Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:52:42 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 138
#KOTWEM138
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 29, 2014
மாசி இடித்த உரலில் சோறு!

இந்த பக்கம் 7727 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“இவ்ளோ பெரூ...ஸ்ஸா இருக்கே...? இத வச்சி எப்படி வாப்பா தூக்கி அரைச்சாங்க...?

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய வீடு ஒன்றின் முற்றத்து ஓரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னத்தைத் தாங்குவதற்கு மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அம்மியைப் பார்த்து, பத்து வயது பெண் மகள் தன் தந்தையிடம் கேட்டாள்.



“நல்ல வேள! நீ இந்தளவுக்காவது கேக்குறியே...? உன் வயது தோழிமார் பலருக்கு இது என்னான்னே தெரியாதுன்னு சொன்னா நம்புவியா?”

“இது எப்டி வாப்பா தெரியாம இருக்கும்? சமையல் சாமான்கள அரைக்கிற அம்மின்னு கூடவா அவங்களுக்குத் தெரியாது வாப்பா...?”

இப்படியாக தந்தை - மகளுக்கிடையே சென்றது உரையாடல்.



அம்மியிலோ, உரலிலோ - கொஞ்சம் உப்பு, இரண்டு மிளகாய் வற்றல் (வத்தல்) போட்டு முதலில் பொடியாக்கப்படும். அப்புறம், ஒரு விரல் அளவுக்கு - கண்ணாடி பக்குவத்திலுள்ள மாசியை அதன் மீது போட்டு இடிக்கப்படும். பின்னர், அதில் ஒரு முழுத் தேங்காயின் கீறிய துண்டுகளைப் போட்டு இடிக்கப்படும். (சூறை மீனைப் பதப்படுத்தி பெறப்படுவதுதான் மாசி.) தேங்காயைப் போட்டு இடிக்க, இடிக்க அம்மி அல்லது உரலிலிருந்து இடிபட்ட மாசிப் பொருட்கள் சிதறும். அதைப் பொறுக்கி வாயில் போட்டு அசைபோட்டவாறு இடிப்பு தொடரும்.

நிறைவில், 4 அல்லது 5 சிறு வெங்காயம், 2 பச்சை மிளகாய் போட்டு - ஏற்கனவே இடிக்கப்பட்ட மாசிப் பொருட்களின் மீது லேசாக படர்ந்து இடிக்க, உரலைக் குப்புறப் படுக்க வைத்து அல்லது அம்மியை வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் கொட்டி வைக்கப்படும் மாசி.



அடுத்த சில நிமிடங்களில் வீட்டில் அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை சண்டைகள் தூள் பறக்கும். மாசி இடிக்கப்பட்ட உரல் அல்லது அம்மியில், சமைத்த சோற்றிலிருந்து சிறிது போட்டு, குழப்பியெடுத்து உண்பதற்குத்தான் ‘நான், நீ’ என சண்டை. அடுக்களையில் காய்கறி சமைத்துக்கொண்டிருக்கும் தாய் அனைவருக்கும் அதைப் பகிர்ந்தளித்து, கனப்பொழுதில் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவார்.

நேற்று சமைத்த சோற்றில் மிஞ்சியது பழஞ்சோறாக மாற்றப்பட்டிருக்கும். பழஞ்சோற்றை சில பகுதிகளில் ‘பழைய சாதம்’ என்று கூறுவர். கேலியாக சிலர் ‘ஐஸ் பிரியாணி’ என்றும் கூட கூறுவதுண்டு. அந்தப் பழஞ்சோறு அப்படியே இருக்கும் வரை அதைச் சீண்ட ஆள் இருக்காது.

ஆனால், அதைக் கையிட்டுப் பிசைந்து, தேவைக்கு உப்பு போட்டு, கொஞ்சம் சிறு வெங்காயம், கொஞ்சம் பச்சை மிளகாய், சிறிதளவு அடை ஊறுகாய் போட்டு, (எலுமிச்சைப் பழத்தை நான்காகப் பிளந்து, உப்பில் ஊறப்போட்டு, சில மாதங்கள் கழிந்த பிறகு எடுத்துப் பயன்படுத்தப்படுவதே அடை ஊறுகாய்) சிறிதளவு கெட்டித் தயிர் ஊற்றிப் பிசைந்த பிறகுதானே பார்க்க வேண்டும்? நேரம் செலவழித்து, அவதிப்பட்டுப் பிசைந்தவருக்கு ஒரு பிடி பழஞ்சோறு கூட இருக்காது.



அத்தனை சுவை மிக்கது அது! இடித்த மாசி அல்லது சுட்ட சாளைக் கருவாடு அல்லது அரைத்த துவையலையும், பிசைந்த இந்தப் பழஞ்சோற்றையும் ஒரு சேர உண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் மகிமை.

மட்டன் பிரியாணி, சிக்கன் ஃப்ரை, ஃப்ரைட் ரைஸ், வெஜிட்டபிள் குஸ்கா இப்படி எதை வேண்டுமானாலும் அடுக்கி வைத்து, இந்தப் பழஞ்சோற்றையும் - அதன் துணை உணவுகளையும் மறுபுறம் வைத்துப் பார்த்தால், சுட்டெரிக்கும் இந்தக் கோடை காலத்தில் எது காலியாகும் என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.

நேற்று மிஞ்சிய சோறு... தேவைக்குப் போக மீதமிருந்த - காய வைத்து கருவாடாக்கப்பட்ட சாளை மீன்... இவற்றுக்கு என்ன செலவு வந்து விடப்போகிறது?

இத்தனை எளிதில், இவ்வளவு சுவையான உணவு வகைகளை மனமகிழ்வோடு உண்ண முடிந்தும், ஏன் யாரும் அதைச் செய்வதில்லை என்று கேட்டால், இந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 10 வயது பெண் மகள் கேட்டாளே அதற்கேற்பவே இன்றிருக்கும் எல்லா வயதுப் பெண்களும் செயல்படும் நிலை.

“ஹூம்... ஏதோ கதை கேட்ட மாதிரி இருக்கு” என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா? ஆம்! அப்படித்தான் மாறிப்போனது நமது வாழ்க்கை முறை.

ஊரில் இருப்பதில் சுவை கண்ட சில ஆண்கள், தமது ஆவலைத் தீர்க்க அவ்வப்போது தன் சொந்தக் கைத்திறனில் - மனைவிக்கு உதவியாக இப்படி மாசி இடித்தால், தன் பழக்கத்தை மறந்த மனைவியும் கூட இருந்து உண்ணும் நிலையாவது இன்றளவும் சில வீடுகளில் உள்ளனவே என்று ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.

“நாங்களும் மாசியெல்லாம் சாப்பிடத்தான் செய்றோம்...” என்று சொல்வோரும் உண்டு. ஆம்! குளிர்பதனப் பெட்டியில் பல வாரங்களாகப் பாதுகாக்கப்பட்ட (?) மாசி, தேங்காய், உறித்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாயுடன் தேவையான இதர பொருட்களையும் எலக்ட்ரிக் க்ரைண்டரில் இட்டு, ஸ்விட்சைத் தட்டி, இருபது விநாடிகளில் பொடியான மாசியை - இதுவே போதும் என்று சாப்பிடுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் சுவை???

இளசு இளசுதான்! கிழடு கிழடுதான்!!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் வீடுகளிலிருந்த புகைக்கூடு, அம்மி, உரல் - உலக்கை, அரிசி மாவு திருகை, விறகு அடுப்பு, பனை நார் கொண்டு வேயப்பட்ட கட்டில், தென்னங்கீற்று கொண்டு கட்டமைக்கப்பட்ட குடிசை, களிமண்ணால் செய்யப்பட்ட பல வடிவ மண் பாண்டங்கள், கிணற்றில் நீர் இறைக்கும் தலா, இட்லிக்கு மாவு அரைக்கும் ஆட்டு உரல்... இன்னும் பல!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களை பாடம் செய்து எகிப்து நாட்டில் பிரமிடு கட்டி பாதுகாத்து வருவது போல - மேற்குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் இன்னும் சில ஆண்டுகளில் புராதனப் பொருட்களாக அருங்காட்சியகங்களில் அணிவகுக்கப் போகின்றன. அதன் துவக்கத்தை இப்போதே நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

உடல் உழைப்புக்கு அஞ்சி, இயற்கையை விட்டும் நீண்ட தொலைவிலிருப்பதால் நமக்கு வியர்வை வெளியாவதேயில்லை. ‘அம்மா அல்லது அய்யாவின் ஆசி’யில் சிறிது நேரம் மின் விசிறி ஓடாது போனாலும் இருக்கவே இருக்கு இன்வெர்ட்டர். தன்னையும் மீறி வெளியாகும் வியர்வையும் இப்படித்தான் தடுக்கப்படுகிறது.

நாம் சாப்பிடும் உணவு மற்றும் குடி பொருட்கள் - மலம், சிறுநீர், வியர்வை என பல வடிவங்களில் கழிவுகளாக வெளியேற வேண்டும் என்பது நம்மைப் படைத்த இறைவன் நம் உடலுக்கு விதித்த நிகழ்முறை.

பாரம்பரியமாக நடைமுறையிலிருந்த நல்ல பழக்கவழக்கத்தையெல்லாம் நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிய பிறகு,

“அந்தக் காலத்துல இப்படியா தெருவுக்கு ஒரு ஆஸ்பத்திரி இருந்திச்சி...?”

“உங்க அப்பா திருச்செந்தூர் வரைக்கும் சைக்கிள்லதான் போவாங்க தெரியுமா?”

“நீ சின்னப் பிள்ளையா இருக்கும்போது நா ஒவ்வொரு நாளும் ஆட்டு உரல்லதான் இட்லிக்கு அரைப்பேன் தெரியுமா?”

என்று பழங்கதைகளை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால்...

சர்க்கரை வியாதி,
புற்றுநோய்,
ஒற்றைத் தலைவலி,
மூட்டு வலி,
கை வலி,
கால் வலி,
வாத நோய்,
செரிமானக் கோளாறு,
அடிக்கடி வயிற்று வலி,
நீர்க்கடுப்பு,
இடைவிடாத இருமல்
- இன்னும் எத்தனை நோயை வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்வோம்...

எதுவுமே குணமாகப் போவதில்லை!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) on 29 March 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34025

அருமை தம்பி சாலிஹின் கட்டுரை நாற்பது ஆண்டுகளுக்கு முன் நாம் கடந்த நம் வாழ்வை கண் முன் கொண்டுவருகிறது.

உண்மையிலேயே இயற்கை உணவின் சுவை தெரிந்த பின் மற்றவர்களுக்கும் மறந்தவைகளை நினைவூட்டுகிறார் போலும்.

கெமிகல் கலவை இல்லாத மண்பாண்ட சமையல், அன்றன்று தயார் செய்யும் உணவு, மீதமான உணவுகளை மற்றவர்களுக்கும் தாரள மனதுடன் கொடுப்பது இதுவெல்லாம் இன்று மறந்து போனவைகள்.

இன்று சமையல் செய்யும் பாத்திரம் முதல் எச்சிபெட்டி, அவசர உணவு, வீதியில் தயார் செய்யும் உணவுகளுக்கு முக்கியத்துவம் இவை அனைத்தும் நம் சுகாதாரத்தையும் கெடுத்து மருத்துவமனை தேவைகளை அதிகரித்தது என்பது மறுக்க முடியாத உண்மை..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
posted by: Raiz (Sydeny) on 29 March 2014
IP: 110.*.*.* Australia | Comment Reference Number: 34026

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல் நண்பர் சாலிஹின் எழுத்து நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகிறது !

படிக்கும் போதே நாவில் நீர் ஊறுகின்றது ! காலம் கொஞ்சம் பின்னோக்கி செல்லாதா என மனம் ஏங்குகின்றது !

இந்த சுவையான சுவாரசியமான விஷயத்தை சொல்லி விட்டு வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நமது ஊருக்கு தேவையான நல்ல ஒரு மெசேஜ்ம் சொன்ன விதமும் நன்று!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re: Antha naal niyabagam
posted by: K.M.seyed ibrahim (chennai) on 30 March 2014
IP: 37.*.*.* | Comment Reference Number: 34034

அஸ்ஸலாமு அலைக்கும் ப்ரதர். மாஷாஅல்லாஹ். கட்டுரை மிகவும் அருமை.

இப்பவும் அந்த நாட்கள் வராதோ என்ற ஒரு ஏக்கம். பழைய சோறு, சிறு வெங்காயம், பருப்பு வடை சேர்த்து சாப்பிடும் சுகம். ம்... தனி சுகம்தான்.

இப்பவெல்லாம் யாருங்க இத பத்தி நினைக்கிறாங்க? இப்ப உள்ள வாழ்க்கை முறையை நினைத்துப் பார்த்தால் கஷ்டமாகத்தான் இருக்குமு். எல்லோருக்கும் நோய். பயமா இருக்கு. ஒவ்வொரு நொடியும் புள்ளைக்கு உடம்பு சரி இல்லைன்னு டாக்டர் இடம் போன ரிப்போர்ட் வர்ற வரைக்கும் நம் மனசு படும் பாட்டுக்கு இப்ப உள்ள உணவுப் பழக்க முறை, எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட்தான் காரணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: கே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம். ) on 30 March 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34037

நாக்கில் நீர் ஊரச் செய்த கட்டுரை மட்டுமல்ல, உடலில் நடுக்கம் ஏற்படுத்திய கட்டுரையும் கூட. பழைய சோற்றின் தீராத ருசியும், மாசி, மற்றும் சாளைக் கருவாட்டின் கூர்த்த காரமும் யார் மனதை விட்டுத்தான் அகலும் ...?இன்னும் சில காலம் சென்றால் மாசி கூட மாயமான பொருளாகிவிடும். அதன் விலை இப்போதே தங்கத்தின் விலையை ஒத்திருக்கிறது. இப்போது யாரும் மாசியை உரலில் இட்டோ, அல்லது அம்மியில் வைத்து அரைப்பதோ இல்லை. ரெடிமேட் மாசித்தூள் வாங்கி அதை ரெடிமேட் தயாரிப்பாகவே சாப்பிடுகின்றனர்.

காலம் செல்லச் செல்ல கால ஓட்டத்தில் எல்லாமும் மாறி வருவதுதான்.

இனி வரவே வராத அந்த பொற்காலத்தின் மின்மினிக் கனவுகளை தம்பி எஸ் கே ஸாலிஹ் தனது எழுத்து முயற்சி மூலம் அவ்வப்போது தூண்டி வருகிறார்.

அவரது அந்த மனப்பூர்வமான முயற்சிக்கு நமது வாழ்த்துக்கள்..!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: hasbullah mackie (dubai) on 30 March 2014
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34038

அருமையான பதிவு.. அனுபவத்தை எளிய முறையில் தெளிவாக எழுதியமைக்கு வாழ்த்துக்கள்.

இப்போது அந்த அம்மியையோ, குளவியோ காணப்படுவதில்லை., இது எப்போ போச்சோ அப்போவே நல்ல ஆரோக்கியமும் போய் விட்டது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. என்னை நான் மாற்றிக்கொண்டேன்... அது போதும்!
posted by: S.K.Salih (Kayalpatnam) on 31 March 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34054

இக்கட்டுரையின் கீழ் கருத்துப்பதிவு செய்துள்ள என் அன்புச் சகோதரர்கள் பலருக்கு, இதன் மகத்துவம் புரிந்தாலும், அதை ஏதோ நிறைவேறவே வாய்ப்பில்லாத ஒன்றாக - ஓர் ஏக்க உணர்வுடன் பிரதிபலித்துள்ளதை உணர முடிகிறது. சகோதரர் ஷுஅய்ப் காக்கா ஒரு படி மேலே சென்று, இது இக்காலத்தில் நடைமுறை சாத்தியமில்லை என்பது போல கருத்துப்பதிவு செய்துள்ளார்.

இவர்கள் யாவருக்கும் நான் பணிவுடன் சொல்ல விரும்புவது:-

“ஒரு சமுதாயம் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மாற்ற மாட்டான்” என்பது திருமறை குர்ஆனின் அற்புத வசனம்.

இது உணர்த்துவது யாதெனில், ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்பாக உன்னை நீ மாற்றிக்கொள் என்பதே. ஊரை மாற்றுவது என்பது நம் கையிலில்லை. நம்மை நாம் மாற்றிக்கொள்வது மட்டுமே நம் கையில் உள்ளது.

நம்மை நாம் மாற்றிக்கொள்வது என்பதை சுருக்கமாகப் புரிந்துகொள்வதானால்,
1) நான் மாற வேண்டும்.
2) என்னைச் சார்ந்துள்ளோர் மாற வேண்டும். (அதாவது, என் செலவில் வாழும் என் மனைவி, என் தாய் மாற வேண்டும்.)

இதனை அடைந்திட நாம் செய்ய வேண்டியது, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வழங்கும் அன்பான உபதேசம் ஒன்றே! கருத்துத் திணிப்பு ஒருபோதும் பலன் தராது.

இந்தக் கட்டுரையை எழுதிய எனக்கு இதில் கூறப்பட்டுள்ளவற்றை அனுபவிக்க முடிந்துள்ளது என்பதை வைத்தே - இது நடைமுறைக்கு சாத்தியமான ஒன்று என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இதைப் பார்த்து யார் யாரெல்லாம் மாற நினைக்கிறார்களோ அவர்களுக்கும் இது பொருந்தும்.

கடந்த 2013, நவம்பர் மாதத்தில், வானகம் உயிர்ச்சூழல் நடுவத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் மற்றும் எளிய வாழ்க்கை முறை தொடர்பான முகாமில், மறைந்த அய்யா நம்மாழ்வார் பேசியபோது,

“அடுத்தவங்கள மாத்த நெனைக்காதீங்க... அது உங்களுக்கு வீணான வேலை... உங்கள நீங்க மாத்திக்கங்க... அப்புறம், நான் இப்படி என்னை மாத்திக்கிட்டேன்-ன்னு பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் சொல்லுங்க... யாருக்கு ஆர்வம் இருக்கோ, அவங்க தானா அத எடுத்துக்குவாங்க...” என்றார்.

அதை அப்படியே நான் செயல்படுத்துகிறேன்.

அரிசித் திருகை போன்றவை (முயன்றால் அதுவும் கிடைக்கும் என்றாலும்) தற்காலத்தில் கிடைக்காததுதான். ஆனால், பழஞ்சோற்றுக்கும், மாசிக்கும் தேவை, இருக்கிற சோற்றில் தண்ணீரை ஊற்ற வேண்டும். உப்பு, பச்சை மிளகாய், அடை ஊறுகாய், தயிர், சின்ன வெங்காயம், மாசி, தேங்காய் பயன்படுத்தப்பட வேண்டும்.

இவை எதுவும் பூமியில் கிடைக்கவே வாய்ப்பில்லாத - செவ்வாய்க் கிரகத்துப் பொருட்களா என்ன?

“வீட்டுல சப்போர்ட் கிடைக்க மாட்டேங்குதேப்பா...?” என்கிறீர்களா?

எல்லோர் வீட்டிலும் இதுதான் நிலை. கொஞ்...ச நாளைக்கு நாம் ஆசைப்படுவதை நாமே செய்து, மனைவி - குழந்தைகளுக்கும் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நாக்குக்கு நல்ல சுவையைக் காட்டிவிட்டு, திடீரென நம் வழமையைக் கைவிட்டு, மாற்று வேலையில் ஈடுபட வேண்டும்.

சுவை உணர்ந்த நாக்கின் கட்டளைக்கு ஏற்ப, வீட்டாரின் செயல்பாடுகளில் விரைவிலேயே மாற்றம் தெரியும் - இன்ஷாஅல்லாஹ்!

வெயில் காலமாக இருப்பதால், நாள்தோறும் எங்கள் வீட்டில் இதுதான் தயாரிக்கப்படுகிறது. இன்றைக்கும் பழஞ்சுாறும், மாசியும்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. உரல் உலக்கையில் மாசி,,,,,
posted by: NIZAR (KAYALPATNAM) on 16 April 2014
IP: 61.*.*.* India | Comment Reference Number: 34416

ஏண்டா தம்பி சாலிஹ் உங்க வீட்டில் இவ்வளவு பெரிய அம்மியிலா மாசி இடிப்பாங்க? எங்க வீட்டில் இதை போன்ற அம்மிகளில் பெரும்பாலும் தேங்காய்,மற்றும் துவையல் அரைப்பார்கள், மாசிக்கு பெரிய உரல் உளைக்கைதான். உள்ளி வெங்காயத்தை போட்டு நசுக்கியவுடன் மாசி மனம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.

என்னுடைய மாணவர் பருவம் சாலை மீன் கருவாடிலதாங்க போச்சி, காலையில் புன்னக்காயல் சித்திங்க ஐந்து, ஆறு பேரு கருவாடு கூடையுடன் தினமும் நம் ஊருக்கு புன்னக்காயல் டவுன் பஸ்ஸில் வருவாங்க, வந்து ஊரின் பல பக்கமாக பிரிந்து கருவாட்டை காலி பன்னீட்டு மாலை பஸ்ஸில் ஊர்ருக்கு திரும்புவாங்க, இப்ப ஆசைக்கு கூட முடியலங்க, மக்க குட்டிகளுக்கு அதன் வாடையே தெரியாதுங்க, இப்ப சுட்டு நம்ம பசங்களுக்கு கொடுத்தா என்ன நடக்கும் நினைத்து பாருங்க.

அன்று ஒரு மாத வீட்டு செலவை இவர்கள் ஒரு சவர்மாவில், சிக்கன் பக்கோடாவில் முடிக்கிறாங்க, எத்தனை அழகான, சிக்கனமான அந்த காலம்?

மாம்பலம் சீசன் வந்துவிட்டால் மாம்பலம் கருவாடு என்ன ஒரு மேட்சிங்?

ஆட்டுக்கறி பக்கம் எங்க போக முடியும்? வெள்ளிகிழமைகளில் ஓடி ஒளிந்து மாட்டு கரி கடையில் ஓரமாக நின்று கரி வாங்குவோம், ஹைஜனிக் பார்க்காத அந்த காலத்தில் எந்த நோயும் இல்லைங்க. இன்னைக்கு விதையே விசமாயிட்டேங்க?

எப்படியோ சாலிஹ் மறந்து கிடந்த என்னை போன்றவருக்கு சாளை மீன் கருவாட்டை உசிப்பிட்டீங்க, எப்படியாவது வாங்கி சுட்டு விட வேண்டியதுதான், வீட்டுல என்ன ரிசல்ட் விளப்போதோ.

அற்புதமான இந்த கட்டுரை நெய்சோறுக்கு மாசியும், பழஞ் சோத்துக்கு கருவாடும் சாப்பிட்ட பீலிங் இருந்திச்சி தம்பி. இன்னும் நிறைய எழுதுங்க, வாழ்த்துக்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. கருவாடு சிரிப்பதை கண்டு இருக்குறீர்களா?!!!
posted by: s.s.md meerasahib (TVM) on 17 April 2014
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34421

அஸ்ஸலாமு அலைக்கும். கட்டுரை ஆசிரியர் அன்பு நண்பரை வாழ்த்தி பாராட்டுகிறேன். பழைய நினைவுகளை உசுப்பேத்தி விடுகிறார்.

மாசி இடித்த உரலில் சோறுவும், தொவைல் அறைத்த அம்மியில் சோறுவும் சாப்பிட்ட காலம் பொற்க்காலம். இந்த கால கட்டத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் பெருமை படுகிறேன்.

அந்த காலம்களில் எல்லோரு வீட்டிலும் சாளை கருவாடும், தொண்ட கருவாடும் கண்டிப்பாக இருக்கும். பலசோறுக்கு மட்டும்தான் இது உபயோகம் என்று எண்ணி விடவேண்டாம். இப்போது பிள்ளைகள் கேலக்சி கொக்கா சாப்பிடுவது போல..... தோணும் போது விறகு அடுப்பை தீயை பெருக்க வைத்து கருவாட்டை சுட்டு தின்போம். அப்படி கருவாடு ரெடியாவதை அடுப்புக்குள் கிடக்கும் கருவாடையும் ஆவலோடு கவனித்து கொண்டு இருப்போம். ஏனெனில் சரியான பதத்தோடு இருந்தால் அதன் டேஸ்டே.... தனி. அப்படி பதமாகிவிட்டது என்பது எப்படி தெரியும்.? சூட்டில் வேகும் கருவாடு வேகுவத்தின் காரணத்தால் வாய் திறந்து நம்மை பார்த்து சிரிக்கும். அதை பார்த்து நாங்களும் சிரித்து வெளியில் எடுத்து கருவாடு கேலக்சி கொக்கா ஆசையுடன் தின்போம்.

பொற்க்காலம் திரும்பி கிடைப்பது கடினம். ஏக்கத்துடன் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: Bakkar Sahib (Hong Kong) on 05 June 2014
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 35195

அஸ்ஸலாமு அலைக்கும் நலமே விளைக.

"எழுத்து மேடை" க் காரர்கள் தத்தம் ஆக்கங்களுக்கு இடும் தலைப்புக்கள் எமை வெகுவாய்க் கவர்ந்தமை உண்மை. சாலிஹின் "பிஞ்சுக்கு நஞ்சு" நெஞ்சை ஈர்த்தது .வெகு நாட்களுக்கு முன்னரே வாழ்த்து சொல்ல எண்ணியும் நாட்களை அகல விட்டேன்.

'மாசி இடித்த உரலில் (சுடு) சோறு" கால் துட்டு செலவில்லாமல் அரை நூற்றாண்டு பின்னோக்கி எம்மை பயணிக்க வைத்தது மட்டும் இன்றி அன்பான அன்னையரின் அருளான உரு எம் மனக்கண் முன் தோன்றி முகக்கண்களைப் பனிக்க வைத்ததும் உண்மை.

எழில் நிறை நடையுடன் உணர்வு நிரம்பி வழியும் தவல்கள். அன்னையரின் நினைவோடு அன்பு காட்டும் பணிப்பெண்களின் எண்ணமும் இணைந்து அலையோடியது.

சாலிஹின் எழுத்துக்களின் நடுவே அறிவான தந்தையாரின் சுவையான குறும்புகளும் விரவி இனிமை சேர்த்திருந்தமை அருமை.

குழுவினர் என்றும் வாழ்க வென வாழ்த்துவோன்
சா.பாக்கர் சாஹிப்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved