Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:20:48 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 106
#KOTWEM106
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 19, 2013
தி இந்து: பாரம்பரியம் மிக்க செய்தி ஓடையிலிருந்து கிளை ஓடை!

இந்த பக்கம் 4446 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



135 வருட பாரம்பரியம் மிக்க செய்தி ஓடையிலிருந்து கிளை ஓடை ஒன்று சன்னமாக ஒலித்தோடத் தொடங்கியுள்ளது. இந்து குழுமத்திலிருந்து “ தி இந்து “ என்ற அதே பெயரிலேயே தமிழ் நாளிதழை தொடங்கி உள்ளனர். இதன் ஆசிரியராக கே.அசோகன் பொறுப்பேற்றுள்ளார். இவர் விகடன் குழுமத்தில் பணியாற்றியவர்.

2003 ஆம் ஆண்டு வரை தினமணி நாளிதழின் தீவிர வாசகனாக நான் இருந்தேன். அந்த ஆண்டு நடந்த குஜராத் இன அழித்தொழிப்பு பற்றிய உண்மையான செய்திகளுக்காக இந்து ஆங்கில நாளிதழை தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். அன்றிலிருந்து இன்று வரை தி இந்து தான் விருப்பத்திற்குரியதாகவும் நம்பகமானதாகவும் நீடித்து வருகின்றது.

அதன் பிறகு இந்தியாவில் வெளியாகும் பெரும்பாலான தேசிய ஆங்கில நாளிதழ்களை அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இது வரை நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பில் தேசிய, வட நாட்டு அச்சு ஊடகங்கள் ஆற்றிய பெரும் பங்களிப்புகள் என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஃபாஸிஸ்டுகள் இங்குள்ள பெரும்பாலான ஊடகங்களை முஸ்லிம்களுக்கு எதிரான போரில் திரி சூலமாகவே பயன்படுத்துகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரையில் நேரடியாக பங்கெடுக்காத ஊடகங்கள் கூட இந்து ஃபாஸிஸ்டுகளின் அக்கிரமங்களை இருட்டடிப்பு செய்து கள்ள மௌனம் சாதிக்கின்றனர்.

இந்த இடத்தில்தான் இந்து ஆங்கில நாளேடு நிமிர்ந்து நிற்கின்றது. அன்றிலிருந்து இன்று வரை மதச்சார்பின்மையின் காவலனாகவே கேடயத்தை உயர்த்தி பிடிக்கின்றது இந்து ஆங்கில நாளேடு.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இடது சாரிகள், மதச்சார்பின்மை வாதிகளுக்கு எதிரான இந்திய ஃபாஸிஸ்டுகளின் அவதூறுகள், பொய் பரப்புரைகள், தாக்குதல்கள், இன அழித்தொழிப்புகள் போன்றவற்றை தன்னால் இயன்ற அளவிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி ஆவணப்படுத்தி இடித்துரைக்கும் துணிவான பாரம்பரியம் இந்து ஆங்கில நாளேட்டிற்கு மட்டுமே உண்டு.

தெளிந்த உயர் ஆங்கிலம், மதச்சார்பின்மை, ஆட்சியாளர்களை அண்டாத போக்கு, சூழலியலில் கரிசனம், ஆதி வாசிகள், தலித்துக்கள் போன்ற விளிம்பு நிலை மனிதர்களை பற்றிய அக்கறை என்பனவற்றுடன் இதழியலில் இந்து ஆங்கில நாளேட்டிற்கென தனி ஒரு பாதை உண்டு.

அவையாவன ...

• செய்திகளை அதன் ஆழ அகலங்களுடனும் உடன்பாடான, எதிர்மறையான கூறுகளுடனும் அலசுதல்.

• ஆய்வுக்கண்ணோட்டமும் தீர்வும் நிறைந்த அரசியல் பொருளாதார கட்டுரைகள்.

• ஆளும் வர்க்கத்தையும், பெரும்போக்கு சமூக நடத்தைகளையும் உறுதியான தலையங்கங்கள் மூலம் கேள்விக்குள்ளாகுதல்.

• ஆசிரிய தலையங்கத்திற்கு இணையான, தரமான வாசகர் கடிதங்கள்

• செய்திகளின் உள்ளடக்கம், தலைப்பு உள்ளிட்ட அம்சங்களில் ஏற்படும் பிழைகளை வாசகர்கள் சுட்டிக் காட்டவும், தேவையேற்பட்டால் அதற்கான விளக்கத்தை அளிக்கவும் READERS EDITOR என ஒரு பத்தியை துவக்கி அதற்கென தனி ஆசிரியர், தொலை பேசி எண் உள்ளிட்டவற்றை ஒதுக்கி உள்ளனர்.

• ஆசிரியர் குழுவினரின் கருத்தோடு இணைந்து செல்லாத கட்டுரைகளையும் தலையங்கப் பகுதியிலும் OPEN PAGE இலும் வெளியிடுதல்.

• குற்றச் செய்திகளை சமூக பொறுப்புணர்வுடன் வெளியிடுதல். குறிப்பாக தகாத உறவுகள் தொடர்பாக இங்குள்ள தமிழ் நாளிதழ்கள் செய்வது போன்ற நேரடி வர்ணணைகளை எக்காலத்திலும் வெளியிடாதது.

• இசை, ஓவியம், இலக்கியம், சிற்பக்கலை, நடனம், திரைப்படம், சூழலியல், மொழியியல், சுற்றுலா, உணவு, மருத்துவம் கல்வி விளையாட்டு, வணிகம், பொருளாதாரம், அறிவியல், வரலாறு, விவசாயம், கட்டிடக்கலை, வாழ்வியல் பண்பாடு போன்ற துறை சார்ந்த பதிவுகள் தொடர்ச்சியாக இடம் பெறும். அந்த பதிவுகள் மேம்போக்கானவையாக இல்லாமல் துறை சார்ந்த விரிவான அலசலாகவும் இருக்கும். குறிப்பாக திரை உலக கிசு கிசுக்களுக்கு இங்கு இடமில்லை.

• குழந்தைகள், மாணவர்கள், வளர் இளம் பருவத்தினர், பெண்கள், முதியவர்கள் என எல்லா பிரிவினருக்கான செய்திகளும் இடம் பெறும்.

இவ்வாறாக ஆங்கில இந்து நாளிதழின் சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பென்னம் பெரும் ஆலமரத்தின் விழுதாக கிளைத்திருக்கும் தி இந்து தமிழ் நாளிதழும் மேற்கண்ட சிறப்பம்சங்கள் அனைத்தையும் தாங்கி வெளி வர வேண்டும் என்பதே நமது பெரு விருப்பமாகும்.

செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் வெளி வந்து கொண்டிருக்கும் தி இந்து தமிழ் நாளிதழை வாசித்ததில் ஏற்பட்ட மனப்பதிவுகள்:



~~~ வகை வகையாக,அழகியலுடன், விவரமாக வரும் செய்திகள்

~~~ எளிதாக வாசித்து கடந்து செல்லும் வகையில் துணுக்கு செய்திகள்

~~~ சிறுபான்மையினர், ஆதிவாசிகளுக்கு நடந்த அநீதிகளின் பதிவுகள்

~~~ சுவாரசியமான அறிவியல் துணுக்கு செய்திகள்

~~~ மாற்றுக் கல்வி முறையை பின்பற்றும் கல்விக்கூடங்கள் பற்றிய கவனக் குவிப்பு

~~~ இந்து ஃபாஸிசத்தின் அரசியல் நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கும் கட்டுரை

~~~ கூடன் குளம் அணு உலை கழிவை மதுரையில் புதைக்க ஆளும் வர்க்கம் எடுக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்தியது

~~~ பன்னாட்டு விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் விளதிமீர் புதின் எழுதிய அரசியல் கட்டுரையின் மொழியாக்கம்

என தரத்தில் நம்பிக்கையூட்டுகின்றது.





குறைகளாக பட்ட விஷயங்கள் :

## 3 ரூபாய் விலையில் 36 பக்கங்களைத் தருகின்றது இந்து ஆங்கில நாளேடு. ஆனால் தி இந்து தமிழ் நாளிதழின் விலை 4 ரூபாய். பக்கங்களோ 16 தான்.

## முதல் நாளிலேயே தமிழக ஆளுங்கட்சியின் புகழ் பாடும் வகையில் பக்கம் பக்கமாக விவரணங்கள். அம்மா குடிநீர் குடுவை, தாது மணல் அள்ள தடை போன்ற தமிழக அரசின் நடவடிக்கைகள் தொடர்பான வர்ணனைகள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

பாதுகாக்கப்பட்ட குடி நீரை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்குவது அரசின் அடிப்படை கடமை. அதை விற்கும் ஒரு அரசு எப்படி மக்கள் நல அரசாக இருக்க முடியும் ?

அதே போல தாது மணல் கொள்ளை விஷயத்தை மக்கள் மன்றத்தில் ஆஷீஷ் குமார் என்ற மாவட்ட ஆட்சியர் போட்டு உடைத்ததின் விளைவாக வேறு வழியின்றி தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுவும் மிக கால தாமதமான நடவடிக்கை.

இரு கழக ஆட்சிகளின் முழு ஆசியுடனும் துணையுடனும்தான் இந்த சுரண்டல் இது வரை நடந்து வந்துள்ளது.



## விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்தல், வெறியூட்டும் துவேஷ முழக்கங்களுடன் கரைப்பு ஊர்வலம் நடத்துதல் போன்றவை இந்துத்வ ஃபாஸிச அமைப்புக்களின் நிகழ்ச்சி திட்டத்தில் உள்ளவை எனபது ஊரறிந்த உண்மை. இந்த வெறுப்பு விழாக்களுக்கு உடன்பாடான செய்திப்பதிவு கொடுத்திருப்பது என்பது பொது வாழ்வில் அவற்றிற்கு அங்கீகாரம் கிடைக்கவே வழி வகுக்கும்.

## கார்ப்பரேட் உலகு, நுகர்வு பண்பாடு, இந்து ஃபாஸிசத்தின் முகவர்களாகவும் பண்பாட்டு தூதுவர்களாகவும் செயல்படும் ஜெய மோகன், பத்ரி சேஷாத்ரி, பா. ராகவன் போன்றோரின் ஆக்கங்கள் வருவது அச்சத்தையும் அய்யப்பாடுகளையும் கிளப்புகின்றது.

தி இந்து தமிழ் நாளிதழின் ஆசிரியர் குழுவானது இனி வரும் காலங்களில் இவற்றை தவிர்க்கும் வகையில் செயல்படுவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் வெளி வந்து கொண்டிருக்கும் தினத்தந்தி, தினகரன், மாலை மலர், மாலை முரசு, தின மலர் தமிழ் நாளிதழ்கள் அனைத்தின் தரமும் அனைவரும் அறிந்ததே. வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு, குழந்தைகளும் பெண்களும் வாசிக்க முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்தவை. தினமணி மட்டும் இந்த பட்டியலில் வராமல் இருந்தது.

டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன், ஐராவதம் மகா தேவன், போன்ற சான்றோர்கள் கோலோச்சிய பாரம்பரியம் மிக்க தினமணியின் போக்கில் கடந்த சில வருடங்களாக வீழ்ச்சி ஏற்பட்டு வருவதை கவனிக்க முடிகின்றது. ஆபாச வர்ணனை செய்திகள் இதுவரை இடம் பெறவில்லைதான். ஆனால் தில்லி வைத்திய நாதன் ஆசிரியராக பொறுப்பேற்ற பிறகு பக்கச் சார்பு, அ.தி.மு.க, பா.ஜ.க. ஆதரவு, கிசு கிசுப்பு செய்திகள் என அதல பாதாளத்தை நோக்கி தினமணியானது உருண்டு செல்கின்றது.

தினமணியின் சறுக்கல் தொடங்கிய கால கட்டத்தில் மதச்சார்பின்மை, அதிகாரத்தை சாராமை போன்ற விழுமியங்களுக்காக பெயர் போன தி இந்து பாரம்பரியத்திலிருந்து தமிழ் நாளிதழ் முகிழ்த்திருப்பது நம்பிக்கையூட்டுகின்றது.

“ ஒரு நாடு ஒரு பண்பாடு “ என்ற பேரினவாத கருத்தியலுடன் இயங்கும் மதன் உலாவும் விகடன் குழுமத்திலிருந்து வந்த கே.அசோகன் அவர்கள் பன்மைச் சமூக கருத்தியலுக்கு (plural society concept) ஆதரவானவர்.

கே. அசோகன் அவர்களின் தலைமையில் தி இந்து நாளிதழானது தமிழகத்தின் பெரும்போக்கு ஊடக ஓட்டத்தில் ஒரு மாற்று தமிழ் ஊடகமாக உருவெடுக்கும் என்ற நமது எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும் பொய்க்காது என நம்புவோமாக!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆதரிப்போம் தமிழ் 'தி ஹிந்து' நாளிதழை.
posted by: Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) on 19 September 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30199

'The Hindu' ஆங்கில இதழின் கடந்த 30 வருட வாசகன் நான். கட்டுரையாளர் குறிப்பிட்டது போல் மதவாத பாசிச சக்திகளை, அவர்களின் சூழ்ச்சிகளை அம்பலபடுத்துவதில் நம் சமுதாய பத்திரிக்கைகளை விட, தலையங்கம், ஆராச்சியாளர்கள் கட்டுரைகள் என்று முன்னிலை வகித்தவர்கள். பாபர் மஸ்ஜித் இடிப்பு ஆகட்டும், குஜராத் கலவரமாகட்டும், காஷ்மீர் பிரச்சனையாகட்டும், பாடத்திட்டத்தில் காவிமயமாக்கள், தற்போது நடைபெற்ற முசபார்நகர் கலவரம் ஆகியவற்றில் முஸ்லிம்களை கருவறுத்த சம்பவங்களின் நடுநிலையான பதிவுகள் நம் சமுதாயத்திற்கு ஆறுதல் அளித்த விஷயங்கள். கட்டுரையாளர் கூறியது போல், தமிழில் 'தினமணி' தடம்புரண்ட பின் நமக்கு ஆதரவாக இல்லையன்றாலும் நடுநிலையான தினசரி பத்திரிகை இல்லை என்ற குறையை 'தி ஹிந்து' தமிழ் நாளிதழ் போக்கும் என்று நம்பலாம். 'தி ஹிந்து' ஆங்கில நாளிதளின் கொள்கையை பின்பற்றினால் தமிழ் பேசும் நம் மாற்று மத சகோதரர்களுக்கு உண்மை நிலை தெரியவரும்.

நல்லதையே நினைத்து வரவேற்று வாழ்த்துவோம். நம் சமுதாய மக்கள் மற்ற தரமற்ற தமிழ் தினசரிகளை வாங்குவதை தவிர்த்து 'தி ஹிந்து' தமிழ் நாளிதழை வாங்கி ஆதரவு நல்குவோம்.

- சாளை. அப்துல் ரஸ்ஸாக்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நல்வரவு ஹிந்து தமிழ் நாளிதழ்!
posted by: கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா ) on 19 September 2013
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 30200

நம்புவோம்!

வைத்தியநாத அம்பிக்குப் பிறகு தரம் தாழ்ந்து விட்ட தினமணி இதழின் நீண்ட கால தீவிர வாசகர்கள், குறிப்பாக நீங்கள், கான் பாகவி போன்ற சிந்தனையாளர்கள் அதற்கு மாற்று ஒன்று விரைவில் கிடைக்காதா? என்று எதிர்நோக்கிய ஆவல் பாரம்பரியமிக்க தி ஹிந்து குழும புதிய தமிழ்ப் பரிமாணத்தின் மூலம் ஓரளவு நிறைவடையலாம் என்று நம்புவோம்!

தமிழ் இதழியல் துறையை [குறிப்பாக நாளிதழ்கள்] பற்றிய சரியான அலசல் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. சொட்டுக்களாகப் பாராட்டு மழைகளை மட்டும் பொழியாமல், குட்டுகளாகக் குறைகளையும் நளினமாக வழங்கியிருக்கிறீர்கள். குறிப்பாக, ஜெமோ போன்றவரின் பங்களிப்பு, ஹிந்து நாளிதழுக்கு மகுடம் சேர்க்காது. தவறான கீழ்த்தரமான முத்திரையைத் தான் ஏற்படுத்தும் என்பதை நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள்.

ஹிந்து நாளிதழ் குழுமம் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹிந்து நாளிதழுக்கும் இக்கட்டுரையை அனுப்பி வையுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, எழுத்துத்துறையில் ஆர்வமிக்க தங்களைப் போன்றோர், வெகுஜன பத்திரிகைகளிலும் எழுதினால் என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கான் பாகவியின் தினமணி ஆசிரியர் கடிதம்
posted by: Mohamed Buhary (Chennai) on 19 September 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30203

அண்மையில் தமிழகத்தில் அறியப்பட்ட பிரபல மார்க்க அறிஞர் கான் பாகவி அவர்களின் முகநூல் பக்கத்தில் படித்த கடிதம் ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன்.

தினமணி ஆசிரியருக்கு ஒரு கடிதம்

1975ஆம் ஆண்டிலிருந்து தினமணி நாளேட்டை விரும்பிப் படித்துவரும் வாசகன் நான். தினமணியின் 80 ஆண்டுகால வரலாற்றில் சுமார் 40 ஆண்டுகள் அதனுடன் தொடர்புள்ளவன்.

தினமணி வாயிலாகவே உலக அரசியல், பொருளாதாரம், கலை, அறிவியல், சமயம், நாட்டு நடப்புகளை அறிந்தவன். செம்மொழியாம் தமிழ்மொழியை நான் கற்றதே தினமணியிடம்தான். பிழையின்றி பேசவும் எழுதவும் கற்றுக்கொடுத்த ஆசிரியர் என்னைப் பொறுத்தவரை தினமணியே.

என் கட்டுரைகள், கடிதங்கள் பல தினமணியில் நிறைய வெளிவந்துள்ளன. என் முதலாவது ஆக்கம், ஐயா ஏ.என். சிவராமன் அவர்கள் காலத்தில் வெளிவந்தது. காலம் சென்ற என் தந்தையும் தினமணியின் நீண்டகால வாசகரே. என் பெரிய தந்தை ஒருவரை ‘தினமணி பெரியப்பா’ என்றே நாங்கள் அழைப்போம்.

தினமணியின் தனிச் சிறப்பே, அதன் செய்திகளில் இருந்த நம்பகத் தன்மைதான். நல்லிணக்கம், மதச்சார்பின்மை, கட்சி அல்லது குழு சார்பற்ற நிலை, நடுநிலைப் போக்கு, நளினமான நடை, கண்ணியமான எழுத்து, நல்ல தமிழ் முதலான அம்சங்களால் தமிழ் இதழ்களில் தினமணிக்குத் தனிஇடம் இருந்தது.

அண்மைக் காலமாக –குறிப்பாக கே. வைத்தியநாதன் அவர்கள் ஆசிரியர் பொறுப்பை ஏற்றதிலிருந்து- தினமணி தன் பாரம்பரிய கண்ணியத்தை இழந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. செய்திகள், தலையங்கம், கட்டுரை… என எல்லாப் பகுதிகளிலும் ஒரு வக்கிரம் தெரிகிறது. செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. நடுநிலை வாசகர்களை முகம் சுழிக்கவைக்கிறது.

1. செய்திகள்: முன்பெல்லாம் செய்தியை செய்தியாகக் கொடுத்துவந்த தினமணி, இப்போது சொந்தக் கருத்தைச் செய்தியினூடே புகுத்துவது வெளிப்படையாகவே தெரிகிறது; செய்திகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க ஆரம்பித்துவிட்டது. ஏதோ ஒரு புலனாய்வு வார இதழைப் படிக்கும் உணர்வுதான் சாமானிய வாசகனுக்கு ஏற்படுகிறது. ‘மெய்யாலுமா?’ ஓர் எடுத்துக்காட்டு!

ஒரு தேசிய – காந்திய நாளிதழ் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்? இன்றைய தினமணியை வாசிக்கும் யாரும், அது மாநில அளவில் அ.தி.மு.க.வையும் தேசிய அளவில் பா.ஜ.க.வையும் ஆதரிக்கும் பத்திரிகை எனச் சட்டெனக் கூறிவிடலாம்.

மதச் சிறுபான்மையினருக்கு –குறிப்பாக முஸ்லிம்களுக்கு- எதிரான, அவர்களைக் காயப்படுத்துகின்ற செய்திகளுக்கு இப்போதெல்லாம் தினமணி முன்னுரிமை அளிப்பது வெள்ளிடை மலை. ஒரு பயங்கரவாதச் செயலுக்கு யார் காரணம் என்பது உறுதியாவதற்கு முன்பே முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்கி முதன்மைச் செய்தியாக வெளியிட்டுவிட்டு, முஸ்லிம்கள் காரணமல்ல என்பது உறுதியானபின் ஓர் ஓரத்தில் முக்கியமே இல்லாமல் வெளியிடும் இரட்டை நிலை தினமணிக்கும் வந்துவிட்டது.

அவ்வாறே, உயர்சாதி இந்துக்களின் செய்திகள், நிகழ்ச்சிகள், புகைப்படங்களே இரண்டாவது மற்றும் மூன்றாவது பக்கங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. அதிக முக்கியத்துவத்துடன் சமய விழாக்கள் அடிக்கடி சில பக்கங்களைப் பிடித்துக்கொள்கின்றன.

2. தலையங்கம்: தலையங்கம் சிலநேரங்களில் சிறப்பாக அமைந்துவிடுவதுண்டு. பெரும்பாலும், கட்சிக் கண்ணோட்டமே மேலோங்கி நிற்கிறது.

முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் கைங்கர்யமும் அவ்வப்போது நடக்கிறது. குற்றவாளிகளுக்கு மதம் ஏது? மத அடையாளத்தோடு ஏன் விமர்சிக்க வேண்டும்? குற்றத்தை அது உண்மையாக இருந்தால் – கண்டிக்க வேண்டியதுதானே?

3. கட்டுரைகள்: பெரிய எழுத்தாளர்கள், மொழி வல்லுநர்கள், துறைசார்ந்த அறிஞர்கள் ஆகியோரின் கட்டுரைகள் குறைந்துபோய், தரமோ சுவையோ இல்லாத கட்டுரைகளே பெரும்பாலும் ஆசிரியர் பக்கத்தில் இடம்பெறுகின்றன.

கட்டுரைகளிலும் கட்சி, மதம், சாதி ஆகியவற்றின் ஒருசார்பு நிலை அவ்வப்போது தெரிகிறது. மொத்தத்தில் தினமணியின் தரமும் கண்ணியமும் சிறிதுசிறிதாக மங்கிவருவது நிதர்சனம். நடுநிலையான, உண்மையான, சார்பற்ற செய்திகளுக்காகத் தினமணி வாசகர்கள் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில்தான், எமக்கு ஆறுதலாகவும் உற்சாகம் அளிக்கும் விதமாகவும் ‘தி ஹிண்டு’ குழுமத்திலிருந்து ‘தி இந்து’ எனும் தமிழ் நாளிதழ் வெளிவரத் தொடங்கியுள்ளது. நான் அவ்விதழுக்கு ஆறு மாதச் சந்தா செலுத்திவிட்டேன். தினமணிக்கு விடை கொடுத்துவிட்டேன்.

இது நான் மட்டும் எடுத்த முடிவன்று. என்னைப் போன்ற ஏராளமான தினமணி வாசகர்கள் எனக்குத் தெரிந்து ‘தி இந்து’ நாளிதழுக்குச் சந்தா செலுத்தியுள்ளனர். இது வருத்தத்தோடும் வேறுவழியின்றியும் நான் எடுத்த கசப்பான முடிவாகும்.

இனியாவது தினமணி தன் போக்கை மாற்றிக்கொண்டு, பாரம்பரிய கண்ணியத்தைக் காக்க முன்வர வேண்டும் என்பதே என் அவா!

பிரிய மனமில்லாமல் பிரியும் வாசகன்
அ. முஹம்மது கான் பாகவி
16.09.2013


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: கே ச முஹம்மத் ஷூஐப் (காயல்பட்டினம் ) on 20 September 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30217

"தி இந்து 'வின் தமிழ் பதிப்பு ஓரளவு நன்றாகவே இருக்கிறது .நான்கு ரூபாய்க்கு பதினாறு பக்கங்கள் .பரவாயில்லை .ஆனால் எழுத்துரு மிகவும் சிறியதாக இருப்பதால் சற்று சிரமப்பட்டுத்தான் படிக்கவேண்டியதிருக்கிறது .

நிறைய கடைகளில் விற்றுத்தீர்ந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள். எடுத்தஎடுப்பிலேயே ஆளும்கட்சியின் ஜால்ரா என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. சற்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 130 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் அதன் ஆங்கிலபதிப்பின் தரத்தை தமிழ் பதிப்பு ஒரே நாளிலோ ....அல்லது ஒரே மாதத்திலோ எட்டிவிடமுடியும் என்று நாம் எதிர்பார்ப்பது சற்று அதிகம்தான்.

என்றாலும் இந்து நம்பிக்கைதருகிறது .....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...ஐ
posted by: mohmedyounus (muscat) on 21 September 2013
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 30231

குஜராத் கலவரத்தில் சங்க பரிவாரத்தின் முகத்திரையை கிழித்து எடுத்ததில் ஹிந்து பத்திரிகையின் பங்கு மகத்தானது.

இதை பொறுக்க முடியாத காவி படையினர் ஹிந்து பத்திரிகையை தடை செய்ய வேண்டும் என்று கோசம் இட்டதோடு மட்டும் அல்லாமல் ஹிந்து பத்திரிக்கை எரிப்பு போராட்டம் வேறு நடத்தினர். இவர் ஹிந்து ராமா? அல்லது முஸ்லிம் ரஹீமா என்று கூட கிண்டல் பண்ணினர். இது வரையில் நடு நிலை தவறாத பத்திரிக்கை. தமிழ் பதிப்பு வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...சட்டம் சொல்லும் செய்தி சூப்பர்
posted by: ISMAIL HYDER (kayal) on 27 September 2013
IP: 101.*.*.* India | Comment Reference Number: 30391

அன்பான கயல் வெப் வாசகர்களே, படித்ததில் ரசித்தது .......சட்டம் சொல்லும் செய்தி தான்.

ஒரு நீதிபதியே எழுதுவது அதன் தனிச்சிறப்பு ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved