Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:04:19 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 125
#KOTWEM125
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 7, 2013
முன்னெச்சரிக்கை!

இந்த பக்கம் 4608 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



2000ஆம் ஆண்டு டிசம்பர் 03ஆம் தேதி...

காலை 08.00 மணி...

“மாமா... மாமா...!”

“இன்னங்க... யாரோ உங்கள கூப்பிடுறாங்க...” என் தாயார் கூறினார்.

“யாரும்மா... கொஞ்சம் பார்த்து சொல்லேன்...” என்றார் ‘எஸ்.கே.மாமா’ என அனைவராலும் அன்பாய் அழைக்கப்பட்ட என் தந்தை - மறைந்த மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்கள்...

“அடடா... எனக்கும் மறந்தே போச்சே...? டிசம்பர் ஆறு வருதே...? உங்கள கைது செய்யத்தான் போலிஸ் வந்திருக்கிறார்... சீக்கிரம் பசியாறிட்டு போங்க...” ஏதோ, சந்தையில் மீன் வாங்க அனுப்புவது போல பேசினார் என் தாயார்.

“தம்பி... கொஞ்ச நேரம் வெயிட் பண்றியா...? நா டீ குடிச்சதோட இருக்கிறேன்... கொஞ்சம் பசியாறிவிட்டு வர்றேன்...” முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்வதற்காக ஆறுமுகநேரி காவல் நிலையத்திலிருந்து வந்திருந்த காவல்துறை கான்ஸ்டபிளிடம் என் தந்தை கூற,

“அதுக்கு என்ன மாமா...? எவ்ளோ நேரம்ன்னாலும் காத்திருக்கிறேன்...” ஏதோ வணிகம் பேச வந்தவர் போல அவரும் இசைவு தெரிவித்தார்.

“எதுல வந்திருக்கா தம்பீ...? ஜீப்லயா, பைக்லயா...?

““பைக்லதான் வந்தேன்... அதுலயே டபுள்ஸ்ல போயிறலாம் மாமா...”

“வேற யார்லாம் லிஸ்ட்ல இருக்காங்க...?”

“உங்க மருமகன் மன்னர் பாய்... அப்புறம், தைக்கா தெருவுல ஒரு மாமா...” என ஒரு ஏழு பேரை பட்டியலிட்டார் காவலர். வீட்டில் தண்ணீரில் ஊற வைத்திருந்த ஐந்து மாவில் (அரிசி, வறுகடலை, சிறுதானியங்கள் சிலவற்றைக் கொண்டு அரைத்த மாவுக்குத்தான் ‘ஐந்து மாவு’ என்று பெயர்.) சிறிது சீனியும், வாழைப்பழமும் போட்டு, தன் கைகளால் பிசைந்து உண்டு எழுந்தார் என் தந்தை.

“மர்ஸூன்... மர்ஸூன்...”

மர்ஜூனா என்ற பெயருடைய என் தாயாரை இப்படித்தான் அவர் அழைப்பார்.

“புள்ளே... எனக்குத் தேவையான சாமான்களையெல்லாம் ஒரு பையில் போட்டு தாம்மா...”

“அதெல்லாம் அப்பவே ரெடி பண்ணியாச்சி... போன வருஷம் வரைக்கும் எனக்கு தேதி நினைவில் இருந்ததால டிசம்பர் ரெண்டாம் தேதியே எல்லாத்தையும் எடுத்து வச்சேன்... இந்த முறை கொஞ்சம் மறந்துட்டுங்க...” என்று கூறியவாறே பொருட்கள் அடங்கிய பையை என் தந்தையிடம் கொடுக்க, ஸலாம் சொல்லி விடைபெற்ற தந்தை என்னைப் பார்த்து,

“தம்பீ... இவங்க திருச்செந்தூர் சப் ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போறாங்களா அல்லது பாளையங்கோட்டைக்கான்னு தெரியலே... அதிகாலையில வெளிய போயிட்டு வந்தப்போ சைக்கிளை வீட்டு வாசல்ல வச்சேன்... உம்மாட்ட சாவிய வாங்கி, அத கொஞ்சம் வீட்டுக்குள்ள எடுத்து வச்சிர்றியா...? என்றார். “சரி வாப்பா” என்று நான் கூறவும், எனக்கும் ஸலாம் சொல்லிவிட்டு காவலருடன் புறப்பட்டுச் சென்றார்.

நண்பகல் 12.30 மணியானது.

“மாமீ... மாமீ...”

“அடேய் ஸாலிஹ்... காலைல வந்த போலிஸ்தான் திரும்ப வந்திருக்கார்... வழமை போல உன் வாப்பா என்னத்த மறந்து வச்சிட்டுப் போனாங்களோ தெரியலை... அதை எடுக்கத்தான் வந்திருப்பார் அவர்...”

உம்மா சொன்னது போலவேதான் நடந்திருந்தது.

“தம்பி, உங்க அப்பா வெள்ளெழுத்துக் கண்ணாடியையும், இந்த மாசம் ஒன்னாம் தேதிலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் உள்ள ‘இந்து’ பேப்பரையும் எடுத்துட்டு வரச் சொன்னாங்க...”

அடுக்களையிலிருந்தவாறே அதைக் கேள்வியுற்ற என் தாயார்,

“மாமா டீ ஏதும் கேட்டால் வாங்கிக் கொடுத்துக்குங்க... பீடி, சிகரெட் கேட்டா மட்டும் இரக்கப்பட்டுடாதீங்க...” என்று காவலரிடம் சொன்னார். “அதெல்லாம் நான் பாத்துக்குறேன் மாமீ... இன்னிக்கு நேத்தா அவங்கள எனக்கு தெரியும்...?” என்று கூறி, என் தந்தை மறந்து வைத்துவிட்டுச் சென்ற பொருட்களை வாங்கிச் சென்றார்.

பாபரி மஸ்ஜித் திரும்பக் கட்டிக் கொடுக்கப்படுகிறதோ, இல்லையோ... ஒவ்வோர் ஆண்டும் எங்கள் குடும்பத்திற்கும், ஆறுமுகநேரி காவல்துறைக்கும் இடையிலுள்ள உறவு மட்டும் மிகவும் வலிமையாகவே கட்டிக் கொடுக்கப்பட்டு வந்தது.

உத்தரபிரதேசம் - அயோத்தி நகரில் அமைந்திருந்த 400 ஆண்டுகால பாரம்பரியமிக்க பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் நாளில் சமூக நல்லிணக்க விரோதிகளின் தீவிர கூட்டுச் சதி காரணமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளியைப் பறிகொடுத்தது போதாதென்று, அதைத் தொடர்ந்து நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளிலும் முஸ்லிம்கள் - குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டனர். பாதிப்பின் உச்சகட்டத்திற்கு சமுதாயம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், முஸ்லிம் சமுதாய அமைப்புகள் பலவும் அவரவர் வடிவமைப்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்கங்கள், மத நல்லிணக்க நிகழ்ச்சிகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த - டிசம்பர் 06ஆம் நாள் என்றாலே முஸ்லிம்களின் போராட்ட நாள் என்றானது. அதே நாள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளாகவும் இருப்பதால், தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் காலப்போக்கில் இணைந்து போராடத் துவங்கினர்.

கொட்டும் மழையில் சென்னையில் ஆர்ப்பாட்டம், தொழுகைப் போராட்டம் என்றெல்லாம் பல போராட்டங்கள் நடத்தப்படுவதாக ஆண்டுதோறும் அறிவிப்புகள் வெளியாயின. அதற்கு அடுத்த நாளிலிருந்து காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் களை கட்டும். மேலப்பாளையம், காயல்பட்டினம், அதிராம்பட்டினம், கீழக்கரை, களக்காடு அருகிலுள்ள ஏர்வாடி, முத்துப்பேட்டை, தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்கள் என முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளிலில், வீதிகளில் கடை வைத்திருந்தோர், வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊர் வந்தோர் உட்பட பலதரப்பட்ட மக்களையும் கைது செய்து கணக்குக் காட்டுவது காவலர்களின் கடமையாகவே மாறிவிட்டிருந்தது. கைது செய்யப்படுவோர் டிசம்பர் 06ஆம் தேதி மாலையிலோ அல்லது 07ஆம் தேதியோ விடுவிக்கப்படுவர்.



உள்ளூரிலிருப்பவர்கள் என்றால் பரவாயில்லை... அந்த நாட்களில் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், கைது செய்யப்பட்டுச் சென்றதால், இருந்த வேலைவாய்ப்புகளை இழந்தோர், தொழில்துறைகளில் பாதிக்கப்பட்டோர் ஏராளம். ஆண்டுகள் கடந்தன... இந்த ஆண்டும் நேற்று சில சமுதாய அமைப்புகளால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவற்றில் வீரியம் குறைந்துள்ளதால், காவல்துறையின் முன்னெச்சரிக்கைப் படலத்திலும் வீரியமில்லை. கைது நடவடிக்கைகள் பெரும்பாலும் இல்லை.

காயல்பட்டினம், தூத்துக்குடியில் ஒரு பகுதி, மேலப்பாளையம் என சில ஊர்களில் கடந்த சில ஆண்டுகளாக யாருமே கடையடைப்புக்கு அழைப்பு விடுக்காத நிலையிலும், முஸ்லிம்களால் தமது கடைகள் அடைக்கப்பட்டு, அமைதி வழியில் கண்டனங்கள் பதிவு செய்யப்படுகிறது. மறுமுனையில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டித் தரக்கோரி, இந்து முன்னணி போன்ற அமைப்புகளாலும் போராட்டங்கள் பெயரளவில் நடத்தப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.



பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 21 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்றளவும் வழக்குகள் நிலுவையில்... தண்டனையளிக்கப்பட வேண்டியவர்களோ - அடுத்த பிரதமரை நாட்டு மக்களுக்கு இனங்காட்டும் தொடர் பரப்புரையில்... அதற்கடுத்த நிலையிலுள்ளோர் அதற்கு மறுப்புரையில்... நம் ‘சுதந்திர’ இந்தியாவில் இருந்துகொண்டு இதுகுறித்து வியப்பதில் பொருளில்லை.

இழந்துவிட்ட பாபரி மஸ்ஜிதை திரும்பப் பெறும் கோரிக்கைகளுடன் ஆண்டுதோறும் தொடர்ந்து போராட்டங்கள் நடக்கத்தான் செய்கின்றன. கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்து தரப்பு முஸ்லிம்களும் அதில் இணைந்து கலந்துகொள்கின்றனர்.

ஆனால்.......

இருக்கும் பள்ளிகளிலோ - கொள்கையால், நிர்வாக செயல்பாடுகளால் ஏகப்பட்ட கருத்து மோதல்கள்... அதாவது, இருக்கும் பள்ளிவாசல்களில் வருடம் முழுக்க வேற்றுமையில் வாழ்ந்துவிட்டு, இழந்த பள்ளிவாசலுக்காக ஒரேயொரு நாள் மட்டும் ஒற்றுமையாக போராட்டம்...

விளைவு???

அமைப்புகள் வாழ்கின்றன. கோரிக்கைகளோ சவப்பெட்டிக்குள்!!!

“எந்த ஒரு சமூகத்தையும் நிச்சயமாக இறைவன் மாற்றம் காணச் செய்ய மாட்டான்... அவர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக்கொள்ளாத வரை” என்ற இறைவசனம்தான் நினைவில் வந்து வந்து செல்கிறது.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அல்லாஹ் உன் காவல்!
posted by: kavimagan m.s.abdul kader (doha...qatar) on 07 December 2013
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 31853

நண்பர் எஸ்.கே.வின் எழுத்தாளுமை மிரட்டுகிறது.....

டிசம்பர் ஆறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அவரது எழுத்து வடிவம், கண்முன்னே காட்சியாய் விரிவடைந்து நகைச்சுவை நடையில் இனம் புரியா சோகத்தை நெஞ்சுக்குள் இறக்குகிறது..... மீன் குஞ்சு இயல்பாக நீந்துகிறது!

இழந்தவற்றில் காட்டுகின்ற தீவிரம், இருப்பவற்றில் இல்லையே என்னும் அவரது பதிவு, பெரும்பான்மை இந்திய முஸ்லிம்களின் ஆதங்கத்தை அழகாக எதிரொலிக்கிறது.....

நீதிகள் உறங்கக் கூடும்
நிரந்தரமாய் இறப்பதில்லை...
நித்திரை ஒரு நாள் கலையும்
அதுவரை பொறுமை காப்போம்...

நம்பிக்கை வைப்போம்
நீதி மன்ற நடவடிக்கைகளில்
அதை விட அதிகம்
அல்லாஹ்வின் தீர்ப்பில் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Rilwan (TX) on 07 December 2013
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 31855

கருது வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.. எல்லோரும் எல்லா கருத்திலும் ஒன்று பட முடியாது.. அது கருத்து வேறுபாடாய் இருக்கும் பட்சத்தில் ஆரோக்கியமானது.. ஆனால் இங்கே கருத்துவேர்பாடுகளை வைத்து பிரிக்கப்படுகிறது. வெறுப்புக்கள் வளர்க்கப்படுகின்றன. வேறுபட்ட இயக்கங்களின் தலைமை பதவியில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் கை கொடுக்காதவரை இந்த பிரிவினைகள் ஆழமாகவே இருக்கும்.

கருத்து வேறுபாடே இருக்கக்கூடாது என எண்ணுவது இயலாத காரியம் ஆகும்.. அப்படி இருப்பதும் சிந்தனை சுதந்திரம் இல்லாததையே குறிக்கும்.. ஆனால் மனிதாபிமான அடிப்படையில், தொலை தூர சிந்தனை செய்பவர்களால் கருது வேறுபாடுகளை கடந்து அடிப்படை விசயங்களில், பொது நல விசயங்களில் ஒன்று கூட முடியும்..

ஆனால்.. இங்கே இயக்கங்களை நடத்துபவர்களில் எத்தனை பேருக்கு இந்த முதிர்ச்சி இருக்கிறது?

ஒரு அடிப்படை கேள்வி... ஒரு மசூதியில் இந்த கருத்துள்ளவர்கள், இந்த ஜமாஅத் காரர்கள் தான் தொழமுடியும் என்று கூறினால், அது எப்படி மசூதி ஆகா முடியும்? மசூதி என்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானது தானே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: N.M.Z.AHAMED MOHIDEEN (Kayalpatnam) on 07 December 2013
IP: 61.*.*.* India | Comment Reference Number: 31857

மறைந்த மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அப்பா அவர்கள் மண்ணறையை அல்லாஹ் ஒளி மயமாக்கு வானாக ஆமீன்! பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 21 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.இழந்த இறை இல்லத்தை இறைவன் மீண்டும் வெகு விரைவிலே அழகிய முறையில் மீட்டித் தருவானாக!அதுவரை பொறுமையாய் போராடுவோம் ......இன்ஷா அல்லாஹ்!வெற்றி நமதே...........!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வேடிக்கையும் வாடிக்கையும்
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 07 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31858

SK மச்சானின் வேடிக்கை வினோதங்கள் நகைச்சுவைகள் பற்றி ஒரு தனி VOLUME எழுத வேண்டும்.எனக்கும் அவர்களுக்கும் 40 ஆண்டுகளுக்கு முன் கண்டியில் தொடர்பு இருந்தது. எனக்கு ஆங்கில குருநாதர் அவர்கள். பாபரி மசூதி பற்றி எழுதும்போது அவரைப் பற்றி எழுதினால் வாடிக்கையாக நடக்கும் டிசம்பர் 6 போராட்டங்கள் வேடிக்கை ஆகிவிடும்.

உங்கள் கட்டுரையில் நீங்கள் எடுத்து வைக்கும் கருத்துக்களில் எனக்கு 100 விழுக்காடு உடன்பாடு உள்ளது.இவ்வளவும் எழுத துணிச்சல் வேண்டும்.

விமர்சனங்கள் உங்கள் அணுகுமுறையை சாடும். வெறும் சம்பிரதாயங்களாலும் சடங்குகளாலும் நம்மை முஸ்லிம்கள் என்று முன்னிலை படுத்திக் கொள்ளும் சமுதாயமாக நாம் மாறி விட்டதால், மாற்றார்கள் நமது பலங்களையும் பலவீனம்களையும் நன்கு தெரிந்து வைத்து இருப்பதால், நமக்கு இதற்கு ஒரு விடிவு தீர்வு கிடைப்பது வெகு தொலைவில் உள்ளது.

பக்கத்தில் உள்ள ஆறுமுகநேரியில் பள்ளிவாசல் பஜார் என்று அழைக்கப்படும் இடத்தில நம்மவர்களுக்கு சொந்தமான வளாகத்தில் ஒரு பள்ளிவாசல் சிதிலமடைந்து கிடக்கிறது.சமூக ஆர்வலர்கள் இறை இல்லக் கொடை வள்ளல்கள் அதன் உள்ளே சென்று தூசி தட்டி அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.அது இப்போதைக்கு அயோத்தியில் இடிந்த பள்ளிக்காக என்குவதைவிட மேலானது. இழந்ததை மீட்க போராடும் அதே வேளை இருப்பதை பாதுகாக்கவும் முயற்சி செய்வோம்.அல்லா தௌபீக் செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) on 07 December 2013
IP: 5.*.*.* | Comment Reference Number: 31866

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமை சகோதரர்.S.K.S.அவர்களின் எழுத்து வடிவத்தை படித்து ...நான் '' கண்கலங்கி '' விட்டேன்....

தங்கள் வாப்பா அவர்களுக்கு எல்லாம் வல்ல நாயன். அவனின் சிறப்பான உயர்ந்த இடத்தை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்....தங்கள் வாப்பா அவர்களின் நமது ஊருக்கான பொது நல தொண்டுகள் '' நிறையவே உண்டு ....என்பது நானும் அறிவேன் ...

டிசம்பர் 6 என்று வரும்போது எங்களுக்கும் ....தங்களுடன் சேர்ந்து....தங்கள் வாப்பா அவர்களின் நினைவோடு ....காவல் துறையின் பண்பான பேச்சும் நினைவுக்கு வரும் ......

இன்ஷா அல்லாஹ்....நமது சமுதாயத்துக்கு வல்ல இறைவன் நல்லதோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி தருவானாகவும் ஆமீன்........

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...S K மாமா
posted by: Dr D Mohamed Kizhar (chennai) on 07 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31868

என்னால் மறக்கமுடியாத நபர் மறைந்த மர்ஹூம் மாமா.என் முன்னேற்றத்தில் அதிக அக்கறை எடுத்தவர்..நான் சென்னையில் இருந்து ஊர் வரும்போதெல்லாம் , ஜாமிஉல் AZHAR எதிர்த்த டி கடையில் ஒன்றாக டீயும் ,வடையும் தின்பதை வழக்கமாக கொண்டோம்.அவர் மறைவதற்கு சில நாட்கள் முன்பு இந்த நிகழ்வு நடந்தது.

அநேக திறமைகளை தனக்குள் வைத்துகொண்டு, எதையுமே தனக்கென அல்லது தனது வாரிசுகளுக்கு அதிகம் பயன்படுத்ததவர்..சமூகத்திற்கு அதிகம் திறமைகளை வெளிபடுத்தியவர்.

அவரின் ஆங்கில புலமை மற்றும் உச்சரிப்பு கண்டு வியந்துள்ளேன்..மிக நுண்ணியமான பொது அறிவு மாமாவுக்கே உரியது.

மாமா என்றால், உயரமான உடல் வாகு, நீண்ட கழுத்து,குறுந்தாடி ,தனித்துவ கண்ணாடி, கண்ணாடிக்கு பின் சிறிய செயின், சில சமயம் கழுத்தில் துண்டு, சிரித்த முகம், "என்ன மருமவனே " என்று உரிமையுடன் கூப்பிடும் குரல்..நுனி நாக்கில் ஆங்கிலம் ,ஆழமான அரசியல் விவாதம், பேசும் பொது இடையில் கொஞ்சல் தெளிக்கும் உமிழ்நீர்,சமயத்தில் கையில் பை,இதுபோக முக்கியமாக....கையில் ஆறாவது விரலாக சிகரட் ............. ..போன்றவை இன்னும் என் கண்முன்னே நிழலாடுகிறது.

ஏதோ நேற்று இன்று முன் இன்று பேசியது போல் ஒரு பிரம்மை ..என் வயது ஒட்டிய அவரின் மகன்களை விட,அவரிடம் மிக நெருக்கமாக நண்பராக பழகிய நினைவு..

இறைவன் கட்டளை படி மரணித்துவிட்டார்கள்..ஆனால் என்றுமே என் நெஞ்சில் மாமாக்கு இருக்கும் இடம் இன்னும் காலியாகவே உள்ளது..

நவ்வரல்லாஹு லாரீஹஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நினைக்கும் போதே நெஞ்சம் கனக்கிறது...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) on 07 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31869

தந்தையின் நிகழ்வுகளை எளிமையாக கூறியதோடு இன்றைய சமுதாயத்தின் அவல நிலையை ஆதங்கமாக கூறியுள்ளார் இக்கட்டுரை ஆசிரியர்.

டிசம்பர்-6 என்பது பாரத மாதாவுக்கு பேதி எடுத்த நாள் என்றும், பாரத மாதா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நாள் என்றும் பல மேடைகளில் மண்மறைந்த மாமனிதர் எஸ்.கே. மாமா அவர்கள் முழங்கக் கேட்டுள்ளேன்.

ஆறாத புண்ணாகவும், மாறாத வடுக்களாகவும் எம் சமுதாய மக்கள் மனதில் இன்றளவும் வேதனை தரும் ஓர் விரும்பதகாத நிகழ்வுதான் இது!

இனி காலமெல்லாம் டிசம்பர்-6 என்பது ஓர் கருப்பு நாள்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: ismail (Dammam) on 08 December 2013
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31871

எளிமையான ஆனால் தரமான நடை..

கட்டுரையாளர் தன் திறமையை தொடர்ந்து உபயோகப் படுத்தினால், பிரயோசனமான பல கட்டுரைகள், நம் சமூகத்திற்குக் கிடைக்கும்.. செய்வார் என்று நம்புகிறேன்.. இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:... மீன் குஞ்சு அல்ல இது.....
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 08 December 2013
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31872

கவிமகன் காதர், இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ஸாலிஹ்ஹை மீன் குஞ்சாவே பாப்பீங்க, அது பெரும் சுராவாக ஆகி எவ்வளவோ காலம் ஆயாச்சு.....

அல்லாஹ் ஸாலிஹுக்கும் அவன் தந்தை SK மாமாவுக்கும் மறுமையின் நற்பாக்கியங்களை நிறைவாக கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...sk மாமாவின் மறதி ...
posted by: netcom buhari (chennai) on 09 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31892

அதிகாலையில வெளிய போயிட்டு வந்தப்போ சைக்கிளை வீட்டு வாசல்ல வச்சேன்... உம்மாட்ட சாவிய வாங்கி, அத கொஞ்சம் வீட்டுக்குள்ள எடுத்து வச்சிர்றியா...? என்றார். “சரி வாப்பா” என்று நான் கூறவும் (c & P )

இதை பார்த்ததும் எனக்கு ஒரு மறக்க முடியாத சம்பவம் நினைவுக்கு வருகின்றது

sk மாமாவுக்கு மறதி ரொன்ப அதிகம் எண்டு, கூட இர்பவகளுக்கு நன்றாக தெரியும் , என் சைக்கிளை மாமா அவர்கள் ஒரு நாள் எனிடம் கேட்டார்கள். நானும் சாவியை கொடுத்து விட்டேன். மறுநாள் என் சைக்கிளை எடுக்க அவரிடம் சென்றேன். அவரிடம் என் சைக்கில் சாவியை வாங்கி விட்டு , சைக்கிளின் பூட்டை ஓபன் பண்ணினேன், பூட்டு ஓபன் ஆகியது. ஆனால் சைகில் என் உடையது கிடையாது.

உடனே மாமாவிடம் போய் இது என் சைக்கில் இல்லை எண்டு சொன்னேன், அதுக்கு அவர்கள் தன்னுடைய மறதியை ஒத்துக்கொள்ளாமல், “சாவி உன்னுடையது தானே?” என்று கேட்டார். நானும் “ஆமா மாமா... ஆனால் சைக்கில் என் உடையது கிடையாது” என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், “உன் சாவி எத்தன சைக்கிளதான் தொறக்கும்?” என்று கேட்டார்.

உடனே நான் புரிந்து கொண்டேன் மாமா அவர்கள் என் key யை வைத்து வேறு யாரோ உடைய சைக்கிளை எடுத்து வந்து விட்டார்கள் என்று. இது ஒரு நீண்ட சம்பவம்.

கடைசியில் என் சைக்கில் haapy ஐஸ் கிரீம் முன்னால் நிண்டது. நான் போய் எடுத்து கொண்டேன். மாமா எடுத்து வந்த சைகிளை காணோம் என்று சைக்கிள் owner போலிசில் கம்ப்ளைன்ட் கொடுக்க ரெடியாகிவிட்டார். சமாதானப் படுத்திவிட்டு வந்தோம்.

மாமா அவர் உடைய தப்பை ஒத்துக் கொள்ளாமல், உன் சாவி ஏன்டா எல்லா சைக்கிளையும் தொறக்குது, என்று என்னைக் கேட்டதை இன்றும் நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் பண்ணிய தப்புதான் என்ன என்று எனக்கு இன்னும் புரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அவர்கள் மனதில் எண்ணிய நல்ல காரியங்கள் - மன ஓட்டங்கள் இந்த இந்திய திரு நாட்டில் நிறைவேரட்டுமாக ஆமின்...
posted by: தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 13 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31948

எழுத்து மேடை பகுதியில் தம்பி எஸ்.கே.ஸாலிஹ் அவர்களின் முன்னெச்சரிக்கை! என்ற தலைப்பின் ஆக்கத்தை சில நாட்கள் கடந்த பின்பே படிக்க நேர்ந்தது..!

உண்மையான நிலவரங்களை இன்றைய தலைமுறைகளுக்கு வெளிபடுத்தி உள்ளார்.

இறைவன் கட்டளை படி SK மாமா அவர்கள் மரணித்துவிட்டார்கள் அவர் ஹயாத்தாக இருந்த சமயம் இந்நகரின் நன்மைக்காக SK மாமா அவர்கள் செய்த சேவைகள் - தியாகங்கள் பல... அதற்கான கூலி வல்ல இறைவனிடம் மறுமையில் கிடைக்கும்..

நாம் அனைவர்களும் காலம் சென்ற SK மாமா அவர்களுக்காக பிராத்திப்போமாக... அவர்கள் மனதில் எண்ணிய நல்ல காரியங்கள் - மன ஓட்டங்கள் இந்த இந்திய திரு நாட்டில் நிறைவேரட்டுமாக ஆமின்... இன்ஷா அல்லாஹ்..

அது வரை முன்னெச்சரிக்கையாக நாம் இருப்போம்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved