .[ஊ.தா]கவிதை ,கட்டுரை ,பேய்சுப்போட்டி என்பது போன்று....,!

ஆக...வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த இந்திய விடுதலை வீரர்களான இஸ்லாமியர்களின் தியாகம் என்றென்றும் எழிற்சியோடு எட்டு திக்கிலும் பட்டொளி வீசி பரிணமிக்கும் என்பதில் சந்தேகமில்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved