குணால் சாஹாவிற்கு, அவரின் மனைவி இறந்ததற்கு, நஷ்டஈடு 6 கோடி ரூபாய் - வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து, நஷ்டஈட்டுத்
தொகை வழங்கப்படும் நாள் வரை, ஆண்டிற்கு 6 சதவீத வட்டியை சேர்த்து வழங்கிட, இந்திய உச்ச நீதிமன்றம் அக்டோபர் 2013இல் வழங்கிய தீர்ப்பு,
மருத்துவ சமுதாயத்தில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது. அத்தொகையை வழங்குவதற்கான காரணத்தை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில்
தெளிவாகக் கூறியிருந்தாலும், நஷ்டஈட்டுத் தொகையே ஊடகங்களிலும், மருத்துவ சமுதாயத்தினரின் ஈமெயில் பட்டியலிலும் முக்கிய விவாதப்
பொருளாக அமைந்துள்ளது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் - மருத்துவர்கள் என்பதுவும், இந்தியாவை விட அதிக வருமானம் தரக்கூடிய
அமெரிக்க நாட்டின் பிரஜைகள் என்பதுவுமே (நஷ்டஈட்டு தொகை அதிகமாக வழங்கப்பட்டதற்கான) முக்கிய காரணம் என உச்ச நீதிமன்றம் தனது
தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளது.
இவ்வழக்கு மூலம் ஒரு முன்னுதாரணம் உருவாக்கப்பட்டுவிட்டது என்ற மற்றும் இதுபோன்ற பெரிய நஷ்டஈட்டுத் தொகையே இனி வழக்கமாகிவிடும்
என்ற அச்சங்கள் எந்த அடிப்படையும் இல்லாதவையாகும். ஏனெனில், நஷ்ட ஈட்டுத் தொகையின் பெரும்பகுதி (ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல்),
(மருத்துவரான, மறைந்த) அனுராதா - அமெரிக்காவில் பணிபுரிந்து ஈட்ட வாய்ப்பிருந்த தொகை ஆகும்.
அனுராதா இறந்து 15 ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்த தீர்ப்பில் - (அவரின் கணவர்) சாஹாவிற்கு நஷ்டஈடாக வழங்கவேண்டிய தொகையின்
அளவு - மருத்துவர்களும், மருத்துவமனையும் எந்த விகிதாசாரத்தில் நஷ்டஈட்டுத் தொகைக்கு பொறுப்பேற்க வேண்டும், சாஹாவின்
தன்பாற்கவனமின்மை (CONTRIBUTORY NEGLIGENCE) காரணத்திற்காக நஷ்டஈட்டுத் தொகையில் ஏதேனும் குறைக்க வேண்டுமா என்ற
விசயங்களுக்கும், உச்சநீதிமன்றம் தனது முடிவை வழங்கியுள்ளது.
அனுராதாவிற்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவியில் காட்டப்பட்ட அலட்சியம், யார் அதற்குக் காரணம் போன்ற விஷயங்களுக்கு - ஆகஸ்ட் 07, 2009
அன்று - Malay Kumar Ganguly vs Dr Sukumar Mukherjee and Others - என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்தது. அத்தீர்ப்பிலிருந்து பல விஷயங்களை தற்போதைய தீர்ப்பிலும் நீதிமன்றம் மேற்கோள்காட்டியுள்ளது.
என்ன நடந்தது?
மலாய் குமார் கங்குலி வழக்கு தீர்ப்பில் பதிவான படி, அனுராதா மற்றும் அவரது கணவர், தங்கள் விடுமுறைக்காக ஏப்ரல் 01, 1998 அன்று
கொல்கத்தா வந்தடைந்தனர். ஏப்ரல் 25, 1998 அன்று அனுராதாவிற்கு தோலில் ஒவ்வாமையினால் வரும் அரிப்புகளுடன் (SKIN RASHES) காய்ச்சல் ஏற்பட்டது. ஏப்ரல் 26 அன்று -
அனுராதாவின் பெற்றோர் இல்லத்திற்கு நேரில் வந்து, அனுராதாவை, மருத்துவர் சுகுமார் முகர்ஜி பரிசோதனை செய்தார். எந்த மருந்துக்கும்
பரிந்துரை செய்யவில்லை. மே 07 அன்று தோல் அரிப்புகள் மிக அதிகமாகத் தோன்றவே, நோயாளி - முகர்ஜியின் மருத்துவமனைக்கு அழைத்து
செல்லப்பட்டார். தினமும் இருமுறை, மூன்று நாட்களுக்கு என Depomedrol 80 மில்லி கிராம் ஊசி எடுத்துக்கொள்ள - அவருக்கு
எழுதிக்கொடுக்கப்பட்டது. இருந்தாலும் நோயாளியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், முகர்ஜியின் கண்காணிப்பில் Advanced Medicare
and Research Institute (AMRI) என்ற மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மே 17 அன்று, நோயாளி வானூர்தி (AIR
AMBULANCE) மூலம் மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மே 28, 1998 அன்று அங்கு அவர்
மரணமடைந்தார்.
அனுராதாவின் மரணம் தொடர்பாக, சாஹாவின் உறவினர் - மலாய் குமார் கங்குலி, நவம்பர் 1998இல் குற்றவியல் புகார் (CRIMINAL COMPLAINT)
பதிவு செய்தார். 1999இல், NATIONAL CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION (NCDRC) அமைப்பு மற்றும் மேற்கு வங்காள மருத்துவர்கள்
மன்றத்திலும் சாஹா புகார் பதிவு செய்தார். 2000இல் பிரீச் கேண்டி மருத்துமனை மற்றும் அதன் மருத்துவர்கள் மீது, NCRDC முன்னர் - சாஹா
புகார் பதிவு செய்தார். இந்த புகார் 2003ஆம் ஆண்டு வாபஸ் பெறப்பட்டது.
குற்றவியல் கவனக்குறைவு (CRIMINAL NEGLIGENCE) வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. மலாய் குமார் கங்குலி வழக்கு தீர்ப்பில்
கீழ்கண்டவாறு நீதிமன்றம் கூறியது:
203. வைத்திய சாஸ்திரம் (MEDICAL SCIENCE) ஒரு சிக்கலான அறிவியல். மருத்துவ கவனக்குறைவு என்று முடிவெடுக்கும் முன், நீதிமன்றம் -
கவனக்குறைவு இருந்தது என்று மட்டும் நிரூபணம் செய்தால் போதாது. அந்த மருத்துவரின் பணியின் தன்மை, அவரின் பணியின் ஆழம்
ஆகியவற்றை அறிந்து - அதில் அவர் செய்யவேண்டியதை செய்யாமல் விட்டாரா, அல்லது செய்யக்கூடாததை செய்தாரா என அறிந்திட வேண்டும்.
மரணத்திற்கான காரணம் - மருத்துவரின் செயலுக்கு நேரடித் தொடர்புடனோ, அல்லது அதற்கு நெருங்கிய தொடர்புடனோ இருக்கவேண்டும். அது
உரிமையியல் செயலா (CIVIL ACTION), குற்றவியல் செயலா (CRIMINAL ACTION) என வேற்றுமைப்படுத்த வேண்டும்.
204. சட்டவியல் கோட்பாடு படியான கவனக்குறைவு குறித்த பார்வை - உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டங்களில் வெவ்வேறு விதமாக
உள்ளது. உரிமையியல் சட்டத்தில் கவனக்குறைவாக காணப்படும் செயல், குற்றவியல் சட்டத்தில் கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளப்படாமல்
இருக்கலாம்.
கவனக்குறைவு என்பது குற்றச்செயல் என்றாக, தவறு என்று அறிந்தும் அச்செயல் செய்யப்பட்டது (MENS REA) என நிரூபிக்கப்படவேண்டும்.
ஒரு செயல் -
குற்றவியல் கவனக்குறைவு (CRIMINAL NEGLIGENCE) என எடுத்துக்கொள்ளப்பட, கவனக்குறைவின் அளவு அதிகமாக இருக்கவேண்டும். மிகவும்
அதிக அளவிலான கவனக்குறைவாக அது இல்லையெனில், உரிமையியல் சட்டத்தின் படியான நடவடிக்கைக்கு மட்டுமே அது தகுதியானதாக
இருக்கும், குற்றவியல் நடவடிக்கை எடுக்க அது அடிப்படையாகாது. ஒரு மருத்துவர் மீது குற்றவியல் சட்டத்தின் படி - கவனக்குறைவு என்ற
காரணத்திற்காக நடவடிக்கை எடுக்க, சாதாரண உணர்வு நிலையில் உள்ள - செயலறிவு கொண்ட எந்த மருத்துவரும் செய்யமாட்டார் என்பதை -
குற்றவாளி செய்தார் என்றும், செய்திருப்பார் என்பதை - குற்றவாளி செய்யத் தவறினார் என்றும் நிரூபிக்க வேண்டும்.
நீதிபதிகள் - கவனக்குறைவு இருந்தது, ஆனால் குற்றவியல் கவனக்குறைவு இல்லை என தீர்ப்பு வழங்கினர். நஷ்டஈட்டின் அளவை முடிவு செய்ய
வழக்கு - NCDRC அமைப்புக்கு - மீண்டும் அனுப்பப்பட்டது. தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள அவ்வழக்கு, NCDRC வழங்கிய நஷ்டஈட்டுத் தொகை
திருப்தியானதாக இல்லை என்ற காரணத்தாலும், சில கருத்துக்கள் கூறப்பட்டதற்கு ஆட்சேபணை தெரிவித்தும் சாஹாவினால் தொடரப்பட்டிருந்தது.
எதிர்தரப்பினரான மருத்துவர்களும், AMRI மருத்துவமனையும் - வழங்கப்பட்ட நஷ்டஈடு மிகவும் அதிகம் எனக்கூறி மேல்முறையீடு செய்திருந்தனர்.
மருத்துவ ரீதியான் கேள்விகள்
வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகையைத் தவிர்த்து, மருத்துவத் துறைக்கு எது கவலையளிக்கவேண்டும் என்றால் - நோயாளியைக் கவனித்த விதம்
மற்றும் அவரது மரணம். தீர்ப்பைப் படிக்கும்போது, நோயாளி - தோலில் ஏற்பட்ட சிராய்ப்புக்காக மருத்துவரை அணுகியது தெரிகிறது. துவக்கத்தில் - ஒவ்வாமை (அலர்ஜி) என மருத்துவரால் கூறப்பட்டது நியாயமான மருத்துவ அறிதலாகும். ஆனால், அதற்கு மருத்துவமாக - நீண்ட நாட்கள் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஊக்கிய ஊசி மருந்து (LONG ACTING STEROIDS) கொடுத்தது... நோயாளியின் உடல் நிலை சீர்கெட்ட பின்பும் அதனைத் தொடர்ந்தது... பரவலாகப் பரிந்துரைக்கப்படும் அளவை விட கூடுதல் அளவில் மருந்து கொடுத்தது... ஆகியவற்றை நியாயப்படுத்துவது
கடினமாகும். TOXIC EPIDERMAL NECROLYSIS (TEN) என்ற நோய் என கண்டறியப்பட்ட பின், உயிரைக் கொல்லக்கூடிய நோய் நோயாளிக்கு வந்துள்ளது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
இந்த அரிய நோயைப் பொருத்த வரை, எந்த அளவு தோல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து இறப்பு விழுக்காடு (MORTALITY) மிகவும்
அதிகமாகும். பல காரணிகளுக்காக - குறிப்பாக நோயாளியின் உடல்நலன் எவ்வாறு கவனிக்கப்படுகிறது என்ற காரணியினால் - இறப்பு விழுக்காடு
10% - 70% வரை வேறுபடும். அடிப்படை தகவல் இல்லாத காரணத்தால் இந்தியாவில் இந்நோய்க்கான இறப்பு விழுக்காடு (MORTALITY) என்ன
என்பதை அறிய முடியாது. இவ்வழக்கிற்காக நீதிமன்றம் - இந்நோய் குறித்து பல தகவல்களைத் திரட்டியது. மேலும் - இந்திய மற்றும் வெளிநாட்டு
வல்லுநர்களை அணுகியது. இத்தீர்ப்பு மருத்துவர்களுக்கு எதிராக செல்லக் காரணம் என்னவென்று தெரிகிறது என்றால், ஊக்கிய மருந்து (STEROID)
கொடுக்கலாம் என்ற கருத்து கொண்ட மருத்துவர்கள் கூட, “ நீண்ட நாட்கள் விளைவுகள் ஏற்படுத்தக்கூடிய ஊக்கிய ஊசி மருந்து (LONG ACTING
STEROIDS) கொடுத்தது அறிவுறுத்தத்தக்க செயலல்ல; மேலும் கொடுத்த அளவும் மிகவும் அதிகமானது” என்று கருதியதே. பல மருத்துவர்கள் -
மரணத்திற்குக் காரணம் ஊக்கிய மருந்து அல்ல; நோயின் தன்மை மற்றும் ஆதரவான கவனிப்பு இல்லாததே காரணம் என வாதிடுவர். ஆனால் - இந்த
வாதத்தை, பிரதிவாதியால் நீதிமன்றத்தில் வெற்றிகரமாக எடுத்து வைக்கமுடியவில்லை என்பது தெரிகிறது.
மருத்துவ கவனிப்பு குறித்து கருத்துக்கள்
இந்தியா - உலகிலேயே மிகவும் அதிகமான குறைபாடுடைய மருத்துவ முறையைக் கொண்டுள்ள - நாடுகளுள் ஒன்றாகும். அனுராதாவிற்கு வந்தது
போலான உயிர்க்கொல்லி நோய்களுக்கு வெற்றிகரமாக மருத்துவம் வழங்க - அதிகளவிலான வளங்கள் இருக்க வேண்டும் - குறிப்பாக
கட்டமைப்பில் மற்றும் மனிதவளத்தில். இந்தியாவில் தொடர்ச்சியாக நல்ல முடிவுகளை எதிர்பார்க்கமுடியாது. இதற்குக் காரணம் என்னவெனில்,
இதுபோன்ற நோய்களுக்கு நிறைவான உள்கட்டமைப்பு மட்டும் போதாது, நிறைவான துறை வல்லுநர்களும் வேண்டும். துறை வல்லுநர்கள் என்பது
மருத்துவர்களை மட்டும் குறிப்பிடுவது அல்ல! செவிலியர், இயன் மருத்துவர்கள் (PHYSIOTHERAPISTS), உணவு முறை வல்லுநர்கள் (DIETICIANS)
மற்றும் பலர். அதுபோன்ற மையம் இந்தியாவில் இல்லை.
இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உதவி உள்ளது என பெருமையாக பேசப்படுவது - ஒன்றுமில்லாத தற்புகழ்ச்சி ஆகும். இதற்கு
(தற்புகழ்ச்சிக்கு) என்ன பொருள் கொள்ளலாம் என்றால் - பாதி நூற்றாண்டுக்கும் மேலாக, மேற்கத்திய நாடுகளில் சாதாரண நிகழ்வுகளாக நடக்கும்
இதய மாற்றுப் பொருத்து சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றை இப்போது இந்தியாவில் - பாதுகாப்பான முறையில் செய்யலாம்
என்றே. ஆபத்தான சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது அனுராதாவிற்கு வந்திருந்த அரிய உயிர்க்கொல்லி போன்ற நோய்கள் வந்தாலோ, நோயாளிக்கு
உயிர்தப்பிக்க அதிர்ஷ்டம் இருக்கவேண்டும்.
இந்நிலைக்கான காரணம் - சிக்கலான மருத்துவ பிரச்சனைகளை வெற்றிகரமாகக் கையாள, தேவையான கட்டமைப்பும் - மனித வளமும் உள்ள
அதிதீவிர கவனிப்புப் பிரிவுகளை (INTENSIVE CARE UNIT) உருவாக்கிப் பராமரிப்பது பெருஞ்செலவு பிடிக்கிற விஷயம் என்பதே. மிகவும் சிறந்த
மருத்துவ முறையைக் கொண்ட மேற்கு ஐரோப்பா நாடுகளில், இதுபோன்ற வசதி கொண்ட சில மையங்கள் உருவாக்கப்பட்டு, இதுபோன்ற கவனிப்பு
தேவைப்படும் நோயாளிகள் அனைவரும் அங்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் - அரசாங்கம், இதுபோன்ற கவனிப்பு வழங்கும் மருத்துவச்
சேவையை விட்டு ஏறத்தாழ ஒதுங்கியேவிட்டது.
சராசரிக்கு மேலாக கருதப்படும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கூட அரசுத் துறையில் உள்ள அதி தீவிர கவனிப்புப் பிரிவுகளும், போதிய
அளவிலான கட்டமைப்பும் - மனிதவளமும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. லாபமே ஒரு சேவையை வழங்க பிரதான அளவுகோலாக உள்ள
பெரிய அளவில் துண்டுப்பட்டுள்ள தனியார் மருத்துவத் துறையிலும், இதுபோன்ற அதிக பராமரிப்பு தேவையான மையங்கள் - வணிகப் பார்வையில்
பராமரிக்கத் தகுதியானது இல்லை என்ற காரணத்திற்காக உருவாக்கப்படவில்லை.
அரசுத் துறையை விட கட்டமைப்பு மேலாக இருந்தாலும், தனியார் துறையிலும் மனிதவளம் தரமானதாக இல்லை. சுருங்கச்சொன்னால் - சிக்கலான
மருத்துவப் பிரச்சனைகளைக் கையாள உயர்ந்த திறமை கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர துணைப் பணியாளர்கள் அணி
இந்தியாவில் இல்லை. நீதிமன்றம் - தனது தீர்ப்பில் விவரித்துள்ள TEN நோய்க்கான மருத்துவ முறைகளை - இந்தியாவில் கடைபிடிக்க சாத்தியமே
இல்லை.
மறைந்த நோயாளியிடமும், சாஹாவிடமும் - நோயை குணப்படுத்த போதிய வசதிகள் இல்லை என ஏன் மருத்துவர்கள் சொல்லவில்லை என்ற
கேள்வி எழுகிறது. இதற்கான பதில் - இந்திய மருத்துவச் சேவையில் மேலும் சில அடிப்படையிலான பிரச்சனைகளை காட்டுகிறது. இந்தியாவில்
தனியார் மருத்துவத் துறை - கடுமையான போட்டிகள் நிறைந்தது. சமுதாயத்தில் தங்களை வெகுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள மருத்துவர்கள்
கூட - தாங்கள் தொழிலை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர். வேறொரு மருத்துவரிடம் சென்றால் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு சிறந்த
மருத்துவம் கிடைக்கும் என்றாலும், அவ்வாறு அனுப்பி வைப்பது தனக்குத் திறமை இல்லை என நோயாளி நினைத்திட வழிவகுக்கும் என்றஞ்சி, அந்த
நோயாளியை மருத்துவர்கள் தக்கவைத்துக் கொள்வது சாதாரணமாக நடக்கிறது.
அரசுத் துறையில் பிரச்னை என்னவென்றால் - நோயாளியை உரிமை எடுக்க அங்கு யாரும் விரும்புவதில்லை. தனியார் துறையில், மருத்துவர்கள் -
நோயாளியை பிற மருத்துவருக்கு அனுப்பிவைக்கத் தயங்குகிறார்கள். சிறந்த மருத்துவர், சிறந்த மருத்துவமனை என்ற ரீதியிலான மக்களின்
கண்ணோட்டம் பிரச்சனைக்கு வலு சேர்க்கிறது.
மருத்துவத் துறையில், திறமையான பல மருத்துவர்களும், திறமையில்லாத சில மருத்துவர்களும் உண்டு. (சிறந்த மருத்துவர், சிறந்த
மருத்துவமனை என) முக்கியமில்லாத அளவுகோள்கள் படி கணக்கு வைப்பது, ஊடகங்கள் வடிவமைத்த அவர்களைப் பற்றிய மாயையை
மருத்துவர்களே நம்பத் துவங்கி, விடா முயற்சியாக அதனை உருவாக்கி, பராமரிக்கும் சூழலை உண்டு பண்ணியுள்ளது. இதன் விளைவாக பல
கெடுதல்கள் நடக்கின்றன. எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் இந்தியாவில் உள்ள மருத்துவர்களிடம் பொதுவாகக் காணக்கூடியது.
இந்த உண்மைகள் - இந்திய மருத்துவத் துறையில் உள்ள இன்னும் மோசமான பிரச்சனைகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. ஒரு
நோயாளி, தனது நோய்க்கான காரணத்தையறிந்து, அதற்கான முறையான மருத்துவத்தைப் பெறுவதற்கான - மருத்துவ சிகிச்சை முறை இங்கு
இல்லை. ஒரு நோயாளி ஏழையாக இருந்தால், அரசுத் துறையை நாடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. இங்கு - அதிக கூட்டம்,
குறைவான கட்டமைப்புகள், நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியது, அக்கறையின்மை - போன்றவை எல்லாம் சேர்ந்துகொண்டு உகந்த அளவுக்கு
குறைவான நிவாரணமே கிடைக்க வழிவகுக்கிறது.
ஒரு நோயாளி - தனியார் மூலமான மருத்துவ உதவியைப் பெற்றிட முடிவுசெய்தால், அவர் - சிறந்த மருத்துமனை எது, சிறந்த மருத்துவர் யார்
என கணித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது. இங்கு சிறந்த மருத்துவர், சிறந்த மருத்துவமனை என்ற பரவலான பேச்சு முக்கிய பங்கு வகிக்கிறது.
நோயாளிகள் முடிவு செய்ய வேறு எந்த அளவுகோலும் இல்லை.
சாஹா வழக்கு தெளிவாக காண்பிப்பது போல், இவை போதுமானதாக இல்லாத அளவுகோல்கள் ஆகும். மருத்துவத் துறையில் ஏற்படும் தவறுகளின்
முழு விபரம் (எல்லாமே கவனக்குறைவாகாது) - அவைகள் குறித்து எந்த ஆய்வுகளும் இல்லாததால் - நமக்கு தெரியாது. பெரிய அளவில்
துண்டுப்பட்டுள்ள மருத்துவத் துறை - தவறுகள் நிறைய நடந்திட ஏதுவான சூழலில் உள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
கட்டமைப்பான - அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மருத்துவத் முறை இந்தியாவிற்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. அடிப்படை மருத்துவ
உதவி முதல் மேல்நிலை மருத்துவ உதவி வரையிலான பல அடுக்கு மருத்துவச் சேவை முறை அவசியமாகும். இதற்கு - பலதரப்பட்ட
வல்லுநர்களை உருவாக்கி, அவர்களுக்குப் பயிற்சி வழங்குவது இன்றியமையாதது. மேல்நிலை மருத்துவ உதவி மையங்கள் போதிய
பணியாளர்களைக் கொண்டு இயங்கவேண்டும். மேலும் ஒவ்வொரு மட்டத்திலும் தகுதியான பணியாளர்கள் இருக்க வேண்டும்.
அனுராதா மரணத்திற்குக் காரணம் - மருத்துவர்களின் கவனக்குறைவு மட்டுமல்ல! நல்ல தரமான மருத்துவ முறையை உருவாக்க சமுதாயம்
தவறியதும்தான். மருத்துவத் துறை - குறிப்பாக மருத்துவர்கள், இதற்கான பழியில் பெரும்பங்கிற்குப் பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவில்
இதுபோன்ற அமைப்பை அரசு உருவாக்க, அவர்கள் உரத்த குரல் கொடுக்கவில்லை. லாபத்தைப் பற்றி சிந்தனையில் உள்ள தனியார் துறை இதனைச்
செய்யப் போவதில்லை.
---------------------------------------------------------------------------------------
டாக்டர் ஜார்ஜ் தாமஸ், சென்னை செயின்ட் இசபெல் மருத்துவமனையின், எலும்பியல் மருத்துவப் பிரிவின், தலைமை மருத்துவர். மருத்துவ
துறையின் ஒழுக்கவியல் சம்பந்தமான INDIAN JOURNAL OF MEDICAL ETHICS பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்தவர். அப்பத்திரிக்கையின்
ஆசிரியர் குழுவில் தொடர்ந்து இவர் செயல்புரிந்து வருகிறார்.
அவர் எழுதிய The Anuradha Saha Case and Medical Error in India என்ற கட்டுரை - ECONOMIC AND POLITICAL WEEKLY-யில், நவம்பர் 23,
2013 அன்று வெளியானது. கட்டுரை ஆசிரியர் மற்றும் பத்திரிக்கையின் அனுமதிபெற்று, கட்டுரையை தமிழ் மொழியாக்கம் செய்து,
காயல்பட்டணம்.காம் தற்போது வெளியிட்டுள்ளது.
ஆங்கில மூலத்தை காண -
http://www.epw.in/commentary/anuradha-saha-case-and-medical-error-india.html
[Administrator: கட்டுரை திருத்தப்பட்டது @ 12:45 pm / 04.12.2013] |